!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2004/12 - 2005/01 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 28, 2004

கவிதாயினி கிருஷாங்கினி

நவீன கவிதைகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுள் முதன்மையானது, அவை புரிவதில்லை என்பதே. பூட்டினை மட்டுமே அக்கவிதைகள் கொண்டுள்ளன; சாவிகளைத் தொலைத்துவிட்டன; வாசகர், எளிதில் வந்து சேர முடியாதபடி அவற்றின் பாதைகள் மிகவும் சிக்கலானவையாய் உள்ளன என்றெல்லாம் பரவலான கருத்துகள் உள்ளன. நாயிடம் முழுத் தேங்காய் அகப்பட்டால் சும்மா, உருட்டி விளையாடலாமே தவிர, அதனால் நாய்க்கும் பயனில்லை; தேங்காய்க்கும் பயனில்லை. தேங்காய் திறந்தால்தானே அதைச் சுவை பார்க்க முடியும். அப்புறம்தானே உயர்ந்த சுவையுள்ளதையும் சுவையற்றதையும் கண்டறிய முடியும். ஒன்று, தேங்காயை உடைப்பதற்கான கூர்மையையும் வலிமையையும் வாசகர்கள் பெறவேண்டும். அல்லது, கவிதை, வாழைப் பழம் போன்றோ, மாம்பழம் போன்றோ மாற்று வடிவம் எடுக்கவேண்டும்.
கைக்குழந்தைக்குத் திரவ உணவுதான் சிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திட உணவுக்கும் கடின உணவுக்கும் அதைப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகம், கல்வி கேள்வி ஞானத்தில் மிக உயர்ந்துவிட்டால்( குழந்தை வளர்ந்துவிட்டால்) அதற்கு எத்தகைய உணவும் செரிமானமாகிவிடும். ஆனால், இதையே காரணம் காட்டி, கல்லூரி செல்லுபவருக்குப் பருப்புச் சோறு பிசைந்து ஊட்டிவிடக் கூடாது. ஒரு கவிதையை எழுதி, நாமே வைத்திருக்கும் வரை சிக்கல் இல்லை. அதை வெளியிடும் போது அதை யார் வேண்டுமானாலும் படிக்கக்கூடும். எவர் படித்தாலும் அது அவரவர்க்குத் தகுந்த பொருள் தரும்படி எழுதுவது, பெரிய சவால். இதனால்தான் சிறுவர்க்கானவை, பெரியவர்க்கானவை என முதலிலேயே இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள்.
பெரியவர்க்கான கவிதைகள் எனப் பிரித்தாலும் இதிலும் சிக்கல்கள் உண்டு. பெரியோர் எல்லோரும் ஒரே தகுதி, அனுபவம், கல்வியுடையவர் அல்லர். எனவே ஒரு கவிதையை எந்தப் பெரியவர் படித்தாலும் அவருக்கு ஒரே உணர்வு உண்டாகும் எனக் கூற முடியாது. எனவே, பொறுப்புள்ள படைப்பாளி, கலவையான வாசகர் கூட்டத்தைக் கவனத்தில் கொண்டு, கூடிய வரை எளிமையாகப் படைக்கவேண்டும். அப்போதுதான் முதன்மை நோக்கமான உணர்வுக் கடத்தலுக்கு வாய்ப்புண்டு.
விடுகதைத் தன்மையுள்ள கவிதைகளில் முடியுமிடத்தில் கவிதையின் கதவைத் திறப்பார்கள். இன்னும் சிலவற்றில் கதவு, தலைப்பிலேயே இருக்கும். வேறு சிலவற்றில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு சொல்லுக்குள் திறப்பிருக்கும். உட்குவிதலும் வெளிவிரிதலும் இருவேறு கவிதைப் பாணிகள். எந்தப் பாணியை எடுத்துக்கொண்டாலும் நம் ஒரே வேண்டுகோள், வாசகர்களைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்பதே.
வாசகர் மேல் அக்கறையுள்ள கிருஷாங்கினி, தன் சில கவிதைகளில் ஒரு புதிய முறையைப் பின்பற்றியுள்ளார்.
பிரதான நுழைவாயில், அகலமாக, அழகாக;
சில விசாலமான அறைகள்
பிரதான வாயிலை நோக்கி.
......முற்றத்தில் சந்திப்பும்
அடிக்கடி வார்த்தை பரிமாற்றமும் குசலமும்
பரஸ்பரம் உண்டு.
அறைக் கதவுகள் அடைபடாத நிலை.

இப்போதெல்லாம்
அறைகளில் அவர்கள்.
அறைகள் எல்லாம் மாடப் பிறைகளாயின.
ஒவ்வொரு பிறைக்கும் கதவுண்டு
தாழ்ப்பாளும் உடன் உண்டு, அழுத்தமாக.

.........
எப்போதும் பிறைகளாகும் தயார் நிலையில்
அறைகள் மறுபடியும் பிறைகளாகும்.

