!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/04 - 2005/05 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 30, 2005

கவிதாயினி சுகந்தி சுப்ரமணியன்

ஒரு பெரிய அணை. நீர் நிரம்பிய நிலை. மேலும் நீர் வருகிறது. உடைப்பெடுக்கும் நிலை. இப்போது நீர் எப்படி வெளியேறும்? அணையின் பலவீனமான பகுதியின் வழியாகத்தான் முதலில் வெளியேறும். அந்த நீர் மேற்புறமாக வழியலாம்; சுவரில் வலுக்குன்றிய பகுதி உடையலாம்; மதகுகள் லேசாக இருந்தால் பிய்த்துக்கொண்டு போகலாம்; அல்லது வந்த வழியாகவே வெளியேறிவிடலாம்....

இப்போது மனித மனத்திற்கு வருவோம். பெரும் துயரத்தைச் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறலாம்; சினமுற்றுக் கத்தலாம்; மன அழுத்தத்தால் மெளனம் காக்கலாம்; புலம்பித் தள்ளலாம்; அதிரடியாய்ப் போராட்டத்தில் இறங்கலாம்.... இப்படி மனம் எந்த இடத்தில் பலவீனமாய் இருக்கிறதோ, அந்த இடத்தின் வழியே துயரம் வெளிப்பட்டுவிடும். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் துயரம் வெளிப்படுகிறது. துயரங்களின் கனம் தாங்காத சுகந்தி சுப்ரமணியன் (37), கவிதை எழுதுகிறார்.

மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

மாத விடாயின் போதும் கருவுற்ற போதும் பெண் படும் துயரங்கள், மற்றவர்களுக்காக அவள் வாழவேண்டியிருப்பது, அவள் எதிர்கொள்ளும் வசை, வன்முறை, உரிமை மறுப்பு, அடையாளம் இழப்பு, அவமானம், 'எதிர்வீட்டுக்காரியின் என் முகம் பற்றிய வர்ணனை', பாதுகாப்பின்மை, எதிலிருந்தும் தப்பிக்க முடியாத வாழ்க்கை, தனிமைத் துயர், குடும்பத்திற்குள் அகதியான நிலை, 'போதும் கலைத்துவிடு எனச் சொல்ல பக்கத்து வீட்டில்கூட ஆட்கள் இருக்கும்' சமூகம், உறவுகளின் உண்மை முகம், நிலையின்மை, நழுவிச் செல்லும் வாழ்க்கை.... எனச் சுகந்தியின் விரல், இந்தச் சிரிக்கும் உலகின் உண்மைத் தோற்றத்தை அம்பலப்படுத்துகிறது.

இத்தகைய உலகத்தை நெருக்கமாகக் காணும் ஒருவர், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என நாம் கணிக்க முடியும்.

'என்னைக் கவலைகள் தின்னத் தகாதென நின்னைச் சரணடைந்தேன்' என்றான் பாரதி. கவலை, ஒரு விபரீத நோய்க் கிருமி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதைதான். உள்ளே நுழையவிட்டால் பிறகு, நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடும். கவலையின் கரங்களில் நாம் ஒரு பொம்மையாகிவிடக் கூடாது. நம் சூத்திரக் கயிறு, நம்மிடமே இருக்கவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான செயலா என்ன?

'ஆகாயத்தில் கண்ணும் பூமியிலே மனசுமாய்' இருக்கும் சுகந்தி, மென்மையான-நுண்மையான மனத்தவர். அவரால் இந்தக் கவலைகளை வெல்ல முடியவில்லை.

எனக்குள் சிதைந்து போகிறேன்.
என்றாலும்
என்னை மீட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
என் எலும்புகளில் ரத்தத்தோடு
உணர்வுகளையும் நான் மீட்டாகவேண்டும்.
என் சுவாசத்தினூடே விஷம்
உறிஞ்சப்படுவதையும் நான்
நிறுத்தியாக வேண்டும்....
- என்ற கவிதையில் ஒரு மிதமிஞ்சிய அச்சமும் பதற்றமும் விரிகின்றன.

சிரித்திரு என்கிறாய்.
சரிதான்.
என்னால் முடியவில்லை.
எல்லோரும் அப்படித்தான் என்கிறாய்.
என்றாலும் முடியாதென்கிறேன்.
சும்மாகிட என்கிறாய்.
மாட்டேன் என்றேன்.
செத்துப்போ என்கிறாய்
என்னை உன் காலால் எட்டித் தள்ளியபடி.
எனக்கென நான் வாழ்க்கையை
மிச்சம் வைத்திருக்கிறேன்
வாழமுடியாமல்
-'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' எனப் பாடியதெல்லாம் என்னாயிற்று? நம் பெண்கள் பலருக்கு இந்த அனுபவம் என்ன புதிதா? இப்படி ஒரு நாள் கழியாவிட்டால் அதுதானே புதிது.

