!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2008/06 - 2008/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 28, 2008

மாஃபா பாண்டியராஜன் உடன் அரட்டை


மனிதவள மேலாண்மைத் துறையில் மிகுபுகழ் பெற்ற Ma Foi நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாஃபா பாண்டியராஜன், சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூலை 1 அன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இவருடன் நீங்கள் உரையாடலாம்.

1992இல் அறுபதாயிரம் முதலீட்டில் தொடங்கிய Mafoi management Consultant Ltd நிறுவனம், இன்று 14 நாடுகளில் 108 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதில் 1850 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 1,85,000 பேர் வேலை பெற்றுள்ளார்கள். மனிதவள மேலாண்மைத் துறையில் மாஃபா, உலகின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை. 'Mafoi' என்றால் பிரெஞ்சு மொழியில் நம்பிக்கை என்று பொருள். ஒவ்வொரு மூன்று பணி நிமிடங்களிலும் ஒருவரைப் புதிதாக வேலைக்கு அமர்த்த உதவுகிறது இந்த நிறுவனம்.

Recruitment, HR, Hr out sourcing ஆகிய மூன்று வழி முறைகளில் இந்த நிறுவனத்தினர் இயங்குகிறார்கள். வேலைக்கு ஆட்களை அமர்த்துவதோடு, இவர்கள் பணி முடிந்து விடுவதில்லை. நிறுவனத்தில் பணிபுரிகிற தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை ஆராய்ந்து, நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இதனால் நிறுவனத்தால் தன்னுடைய இலக்கைத் திட்டமிட்டபடி எட்ட முடிகிறது. மாஃபா தொழில் நிர்வாக ஆலோசனை மையம் இன்று இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகத்தில் பெரிய நிறுவனங்களின் பட்டியலான 'Fortune-500'இல் 122 நிறுவனங்களுக்கு இவர்கள் தொழில் ரீதியான சேவைகளை அளித்து வருகிறார்கள்.

இதன் நிறுவனர், கே.பாண்டியராஜன். சிவகாசியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள விலாம்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்தவர். கோயம்புத்தூரில் பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஜாம்ஜெட்பூர் XLRI-இல் எம்.பி.ஏ சேர்ந்து படித்தார். எம்.பி.ஏவில் மனிதவள மேம்பாட்டுத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தார். படிக்கும் போதே Campus interview-இல் தேர்வு பெற்றார். கல்கத்தா பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் நிறுவனத்தில் 1984-இல் பணியில் அமர்ந்தார். இந்தக் கம்பெனியில் ஆறு வருடங்கள் பணியாற்றி மேலாளர் அளவுக்கு உயர்ந்தார். அடுத்ததாக சென்னையிலுள்ள 'Idea' என்னும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து Exports, HRD ஆகிய துறைகளில் 3 வருடங்கள் பணியாற்றினார். 1992 ஆகஸ்ட் 15 ஆம் தேதி Mafoi நிறுவனத்தைத் தொடங்கி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இவரின் மனைவி ஹேமலதா, சார்டர்ட் அக்கவுண்டண்டாக இருந்து அந்த வேலையை உதறிவிட்டு 1994-லிருந்து இந்த நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.

இலட்சக்கணக்கானோருக்கு வேலை பெற்றுக் கொடுப்பது ஒரு புறம் இருக்க, சமூக சேவைகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ஆண்டுதோறும் குழந்தைகள் சிலரை, தன் பாட்டியின் பெயரிலான சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் வழியாகத் தத்தெடுத்துப் படிக்க வைக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூடப்பட இருந்த பள்ளியை வாங்கி, Set Anne's of excellence என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறார். மாதமொரு உடல் ஊனமுற்ற தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூபாய் 5000 தந்துதவுகிறார். சுய உதவிக் குழுக்கள் வழியாக 15,000 பெண்களுக்கு உதவியுள்ளார். பல்வேறு சமூக அமைப்புகளிலும் ஊக்கத்துடன் பணியாற்றி வருகிறார்.

சிறப்பு மிக்க இந்தச் சாதனையாளர், சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூலை 1 அன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இவருடன் நீங்கள் உரையாடலாம். வேலைவாய்ப்பு, தொழில், மனிதவள மேலாண்மை தொடர்பான உங்கள் கேள்விகளை எழுப்பிப் பயன் பெறுங்கள்.