-இந்தக் கவிதை, எதைப் பற்றிச் சொல்கிறது என வாசகர் ஒருவேளை புரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்வது? சிந்தித்த கிருஷாங்கினி, இதற்கு, தேசீயம் எனத் தலைப்பிட்டுள்ளார். இப்போது சிக்கலே இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிந்துவிடும்.
வேறொரு கவிதையைப் பார்ப்போம்.

ஒட்டியிருந்த அடி அரிசியில்
எங்கிருந்தோ ஒரு பல்லிக் குட்டி;
குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி
அரிசியைக் கடைகிறது- சுற்றி
பக்கச் சுவரினதிர்வுகளுக்கு
ஆளாகி 'சில்வர்' அடுக்கின்
அரைக் கிணறு தாண்டி
மறுபடியும் கீழே விழும்
வழவழப்பை மீறி ஏது செய்ய?

சிறு மத்தை சார்த்தியிட
பிடிப்புற்று வெளியேறி
வானம் பார்க்கலாயிற்று
கடைத்தேற
- இக்கவிதையைத் தான் எந்தப் பொருளை வலியுறுத்த வேண்டி இயற்றினோமோ அதை வாசகர் புரிந்துகொள்வாரா? சிந்தித்த கிருஷாங்கினி, எனக்கும் ஒரு மத்து எனத் தலைப்பிட்டுள்ளார்.
சூழலின் காரணமாக துயரச் சேற்றில் சிக்குண்ட ஒவ்வொருவரும் மேலேற முயன்றுகொண்டே உள்ளனர். அவர்களால் மேலே வர முடிவதில்லை. அவர்கள் மேலே வர, மேம்பட, நம் கை கொடுப்போம்; உதவுவோம் எனச் சொல்ல விரும்பித்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்துள்ளார்.
அழகான பசு அதிகம் கறக்கும்
ஊசி போட்டு மருந்திட்டாவது,
இறந்தது இளமையும் திறமையும்
உடன்வர யாருமில்லை
யாரையும் விடவுமில்லை
கூட்டத்தைத் திருப்தி செய்
கடமை அதுவே
கற! கற! அதிகம் கற!
வலி, வலி, வலி!
பிழி, பிழி, பிழிந்தெடு!
- நெகிழ்ந்த கடிகாரம் என்ற தலைப்பிலான கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. இத்தலைப்பிலுள்ள நெகிழ்ந்த என்ற சொல், காலாகாலமாய்ப் பெண்களின் நிலை, இவ்வாறுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
கிருஷாங்கினி, அங்கதம் தொனிக்கும் சில கவிதைகளையும் படைத்துள்ளார்.

....................
பரிசு பெற அதிகம் உழைக்க வேண்டும்
இப்படியாகத்தானே- அல்ல
நிறைய ப்ரயாசைப்படு
அதிகம் சென்று பார்,
கொண்டு கொடு
பக்கக் கிளைகளைத் தனதாக்கிக்கொள்
உரியன கொடுத்து.
அப்பாடா!

பெற்ற பின் பேசு, எல்லாம்
தகுதியின் அடிப்படைதான்.
நடுவர்கள் முட்டாள்களல்ல;
ஸ்தாபிதம் பெற்றபின்
கிடைத்த விதம் பற்றி
பகிராதே எவரிடமும்
அங்கீகாரம் பெறாத
எவரிடமும் இரக்கம் காட்டாதே
அவர்கள் அப்படித்தான்
எப்போதும்
வெளியில் பேசும் வீரர்கள்
உன் வழியில் செல்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

- பரிசுகளின் முன்னும் பின்னுமுள்ள பெருங்கதைகளை இக்கவிதை, பிட்டுப் பிட்டு வைக்கிறது.
பிருந்தா என்ற இயற்பெயர் கொண்ட இவர், எழுதுகோல் பிடித்த பின் கிருஷாங்கினி எனப் பெயர் சூட்டிக்கொண்டார். இந்தப் புனைபெயருக்குப் புல் போன்ற உடல்கொண்டவள் எனப் பொருள் கூறுகிறார். கோவை மாவட்டம் தாராபுரத்தில் 20.11.1948 அன்று பிறந்த இவரின் முதல் சிறுகதை, 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது.
இவரின் கணவர் நாகராஜன், ஓவியர். மகள் நீரஜா ரமணி கிருஷ்ணா, பரத நாட்டியக் கலைஞர். ஓவியமும் நாட்டியமும் உலவும் இடத்தில் இருப்பதால் அவற்றின் தாக்கம், இவர் படைப்புகளில் உள்ளன.
மேல் திண்ணை, கீழ்த் திண்ணை;
மண்வாசல் பிறகு
பின்வாசல்.