அவள் முகம் பார்க்கும்போதெல்லாம்
சுடுசொற்கள் வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்; என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது:
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்
-இப்போது சிக்கலின் அடித்தளம் என்னவென்று புரிகிறது. நான் என்ற உள்மன வேட்கை, ஒவ்வொரு மனத்திற்குள்ளும் சாம்பல் மூடிய தீயெனக் கனலுகிறது. இன்னொரு கவிதையில் பாருங்கள்.

சுகந்தி பெரும்பாலும் துயரத்தையும் எதிர்மறை உணர்வுகளையுமே எழுதுகிறார். ஆனால், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாய் அமைந்துள்ளது. வாசிக்கையில் அதே உணர்வில் நாம் இழுத்துச் செல்லப்படுவதை உணருகிறோம்.

இந்த மரம் என்னைத் திட்டியதில்லை
அல்லது எந்த மரமும்.
என் நன்றியைத் தெரிவிக்கிறேன்
மீண்டும்.
-இந்தக் கவிதை, வலியைப் பேசுகிறது. ஆனால், இதில் ஒரு புதுமையான வெளிப்பாடு இருப்பதைக் கவனித்தீர்களா?

சப்தங்களின் கூடாரங்களில்
நடனமாடிய சொற்களை
ஆணியடித்து அறைந்த பின்னும்
அலையடித்துக் கிடக்கும் மனசை
மணல் வெளியில் எறிந்த பின்னும்
எங்கோ இருக்கும் பறவை தேடும்
தன் இனத்தை வீட்டில் தொலைத்தபின்னும்
எதுவுமில்லை இனி தொலைக்க என்று
ஆகிப்போன பின்னும்
நான் சப்தங்களின்...
-மொத்தக் கவிதையுமே இவ்வளவுதான். இந்தக் கவிதையின் வடிவத்தில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கிய சொல்லிலேயே முடிவதோடு, ஒரு சுழலும் தன்மை இதில் இருக்கிறது. முடியும் இடத்தில் கவிதை, மீண்டும் மீண்டும் தொடங்கிவிடுகிறது.

மனம் ஒரு விசித்திரம். அது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கிறது. 'மதம் பிடித்த யானையாய்', 'அறுந்துவிடப்போகும் பட்டம்போல்', 'விடை தேடும் பறவையாய்', 'ரயிலும் தண்டவாளமும் இணையும் தருணத்தில் சிக்கித் தவிக்கும் உயிராய்', 'தத்திப் பறக்கும் சிறுகுருவிபோல்' எனப் பல வகைகளில் சுகந்தியின் கவிதை மனம், அவதாரம் எடுக்கிறது.

புதையுண்ட வாழ்க்கை(1988), மீண்டெழுதலின் ரகசியம்(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகளைச் சுகந்தி படைத்துள்ளார். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன்பே பெண்ணியத்தின் குரலை ஒலித்தவர். கவிஞர் மீரா இலக்கிய விருது பெற்றவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. திருப்பூரில் வசிக்கிறார். தற்சமயம் உடல்நலன் குன்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.

உண்மையில் எல்லோருக்கும்
பிடித்தமானதைப் பற்றிப் பேசத் தெரியவில்லைதான்.
ஆனாலும் நட்பு தோழமை போன்றவை
வெற்று வார்த்தைகளாகிப் போனபின்
எனக்கெதற்கு இந்த விசாரம்.
மனித நடமாட்டமில்லாத இடங்கள்
ஆபூர்வமானவை; அழகானவை கூட....
- மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும்போது இந்த இடத்திற்குத்தான் வந்துசேர வேண்டியிருக்கிறது.

இந்த உலகில் மனிதர்கள் குறைவு; வேறு உயிரினங்களே மிகுதி. ஆனால், உலகின் அமைதி, பெரும்பாலும் மனிதர்களால்தான் கெடுகிறது. மனிதன், பிற உயிரினங்களுக்கு மட்டுமில்லை; தன் சக மனிதனுக்குக்கூட மகிழ்ச்சியை அளிப்பதில்லை. சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் இந்த அழகான பூமிப் பந்தை, துயரக் கிண்ணமாக மாற்றி விடுகின்றன.

நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமா என அறிய, ஒரு சிறிய சோதனை. நீங்கள் இந்த உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெட்ட வெளிக்கு வாருங்கள். உங்கள் காலின் கீழ், தலைக்கு மேல், எட்டுத் திசைகள் என 360 பாகை அளவில் ஒரு சுற்று சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திலும் மனிதன் அல்லாத ஏதேனும் ஓர் உயிரைப் பார்க்கிறீர்களா? அதுவே சிறந்த இடம். நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமாக இல்லையென்றால் அதைச் சிறந்ததாக மாற்றுங்கள்.

