!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2008/05 - 2008/06 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, May 25, 2008

கடோ த்கஜன் திரை விமர்சனம்



புஜ பல பராக்கிரமம் மிகுந்த கடோ த்தகஜனின் கதையை, அசையும் சித்திரங்களாக (அனிமேஷன்) காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். முழுக்க முழுக்க அனிமேஷனில் தயாராகியுள்ள இந்தப் படம், பிரான்சின் கேன்ஸ் பட விழாவில் திரையிடத் தேர்வு பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இந்த விழாவுக்குச் சென்ற முதல் அனிமேஷன் படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கும் இராட்சசியான இடும்பிக்கும் பிறந்த மகனே கடோ த்கஜன். அவன் காட்டில் வளர்கிறான். அசாத்தியமான உடல் வலுவும் மாய வித்தைகளும் கொண்டனாக அவன் திகழ்கிறான். அவன் கட்ஜூ என்ற யானைக்கு உதவுகிறான். அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். தொட்டில் குழந்தையாக இருக்கும் போதே, தன்னைக் கொல்ல வரும் எதிரிகளைப் பந்தாடுகிறான். நொடிப் பொழுதில் உரு மாறுவது, உரு மாற்றுவது, பறப்பது, மிதப்பது... எனப் பல்வேறு மாயா ஜாலங்களும் நிகழ்த்துகிறான்.

கடலுக்கடியில் போய் தங்க முத்தினை எடுத்து வருகிறான். அர்ஜூனனின் மகன் அபிமன்யுவுக்காக அவன் காதலிக்கும் வத்சலாவைக் கட்டிலோடு சேர்த்து கவர்ந்து வருகிறான். வத்சலா உருவத்தில் அவளின் மாளிகையில் உலவுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, மாய மாளிகை ஒன்றினை உருவாக்குகிறான். அபிமன்யு - வத்சலா திருமணம் நடக்க உதவுகிறான். துரியோதனன், சகுனி ஆகியோரின் சதியை வெல்கிறான்.

இப்படியாக ஒரு புராணக் கதையைச் சிறிய மாற்றங்களுடன் அழகான அனிமேஷன் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். 75 வயதில் அவர் மீண்டும் குழந்தையாகிவிட்டதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. சிறுவர்களைக் கவரும் காட்சி அமைப்புகள்; நகைச்சுவை கலந்த விவரிப்பு; கணீரென்ற குரலில் பாடல்கள்; பிரவீண் மணியின் விறுவிறுப்பான பின்னணி இசை ஆகியவற்றுடன் ஒன்றரை மணி நேரத்தில் நல்ல படத்தை வழங்கியிருக்கிறார். இடையில் கண்ணனின் கதையைக் கூறும் பாடல், சமயத்திற்கேற்ற இடைச் செருகல்.

'கல்யாண சமையல் சாதம்' என்ற பழைய பாடலில் கடோ த்கஜன் பல்வகை உணவுகளையும் கபளீகரம் செய்யும் காட்சியை இந்தப் படத்தில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். மலையிலிருந்து விழும் பெரிய பாறையைச் சும்மா சர்வ சாதாரணமாகப் பிடித்துத் தள்ளும் கடோ த்கஜனின் மீது மற்றவர் கண் படாமல் இருக்க அம்மா இடும்பி, திருஷ்டி சுற்றிப் போடுவது, படத்தின் தமிழ்த் தன்மைக்கு நல்ல சான்று.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என ஏழு மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஷெமாரு என்டெர்டெயின்மென்ட் மற்றும் சன் அனிமேடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. சுட்டி, போகோ, ஜெட்டிக்ஸ் எனக் கட்டுண்டு கிடக்கும் சிறுவர்களை இழுக்கிற சக்தி, கடோ த்கஜனுக்கு உண்டு.