சதுர அடி
450, 500 முதல்
1000மும் அதற்கும் மேலும்.
ஆயினும்
வாசல் என்னவோ
4 அடி அகலமும் 12 அடி நீளமும்
...முதுகின் சுமை காரணமாய்
ஐங்கோணம், அறுகோணம், எண்கோணமாய்

தினம் தினம் காலையில்
மின்னும் நட்சத்திரங்கள்!
- அழகியல் மிகுந்த இக்கவிதையில், தானே வரைந்த கோலங்களை இடையில் இட்டுள்ளார். இப்படி, கவிதையையும் ஓவியத்தையும் ஒருசேரப் பின்னுவது, இதர கவிஞர்களிடம் இல்லாத ஒன்று.
கவிதையில் மட்டுமின்றி, சிறுகதைக் கலையிலும் கிருஷாங்கினி தேர்ந்துள்ளார். கானல் சதுரம் என்ற கவிதைத் தொகுப்பையும் சமகாலப் புள்ளிகள், கிருஷாங்கினி கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். தன் மகளுடன் இணைந்து, பரதம் புரிதல் என்ற பரதக் கலை நூலைப் படைத்துள்ள இவர், தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் திரட்டி, பறத்தல் அதன் சுதந்திரம் என்ற நூலையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரின் சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி, 1998ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசு பெற்றது. தமிழ் வளர்ச்சித் துறையின் தேர்வு. "கானல் சதுரம்" கவிதைத் தொகுதி-1998, கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான "கவிச்சிறகு" விருது அளித்துச் சிறப்பித்தது. மத்திய அரசின் கலை மற்றும் கலாசார மையத்தின் உயர்நிலை மானியம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர், "தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் பெரும்பான்மையான கவிதைகள், எதிர்மறை உலகைப் படம்பிடிப்பவை. துன்பியல் நிகழ்வுகளை விவரிக்கும் இவரின் ஆக்கங்கள், பலவீனமான மனம் கொண்டவராக இவரை அடையாளப்படுத்துகின்றன. சில இடங்களில் இவரின் கேள்விகளில் கூர்மை, வெளிப்படுகிறது. பல இடங்களில் விரிவான ஆலாபனைக்குத்தான் இவர் முயல்கிறார்; இரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு முயல்வது, இன்னும் நலம் சேர்க்கும்.
எனது வாத்யத்தைக் கையிலெடுத்து
மீட்ட ஆரம்பிக்கிறேன்;

தெருஓர பெஞ்சுகளில், மரத்தடியில்
தெருவின் நடுவில், ஓரத்தில்
சந்தோஷமாய், நெகிழ்ச்சியாய், சோர்வாய்.

நாற்புறமும் நிழல்கள்
என்னை ஊடுருவி ஊடுருவி
எங்கெங்கோ பின்னல்களாய்
சென்று சென்று மீள்கின்றன.

ஸ்தூலமாய், திடப் பொருளாய்
நிணம் நரம்புடன்
மனிதர் மத்தியில் நான் அரூபமாய் நிழலாய்க் கரைகிறேன்
- என்கிறார் கிருஷாங்கினி.
காவல் துறையினரின் கனிவான கவனத்திற்கு, இங்கிருந்த கிருஷாங்கினி என்பவரைக் காணவில்லை......


Saturday, December 11, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 10

தீயினுள் நுழைந்த தீரன் ஹன்பொக்லாங்

ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவத்தைத் தரும். ஏதோ மினுமினுவென்று கண்ணைக் கவருகிறதே, அதன் பெயர் நெருப்பு என்றும் அது சுடும் என்பதும் குழந்தைகளுக்குத் தெரியாது; தொட்டுப் பார்த்தால் என்ன என்று தான் அவர்களுக்குத் தோன்றும். யாரும் இல்லாத போது தொட்டும் பார்த்துவிட்டால், அதன் பிறகு சூடு கண்ட பூனை கதைதான். நெருப்பைக் கண்டாலே ஓடிவிடுவார்கள். மனிதனுக்கு நெருப்புடன் மிகுந்த நெருக்கமான தொடர்பு உண்டு. ஆதிகாலத்தில் சிக்கிமுக்கிக் கற்களை உரசி, முதன்முதலாக நெருப்பை உண்டாக்கினான்.

வரலாற்று நோக்கில் அது, ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. நெருப்பு, குளிரிலிருந்து அவனைக் காத்ததோடு, கொடிய விலங்குகளிலிருந்து தப்பிக்க, ஒரு நல்ல ஆயுதமாகவும் பயன்பட்டது. நெருப்பு, கையடக்கமாக - நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அது நமது ஆயுதம். உணவு சமைத்தல் முதல் இரும்பை வளைத்தல் வரை ஏராளமானவற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதுவே, நம் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் பேராபத்து. காட்டுத் தீ எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? சிறிய பொறியாகக் கிளம்பும் நெருப்பு, பல்லாயிரம் ஏக்கர் பரப்புள்ள ஒரு பெரிய காட்டையே அழித்துவிடும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்றும் உண்டா? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்என்ற பாரதியின் பாடலும் இதைத் தானே சொல்கிறது.