ஒரு சின்னஞ்சிறு குருவியாலும் மலராலும் நாய்க்குட்டியாலும் நமக்கு மகிழ்ச்சியைத் தரமுடிகிறது! ஆறு அறிவு படைத்த மனிதர் பலரால் அது முடியவில்லை. இ·து ஒரு விநோதம்தான். ஆனாலும் நல்லவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதனால்தானே அவ்வப்போது மழை பெய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.

நமக்கென ஒரு கதவு திறக்கும். நம் வெக்கையைப் போக்க, ஒரு குளிர்த்தென்றல் நம்மைத் தழுவும். முட்செடியிலிருந்தும் ஒரு பூ மலரும்.

சொல்லத் தெரியாத பறவை
தன் சந்தோஷத்தை
பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்
- என்கிறார் சுகந்தி.

அந்தப் பறவை, உங்கள் தோளில் வந்து உட்காருவதாக!

Wednesday, April 13, 2005

கிழக்குச் சூரியன்

கோடானு கோடிஅணு குண்டுகளைச் சத்தமின்றிச்
சூடாகத் தூரத்தில் தூக்கிஒரே - போடாகப்
போட்டாற்போல் மீமீமீ போர்க்களமாய் வானம்!ஒளி
தோட்டாவாய்ப் பாய்கின்ற தோ!

யாரந்த வண்ணான்?ஏய்! யெளவனத்தில் முக்கிமுக்கித்
தூரக் கிழக்கைத் துவைக்கின்றான்! - பாரடாடோய்!
தண்கதிர்நீர் தான்தெளிக்க தக்க வெளுப்போடு
விண்கொடியில் காயும் விதம்.

ஆடுகளம் ஆடுபவர் ஆரோ? சுழற்பந்தைப்
போடுகையில் பாய்ந்தடிக்க பூமிமேல் - ஓடி
விரிகடலில் சிக்சரென வீழ்கிறது! ஆகா
பரிதி கிரிக்கெட்டு பந்து!

ஊற்றாகி ஓடையாய் ஊர்ந்த ஒளித்தண்ணீர்
ஆற்றுள்ளும் காட்டாறாய் ஆர்ப்பரித்து - காற்றோடு
காற்றாய் விரிந்து கடலாகி விண்மீனாம்
நாற்றுகளை மூழ்கடிக்கும் நன்று!

வானவில்லைத் தன்வீட்டு வாளியிலே கரைத்துக்
கானக் கிழக்காம் கருந்தரையில் - மோனமகள்
அள்ளித் தெளித்துப்பின் ஆதவனாம் கோலமதால்
அள்ளுகிறாள்! கிள்ளுகிறாள்! ஆ!

விண்கோழி இட்ட வெகுவெப்ப முட்டையிலே
கண்விழித்த குஞ்சே கதிரவனா? - கோயிலிலே
நேற்று சுடச்சுட நின்றுபெற்ற வெண்பொங்கல்
சோற்றுருண்டை தானோ சுடர்!

Monday, April 11, 2005

கடற்கரையில் புதிய காற்று

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு, மெரினா கடற்கரையில் 2005 ஏப்ரல் 9ஆம் தேதி மாலை நடந்தது. அதே கடற்கரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடற்கரைக் கவியரங்கம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி சுமாருக்கு இது நடக்கும். வந்திருக்கும் கவிஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய வட்டமாகவோ, பெரிய வட்டமாகவோ அமர்ந்து கவிதை வாசிப்பார்கள். இதைப் பொன்னடியான், தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற அமைப்பின் மூலம் நடத்தி வருகிறார்.

சிலம்பொலி தமிழ்த்தரணி என்ற அமைப்பும் இத்தகைய நிகழ்ச்சியை மாதத்தின் ஒவ்வொரு பெளர்ணமி நாளன்றும் நடத்தியது. முழுநிலாக் கவியரங்கம் என்று பெயர். இவை தவிர இன்னும் பல அமைப்புகளும் பல தேதிகளில் பல சிலைகளுக்குப் பின் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தின; நடத்தி வருகின்றன.

இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, எளிது. அழைப்பிதழ், சுவரொட்டி, அரங்கம், ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, நாற்காலி, தேநீர், இனிப்பு / காரம் என எதுவும் தேவையில்லை. முதல் முறை நடத்திவிட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் வந்தால் போதும். அதே கூட்ட முடிவில் அடுத்த மாதம் என்று நடைபெறும் என்று தெரிவித்து விடுவார்கள். பெரும்பாலும் அதே நாள் (இரண்டாம் சனிக்கிழமை/ மூன்றாம் சனிக்கிழமை/ கடைசி ஞாயிறு...) நடக்கும்.
நிகழ்ச்சி எப்படி நடந்தாலும், எவ்வளவு பேர் வந்தாலும் அமைப்பினர் சிலர், அதுகுறித்து செய்தி இதழ்களில் ஒரு குட்டிச் செய்தி வருவதில் குறியாக இருப்பார்கள். இன்றைய நிகழ்ச்சிகளில் செய்தி வரவேண்டும் என்பது அவர்களின் துடிப்பாய் இருக்கும். ஏனெனில் நிகழ்ச்சிக்குப் பலர் வராவிட்டாலும் இன்றைய நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். எனவே ஒரு நல்ல அறிமுகம் இருக்கும்.

பெரும்பாலும் வந்திருப்பவர்களிலேயே யாரையாவது திடீர்த் தலைமை தாங்க அழைப்பார்கள். பல வகையான வேடிக்கைகள் அங்கு அரங்கேறுவது வாடிக்கை. அவை பற்றியெல்லாம் இப்பொழுது வேண்டாம்.

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு வருவோம். 'இகாரஸ்' பிரகாஷ் கணக்குப்படி 23 பேர் வந்திருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்தகைய கடற்கரைக் கூட்டத்திற்குச் சென்றேன். ஆர்.வெங்கடேஷ், பத்ரி சேஷாத்ரி, மாலன், 'இகாரஸ்' பிரகாஷ், 'அம்பலம்' சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, சுரேஷ் கண்ணன், 'சுவடு' ஷங்கர், 'ரஜினி' ராம்கி உள்ளிட்ட ஏற்கெனவே அறிமுகமான, முகம் தெரிந்த நண்பர்கள் பலரைக் கண்டேன்.

முகம் தெரியாவிட்டாலும் இணையம் வழியாக அறிந்த புதிய நண்பர்கள் பலரைக் கண்டேன். அமுதசுரபி மார்ச்சு '05 இதழில் பங்குச் சந்தை உள்ளும் புறமும் என்ற கட்டுரை எழுதிய தமிழ்சசியை நேரில் கண்டேன். அமுதசுரபி ஏப்ரல் இதழில் நாட்டின் மின்தேவைக்கு அணுவாற்றல் என்ற அருமையான கட்டுரையை எழுதிய எல்.வி.கிருஷ்ணனின் மகன் சத்யநாராயணன், வளமையான தமிழை வலியுறுத்தி வரும் இராம.கி. அய்யா, வித்தியாசமான பெயர் கொண்ட 'டோண்டு' ராகவன், 'சைவர் பிரம்மா' எஸ்.கே., அருணா சீனிவாசன், நாமக்கல் ராஜா, அருள்செல்வன், சந்தோஷ் குரு, வா.மணிகண்டன், 'உருப்படாதது' நாராயணன், சந்தையாக்க நிபுணர் மீனாக்ஸ் ஆகியோரை இங்குதான் முதன்முதலில் கண்டேன். அருள்செல்வனை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம்!

என்னைப் பொறுத்தவரை இது, மிகவும் பயனுள்ள சந்திப்பு. இதன் மூலம் நட்பு வளரும் வாய்ப்பு உள்ளது. அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டது, நல்ல முறை. ஆனால், ஒலிவாங்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

நான் கவனித்த, என் நினைவில் உள்ள சில உரையாடல்கள் பின்வருமாறு:

"1. தனிப்பட்ட பதிவுகளாகவே உள்ளன; சமூகப் பதிவுகளாக இல்லை. 2. பதிவுகளால் நேரம் வீணாகிறது. பயன் இல்லை." - மாலன்

"வலைப்பதிவுகளைப் பயனுள்ளதாக்க வேண்டும். பின்னூட்டத்தில் பாராட்டுவோர், கூகுள் ஆட்சென்ஸைச் சொடுக்கினால் அதன் மூலம் வலைப்பதிந்தவருக்குப் பண வருவாய் வர வாய்ப்பு உள்ளதா?" - அண்ணாகண்ணன்

"இல்லை. அப்படிச் சொடுக்கக் கூடாது. அதன் மூலம் பணத்தைப் பெருக்க முடியாது. வருவாய் கருதாமல் விக்கிபீடியா போன்ற ஒரு கலைக் களஞ்சியத்தில் சேர்க்கும் வகையில் சிறப்பானவற்றை, புதிய துறைகளைப் பற்றிப் பதியவேண்டும்." - பத்ரி

"பின்னூட்டங்களில் அடிப்படை நாகரிகம் இல்லை." - ஆர்.வெங்கடேஷ்.

"தமிழ்மணம் தளத்தால் காசிக்கு நிறைய செலவாகிறது. அதைப் பயன்படுத்தும் நாம் அந்தச் செலவில் பங்குகொள்ளவேண்டும்." - எஸ்.கே.