நீங்கள் செல்ல வேண்டிய பக்கம்: http://sify.com/connect/celebchat/chathome.php

இவருடன் அரட்டை அடிக்க, உங்களிடம் சிஃபி ஐடி இருக்க வேண்டும். சிஃபி ஐடி இல்லாதவர்கள், இங்கு சென்று பதிந்து பெறுங்கள்.

Saturday, June 21, 2008

தசாவதாரம் திரை விமர்சனம்


கயாஸ் தியரி (chaos system) எனப்படும் தொடர்பியல் தத்துவத்தில் படம் தோய்ந்துள்ளது. ஒரு சிறிய மாற்றம் கூட கால ஓட்டத்தில் கணிக்க முடியாத பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே கயாஸ் தத்துவம். ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு, காற்று மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட, காலப் பெருவெளியில் ஒரு சூறாவளி ஏற்படக் காரணம் ஆகலாம். 12ஆம் நூற்றாண்டில் ஒரு கற்சிலையைக் கடலில் தள்ளியதால் 21ஆம் நூற்றாண்டில் சுனாமி நிகழ்கிறது. நம்ப முடியவில்லையா? நம்ப வைத்திருக்கிறார்கள் தசாவதாரத்தில்.

12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் (நெப்போலியன்), சைவத்தை வளர்க்க, வைணவத்தை ஒழிக்க முயல்கிறான். அதன் தொடர்ச்சியாக, சிதம்பரத்தில் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாளை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடுகிறான். அதை வீர வைணவரான ரங்கராஜ நம்பி (கமல்) கடுமையாக எதிர்க்கிறார். அதனால், நாராயணனுடன் சேர்த்துக் கட்டப்பட்டு அவரும் கடலில் வீசப்படுகிறார். நம்பியின் மனைவி கோதையும் (அசின்) அக்கணமே இறக்கிறாள்.

அங்கு ஆழ்கடலில் அமிழும் ரங்கநாதர், 2004இல் சுனாமியின் போது கரையேறி வந்து மக்களைக் காக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கடற்கரையில் பிரியும் கமலும் அசினும் 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் கடற்கரையிலேயே இணைகிறார்கள். இங்கு மட்டுமல்லாது, படம் முழுக்கவே பெருமாள் ஒரு பாத்திரமாகவே தொடர்ந்து வருகிறார். கொடுங்கிருமி, பெருமாள் விக்கிரகத்தினுள் அடைக்கலம் ஆவதும் படம் முழுக்க, அந்தச் சிலையைத் தூக்கிக்கொண்டு கமலும் அசினும் ஓடுவதும் பொருள் நிறைந்தது. பிளெட்சர் துரத்தும்போது கோவிந்த் பாலத்திலிருந்து குதிக்கையில் ஒரு லாரியின் மேல்பகுதியில் விழுகிறார். அந்த லாரியில் ஸ்ரீராமஜெயம் என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி பெருமாள் பெருமை பாடும் பக்தி முகம், இந்தப் படத்துக்கு உண்டு. இந்தப் பக்திக் கதைக்குள் வேறு பல கதைகள் உண்டு.

பார்க்க: தசாவதாரம் சிறப்பிதழ்

21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி (கமல்) ஒரு கிருமியைக் கண்டுபிடிக்கிறார். அது வெளிப்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் உடனே மரிப்பார்கள் என்ற நிலையில் கோவிந்தின் விஞ்ஞானக் குழுவின் தலைவர் அதைத் தீவிரவாதிகளுக்கு விற்கப் பார்க்கிறார். அதை அறிந்த கோவிந்த், அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அவரிடமிருந்து அதைக் கைப்பற்ற பிளெட்சர் (கமல்) என்ற அமெரிக்கர் துரத்துகிறார். கோவிந்த், திருட்டு விமானம் ஏறி, சென்னைக்கு வருகிறார். அங்கு உளவுத் துறை அதிகாரி பல்ராம் நாயுடு (கமல்) விசாரிக்கிறார். கோவிந்த், அங்கிருந்து தப்பி, சிதம்பரத்துக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணவேணி பாட்டி(கமல்)யிடம் அஞ்சலில் கிருமி வந்து சேர்கிறது. அதைப் பாட்டி, பெருமாள் விக்கிரகத்தினுள் வைத்துவிடுகிறார். விக்கிரகத்துடன் கமல் ஓடுகையில் இந்தப் பாட்டியின் பேத்தி ஆண்டாள் (அசின்) உடன் வருகிறார். கடைசியில் கிருமி யார் கையில் சிக்கியது?, அதன் விளைவு என்ன?, அது எப்படி சரி ஆயிற்று என்பதுடன் படம் முடிகிறது.