காடு மட்டுமில்லை. நெருப்பினால் நாடு, நகர், பட்டணம், பட்டிக்காடு, வீடு விளக்குமாறு என வரலாறு நெடுகிலும் ஏராளமாக எரிந்துபோனதை வரலாறு காட்டுகிறது. உலகில் நடந்த எல்லாத் தீ நிகழ்வுகளையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, ஒரு விபத்தாக நடந்த தீ நிகழ்வு. மற்றொன்று, மனிதன் வேண்டுமென்று திட்டமிட்டு நிகழ்த்திய தீச்செயல்கள். முன்னதைக் காட்டிலும் பின்னதே அதிக எண்ணிக்கையில் நடந்து அதிக உயிர்களை அழித்திருக்கும் என்பது என் கருத்து. அனுமன், இலங்கையை எரித்தது, கண்ணகி மதுரையை எரித்தது, ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது, எனத் தொடங்கி.....ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். போரில் வென்ற நாடு, தோற்ற நாட்டைக் கொள்ளையடித்ததோடு தீக்கிரையாக்கவும் செய்தது. இன்றும் வரதட்சணைக் கொடுமையால் எவ்வளவோ பெண்கள் தீக்கிரையாவதோடு, தொண்டர்களும் தீக்குளிக்கிறார்கள்.

திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்தும் நிகழ்வுகளை, அவரவர் தனித்தனியே திருந்தினால்தான் தடுக்க முடியும். ஆனால், எதிர்பாராமல் நடக்கும் தீவிபத்துகளை நம்மால் தவிர்க்க முடியும். அப்படியே ஒன்று நடந்தாலும் நாம் எச்சரிக்கையோடு இருந்தால் அவற்றை எளிதில் அடக்கலாம். குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுக்கலாம். அண்மையில் கும்பகோணத்தில் நடந்த கோர விபத்தில் 93 குழந்தைகள் பலியானதை நாமறிவோம். இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்படுவதற்கு நம்மிடம் விழிப்புணர்ச்சியும் முறையான கல்வியும் இன்மையே காரணங்கள். இவற்றைப் பெறுவதற்கு முதலில் தீவிபத்து நடக்காமல் இருக்க என்ன செய்வது? நடக்கும்போது என்ன செய்வது ? நடந்த பிறகு என்ன செய்வது? என்பவற்றை நாம் கற்றுணரவேண்டும்.

தீவளையத்துக்குள் புகுந்து வெளியே வருவதை, சர்க்கஸ்காரர்களிடம் பார்க்கலாம். திரைப்படத் துறையில் சண்டைக் காட்சி நிபுணர்கள் சிலர் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லோரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். ஆனால், பயிற்சியே பெறாமல் , நம் அன்றாட வாழ்வில் சிலர் இத்தகைய செயல்களைச் செய்து நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவார்கள். அப்படித்தான் மேகாலயாவில் ஒருவர், நெருப்பு நாக்குகளுக்குள் புகுந்து வெளிவந்தார். அவர் வயது, 13.இப்போது உங்கள் புருவங்கள் மேலேறுவது தெரிகிறது. ஆம், 13 வயதே ஆன ஹன்பொக்லாங் நங்சீஜ் என்ற மாணவன்தான், இந்தப் பெரிய செயலைச் செய்தான்.

மேகாலயாவில் , மேற்குக் காசி மலைகள் மாவட்டத்தில் பொன்குங் என்ற கிராமம், இவனுடையது. இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான், ஹன்பொக்லாங். ஏழு வயதாய் இருக்கும்போது தன் தாய்-தந்தை இருவரையும் இழந்தான், ஹன்பொக்லாங். அதன் பிறகு, தன் தாய்வழிப் பாட்டியுடனும் அத்தையுடனும் தங்கிப் படிக்கிறான்.
தீயில் நுழைந்து ஒரு குழந்தையின் உயிரைக் காத்த நாள்: ஜனவரி 5, 2000. அன்று என்ன நடந்தது? அதை அவன் வாய்வழியாகவே கேட்போமா?

"வீட்டு வாசலில் நான் எப்போதும் போல் விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாய்மாமா வீடு, பக்கத்தில் இருந்தது. திடீரென்று ஏதோ கருகும் நெடி அடித்தது. திரும்பிப் பார்த்தால் என் மாமா வீடு, தீப்பிடித்துவிட்டது. அப்போது மதிய நேரம். என் மாமா, வெளியே போயிருந்தார். அத்தையும் அடுத்திருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒன்பது மாதக் குழந்தை, வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தது. வீடு எரிவதைப் பார்த்த அத்தை, அலறியபடி ஓடிவந்தாள். அவள் கூச்சலைக் கேட்டு, நிறைய பேர் கூடிவிட்டார்கள். காப்பாத்துங்க என் பிள்ளையைக் காப்பாத்துங்க என என் அத்தை கத்திக் கதறினாள். ஆனால், தீ இப்போது, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ நாக்குகள், மேலும் மேலும் உயரத்திலும் அகலத்திலும் வளர்ந்தன. யாரும் நெருங்கத் துணியவில்லை.

