!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2007/05 - 2007/06 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, May 24, 2007

முனி - திரை விமர்சனம்

நகை(ச்சுவை) பாதி; பகை பாதி என வந்திருக்கும் பேய்ப் படம் இது. 21ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் படம் எடுக்க எப்படித்தான் துணிச்சல் வருகிறதோ!

சிறு வயதில் பேய்க்கதைகள் சொல்லிப் பயமுறுத்தியதால், பெரியவன் ஆன பிறகும் கணேஷ் (ராகவா லாரன்ஸ்) தொடைநடுங்கியாகவே இருக்கிறான்; மாலை 6 மணிக்கு மேல் வெளியே போகமாட்டான்; கொத்து தாயத்துகளை இடுப்பில் கட்டியிருக்கிறான்; இரவில் சிறுநீர் கழிக்கக்கூட தாயைத் துணைக்கு அழைக்கிறான். இத்தகைய பின்னணியில் அவன், வேடிக்கையான முறையில் ஒருத்தியை(வேதிகா)க் காதலித்து மணம் முடிக்கிறான். அவன், மனைவி, அம்மா, அப்பா ஆகியோருடன், ஒரு புது வீட்டுக்குக் குடிபெயர்கிறார்கள். அந்த வீட்டில் லாரன்ஸைப் பேய் (ராஜ்கிரண்) பிடித்துவி டுகிறது. அந்தப் பேயை விரட்டும்போது அந்தப் பேய் தன்னை எப்படிக் கொன்றார்கள் என்று தன் கதையைச் சொல்கிறது. அதைக் கேட்டு இரக்கப்படும் லாரன்ஸ், அந்தப் பேய்க்குத் தன் உடலைத் தரச் சம்மதிக்கிறார். தன்னைக் கொன்றவர்களைப் பேய் கொன்றதா என்பதே கதை.

இந்தக் கதைக்குள் ஒரு கிளைக் கதையாக முனி என்ற பேயின் சொந்தக் கதை விரிகிறது.

லாரன்ஸ் குடும்பத்தினர் குடியேறும் வீட்டுக்குச் சொந்தக்காரர், அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர். (காதல் தண்டபாணி) அவர், தேர்தலில் வெல்வதற்காக நிறைய வாக்குறுதிகளைத் தருகிறார். தன் வார்த்தைகளை, அந்தப் பகுதிக் குப்பத்தின் செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் முனியை (ராஜ்கிரண்) நம்பவைக்கிறார். முனியும் தண்டபாணிக்கு வாக்களிக்கச் சொல்கிறார். ஆனால், தேர்தலில் வெற்றி பெறும் தண்டபாணி, வாக்கு மீறுவதோடு முனியையும் அவர் மகளையும் கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுகிறார். இதற்குப் பழி வாங்குவதற்காகவும் அவன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதற்காகவும் முனி பேயாக வந்து, லாரன்ஸ் உடம்பில் இறங்குகிறது.

முதலில் கதையில் உள்ள நல்ல தன்மைகளைப் பார்ப்போம். இன்று அரசியல் முகமூடி அணிந்த பலர், வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அவற்றை அப்படியே மறந்துவிடுகிறார்கள். அப்பாவிகளையும் தன்னை நம்பியவர்களையும் மனச்சான்றே இல்லாமல் கொன்று குவிக்கிறார்கள். இவர்களுக்குள் எல்லாம் இந்தப் படம் அச்சத்தை ஏற்படுத்தும். யாருக்கும் தெரியாமல் கொன்றாலும் அவர்கள் பேயாக வந்து தங்களைப் பழி வாங்குவார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும். உயிர் மீது உள்ள அச்சத்தால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புண்டு.

ராகவா லாரன்ஸின் நடிப்பு, சிறப்பாக உள்ளது. பயந்து நடுங்கும்போதும் பேய் இறங்கியபோது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்போதும் நல்ல வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். முனியாகவும் பேயாகவும் நடித்துள்ள ராஜ்கிரண், நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார். காதல் தண்டபாணியும் அவரின் உதவியாளராய் வந்து, வடிவேலுவை ஒத்தியெடுத்து நடித்துள்ள டேவிட்டும் குறிப்பிடும்படியாக நடித்துள்ளார்கள். படத்தின் தொடக்கத்தில் இடை இடையிலும் நகைச்சுவைக் கலவை எடுபடுகிறது. அதுதான் படத்தைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.