"எதிர்காலத்தில் வலைப்பதிவு இலவசமாகக் கிடைக்காது. வீடியோ பிளாக்ஸ் வருகிறது." - நாராயணன்.

"பெண்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. தோழியர் கூட்டு வலைப்பதிவிற்கு யாரேனும் உங்கள் பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளீர்களா?" - ராமச்சந்திரன் உஷா

"இதை மேல்கைண்டு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்"
:-$ - ரஜினி ராம்கி.

"1. அப்படிக் கொடுத்துவிட்டால் என்ன சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்கள்? 2. தொழில்நுட்பத்தைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள். உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசுங்கள்" - சுரேஷ்கண்ணன்

"பின்னூட்டத்தை ஒருவர் நீக்கியதால் தனி வலைப்பதிவு தொடங்கினேன்." - வா.மணிகண்டன்.

"இயல்பியல், மட்டுறுத்தர் ஆகிய சொற்களை அறிமுகம் செய்தவன் இங்குதான் உள்ளேன். முருக்க மரத்தை அறிவீர்களா? ஆங்கிலத்தில் flame of the forest என்பதே தமிழில் முருக்க மரம். மார்க்கெட்டிங் என்பதை மாறுகொள்ளுதல் எனலாம். மொழியில் பழைய சொற்கள் கழிவதும் புதிய சொற்கள் புகுவதும் இயற்கை." - இராம.கி.

"இராம.கி. சொல்வது சரி. contentதான் முக்கியம்" - அருணா சீனிவாசன்.

மேலும் பலரும் பலவிதக் கருத்துகளை முன்வைத்தார்கள். ஒலிவாங்கி இல்லாததால் அவற்றைச் சரியாகக் கவனிக்க இயலவில்லை. படிப்படியாக ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, இறுதியில் பத்துப் பன்னிரண்டு பேர்களே எஞ்சியிருந்தார்கள்.

'சுவடு' ஷங்கர், வந்தவர்களுக்கு வறுவலும் தண்ணீரும் அளித்துத் தெம்பளித்தார். பருமனானவர்களையே விரும்புவதாக வலைப்பதிந்திருந்த மீனாக்ஸ், "கடுமையாக உழைத்து, உடலைச் சற்றே மெலியவைத்துள்ளேன்" என்றார்.

எனினும் இந்த முயற்சி, ஒரு நல்ல தொடக்கம்.

Monday, April 04, 2005

நாட்டார் ஐயா


அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின.

இவரைப் பற்றி இவரின் மகன் வே. நடராஜன் எழுதிய நாட்டார் ஐயா என்ற நூல், படிக்கக் கிடைத்தது. இதனைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சுருக்கமாக ‘கழகம்’) வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு 1998, பக்- 277, விலை- ரூ.60.00)

ஒரே ஒரு பிரதிதான் உள்ளது. எனவே உடனே திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் எனப் பதிப்பாளர் முத்துக்குமாரசுவாமி கூறியிருந்தார். எனவே, அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் ஒரு முறை படித்துவிட வேண்டும் என்ற உந்துதல் பிறந்தது.

அக்காலத் தமிழ் நடையில் நூல் உள்ளது. வே. நடராஜன் , இடையிடையே தன் அநுபவங்களையும் கலந்தே எழுதியுள்ளார். எனினும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரங்களை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.

நாட்டார் என்பது, கள்ளர் மரபில் வந்தவர்களின் பட்டப் பெயர். கள்ளர் என்பவர், பல்லவரின் ஒரு கிளை. தொண்டை நாட்டினின்றும் சோழ பாண்டிய நாடுகளில் குடியேறி அரையர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் சோழர் குடி முதலியனவும் இம்மரபில் கலந்துவிட்டது. (பக்-12)

நாட்டார், கள்ளர் சரித்திரம் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமை குறிப்பித்தக்கது. உ.வே.சா., இந்நூலை மிகவும் பாராட்டியிருக்கிறார். இதனைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கவும் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார்.

வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928), ஆகியன நாட்டாரின் நூல்கள். கட்டுரைத் திரட்டு I என்ற நூலும் வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார்.

இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார்.

அ.மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.

திருவருட் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்க நாட்டார் முயன்றுள்ளார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியிலும் இவருக்குப் பங்கு உண்டு. கல்லூரி, பல்கலை இரண்டின் தேவையையும் வலியுறுத்தி, அறிக்கைகளை நாட்டார் உருவாக்கியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றவேண்டும் என்ற எண்ணத்தை, மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் 1981ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.

*********
''ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.

சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.

புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.''