இந்தக் கிருமி விரட்டல் கதைக்கு இடையில் பல கிளைக் கதைகள் உள்ளன. தலித் தலைவர் வின்சென்ட் பூவராகன்(கமல்), மணல் கொள்ளையைத் தடுக்கப் போராடுறார். பஞ்சாபி பாப் பாடகர் அவதார் சிங் (கமல்) புற்றுநோயால் ரத்தம் கக்கியபடி பாட்டுப் பாடுகிறார். 7 அடி உயரத்தில் வரும் கலிஃபுல்லா கான் (கமல்), மசூதியில் அடைக்கப்படுகிறார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (கமல்), கிருமி ஆராய்ச்சிக்குப் பல கோடி நிதி ஒதுக்குகிறார். அமெரிக்காவில் கோவிந்தின் நண்பனின் மனைவியாக யுகா என்ற ஜப்பானியப் பெண் வருகிறார். கோவிந்தைக் கொல்ல வந்த பிளெட்சர், யுகாவைக் கொல்கிறார். எனவே ஜப்பானில் உள்ள யுகாவின் அண்ணன் ஷிங்கென் நரஹஷி(கமல்), தன் தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்கப் புறப்படுகிறார்.

இப்படி 10 படங்களாக எடுக்க வேண்டியதை ஒரே படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் தசாவதாரம். இந்தப் பத்து கதாபாத்திரங்களையும் ஒரு வார காலத்திற்குள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு கதையை எடுப்பது எவ்வளவு பெரிய சவால்! இந்தச் சவாலைத் துணிச்சலாக எதிர்கொண்டுள்ளார்கள் கமலும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும்.


கமலின் 10 அவதாரங்கள்


கமல் 1 (ரங்கராஜ நம்பி):

12ஆம் நூற்றாண்டுக் காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. கிராஃபிக்சும் அருமை. ரங்கராஜ நம்பியின் நாமம், திரண்ட தோள்கள், பெருமாள் பக்தி... அனைத்தும் குறைவான காட்சிகளிலேயே அழகாகக் காட்டப்பட்டுள்ளது. சைவத்துக்கு மாறினால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் மதம் மாறாமல் 'ஓம் நமோ நாராயணா' என்கிறார். அதையடுத்து நம்பிக்குச் சித்திரவதை தொடங்குகிறது. அவரது முதுகை 4 கம்பிகளால் கட்டி அந்தரத்தில் தொங்க விடுகிறார்கள். அவர் உயிரோடு இருக்கையிலேயே அவர் மகனே அவருக்கு இறுதிச் சடங்கு செய்கிறான். இறுதியில் நம்பியும் நாராயணனுடன் சேர்த்துக் கட்டப்பட்டு கடலில் இறக்கப்படுகிறார். நம்பியின் மனைவி கோதையும் அக்கணமே மரிக்கிறாள். படம் வெளிவருவதற்கு முன்னால் வைணவத்துக்கு இந்தப் படம் இழுக்கு சேர்க்கிறது என்று வழக்கு தொடுத்தார்கள். வைணவரின் மதப் பற்றினைச் சொல்லும் படம், சைவர்களின் மதத் திணிப்பை, அநாகரிகமான தண்டனைகளை எடுத்துரைக்கிறது. நல்லவேளை, சைவர்கள் இதற்காக வழக்கு தொடுக்கவில்லை.