அந்தக் குட்டிப் பையனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இப்போது போய் அந்தக் குழந்தையைக் காப்பாற்றாவிட்டால் அவன் எரிந்துவிடுவான் எனத் தோன்றியது. நான் தீ நாக்குகளுக்கு மத்தியில் அந்த வீட்டிற்குள் ஓடினேன். அங்கு எனக்குச் செல்லமான என் மாமா மகன், பெரிதாக அழுதுகொண்டிருந்தான். அவனை என் கைகளில் தூக்கிக்கொண்டு, ஒரு துண்டை எடுத்து அவனைப் போர்த்தினேன். தீநாக்கு ஒன்று என் தலைமுடியைக் கருக்கியது. அதன் சூட்டினை என் முகத்தில் உணர முடிந்தது. ஆனால், நான் அக்குழந்தையுடன் வெகு வேகமாக வெளியே பத்திரமாக ஓடிவந்தேன்.

என் அத்தை, என்னைக் கட்டிப் பிடித்து முத்தமாரி பொழிந்தாள். செய்தித்தாள்களில் என்னைப் பற்றி எழுதினார்கள். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். நவம்பர் 14 அன்று, எனக்கு ஒரு பெரிய விருது அளித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" ஹன்பொக்லாங் நங்சீஜூக்கு பாபு கயதானி விருது அளிக்கப்பட்டுள்ளது. தீரம் மிகுந்த சிறுவர்களுக்காக நாட்டில் வழங்கப்படும் மூன்றாவது மிகப் பெரிய விருது, இது. யானை மேல் அமர்ந்து சென்று, பிரதமரிடம் இவ்விருதைப் பெற்றுள்ளான், ஹன்பொக்லாங் நங்சீஜ்.

நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டதற்கு, ஒரு பொறியாளர் ஆவதே சிறந்தது எனப் பதில் அளித்துள்ளான், இவன்.

தீரமும் துணிச்சலும் சமயோசிதமும் விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எந்தச் சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதை, ஹன்பொக்லாங் நங்சீஜிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

Wednesday, December 08, 2004

கவிதாயினி கனிமொழி

கவிதையின் அளவு என்ன? பாத்துளி முதல் பார காவியம் வரை தமிழில் படைக்கப்பட்டுள்ளன. இரண்டடியில் கவிபாடி, திருவள்ளுவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். குறுந்தொகையில் எட்டு வரிகளை ஒட்டியே பாடல்கள் அமைந்தன. சங்கப் பாடல்கள், மிகுந்த சொற்சிக்கனம் உடையவை. கவிதையல்லாவிடினும் இரண்டு -மூன்று சொற்களில் அமைந்துள்ள ஆத்திசூடியையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும். 'நறுக்கென்று நாலே வார்த்தையில் சொல்' என முன்னோர் சொல்லுவர். 'கவிதை மின்னலுடைத்தாகுக' என்றான் பாரதி. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் மரபு நமக்குண்டு.

ஆனால், பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணமும் இங்கு கொண்டாடப் பெறுகிறது. காவியங்களில் ஆயிரம் பாடல்கள் என்பது, சர்வ சாதாரணம். இம்மென்றால் எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரமுமாய்ப் பாடித் தள்ளியவர்கள், பலர். காலம் முழுதும் இதே வேலையாய்ச் சொற்சிலம்பம் ஆடினால் எழுத்தாணி கூர்மழுங்கி, ஏடு பிதுங்குவது இயல்புதானே! இக்காலத்திலும் பலர் காவியங்கள் படைக்க முயலுகிறார்கள். இன்று கவிஞர்கள், காவியம் படைப்பதன் நோக்கங்களுள் ஒன்று, அதிகப் பக்கங்களை ஓட்ட முடியும் என்பது. ஏற்கெனவே உலவும் கதையை எடுத்துக்கொண்டு படைத்த காவியங்கள், அன்றும் இன்றும் நிறைய உண்டு. கவிதை நடையில் கதையைச் சொல்லும் இம்முயற்சிகள் பலவற்றில் கதையம்சமே அதிகம். பாலில் நீரைக் கலந்துவிட்டு இதுவும் பால்தான் எனச் சாதிக்கும் தேநீர்க்கடைக்காரரை நமக்குத் தெரியாதா என்ன?

பார்வையாளர் இருக்கைகளில் இருக்கவேண்டியவர்கள் எல்லோரும் கால்பந்து மைதானத்தினுள் இறங்கி, ஆட்டக்காரர்களை அசையவிடாமல் செய்தாலோ, அல்லது மைதானத்திலிருந்து விரட்டிவிட்டாலோ, ஆட்டம் எப்படி இருக்கும்? தமிழ்க் கவிதைப் படைப்பு, இப்போது இந்த ஆபத்துக்கு ஆளாகியிருக்கிறது. அச்சுப் பரப்பு முழுவதையும் எழுத்துகளால் நிரப்புவதும், தேவையற்ற சொற்களால் நிரப்புவதும் பெருகிவரும் காலம், இது.

