!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/12 - 2006/01 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 24, 2005

தவமாய் தவமிருந்து - திரை விமர்சனம்

சேரன், மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை குடும்பக் கதைகளை எடுத்தவர்கள், அதை ஒரு மேடை நாடகம்போல் ஆக்கியிருக்க, முதன்முறையாக ரத்தமும் சதையுமாக ஒரு கதையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சேரன்.

சிறு அச்சகம் நடத்தும் முத்தையாவாக ராஜ்கிரண்; அவர் மனைவி சாரதாவாகச் சரண்யா; இவர்களின் இரு பிள்ளைகளாக ராமநாதன்(செந்தில்), ராமýங்கம்(சேரன்). ராமýங்கத்தின் காதý வசந்தியாகப் புதுமுகம் பத்மப்ரியா. இவர்களே முக்கிய பாத்திரங்கள்.

தான் படிக்காவிட்டாலும் தன் மகன்களைப் பெரிய படிப்புப் படிக்கவைத்து, உசந்த இடத்தில் வைத்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடு படுகிறார் ராஜ்கிரண். அவர்களுக்குத் திருக்குறள் சொல்ýக் கொடுத்து, அவர்கள் கேட்டதை எல்லாம் கடன்பட்டேனும் வாங்கிக் கொடுத்து, அவர்களை உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று பெரிய கனவாளியாக ராஜ்கிரண் திகழ்கிறார். பிள்ளைகள் வளர்கிறார்கள். மூத்த மகனுக்கு வேலை வாங்கித் தந்து, திருமணமும் செய்து வைக்கிறார். அவன், வந்தவள் சொல்கேட்டு வீட்டை விட்டுப் போய்விடுகிறான்.

இளைய மகன் சேரனோ, கல்லூரியில் உடன் படித்த பத்மப்ரியாவைக் காதýக்கிறார். அதன் விளைவாய் பத்மப்ரியா கர்ப்பமாகிவிடுகிறார். வேறு வழியில்லாமல் இருவரும் ஊரை விட்டுச் சென்னைக்கு ஓடி வருகிறார்கள். அங்கு வேலை கிடைக்காத சேரன், அல்லல் படுகிறார். அவருக்குக் குழந்தை பிறந்ததும் அப்பா வந்து பார்க்கிறார். பிறகு சேரனும் பிரியாவும் ஊருக்கே சென்று விடுகிறார்கள். அதன் பிறகு நல்ல வேலை கிடைத்த சேரன், தலையெடுக்கிறார். தன் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக் காப்பாற்றுகிறார். குடும்பம் மீண்டும் சேருகிறது.

இதுதான் கதை. இதை ஒரு திரைக் காவியமாகச் சேரன் உருவாக்கியிருக்கிறார். 'திரையில் ஒரு நாவல்' என்று இயக்குநர் இதைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதே. தமிழின் மிகச் சிறந்த எதார்த்தவியல் திரைப்படங்களின் வரிசையில் இப்படமும் சேர்ந்திருக்கிறது.

இந்த அரிய படத்திற்காக முதýல் நாம் பாராட்ட வேண்டியவர், சேரன். அவருடைய கதைத் தேர்வு, நடிகர்களின் தேர்வு, அவர்களை அவர் இயக்கிய விதம், கதைக்காக அவர் எடுத்துக்கொண்ட நில அமைப்புகள், பின்னணிகள், வசனம், இசை, ஒளிப்பதிவு... என ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாகச் சேரனின் கனவுதான் மெய்சிýர்க்க வைக்கிறது. அப்பா என்ற உறவினை மையப்படுத்தி, படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் அப்பா, அம்மாக்களை நினைத்துப் பார்க்க வைத்துள்ளதில் இயக்குநராகச் சேரன் வெற்றி பெற்றுள்ளார். நடிகராகவும் பல இடங்களில் மின்னுகிறார்.