கமல் 2 (கோவிந்த் ராமசாமி):

அமெரிக்க உயிரி ஆய்வகத்தில் வேலை. கொலைகாரக் கிருமியைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றப் படம் முழுக்க ஓடுகிறார். சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு நிற்கிறார். பாலத்திலிருந்து குதிக்கிறார். ஓடும் ரெயிலில் ஏறுகிறார். மோட்டார் சைக்கிளில் பறக்கிறார். படத்தை இழுத்துச் செல்லும் மையப் பாத்திரம் இது. அசினுடன் நெருக்கம் கொள்கிறார். அது, கடைசியில் காதலாக மாறுகிறது. ஐயங்கார் பெண்ணாக அசின் பொருந்துகிறார். பெருமாளே என்ற அவரின் தவிப்பு நன்று. சிலையை மணலில் புதைக்கும் இடத்தில் 'மங்களா சாசனம்' எனப் பாடிய பிறகு புதைக்கச் சொல்வது, அவரின் பக்தி உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கமல் 3 (கீத் பிளெட்சர்):

முறுக்கேறிய கட்டுடல்; வேகமான அசைவுகள்; தவறாத குறி; தொழில்நுட்பத் தேர்ச்சி; சர்வ சாதாரண கொலைகள்; ஒயிலான ஆங்கிலம்; அதீத புத்திசாலித்தனம்.... இவற்றின் கலவையே பிளெட்சர். அமெரிக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர். கிருமியுடன் கோவிந்த் தமிழ்நாட்டுக்குச் சென்றதும் இவரும் பின்தொடர்கிறார். அவருக்கு மொழிபெயர்ப்பாளராக மல்லிகா ஷெராவத் உடன் வருகிறார். ஆனால், சிதம்பரத்தில் மல்லிகா கொல்லப்படுகிறார். மொழி புரியாத பிளெட்சர், கோவிந்தையும் கிருமியையும் விரட்டும் காட்சிகள் அபாரம். தனி மனித இராணுவம் என்பது போல், தன்னந்தனியாகவே துணிச்சலுடன் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விறுவிறு.

கமல் 4 (வின்சென்ட் பூவராகன்):

மணல் கொள்ளையை எதிர்க்கும் நேர்மையான அரசியல்வாதி இவர். தலித் தலைவராக இவருடைய கண் பார்வை, உடல் மொழி அனைத்திலும் வித்தியாசம் காட்டியுள்ளார் கமல். மணல் கொள்ளையைப் பூமித் தாயைக் கற்பழித்தல் என்று வர்ணித்து, அதைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகக் காட்டும் துணிச்சல் அருமை. அவருடைய தொண்டராகப் பாடலாசிரியர் கபிலன் தோன்றுகிறார். கடைசியில் சுனாமியில் இவர், மணல் கொள்ளையரின் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு மரிக்கிறார். இவர் பேசும் வசனங்களும் இவரின் உணர்வுகளும் அழகாக வந்துள்ளன.

கமல் 5 (பல்ராம் நாயுடு):

உளவுத் துறை அதிகாரியாக இவரின் நடிப்பு, அருமை. இந்தியாவிலேயே அதிகம் பேசப்படும் மொழி, இந்திக்கு அடுத்து தெலுங்குதான் என இவர் பெருமை கொள்வதும் தெலுங்குக்காரர்களைக் கண்டு அன்பும் நெருக்கமும் கொள்வதும் இயல்பாக உள்ளன. தெலுங்குப் பற்றினைக் காட்டியதோடு, இவரை ஒரு கோமாளியாக இயக்குநர் காட்டிவிட்டார். இது, சிரிப்பை வரவழைக்கும் அதே நேரம் இந்திய உளவுத் துறையின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது. மேலும் படம் முழுக்கவே காவல் துறையினர் அனைவரும் மோசமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். எளிதில் ஏமாற்றப்படுபவர்களாகவும் பலவீனர்களாகவும் அப்பாவிகளாகவும் காட்டியிருக்கிறார்கள். இது, உண்மைக்கு மாறானது மட்டுமில்லை; உலக அரங்கில் கேவலம் தருவது.

தசாவதாரம்: TNS விமர்சனம்

இவர்களைத் தவிர ஜப்பானிய தற்காப்புக் கலை வீரர், 7 அடி உயர கலிஃபுல்லா கான், அவதார் சிங், ஜார்ஜ் புஷ் ஆகிய பாத்திரங்களுக்காகக் கமல் கடுமையாக உழைத்திருந்தாலும் அந்தப் பாத்திரங்கள், தேவையற்ற இடைச் செருகலாக உள்ளன. கலிஃபுல்லா கான், ஜார்ஜ் புஷ், ஜப்பானிய வீரர் ஆகிய தோற்றங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவும் ஜார்ஜ் புஷ், என்ஏசிஎல்(NaCl) என்றால் என்னவெனக் கேட்பதும் அணுகுண்டு வீசலாமா எனக் கேட்பதும் அவரின் தரத்திற்கும் பதவிக்கும் பொருந்தவில்லை.