***********

நாட்டாரின் கருத்து, இன்றைக்கும் தேவைப்படுவது. தமிழின் தூய்மையைக் காக்கும் வரையே அதன் உயிர் பொலிவுறும். அப்படியே வேற்றுச் சொல் தேவையெனினும் கூடிய விரைவில் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து, புழக்கத்திற்குக் கொணர்வது நம் அனைவரின் கடமை.

இங்கு, நாட்டாரின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.

12-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார். தந்தை, முத்துச்சாமி நாட்டார். தாயார், தையலம்மாள். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.

தொடக்கக் கல்வி வரை பள்ளியில் கற்ற இவர், பிறகு வீட்டில் இருந்தவாறு தாமே தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம், மூன்று தேர்வுகளை நடத்தும் விவரம் அறிந்தார். அவற்றை எழுத விழைந்தார்.

1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க் கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.

இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார்.

ஆண்டுக்கு ஒரு தேர்வு எழுதி மூன்றே ஆண்டுகளில் மூன்று தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு இவர், ‘பண்டித’ ந.மு.வேங்கடசாமி நாட்டார் என அழைக்கப்பெற்றுள்ளார்.

திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.

1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.

அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ.ச.ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார், 1940ஆம் ஆண்டு நாட்டாருக்கு நாவலர் என்னும் பட்டம் அளித்துள்ளனர்.

இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.

நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவர் மணிவிழாவுக்காக வசூலித்த 1712-4-0(ரூ-அணா- பைசா) தொகையை அவருடைய நினைவு விழாவுக்குப் பயன்படுத்தினர்.

அவர் சமாதி வைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். ( 1944ஆம் ஆண்டு ஒரு மூட்டை சிமெண்டு விலை 3 ரூபாய் 12 அணா. 1000 செங்கற்கள் விலை ரூ.18. கொத்தனார் கூலி ரூ.5.)

1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.

நாட்டாரின் கனவுகளில் ஒன்றான திருவருள் கல்லூரியை 1992ஆம் ஆண்டு பி.விருத்தாசலம் தொடங்கினார். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தோர், இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்குத் தகுதியுடையவர் என்று இப்பல்கலை தெரிவித்துள்ளது.

தமிழில் பெரும்புலமை பெற்றவர்கள் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டார்கள். பண்டைய நூல்கள் பலவற்றைப் பெயரளவில் அறிந்திருப்பதே இப்பொழுது வியப்பைத் தருவதாய் உள்ளது. ஆயினும் நாட்டார் அவர்கள், தமிழின் பழைய நூல்களை மிகவும் ஆழ்ந்து கற்றுள்ளார். சிக்கலான பாடல்களுக்கும் பொருளுணர்த்தியுள்ளார். முக்கியமாகத் தனி ஆசிரியரிடம் கல்வி பயிலாமல் தாமே முயன்று தமிழ் பயின்றுள்ளார். கடும் உழைப்பாளியான இவர், எளிய வாழ்க்கை நடத்தியுள்ளார். நாள்தோறும் நாட்குறிப்பும் எழுதியுள்ளார். அதில் பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்துள்ளார். மாணவர்களிடம் அன்புடன் பழகி, கற்றலின் மேல் ஆர்வம் மிகச் செய்துள்ளார்.

நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.

நாட்டாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியதன் மூலம், தமிழக அரசு ஒரு நற்பணியைச் செய்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்பக வல்லோர், நாட்டாரின் படைப்புகளை மக்கள் அறியச் செய்திடல் வேண்டும். நாட்டாரின் உழைப்பையும் உயர் கருத்துகளையும் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

Friday, April 01, 2005

கவிதாயினி குட்டி ரேவதி

கவிதையை அடைவதற்கு ஆயிரக்கணக்கான வழிகள் உண்டு. உணர்வுப் பெருவெள்ளத்தில் ஒரு சருகென விழலாம். அறிவு நெடுஞ்சாலையின் போக்குவரத்துச் சமிக்ஞைகளுக்கு நின்று நின்றும் செல்லலாம். ஞானக் குகை வழியாக ஊர்ந்தவாறும் போகலாம். நோக்கின்றிக் கண்மூடித்தனமாய்ச் செல்லும்போதும் கவிதையின் மீது மோதிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. மொழியின் முதுகில் ஏறிக்கொள்ளும்போது அதுவும்கூடச் சில நேரங்களில் நம்மைக் கவிதையிடம் அழைத்துச் சென்றுவிடும்.

படைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும்.

நல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.

தொடர்பற்ற இரு சொற்களை ஒரு புள்ளியில் இணைக்கும் போது ஒரு புதுவித மின்சாரம் பாய்வதைச் சிலர் உணர்ந்திருப்பார்கள். வெவ்வேறு தோட்டத்து மலர்களைக் கோக்கும் போது மாலையின் அழகு கூடும்தானே! கலப்பினப் பசுவும் தாவரங்களும் அதிக வீரியத்துடன் விளங்குவது, அறிவியல் உண்மை ஆயிற்றே!

