!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/10 - 2005/11 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 12, 2005

சென்னை: மழையின் பின்விளைவுகள்


கடந்த சில நாள்களாகச் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சில நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தாலும் வெய்யில் கொடுமையாலும் தவிக்கும் சென்னைக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால், மழையின் பின்விளைவுகளைத் தாங்கக்கூடிய சக்தி, சென்னைக்கு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவருகிறது.

இரண்டு நாள்கள்; நாளுக்கு இரண்டு மணிநேர மழை; மற்றபடி லேசான தூறல்; இதுதான் சென்னை காணும் கனமழை. இதற்கே சென்னையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மும்பையில் பெய்த கனமழை இங்கே பெய்தால் என்னென்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யவே கடினமாய் இருக்கிறது.

இருநாள் மழைக்கே மாநகர வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. குடிநீர்க் குழாய்ப் பதித்தல், பாதாள சாக்கடைப் பணிகள், சாலை அகலப்படுத்தல், சாலை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக மாநகரின் பல பகுதிகளில் சாலையைத் தோண்டி வைத்துள்ளனர். இதனால் பயன்பாட்டுக்கு உரிய சாலை, மேலும் குறுகிவிட்டது.

சாலைகளில் தோண்டிவைத்த பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால் சாலை எது, பள்ளம் எது என்ற குழப்பத்திற்கு மக்கள் ஆளாகின்றனர். வழக்கமாகப் பள்ளங்களில் நடப்படும் சிவப்பு எச்சரிக்கைக் கொடியும் இம்முறை காணப்படவில்லை.

இதனால் மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். குழந்தைகள், தெரியாத்தனமாகக் கால்வைத்தால் நிகழக்கூடிய விபரீதம் சொல்லமுடியாது. வாகனங்கள், பள்ளத்தில் மாட்டிக்கொள்ளக்கூடிய ஆபத்தும் உள்ளது. நடைபாதைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. பல பகுதிகள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மக்களின் இயல்வு வாழ்க்கை, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை. காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசியும் இதுதான் சாக்கு என்று கூடிவருகிறது. ஆட்டோக்காரர்கள், கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். பல வகைகளில் மழையின் பின்விளைவுகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

குப்பைகளைச் சரிவர அள்ளாததால் பல இடங்களில் மழைநீரில் குப்பைகள் மிதந்தவண்ணம் உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளும் பிற திடக் கழிவுகளும் சாக்கடைகளை அடைத்துக்கொண்டு மழைநீர் வெளியேறாவண்ணம் தடுக்கின்றன. மேலும் மனிதக் கழிவுகளும் மழைநீரில் கலக்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு மிகுந்துள்ளது.

மாநகராட்சி ஊழியர்களும் புறநகரத்தின் நகராட்சி ஊழியர்களும் விழிப்போடும் எச்சரிக்கையோடும் பணியாற்றவேண்டும். விபரீதங்களைத் தடுக்கத் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், கழிவுநீர் அகற்று வாரியம் ஆகியன விரைந்து செயலாற்றவேண்டும்.

வருமுன் காப்பது நம் கடமை. வந்தபின்னாவது காக்காவிட்டால் அது மடமை.