தசாவதாரம்: மஞ்சூர்ராசா விமர்சனம்

படம் முழுக்க மனநிலை சரியில்லாதவராக வரும் கிருஷ்ணவேணி பாட்டி, கடைசியில் பூவராகன் இறந்து கிடப்பதைப் பார்த்து, ஆராவமுதா என மடியில் போட்டு அழுவது உருக்கமானது. படத்தின் கதை, திரைக் கதை, வசனம் ஆகியவற்றைக் கமல் இயற்றியுள்ளார். வசனத்தில் பல இடங்களில் நகைச்சுவை மின்னல். ஹிமெஷ் ரேஷமையாவின் இசையில் 'கல்லை மட்டும்', 'முகுந்தா முகுந்தா' ஆகிய பாடல்கள் பெரிதும் கவர்கின்றன. ரவிவர்மனின் ஒளிப்பதிவு, படத்திற்குப் பெரும் துணையாக, தூணாக உள்ளது.

70 கோடி செலவில் பிரமாண்டமாக உருவான இந்தப் படம், மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில்தான் உள்ளது. சுனாமி வந்ததை நியாயப்படுத்தி இருப்பது, நன்று.

10 பாத்திரங்கள் என முடிவு செய்து கதையை அமைத்திருப்பது, தைத்த சட்டைக்கு ஏற்ப, உடம்பை வளைத்துக்கொள்வது போல் உள்ளது. ஆயினும் இதிலும் தன் முத்திரையைக் கமல் பதித்துள்ளார். உலகில் முதல் முறையாக ஒரே படத்தில் 10 வேடங்களில் நடித்த சாதனையைக் கமல் செய்துள்ளார். இப்போது அகல உழுதிருக்கிறார்; அவர் ஆழ உழவேண்டும் என்பதே உண்மையான திரை ஆர்வலர்களின் விருப்பம்.

நன்றி: தமிழ் சிஃபி

Monday, June 09, 2008

இராம.கோபாலன் உடன் அரட்டை அடிக்க


'இந்து முன்னணி'யின் மாநில நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன்(81), சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூன் 10 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு அவருடன் நீங்கள் அரட்டை அடிக்கலாம்.

உங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டிய முகவரி: http://sify.com/connect/celebchat/chathome.php

இந்துக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 'இந்து முன்னணி'யின் மாநில நிறுவன அமைப்பாளர், இராம.கோபாலன். இவர், 1945இல் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கடந்த 63 ஆண்டுகளாக நெருங்கிய உறவு கொண்டவர். இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பது, மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு அழைத்து வருவது, இந்துமத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் எதிர்த்துப் போராடுவது எனப் பல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 'இந்து ஜாகரன் மஞ்ச்' என்ற அமைப்புக்கு அகில இந்திய வழிகாட்டியாக இருக்கிறார்.

மீனாட்சிபுரம் மதமாற்றம், கன்னியாகுமரி மாவட்டத்தை 'கன்னி மேரி' மாவட்டமாக்க கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட முயற்சி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் இந்துக்களை முஸ்லிமாக மதமாற்ற நடந்த முயற்சி, சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விநாயகரைச் செருப்பால் அடித்து திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலம்.... இவை போன்று தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகள், உணர்வுள்ள இந்துக்களை உலுக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலைமையை மாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.

1980 பிப்ரவரியில் கரூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. இதில் மேற்கூறிய பிரச்னைகள் பற்றி விரிவாக விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்கள் யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரிஜி, சூர்யநாராயணராவ்ஜி ஆகியோர் தமிழகத்தில் நிலவிய இந்த அசாதாரணமான நிலையை மாற்ற ஒரு தனி இயக்கம் தேவை என முடிவு செய்தனர். அதன்படி அந்த கரூர் கூட்டத்திலேயே 'இந்து முன்னணி' என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மாநில அமைப்பாளராக அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளர், இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் என்று இரண்டு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.