மரபுக் கவிதைகள் பல நேரங்களில், கருப்பொருளைத் தீர்மானிக்கும் முன்பே வடிவத்தைத் தீர்மானித்து விடுகின்றன. கட்டுப்பாடில்லாமல் சொற்களை வாரி இறைக்கும் கெட்ட பழக்கம், தமிழில் அதிகமுள்ளது. இதனால்தான் கவியரங்கம், கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்துவோர், 16, 24, 32 என வரிகளைக் குறிப்பிட்டு கவிதை, அதற்குள் அமையவேண்டுமென நிபந்தனை விதிக்கின்றனர். உரைநடையில் 10 வரிகளில் சொல்வதைக் கவிதையில் ஒரு வரியில் சொல்லலாம். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோல சொற்களைச் சுருக்கினால்தான் கவிதை மெருகேறும்.

மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கவியரங்குகளில் 10 நிமிட நேரம் கொடுத்தால் நீட்டி முழக்கிக் கதைபேசும் காட்சிகள்தான் அரங்கேறும். மூன்று நிமிடங்களில் முடிக்கச் சொன்னால் கவிதை அம்மட்டோடு பிழைப்பதற்கு வாய்ப்புண்டு. புத்தகம், இதழ், மேடை, பிற ஊடகங்கள் அனைத்திலும் இப்படித் திரும்பும் இடமெங்கும் ஊளைச் சதையோடு தமிழ்க்கவிதை காட்சியளிக்கிறது. நல்லவேளையாக, ஹைகூ வடிவம் வந்தது. வெறும் தண்ணீரே இதில் பால் என்ற பெயரில் வந்தாலும் எல்லாம் மூன்று வரிகளில் முடிவதால், பரவாயில்லை என ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். குறைவான வரி எல்லை உடைய லிமரிக், லிமரைகூ போன்ற இறக்குமதி வடிவங்களும் தோன்றியிருப்பது, ஒரு நல்ல அறிகுறி.

இப்படி வடிவங்களில் சிக்கிக்கொள்ளாமல் குறைவான சொற்களில் கவி படைக்கும் சிலரும் இப்போது வளர்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவர், கனிமொழி.

எத்தனை முறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பப் புரண்டு
மேலே கால்தூக்கிப் போடும்
குழந்தையாய் நினைவுகள்
-மொத்தமே நான்கே வரிகள். அருமையான உவமை. கச்சிதமாய் அமைந்துள்ளது. மேலும் சில துளிப்பாக்களைப் பாருங்கள்.

அந்த
அயோக்கிய ஜோசியன
்என் சிறகுகள
ைமுறித்துப் போடாதவரை
நானும் பகுத்தறிவுவாதிதான்!
***************

தழும்புகள் உள்ளன
தீயென்றும் தெரிகிறது
ஆனாலும்
இன்னும் பூக்களைச் சொரிந்துகொண்டுதான்
இருக்கிறது
மரம்
***************

வானம் வசப்பட வேண்டாம்
எனக்குப் பழக்கமானது
பூமி மட்டுமே.
***************

தோல் தேய்ந்து
தொலைந்து போகும் வரை
கழுவுகிறேன் சபைக்கு சரிப்படாத
என் கருப்பு நிறத்தை.
***************

கதவுகள் மூடியே இருக்கட்டும்
அஸ்திவாரங்கள் ஆடிக்கொண்டிருந்தாலும்
தென்றலையாவது தடுக்கலாம்.
***************

என் காதலில்
பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது?
***************

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை.
***************
- இங்கு எடுத்துக்காட்டப்படும் ஒவ்வொன்றிலும் உண்மை, ஆழ்ந்த அனுபவம், சமூக விமர்சனம், வித்தியாசமான அணுகுமுறை போன்றவை இணைந்து கவிதை வடிவம் பெற்றுள்ளன.

ஆனால், 'கவிமொழியைத் தீவிரமாகக் கைக்கொள்ளாமல் மூன்று வரித் துணுக்குகளாகவே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதேன்?' என்ற கேள்வியைக் கனிமொழி முன் வைத்தார்கள். அதற்கு, 'உணர்வதுதானே கவிதையாக முடியும். வரித்துணுக்குகள் என்றால் அந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல என்னிடம் அதற்கு மேல் ஒன்றும் இல்லாதிருக்கலாம். சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்தபின் ஏன் வடிவத்தை வளர்த்திக்கொண்டு போகவேண்டும்?' என்று பதில் அளித்துள்ளார்.

'எந்தத் தலைப்பானாலும் சரி, இந்தா பிடி எட்டு எண்சீர் விருத்தங்கள்' என்கிற ஆசு கவிகள் மத்தியில் 'அதைப் பற்றிச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றும் இல்லை' எனச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.

கனிமொழி, உண்மையைப் பேசுகிறார் என்பதற்கு இவர் கவிகளில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன.

தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள்
்என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,
அம்மாவின் பழைய சேலையைப் போல
மெத்தென்று மனதைத் தழுவும்
-என அநேகக் கவிஞர்களைப் போல் பழைய நினைவுகளில் ஆழ்கிறார், கனிமொழி. நிறம், கற்பு, சுதந்திரம், ஆணாதிக்கம்....எனப் பெண்கள் பலரும் கையாண்ட கருப்பொருட்களை இவரும் விட்டுவைக்கவில்லை.

கனிமொழியின் தலைப்பிடப்படாத ஒரு கவிதையின் முழு வடிவத்தைப் பார்ப்போம்.

மேஜையின் விளிம்பில்
்வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப் போல் உள்ளது
நம்பிக்கை.

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
திரவம்.

எங்கு வைத்தாலும்
நகர்ந்து விளிம்புக்கு வந்துவிடுகிறது
குவளை

அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவிவிழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கிச்
சிதறிப்போதலை வேண்டியபடி.

ஆனால்
என்றுமே
காலியாய் இருப்பதில்லை மேசை.

- இது, சிறப்பாக இருந்தாலும் கவிதையின் இரண்டாவது வரியும் இரண்டாம் பத்தியும் கடைசிப் பத்தியும் தேவையற்றவை என்பது, என் கருத்து. அவை இல்லாவிட்டாலும் கவிதை, இதே உணர்வை அளிக்கின்றது.

கனிமொழி, கருவறை வாசனை, அகத்திணை என்ற இரு கவிதைத் தொகுப்புகளை அளித்துள்ளார். முன்னாள் முதல்வரின் மகள். ஆயினும் மிக எளிமையோடும் எளியவற்றின் மீது அன்போடும் மென்மையான உணர்வுகளோடும் விளங்குகிறார். வாசிக்கத் தூண்டும் எளிய வரிகளும் மெல்லிய சோகமும் தவழும் இவர் கவிதைகள், கவிதையை நாடி வருவோரை ஏமாற்றுவதில்லை.

என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு
-என்கிறார், ஒரு கவிதையில். நீங்கள் சொல்ல வருவது புரிகிறது, கனிமொழி.

அமுதசுரபி, டிசம்பர் 2004

Monday, December 06, 2004

கவிதாயினி வத்ஸலா


கவிதை என்பது எது? விளக்க விளக்க விரியும் இக்கேள்விக்கு ஒரே சொல்லில் பதில் சொல்லவேண்டும் எனில் 'உண்மை' என்பேன். 'அவர் ஒரு கவிதையைப் போல் வாழ்ந்தார்' என்பதற்கு 'உண்மையாக வாழ்ந்தார்' என்றே பொருள்கொள்ள முடியும். எழுதுபவர், வேறொருவரின் விருப்பத்தை நிறைவேற்றவோ, பாராட்டுகளைக் குறிவைத்தோ, உலகாயத பயன்களுக்காகவோ எழுதும்போது, உண்மையிலிருந்து கவிதை விலகிச் செல்கிறது. நிகழ்வையோ, உணர்வையோ, அலங்காரங்களோடு உயர்வு நவிற்சியில் சொல்லும்போதும் இந்த விலகல் நிகழ்கிறது. முழு உண்மையை எந்தப் படைப்பும் வெளிப்படுத்திவிட இயலாது. உண்மைக்கு எவ்வளவு அருகில் அது இருக்கிறது என்பதே கவிதையின் சிறந்த அளவீடு.

அப்படியானால் உண்மை மட்டுமே கவிதையாகிவிடுமா? அதே உண்மை, உரைநடையிலோ, ஓவியத்திலோ, வேறு கலை வடிவத்திலோ, ஏன், செய்திப் பகுதியிலோ வருமாயின் அப்போது அதற்கு என்ன பெயர்? செய்திப் பகுதியில் வரும் ஒன்று, உண்மையாய் இருக்குமாயின் அதை உண்மையான செய்தி எனலாம். எப்போது உண்மையும் கலைநயமும் இணைகின்றனவோ, அப்போது கவிதை அங்கே புத்துயிர் பெறுகிறது.

கலைநயம் என்பது என்ன? செய்தியைப் போன்று நேரடியாக அது பேசக்கூடாது. நமது மனத்தைச் சுண்டி இழுக்கும் தன்மை அதற்கு இருக்கவேண்டும். எதிர்பாராத ஒரு புதிய கோணத்திலிருந்து அது வெளிப்பட வேண்டும். உடனடிப் பயன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னை நுகர்வோரிடம் அது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் பல முகங்கள், கலைநயத்திற்கு உண்டு. இந்தக் கலைநயத்தையும் உண்மையையும் ஒரு புள்ளியில் இணைப்பது, மிகக் கடும் சவால். ஏனெனில், ஒன்றைப் பிடிக்கும்போது மற்றொன்று நழுவிச் சென்றுவிடும். இச்சவாலைச் சமாளிப்பதற்காகத்தான் கவிஞருக்குக் கவிதா நீதி என்ற சிறப்புச் சலுகையை உலகம் வழங்கியுள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழில் கவிதை என்ற பெயரில் உலவும் பலவற்றை நாம் இரக்கமின்றி நிராகரிக்க வேண்டி வரும். வெகு சிலவே கவிதையின் பெயரைக் காப்பாற்றும். வத்ஸலாவின் சில ஆக்கங்கள், கவிதையாகப் பரிசீலிக்கத் தகுந்தவை.

....இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
...வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறைவைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும்
ஒரு ஆலமரம்.

...என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.
ஒரு சிறுமி கேட்கிறாள்,
'இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?'
பதில் வருகிறது.

'அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது'
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
'பூமியில் வைத்தால்தானே வளர முடியும்'
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
'பெண்ணே நீ ஆலமரமாவாய்!'

இலக்கணப் பிழைகள் இதில் இருந்தாலும் கருப்பொருளாலும் வெளிப்பாட்டினாலும் இது, கவிதை என்ற தகுதியை அடைந்துவிடுகிறது.

நான்
சொத்தில்லா லக்ஷ்மி
கல்வியில்லா சரஸ்வதி
அச்சமுள்ள துர்க்கை
...நான்மாதவம் செய்துவிட்டேன்.
தவப்பயனை எப்படி அழிப்பது?
மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திட வேண்டு மம்மா


என்ற கவிமணியின் வரிகளை இவர், கடும் கோபத்துடன் புரட்டிப் போட்டிருக்கிறார்.

வந்து சேர்ந்தன
முன்னூற்றி இருபத்தி ஏழு கடிதங்கள்...
நான் பரிசளித்த மோதிரத்தை
ஒரு ஏழைபெண்ணிற்கு மொய்யெழுதிவிட்டதாக...
எல்லாவற்றையும்
திருப்பிவிட்டதாக
எழூதியிருக்கிறாய்.
எல்லாவற்றையுமா?
அன்றொருநாள்
என் கூந்தலில்
பட்டுத் தெறித்த மழைத்துளிகள்
உன்னில் ஏற்படுத்தியதே
அந்த சிலிர்ப்பு
..ஒரு சமயம்
நிலவை ரசிக்கையில்
சில்லிட்டுப்போன உன் கையை
என் கைக்குள் வைத்து
நான் அளித்தேனே
அந்த வெப்பம்
இப்படி விட்டுப் போன
சிலவற்றையும்
பட்டியல் போட்டு
திருப்பி விடு.

வத்ஸலாவின் பெரும்பாலான ஆக்கங்கள், சோக ராகம் பாடுபவை. இயலாமையும் ஆற்றாமையும் இவரைச் சினமூட்டியுள்ளன. தன் சோகங்கள், தன்னுடையவை மட்டுமல்ல; பெண் இனத்தின் மிகப் பெருஞ்சோகத்தின் ஓர் அங்கமெனப் புரிந்துகொண்டதாக எழுதியுள்ளார். ஆயினும் இவருடைய பல ஆக்கங்கள், வெறும் நிகழ்வாக, காட்சியாக நின்று விடுகின்றன. பிரச்சினைகளைச் சொல்லவேண்டும் என்ற முனைப்பு, கவித்துவத்தைக் கைவிட்டாலும் பரவாயில்லை என இவரை நகர்த்தியுள்ளது. எனினும் பல காட்சிகள், வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

...அம்மா சொன்னதெல்லாம்
'சித்தி வருவா
அவகிட்ட சமத்தாயிரு
சீக்கிரமா பெரியவனாயிடு
ஸாரி கண்ணா, நா போயிட்டு வரேன்'
பந்தை உருட்டிக்கொண்டே
நான் தலையாட்டிய பிறகே
அவள் நாற்காலியை உதைத்தாள்
வயிற்றிலிருந்த என் தங்கச்சி பாப்பா அதிர
கயிறு கழுத்திலிறுக
எனக்கு கயிறு பிடிக்காது

- இப்படிப் பல காட்சிகள். சுருக்கமான சொற்களில் பரந்த வாழ்வைப் படம் பிடிப்பவை.

வத்ஸலா, 1943-இல் பிறந்து இயற்பியலிலும் கணிப்பொறியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிப்பொறி மையத்தில் 25 ஆண்டுகள், கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றியவர். நாற்பத்தெட்டாவது வயதில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதத் தொடங்கியவர். சுயம் என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்துள்ளார். இவருடைய வரிகளைக் குறிப்பிட்டு, 'ஒரு புதிய பெண் கவிஞரின் குரல் தெளிவாக ஒலிக்கிறது' என்கிறார், ஞானக்கூத்தன்.

வடசொற் கலப்பு, இலக்கணப் பிழைகள், வளவளப்பு போன்ற சில குறைகளைக் களைந்தால், இவர் , கவிதையின் மேலும் சில சிகரங்களைத் தொட முடியும்.