நன்றி: தமிழ் சிஃபி

Saturday, May 03, 2008

'அறை எண் 305-ல் கடவுள்' திரை விமர்சனம்



பெரியவர்களுக்கான காமிக்ஸ் கதை இது. சற்றே நகைச்சுவை முலாம் பூசித் தந்திருக்கிறார்கள்.

'ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தால் கடவுளே இங்கு வா' என்று அழைத்ததும் கடவுள் நிஜமாகவே நேரில் தோன்றுகிறார். ஆரம்பத்தில் சில அற்புதங்கள் செய்து தான் கடவுள் என்று நிரூபித்ததோடு சரி; பிறகு அவர் மனிதனைப் போலவே நடந்துகொள்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று உணர்த்துவதற்காக வந்த அவர், ஒரு கட்டத்தில் மனிதனால் ஏமாற்றப்படுகிறார். மேன்ஷனில் தங்குகிறார். கழிவறை கழுவுகிறார். வேர்க்கடலை விற்கிறார். தெருவில் இறங்கிச் சண்டை கூட போடுகிறார்.....

கடவுள் என்றால் பிரமாண்டம் என ஒவ்வொருவரும் கற்பனை செய்திருக்க, சிம்புதேவன், மிகச் சாதாரணமாக அந்தக் கற்பிதத்தை உடைத்துவிட்டார். 360 பாகையில் கடவுளை எப்படியும் வளைக்கலாம் என்பதை எளிமையாக, நம்பும்படியாகக் காட்சிப்படுத்திய துணிச்சலுக்காக அவரைப் பாராட்டலாம்.

திருவல்லிக்கேணி கருப்பையா மேன்ஷனில் தங்கியிருக்கும் சந்தானமும் கஞ்சா கருப்பும் நித்திய உணவுக்கே அல்லாடுகிறார்கள். வாடகை கொடுக்க வழியில்லாத ஒரு விளிம்பு நிலையில் கடவுளை அழைக்க, அவரும் (பிரகாஷ்ராஜ்) தோன்றுகிறார். சாதாரண மனிதர் போன்று அவர் இருக்கவே, நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். பிறகு அவர், மகாவிஷ்ணுவாக, ஏசுவாக, புத்தராக அவர்கள் முன் தோன்றி நம்ப வைக்கிறார். அவரிடம் ஒரு கேலக்சி பெட்டி இருக்கிறது. அதில்தான் அவரின் மொத்த சக்தியும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் அவர், பிரபஞ்சத்தை இயக்குகிறார். சந்தானம், கஞ்சா கருப்புக்குக் கடவுள் சில உதவிகள் செய்கிறார். அவர் விடைபெறும் நாளன்று, நண்பர்கள் கடவுளின் கேலக்சி பெட்டியைத் திருடி, தலைமறைவு ஆகிறார்கள்.

கேலக்சி பெட்டியைக் கைப்பற்றியதன் மூலம் நண்பர்கள் இருவரும் கடவுள் நிலையை அடைகிறார்கள். நிலாவுக்குப் போய் ஆடிப் பாடுகிறார்கள். த ங்கள் சொந்த ஊர்களுக்குப் போய், புதிய பணக்காரர்களாய் அசத்துகிறார்கள். இதற்கிடையே, கேலக்சி பெட்டியை இழந்த கடவுள், நண்பர்கள் இருந்த அதே அறை எண் 305-ல் தங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இருந்தாலும் அவர் அதை ஏற்று, உழைக்கத் தொடங்குகிறார். அறிவுரைக ளைக் கொஞ்சம் சொல்லிலும் கொஞ்சம் செயலிலும் காட்டுகிறார்.

புது அதிகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் சந்தானம், தன் காதலி மதுமிதாவைப் பெண் கேட்கிறார். அப்போதுதான் அவர், பாலியல் தொழிலாளி என்ற விவரமே தெரிய வருகிறது. இறுதியில் கேலக்சி பெட்டி, கடவுளிடம் திரும்புகிறது. நண்பர்கள் திருந்துகிறார்கள். சுபம்.