குட்டி ரேவதியின் சமையல் மிகச் சிறப்பாய் இருக்கிறது. அவரின் சொற்களுக்குள் செறிவான மின்னோட்டம் உள்ளது. வெவ்வேறு சொற்கூட்டில் இருக்கும் பறவைகளை இவர் சிறந்த முறையில் இணை சேர்க்கிறார்.

கணுக்கால் வரை மரணத்தின் சகதி
இழுவிசை மீறி இன்னும் நீண்டதூரம்
கால் களைக்க நடக்கவேண்டும்
நினைவின் வேர்கள்
பூமியின் இதயத்திலிருந்து
வெளியேறிப் புடைத்திருக்கும் படிவங்களில்
தங்கி இளைப்பாறலாம்
அங்கும் பொறிக்கப்பட்டிருக்கும்
சமீபத்திய மரணத்தின் நிழல்

இந்தக் கவிதையில் 'மரணத்தின் சகதி' என்ற சொற்சேர்க்கையைக் காணுங்கள். இந்த இரு சொற்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. இவற்றை இணைத்த பிறகு இப்பொழுது பெறக்கூடிய பொருள்கள் பற்பல. இன் என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு, இவர் கவிதைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதே கவிதையில் நினைவின் வேர்கள், பூமியின் இதயம், மரணத்தின் நிழல் ஆகிய சொற்சேர்க்கைகளையும் இங்கு நோக்குவது பொருத்தம் உடையது.

....செவிலித்தாயின் கண்களுக்குள்ளிருந்து அவளது ஆர்வத்தின்
நாய்க்குட்டி அடிக்கடி எட்டிப் பார்ப்பது பிடிக்கவில்லை....

-இங்கு ஆர்வத்தின் நாய்க்குட்டி என்ற சொற்சேர்க்கை, மிக அழகாகப் பொருந்தியுள்ளது.

எங்கோ பூமியின் தொடையறுத்துப் பாய்கிறது
எமது தோழர்களின் ரத்தம்

- 'பூமியின் தொடை' என ஏன் சொல்லவேண்டும்? உருண்டை வடிவப் பூமிக்குத் தலையும் காலும்கூட கிடையாதே! பிறகு எப்படி தொடை வந்தது? அப்படியே சொல்லவேண்டியிருந்தாலும் வேறு உறுப்புகளைச் சொல்லியிருக்கலாமே! தொடை என்றது ஏன்? அதிகச் சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் இச்சொல், துரியோதனனின் தொடை வரைக்கும் என்னை அழைத்துச் சென்றது.

அம்முத்தத்தின் மீது படர்ந்திருக்கிறது
நினைவுகளின் நூலாம்படை

- என்றும்

மலையுச்சிக்கு அழைத்துச் சென்று
காதலை வினவும் உன்னிடம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்
நீண்ட தொலைவு நடந்த என் பாதங்களின் குரல்
சாலையை அறுக்கும் ஒரு விபத்தின்
இரைச்சலுக்கிடையே
துண்டிக்கப்பட்டுவிட்டது

- என்றும்

எனது மார்பின் பள்ளத்தாக்குகள்
சிறு ஓலத்தையும் பன்மடங்கு எதிரொலிக்கின்றன

-என்றும்

மதில் சுவரிலிருந்து பந்தைப்போல்
துள்ளிக் குதிக்கிறது கறுப்புப்பூனை.....
ஒரு பகலின் விளிம்பிலிருந்து
மறு பகலின் கைப்பிடிச்சுவருக்குத் தாவுகிறது

- என்றும்

..உனது கடிதத்திலிருந்து
எழும் நறுமணப் புகை
அன்றைய இரவும் பகலும் கமழ்ந்து
அறையின் மூலையில் பூனையாய்ச் சுருண்டு அமர்ந்திருக்கிறது

- என்றும் குட்டி ரேவதியின் சொற்கலவைகள், புதிய சுவையை அளித்தவண்ணம் உள்ளன.

துருப்பிடித்த மீசைகள், ஒளியின் கண்ணிமைகள், புத்தகத்தின் மார்பு, இரவின் தோட்டங்கள், ஏக்கங்களின் சமுத்திரம், உடலின் சுனை, மரணத்தின் வாசனை, உடலின் நதிப்படுகை, மார்பின் புல்வெளி, கவிதையின் தழைகள், கனவின் விதை, நினைவின் அகராதி, நினைவின் நகக்கணுக்கள், இதயத்தின் சருமம், மனதின் கண்ணாடி, மெளனத்தின் கைகள், கடிதத்தின் முனகல்கள், துயரப் பறவையின் நீலச் சருகு, இமைகளின் வரப்பு, தூய அருவிகளின் வெண்பாடல்.... என இவரின் கலப்பினச் சொற்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இவை, சராசரியான சொல்லோட்டத்தை மீறியவை. புதிய வெளிகளையும் பொருள்களையும் கண்டடைவதற்கான இடைவிடாத தேடல், குட்டி ரேவதியிடம் உள்ளது. அதற்கான சான்றுகளே, இவை.