ஓடாத திருவாரூர் ஆழித் தேரை ஓடச் செய்தது; மண்டைக்காடு கலவரத்தின்போது இந்துக்களுக்காகப் பாடுபட்டது; மீனாட்சிபுரம் மதமாற்றத்தின் போது அதை நாடு தழுவிய பிரச்சினையாக்கி மதமாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; வேலூர் கோட்டையில் 400 ஆண்டுகள் சாமி இல்லாத கோயிலில் ஜலகண்டேஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்தது; தமிழகம் முழுவதும் இந்து எழுச்சி மாநாடுகளை நடத்தியது; தமிழகத்தில் வீதிதோறும் விநாயகர் சிலைகளை வலம் வரச் செய்தது... எனப் பலவற்றுக்கு இவரும் காரணமாக இருந்திருக்கிறார்.

அனுமன் ரதம் மூலம் தமிழகத்தில் இந்து எழுச்சியை உருவாக்கினார். திருப்பூரில் 10,008 தாய்மார்களைத் திரட்டி 10,008 திருவிளக்கு பூஜை, குலசேகரப்பட்டினத்தில் 5008, துவரங்குறிச்சியில் 2008 மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் 1008 திருவிளக்கு பூஜை நிகழ்த்தியுள்ளார்.
பொள்ளாச்சி - கணபதிபாளையத்தில் மாநில அரசு நிதி உதவியுடன் பசு மாமிச ஏற்றுமதித் தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை முறியடித்தார்.
பல்வேறு கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டார். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடங்கள்: திருப்பூர் (4 கோடி), வடபழனி (10 கோடி), திருவண்ணாமலை (2 கோடி), தர்மபுரி (9.5 ஏக்கர்), கோபி சமத்துவபுரம் (2.5 ஏக்கர்), இவ்வாறு எல்லா தாலுக்கா, மாவட்டங்களிலும் சொத்துகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க பாரதியார் குருகுலம் தொடங்கினார். குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களிடம் இந்துமதச் சிறப்புகளைப் புரிய வைப்பதற்காகவும் இதுவரை 150 கிராமங்களில் பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமுதாயத்திற்காக வேலை செய்யும் தர்மவீரர்களை உருவாக்கும் பாரதப் பண்பாட்டுப் பயிற்சி கல்லூரியை உருவாக்கியுள்ளார்.

செயல் வீரர் மட்டுமின்றி, கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்... எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்றவர். மலையாளம் பேசத் தெரியும். வட இந்தியர்கள், ஹிந்தியில் பேசும்போது இவர் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னதுண்டு. கேரளாவில் பிரசாரக்காக இருந்தவர்.

அவருடைய தலையில் ஒரு பெரிய வடு இருக்கும். அது, 1982இல் மதுரையில் இவர் மீது நடந்த தாக்குதலின் போது பட்ட காயம். இன்றும் அதனால்தான் அந்த வடுவை மறைக்க, தலையில் காவி டர்பன் கட்டுகிறார். இப்போதும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் குறியாக இருப்பவர்; அதனால் எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இவரைச் சுற்றி இருப்பார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடங்கிய போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று முதலில் குரல் கொடுத்தார். ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கினார்.

'தசாவதாரம் படத்தில்' இந்து மதத்திற்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என அறிக்கை விட்டார். ஏற்கெனவே கமலின் 'மருதநாயகம்' படத்தையும் எதிர்த்தார். 'வணக்கம்மா' படத்தில் ராமர், அனுமார் வேடங்களில் நடிகர்கள், சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதற்குக் கடும் கண்டனமும் போராட்டமும் நடத்தியதால் அந்தப் படத்தின் காட்சிகள் மாற்றப்பட்டன. நடிகர் விஜய் நடித்த 'கீதை' என்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்; அதை அடுத்து, அந்தப் படம், 'புதிய கீதை' என மாற்றப்பட்டது. தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' என்ற படத்தில் அஜீத், சிவன் வேடத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை அடுத்து, அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன.

அரசியல், கலையுலகம், ஆன்மீகம் என எங்கு இந்து மதத்திற்கு இழுக்கு நேர்ந்தாலும் குரல் கொடுத்து வரும் இராம.கோபாலன் உடன் ஜூன் 10 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நீங்கள் அரட்டை அடிக்கலாம்.

உங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டிய முகவரி: http://sify.com/connect/celebchat/chathome.php

இவருடன் உரையாட உங்களிடம் சிஃபி ஐடி இருக்க வேண்டும்.