இப்படி ஒரு கதையை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்ய முடியும்? பெரிதாக முடியாவிட்டாலும் சிறிதாகச் சிலவற்றைச் செய்திருக்கிறார் சிம்புதேவன். தேநீர்க் கடையின் அடுப்பு நெருப்பே என் ஐயப்ப ஜோதி என விஎம்சி ஹனிபா கூறுவது; புத்தர் சிலையையும் அர்னால்டையும் உதா ரணம் காட்டி accept the pain என்று உணர்த்துவது; பாடிவிட்டே காசு பெறுவேன் என்று தெருச் சிறுவன் சொல்வது, மேன்ஷன்களின் நிலையை அப்பட்டமாகக் காட்டியது... எனப் பலவும் அழுத்தமான முத்திரைகள்.

சந்தானமும் கஞ்சா கருப்பும் கதாநாயகர்களாக உலவுகிறார்கள். பெரும் பிரபலங்கள்தான் கதாநாயகர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை; திறமை இருந்தால் போதும் என்று இவர்களை நம்பிய இயக்குநரும் தயாரிப்பாளரும் பாராட்டுக்கு உரியவர்கள். பிரகாஷ்ராஜ், கடவுள் என்ற வடிவத்தை எளிமைப்படுத்தி அழகாக வழங்கியுள்ளார். பாந்தமான நடிப்பு. ஆயினும் ரவுடியுடன் சண்டை போடுவதை தவிர்த்திருக்கலாம். மேன்ஷன் மேலாளராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், மேன்ஷன்வாசிகளாக வரும் ராஜேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், மதன்பாப், வி.எஸ்.ராகவன் ஆகியோரின் பாத்திரப் படைப்பு நன்று. ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்களின் சிறுவயதுப் புகைப்படங்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தியது புதுமை. தங்கள் பாத்திரத்தில் நிற்கிறார்கள். உணவகம் நடத்தும் குயிலி, ஜோதிர்மயி சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்தின் பாடல்கள் பெரும்பாலும் நன்றாகக் கேட்கும்படியாக உள்ளன. குறையொன்றுமில்லை, காதல் செய், ஆவாரம் பூவுக்கும், தென்றலுக்கு நீ ஆகிய பாடல்கள் கவர்கின்றன. இரைச்சலாக, வார்த்தையே கேட்காத விதமாக இப்போதைய இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகையில் வித்யாசாகரின் பணியும் பாணியும் ஈர்க்கின்றன.

'நான் கடவுள் என்பதை யாரிடமாவது சொன்னால் அடுத்த நொடி நான் மறைந்துவிடுவேன்' என்று கடவுள் பிரகாஷ்ராஜ், முதலில் நிபந்தனை விதிக்கிறார். ஆனால், மேன்ஷன்வாசிகள் சுற்றுலா சென்ற இடத்தில், கடவுள் சொடக்குப் போட்டு சாப்பாடு வரவழைப்பதைப் பார்க்கும் இளவரசிடம் சந்தானம் - கருப்பு நண்பர்கள் உண்மையைச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதைக் கடவுள் கண்டுகொள்ளவே இல்லை. இது, லாஜிக் ஓட்டை.

கேலக்சி பெட்டி என்ற கற்பனை பரவாயில்லை. அதை முன்னிட்டு தோன்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. ஆனால், அது ஒரு முற்றாத கற்பனை.

இம்சை அரசன் 23-ம் புலிகேசிக்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவனும் தயாரிப்பாளர் ஷங்கரும் இணைந்து தந்திருக்கும் இரண்டாவது படைப்பு. நகைச்சுவை என்பது, கதையோடு இணைந்து வருவது என்பதை இயக்குநர் புரிந்துகொண்டுள்ளார். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் நகைச்சுவையை விட, கதையம்சமே ஓங்கி நிற்கிறது.

மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற முயற்சியிலிருந்து கொஞ்சம் விலகி நின்றால், இயல்பான வாழ்விலிருந்தே இன்னும் கூட நல்ல நகைச்சுவை வெளிப்படக் கூடும். சிம்புதேவன் சிந்திக்கட்டும்.

நன்றி: தமிழ்சிஃபி

Friday, May 02, 2008

புரட்சியாளர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

என் பள்ளிப் பருவத்துப் பேச்சுப் போட்டிகளில் நான் இந்தப் பாடலை முதலில் கூறிய பிறகு, என் பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். நான் மட்டுமில்லை; ஏனைய மாணவர்களும் பாவேந்தரின் ஏதேனும் ஒரு பாடலைப் பாடித் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அது, பேச்சுக்கு அழகும் கம்பீரமும் சேர்க்கவும் முதலில் நடுவர்களிடம் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் பெரிதும் பயன்பட்டது.

தொடர்ந்து அவரின் பாடல்களைப் படித்து அதன் நயங்களில் மனம் சொக்கியது உண்டு. பிறகு இதே தாக்கத்தில், ஆனால், அவருடைய நடையிலிருந்து மாறி இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் என் 18 வயதில் ஒரு பாடல் இயற்றினேன்.

சீனிதனை, வெல்லத்தை, தேங்காய் பர்ப்பி
தீஞ்சுவையை, அதிரசத்தை, மைசூர் பாகை,
தேனதனை, சாங்கிரியை, பஞ்சாமிர்தத்
தித்திப்பை, அல்வாவை, குஞ்சா லாடை,
பானகத்தை, பாதுசாவை, பால்கோவாவை,
பாற்சுவையை இனிப்பென்று சொல்வேன். ஆனால்
வானவளை வளத்தமிழை வண்ணப் பூவை
வாழ்வென்பேன் உயிரென்பேன் வையம் என்பேன்!

இப்படியாக என் தொடக்க காலக் கவிதை முயற்சிகளில் அவரின் பாதிப்பு இருந்தது. பிறகு வேறு திசையில் பயணிக்கத் தொடங்கினேன். ஆயினும் என்பதின் பருவத்தில் பாவேந்தரின் படைப்புகள் எனக்கு உணர்வூட்டியது உண்மை.

பின்னர் என் 20களில், பாவேந்தருடன் நெருங்கி இருந்த சுரதா, பொன்னடியான், ஈரோடு தமிழன்பன் போன்றோருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. அவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். என் இரண்டாம் கவிதைத் தொகுப்புக்குப் பொன்னடியான் அணிந்துரை வழங்கினார். சுரதாவையும் ஈரோடு தமிழன்பனையும் பேட்டி கண்டதுண்டு. தமிழன்பன் கவிதையைப் பெற்று, அமுதசுரபியில் நான் ஆசிரியராக இருந்தபோது வெளியிட்டதுண்டு.

பாவேந்தரின் பெயரன் புதுவை கோ.பாரதியுடன் இணைந்து, சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளேன்.

'கனகசுப்புரததினம் எப்படி தன் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டதன் மூலம் பாரதிக்கு அடுத்தபடியாக பாரதிதாசன் என்று கூறும்படி வைத்தாரோ, அதே பாணியைப் பின்பற்றி நான் சுப்புரத்தின தாசன் என்று வைத்துக்கொண்டேன். இனி வருபவன், பாரதி, பாரதிதாசன், சுரதா என்றுதானே கூறுவான்' என வேடிக்கையாகச் சுரதா என்னிடம் சொன்னதுண்டு.

பாரதிதாசனின் கவிதை வீச்சு, அபாரமானது. அழகுமிகு சொற்செட்டு, கூரிய கருத்துகள், புதுமையான வெளிப்பாடு, சமூகவியல் கண்ணோட்டம்... என அவரின் படைப்புகள் பலவும் அனைவரையும் காந்தமாய்க் கவர்ந்தன. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மையத்தில் நின்று உலகளாவிய விசாலப் பார்வையால் மக்களை விழுங்கினார்.