வசனம் பரவாயில்லை. லாரன்ஸ் கறுப்பாக இருப்பதால் அவர் காதலை ஏற்க முடியாது என வேதிகா சொல்கிறார். அதற்குப் பதில் அளிக்கும் லாரன்ஸ், 'உன் நிறம் என் காலுக்கு அடியில் (உள்ளங்காலில்) இருக்கு; என் நிறம், உன் தலைக்கு மேலே (கூந்தலில்) இருக்கு' என்கிறார். இது வித்தியாசமான ஒப்பீடு.

ஆனால், படத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன.

லாரன்ஸ் உடலில் முனி வந்திறங்குவதும் வெளியேறுவதும் அவ்வளவு எளிதாக நடைபெறுவது வியப்பளிக்கிறது. வீடியோவில் பேயின் உருவம் தெரிவது, அடுத்த வியப்பு. பேயை வா என்று அழைத்ததும் வருகிறது; போ என்றதும் போகிறது! இதற்கெனக் குழந்தைத்தனமாக ஒப்பந்தம் வேறு போட்டுக்கொள்ளப்படுகிறது.

பேயை ஆன்மா என்று மந்திரவாதி கூறுவது ஒரு பெரும் அபத்தம். இந்திய ஆன்மீகமும் தத்துவமும் ஆன்மா என்பதைப் பற்றி எவ்வளவோ பேசுகின்றன. ஆனால், அதைப் பழிவாங்க வந்த ஒரு பேய்க்கு நிகராக விவரிப்பது தவறு.

அடுத்து, அத்தகைய பேய் உள்ளிருக்கும்போது லாரன்ஸ் சுய உணர்வுடன் இருக்கிறார்; பேய் என்னென்ன செய்கிறது என்பதை லாரன்ஸ் அறிந்தே இருக்கிறார். வழக்கமாக, வேற்று உணர்வுகள் உள்வரும்போது சொந்த உணர்வுகள் முற்றிலும் செயலிழக்கும் என்பதே இதுவரையான கற்பனை! இதில் அதுவும் பொய்க்கிறது.

இந்து மந்திரவாதி (நாசர்), ஏகப்பட்ட சமாச்சாரங்களுடன் பேய் ஓட்டுகிறார்; முஸ்லிம் மந்திரவாதியோ, ஒரு தண்ணீரைத் தெளித்ததும் பேய் கட்டுப்பட்டுவிடுகிறது. அது என்ன தண்ணீர் என்பதைக் கடைசி வரை இயக்குநர் காட்டவே இல்லை.

குப்பத்திற்குச் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்டவற்றைச் செய்து தருவதாகத் தேர்தலில் போட்டியிடும் தண்டபாணி கூறுகிறார். ஆனால் வென்றதும், 'நீ கேட்ட பணத்தைக் கொடுக்கிறேன்; நீயே போட்டுக்கொள்' என்கிறார். 'நான் எப்போது பணம் கேட்டேன்? என் கையில் எதற்காகக் கொடுக்க வேண்டும்? நீங்கள்தானே முன்னின்று இதைச் செய்யவேண்டும்' என்று முனி பதிலே கூறவில்லை. உடனே சிரித்துக்கொண்டே பணத்தை வாங்கச் சென்று சாகிறார்.

இரண்டு பெட்டி நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு குப்பத்திற்கு இவ்வளவு வசதிகளைச் செய்துவிட முடியுமா? ஒரு தேர்தலின் வெற்றியையே தீர்மானிக்கும் அந்தக் குப்பத்தை இவ்வளவு குறைத்து எடை போட முடியுமா? எந்தச் சட்டமன்ற உறுப்பினர், இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பணத்தைத் தருவார்? அரசாங்கம், ஒப்பந்தப் புள்ளி கோரிப் பெற்று முறைப்படி நிறைவேற்ற வேண்டிய ஒன்றை இப்படி சின்னப்பிள்ளைத்தனமாகக் காட்டியது ஏனோ? மக்கள் தமக்குத் தாமே நிறைவேற்றுவது என்றால் அதற்கு எதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்?