சொற்களைக் கொம்பு சீவி விடுவதோடு அற்புதமான காட்சிகளையும் இவர் வழங்குகிறார்.

தேநீரின் ஆவி
ஜன்னலின் வெளிச்சத்தில்
ஒரு பறவையாகிறது
ஒரு கனவு நீண்ட நேரமாக
அமர்ந்திருக்கிறது மேசை மீது

- என இவர் காட்டும் ஒரு காட்சி தனித்துவத்தோடு ஒளிவீசுகிறது.

கதவுக்கும் வலைஜன்னலுக்கும் இடையே சிக்கிக்கொண்ட
வண்டொன்று
சிறையில் அடைக்கப்பட்ட வீரனைப்போல்
ஓயாமல் சுவர்களோடு மோதுகிறது

- என்ற காட்சியில் வீர வண்டின் பராக்கிரமம், நம் கண் முன் விரிகிறது. வண்டுக்கே இவ்வளவு வீரம் இருக்கும்போது, மனிதர்கள் கோழைத்தனமாய் இருக்கலாமா? என்பது இதனுள் இருக்கும் மறைமுகக் கேள்வி.

அதிகாலையில் பறவைகள் அலகினால்
இறகைக் கோதுவதையும்
ஒரு சூரியக் கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்
காண்கிறேன்

- என்கிற காட்சி, மிக வசீகரமாய் இருக்கிறது.

மழை, நடனப்பெண்ணின் அவிழ்ந்த உடையைப்போல்
தரையில் கிடந்தது


- என்கிற உவமையைக் கையாளும் முதல் நபர் இவரே.

...மருத்துவச்சி வந்தாள்
சூலுற்றவளை நிர்வாணித்தாள். மெல்ல...
அகட்டிய காலின் இரு உள்தொடைகளிலும்
சாம்பல் உதிரும் சிகரெட் சூடுகள்
கண்களாய்க் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டாள்
அதிர்ச்சியில் காதுகளைப் பொத்திக்கொண்டாள்:
'இன்னுமா அவனுக்கு நீ மனைவி?'

- இந்த எளிய சொற்களுக்குள் இவரால் ஒரு பெரிய வாழ்வையே சித்திரிக்க முடிகிறது.

முலைகள், பூனையைப் போல் அலையும் வெளிச்சம், தனிமையின் ஆயிரம் இறக்கைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வழங்கியுள்ளார். முலைகள் என்று தன் முதல் நூலுக்குத் தலைப்பு இட்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இவரின் தொகுப்பில் சில பாலியல் கவிதைகள் உள்ளன. ஆனால் அவை, செயற்கையாக வலிந்து எழுதியவை அல்ல. மிக இயல்பான வெளிப்பாடு.

மரம் திரையாகிறது
மறைவில் அவள் தன் நெஞ்சைத் திறந்து
இரு செந்தாமரைகளைப் பரிசளிக்கிறாள்
சலனமற்றிருந்த பறவைகள்
திரை அசைவில் கலைந்து
தாமும் தாமரைகளாய் நீந்துகின்றன
சிலந்தியாகி அங்கும் இங்குமாய்
மரத்தைச் சுற்றிப் பின்னுகிறாள் அவனை
எரியும் உடலின் கொழுந்தாகி
மரம் நிற்கிறது
நின்றவாறே

- என்ற வரிகளில் தவறேதும் இல்லை.

முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்...

-எனத் தொடங்கி நீளும் இவரின் தலைப்புக் கவிதை, மெச்சத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். திரைப்படம் சார்ந்தும் இயங்கிவரும் இவர், சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தான் தேர்ந்த பாதையில் உறுதியாக நடைபோடும் இவர், முதிர்ந்த படைப்பாளியின் வீச்சைப் பெற்றுள்ளார்.

...உணர்வுகளின் குவியல் நான்
ஒளிதேசத்தில் வாழ விரும்பும்
விடுதலைப் பறவை...
ஒரே பிறப்பில்
அழவும் சிரிக்கவும் ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவள்...

-என்கிறார் குட்டி ரேவதி.

இவரைச் 'சித்த' மருத்துவர் என அழைப்பது தகும்.

-------------------------------------------------------------
அமுதசுரபி - ஏப்ரல் 2005