கவிதைகளால் பலரையும் ஈர்த்தவர் என்றபோதும் மேலும் பல சிறப்புகளும் அவருக்கு உண்டு. அவர் பாண்டியன் பரிசு என்ற தன் காப்பியத்தைத் திரைப்படமாக எடுக்கத் தானே சொந்தமாகப் பட நிறுவனத்தைத் தொடங்கினார். திரைப் பாடல்கள் புனைந்தார். புதுவையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இலக்கியம், திரைப்படம், அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். பெரியாரின் கொள்கைகளைத் தன் பாடல்கள் மூலம் பிரசாரம் செய்து, சமூக விழிப்புணர்வுக்குச் சிறந்த பங்காற்றியவர் இவர்.

இன்றும் திராவிடம், தமிழ், பெரியாரியம், பொதுவுடைமை.... போன்ற பின்புலங்களைக் கொண்டோரின் வீடுகளுக்குச் சென்றால் அங்கே பாரதிதாசனின் புகைப்படம் வீற்றிருப்பதைக் காணலாம். ஹிட்லர் போன்று குறுகிய மீசையும் மூக்கு கண்ணாடியும் முறைப்பான பார்வையும் கொண்ட இவரிடமிருந்து தமிழ் பீரிட்டெழுந்தது! காதலோ, வீரமோ, வன்மையோ, மென்மையோ, மகிழ்ச்சியோ, சோகமோ எந்த உணர்வையும் அவரின் சொற்கள் அற்புதமாக ஏந்தி வந்தன.

புரட்சிக் கருத்துகளைப் பாரெங்கும் பரப்பியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. பெண் விடுதலை, சமூக விடுதலை, மண் விடுதலை.... என அவரின் ஒவ்வொரு கருவும் இந்தச் சமுதாயத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. தொடர்ந்து ஏற்படுத்தியும் வருகின்றன. ஒவ்வொரு தலைமுறைக்கும் புதிய கருத்துகளை அவரின் பாடல்கள் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 29.4.1995 அன்று சென்னை கடற்கரையில் பாரதிதாசன் சிலைக் கவியரங்கம் நடந்தது. சிலையருகே கவிஞர்கள் கூடி, பாவேந்தரை வாழ்த்திப் பாடுவதாக நிகழ்ச்சி. அதில் நானும் பங்கு பற்றிக் கவிதை பாடினேன்.

அதிலிருந்து சில வரிகள் இங்கே:

பகுத்தறிவற்ற சமுதாயம் அன்று
இருளில் மட்கியது - நீ
வெகுண்டெழுந்து சீறிய சீறலில்
வீரம் வெட்கியது!

பூவுக்குள் எப்படி புயல் வந்ததென்று
பார்த்தோர் வியந்தார்கள் - உன்
பாவுக்குள் அடிக்கடி எரிமலை வெடிப்பதால்
தீயோர் பயந்தார்கள்!

பாரதிதாசன் உண்மையில் புரட்சியாளரே. அவரைப் புரட்சிக் கவிஞர் என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இப்படிப்பட்ட புரட்சியாளருக்கு இணைய உலகில்.. தமிழ் உலகம் ம‌டலாடற் குழுவில் தொடர்ந்து விழா எடுத்து வருவதை பாராட்டி மகிழ்கிறேன். தன்னலம் இன்றி, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இப்படியான விழாவினை நடத்தியமை, தமிழ் உலகம் உறுப்பினர்களின் தமிழ் உணர்வையும் தமிழ்க் காதலையும் வெளிப்படுத்தும் இனிய சான்று.

நன்றி: தமிழ் உலகம் மடற்குழுமம்

படத்திற்கு நன்றி: விக்கிபீடியா