எரித்துக் கொல்லப்பட்ட முனி, அதே தோற்றத்துடன் வினுசக்கரவர்த்தியைப் பயமுறுத்துவது; பேய் இருக்கும் அறையில் கற்பூர தீபம் தானாக அணைவது; பயமுறுத்துவதற்கு என்றே டொக் டொக் என்று கதவைத் தட்டுவது; ஒற்றைக் கை மட்டும் நீண்டு சென்று தோளைத் தொடுவது; திடீர் திடீரென அலறுவது; சூனியக்காரி போன்று பாக்கு இடிக்கும் கிழவியைக் காட்டுவது; முறைத்துப் பார்க்கும் வேலைக்காரி; அவளுக்குப் பேய் பிடித்ததாக வேடம் போடும் ஒரு பெண்..... என திகில் சமாசாரங்கள் படத்தில் நிறைய உண்டு.'வர்றாண்டா முனி' என்ற பாடல் மட்டும் பரவாயில்லை; மற்றவை ஐயகோ! சண்டைக் காட்சிகள், நம்பும்படியாக இல்லை. பேய் அடிக்கிற அடியில் இரண்டு தெரு தள்ளி விழுகிறார்கள்; பாவம்! அடி வாங்கியவர்கள் இல்லை; பார்க்கிற மக்கள்! வேதிகாவுக்கு உருப்படியான வேலை எதுவும் இல்லை. வேதிகாவின் குடும்பமோ, அதற்கு மேல் கோமாளித்தனமாக உள்ளது.

படத்தில் லாஜிக் இல்லை; மேஜிக் உண்டு. நடிகராகவும் நடன இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ள ராகவா லாரன்ஸின் முதல் இயக்குநர் முயற்சி, கவரும்படி இல்லை. தொழில்நுட்பத் திறன்களை வைத்து மக்களை மேன்மைப்படுத்தாமல் போகலாம்; ஆனால், அவர்ளை மூட நம்பிக்கையில் ஆழ்த்தும் இந்தப் படம், பொழுதைப் போக்கவில்லை; கொல்கிறது.

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.... எதிர்பார்க்கலாம்.

நன்றி: தமிழ்சிஃபி

பருத்தி வீரன் - திரை விமர்சனம்

உலக விருதுகள் பெற்ற ராம் படத்தை இயக்கிய அமீரின் அற்புதமான இன்னொரு படைப்பு, பருத்திவீரன்.

எடுத்தவுடனே கிராமத்துத் திருவிழாவில் தொடங்கும் கதை, புழுதி பறக்கும் ஒரு வட்டாரத்துக்குள் நம்மை வாழ வைத்துவிடுகிறது. சாதிய வேர்பிடித்த மண்ணில் வெட்டும் குத்தும் எவ்வளவு மலிவானவை என்பதைப் படம் உடைத்துச் சொல்கிறது. காட்சிக்குக் காட்சி அமீரின் நேர்த்தியும் படக்குழுவின் உழைப்பும் வெளிப்படுகிறது.

கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்தவன் பருத்திவீரன் (கார்த்தி); ஒரு விபத்தில் அவன் தாயும் தந்தையும் மாண்டுவிட, சிறுவயது முதல் அநாதையாகத் திரியும் அவனுக்கு சித்தப்பா செவ்வாழை (சரவணன்)தான் ஒரே ஆதரவு. கலப்புத் திருமணம் செய்ததால் அவர்களுடன் பரம்பரைப் பகைமை பாராட்டும் பொன்வண்ணன். அவன் மகள் முத்தழகு (பிரியாமணி). சிறுவயதில் முத்தழகின் மேல் அன்பு பாராட்டிய பருத்திவீரன், ஒரு சமயத்தில் அவள் உயிரையும் காப்பாற்றுகிறான். அதனால் முத்தழகு, அவனையே மனத்தில் வரித்துக்கொள்கிறாள்.

வாலிப வயதில் பருத்திவீரன் சண்டியர் ஆகிறான்; அடிக்கடி சிறைவாசம் செல்கிறான். 'என்ன சித்தப்பு! மாறி மாறி தேனி, ராமநாதபுரம், மதுரை ஜெயில்தானா? ஒரு முறையாவது சென்னை ஜெயிலுக்குப் போயிடணும். கை உயர்த்தி டாட்டா காட்டணும், டிவிக்கு எல்லாம் பேட்டி கொடுக்கணும்' என ஒரு இலட்சியத்தை அவன் விவரிக்கையில் அவன் பாத்திரம் தனித் தன்மை பெற்றுவிடுகிறது.

இத்தகைய சூழலில் அவன் முத்தழகை நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் முத்தழகோ, அவனையே நினைத்துக்கொண்டு அவன் பின்னே அலைகிறாள். முதலில் அவளை மறுக்கிற பருத்திவீரன், பிறகு அவள் காதலைப் புரிந்து தானும் காதல் வயப்படுகிறான். 'இனிமே நீ ஒத்தையாத் திரியவேணாம்; இங்கேயும் (காதல்) வந்திருச்சுல்ல' என்று அவன் கூறுவது அழகு. ஆயினும் இந்தக் காதலுக்கு முத்தழகின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. அதை மீறி இளம் ஜோடி இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.

சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுக நாயகன். அப்படி சொல்ல முடியாத படிக்குப் பாத்திரத்தைக் கச்சிதமாக உள்வாங்கி கார்த்தி நடித்துள்ளார். தொடைக்கு மேல் ஏற்றிக் கட்டிய வேட்டி, முரட்டுத் தாடி, உடல் மொழியிலேயே பேசும் லாகவம், குடி-கூத்தி-அடிதடி-ஆட்டம்பாட்டம்... என எந்த இடத்திலும் அந்நியம் தெரியாமல் ஒரு கிராமத்துச் சண்டியராகக் கார்த்தி ஜமாய்த்துள்ளார். அவருடன் இணைந்தே இருக்கும் சரவணன், ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அவர் வயதிற்கு ஏற்ற பொருத்தமான பாத்திரம்.

கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியாமணி, பிரமாதப்படுத்தி இருக்கிறார். 'உம்மேல உசுரையே வச்சிருக்கேன்' எனக் கார்த்திக்குப் புரியவைத்து, கல்லான அவன் மனத்தையும் கரைத்துவிடுகிறார். எந்த மேக்கப்பும் இல்லாமல், மிகச் சாதாரண தோற்றத்திலேயே தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தான் நினைத்ததை அடைய எதையும் செய்யும் துணிச்சல், வீரம், தெறிக்கும் சொற்கள்... என அவரின் பாத்திரமும் கச்சிதம். மதுவைக் கொடுத்துக் கார்த்தியை மயங்கவைத்து, அவன் மார்பில் தன் பெயரைப் பச்சை குத்தும் காட்சி அருமை.

நாட்டுப்புறக் கலைக்கும் பாடல்களுக்கும் பருத்திவீரன் படம், புத்துயிர் ஊட்டியுள்ளது. 'ஊரோரம் புளியமரம்' பாடலும் 'டங்காடுங்கா' பாடலும் தாளம் போட்டு ஆடவைக்கும் அசத்தல் பாட்டுகள். 'அறியாத வயசு' என இளையராஜா பாடுவது, கேட்க இனிமை.

படம், மேலும் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயல்பான பேச்சு வழக்கு, தத்ரூபமான காட்சியமைப்பு (ஒளிப்பதிவு - ராம்ஜி), அருமையான பாடல்கள் (சினேகன்), பின்னி எடுக்கும் பின்னணி இசை (யுவன்சங்கர் ராஜா), வித்தியாசமான படத் தொகுப்பு (சுதர்ஸன்)..... படத்தின் மகுடத்தில் பல மயிலிறகுகள்.

இயல்பான கிராமத்து நகைச்சுவைக்குக் கஞ்சா கருப்பு, குட்டிச்சாக்கு விமல்ராஜ், பொணந்தின்னி, பிரியாமணியின் அம்மாவாக வரும் சுஜாதா, சிறுவயது பருத்திவீரனும் முத்தழகுமாக நடித்தவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் பாண்டி, லட்சுமி..... என ஒவ்வொரு பாத்திரமும் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

படத்தின் முடிவு, இதயத்தைக் கனக்க வைக்கிறது. 'நாளைக்கு எனக்குக் கல்யாணம்டா' என பிரியாமணி சொல்லச் சொல்லக் கேட்காமல், 'சூப்பர் ஐட்டம்' என நாலு பேர் மாறி மாறி அவரை வன்புணர்கிறார்கள். முன்பொரு முறை அதே இடத்தில் பருத்திவீரன், வேறொரு உண்மையான ஐட்டத்துடன் படுத்து எழுகிறான். எவ்வளவோ முறைகள் அந்த இடத்தில் பருத்திவீரன் படுத்திருக்கிறான். ஆனால், அதே இடத்தில் அவன் காதலி மானம் இழக்கிறாள். 'இது வரைக்கும் நீ செஞ்ச பாவத்தையெல்லாம் என்கிட்ட மொத்தமா இறக்கி வச்சுட்டாங்க' என்று பிரியாமணி கதறுகிறார். இந்தச் செய்தியை அழுத்தமாகச் சொல்லத்தான் இந்த நீளமான பாலுறவுக் காட்சியை இயக்குநர் அனுமதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

பருத்திவீரன், அவசியம் பார்க்க வேண்டிய படம்.

நன்றி: தமிழ்சிஃபி