அடுத்த பாராட்டு, ராஜ்கிரணுக்கு. பாசமுள்ள, தன் மக்களுக்காக ஆயிரம் சுமைகளைச் சிரித்தபடி சுமக்கும் மென்மையான அப்பாவாக ராஜ்கிரண் கலக்கியிருக்கிறார். இவரைப் போல் தனக்கும் ஒரு அப்பா இல்லையே என்று படம் பார்ப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறார். அவருக்குத் துணையாகச் சரண்யாவும் பின்னி எடுத்திருக்கிறார். கிராமத்துச் சூழ்நிலை, பேச்சு வழக்கு, பழக்க வழக்கம் அனைத்தையும் இவர்களின் அசைவுகளில் காண முடிகிறது.

நாயகி என்றாலே உடலைக் காட்டித்தான் நடிக்கவேண்டும் என்று இல்லாமல் புதுமுகம் பத்மப்ரியா, மிகவும் அமைதியாக நடித்துள்ளார். சேரனின் அண்ணனாகப் புதுமுகம் செந்தில்(ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்), இயல்பாக நடித்துள்ளார். அவர் மனைவியாக நடித்துள்ள புதுமுகம் மீனாள், பொறாமையும் தனிக் குடித்தனம் போகும் எண்ணமும் கொண்ட மருமகளாக விளாசியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் அந்தக் குணம் வெளிப்படுவதை மெச்சத்தான் வேண்டும்.

இன்னும் படத்தில் நடித்துள்ள பலரும் சிறப்பாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பாடல்கள் பரவாயில்லை ரகம். சேரன் எழுதிய 'என்ன பார்க்கிறாய்' என்ற பாடல், சிறப்பாக உள்ளது. இசை: சபேஷ், முரளி.

பெற்றோரைத் தவிக்கவிட்டுச் செல்லும் பிள்ளைகள், அவர்களின் கண்ணீரை உணரவேண்டும்; முதுமைக் காலத்தில் அவர்களை அன்போடும் ஆதரவோடும் அரவணைக்க வேண்டும் என்பதைப் பின்பகுதியில் வýயுறுத்தியிருக்கிறார். அது, சேரன் சொல்லும் முக்கிய செய்தி. படத்தின் நீளம் அதிகரித்த போது, எந்தப் பகுதியை வெட்டுவது என்று யோசித்த சேரன், இந்தக் காட்சிகளை வெட்டாமல் வேறு காட்சிகளை வெட்டியிருக்கிறார். இதிýருந்தே இந்தப் பகுதிக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது.

படம் கொஞ்சம் மெதுவாய் நகருகிறது, நீளம் அதிகமாய் இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறக் கூடும். ஆனால், இத்தகைய நல்ல படத்திற்காக இந்தச் சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது. இந்தப் படத்திற்காகச் சேரனுக்கும் ராஜ்கிரணுக்கும் விருது நிச்சயம்.


நன்றி: தமிழ்சிஃபி

Friday, December 09, 2005

கண்ட நாள் முதல் - திரை விமர்சனம்

பிரசன்னாவுக்கும் லைலாவுக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே மோதல். அந்த வயதில் லைலா, பிரசன்னாவின் கன்னத்தைக் கடித்துக் காயப்படுத்தி விடுகிறார். அந்த மோதல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிப் பருவத்திலும் தொடர்கிறது. பாட்டுப் போட்டிக்கு வந்த லைலாவைத் தற்செயலாக நாய்வண்டியில் அழைத்துவருவதும் சிறப்பாகப் பாடிய அவருக்கு ஆறுதல் பரிசு தந்து வெறுப்பேற்றுவதும் சுவையான காட்சியமைப்புகள்.

பிரசன்னாவின் நண்பர் கார்த்திக் குமார், அமெரிக்காவில் பணியாற்றுகிறார். அவருக்காகப் பெண்பார்க்க வரும் பிரசன்னாவுக்கு திடீர் அதிர்ச்சி. அங்கு நின்றவர், லைலா. அந்தப் பெண் வேண்டாம் என்று பிரசன்னா வத்தி வைத்துப் பார்க்கிறார். ஆனால், அது பத்திக்கொள்ளவில்லை. கார்த்திக்கைக் கவிழ்ப்பதற்காக லைலா, சாந்த சொரூபியாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதை உடைத்து, லைலாவின் முரட்டுத்தனத்தையும் பிடிவாதக் குணத்தையும் வெளிப்படுத்த பிரசன்னா முயல்கிறார். அந்தக் காட்சிகள் அருமையாக வந்துள்ளன.

லைலாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கார்த்திக், அந்தத் திருமணம் வேண்டாம் என்று அமெரிக்கா சென்றுவிடுகிறார். இப்பவே எனக்காகச் சாந்தமாக நடிக்கும் இவள், வாழ்க்கை முழுவதும் எப்படி ஹானஸ்ட்டாக இருப்பாள்? என்ற கேள்வி கேட்டதோடு அவளுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி இல்லை என்கிற போது, அமெரிக்க ஆணின் பிரதிநிதியாகவே கார்த்திக் நிற்கிறார்.

கார்த்திக் நகர்ந்ததும் லைலாவின் தங்கை, தன் காதலனுடன் ஓடிப் போகிறாள். அதைக் கேட்டு லைலாவின் அம்மா(ரேவதி), மயங்கி விழுகிறார். அந்த நேரத்தில் பிரசன்னா, ஓடி வந்து உற்ற வழிகளில் எல்லாம் உதவுகிறார். லைலாவின் மனத்தில் இடம் பிடிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால், வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இருவருக்கும் ஈகோ. அவன் / அவள் முதலில் சொல்லட்டும் என்று இருவருமே நினைக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு திடீர் திருப்பம். கல்யாணம் வேண்டாம் என்று சென்ற கார்த்திக், திரும்பி வந்து லைலாவைப் புரிந்துகொண்டதாகவும் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறுகிறார். முதலில் சண்டை போட்டுக்கொண்டு, இப்போது காதலித்துக்கொண்டிருக்கும் பிரசன்னாவும் லைலாவும் என்ன செய்கிறார்கள்? அதுதான் படத்தின் இறுதிக் கட்டம்.

படம், மிக இயல்பாக இருக்கிறது. அநாவசிய சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக்கு எனத் தனி டிராக், சென்டிமென்ட், என எதுவும் இல்லை. குறும்பும் கேலிப் பேச்சும் ஜாலிப் பேச்சுமாகப் படம் இளமைத் துடிப்போடு இருக்கிறது.

பிரசன்னா, ஜெயராமின் தம்பி போல் இருக்கிறார். மிகவும் பொறுப்போடு நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பிரகாஷ்ராஜின் நடிப்புப் பாதிப்பு தெரிகிறது. தெனாலி படத்தில் ஜெயராம், கமலை விரட்டச் செய்த முயற்சிகள் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி தூள் கிளப்பியிருக்கிறார். லைலாவைப் பழிவாங்க அவர் போடும் திட்டங்கள் சுவாரசியமாக உள்ளன.

லைலா, விளையாட்டுப் பெண்ணாகக் கலக்கியிருக்கிறார். பிரசன்னாவே சொல்வதுபோல் அவள் சிரிக்கும் போது விழும் கன்னக் குழி மிகவும் அழகாக இருக்கிறது. கோபத்திலும் அவர் அழகாகத்தான் இருக்கிறார்.

'கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி' என்ற தாமரையின் முதல் பாடலே, உருக்குகிறது. மென்மையான இசையால் யுவன்சங்கர் ராஜா வருடி விடுகிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, படத்தோடு ஒன்றவைக்கிறது. ஈ. ராமதாசின் வசனம், தனியே துருத்திக்கொண்டு இல்லாமல் அந்தந்தப் பாத்திரங்களோடு ஒத்துப் போகிறது. தோட்டா தரணியின் கலையமைப்புகள், சிறப்பு. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர், பிரியா வி. இவரை அறிமுக இயக்குநர் என்றே சொல்ல முடியாத அளவுக்குப் படம் இயல்பாய், துடிப்பாய், இளமையாய் உள்ளது.

பிரகாஷ்ராஜ், படத்தின் தயாரிப்பாளர். இளைஞர்களின் மீதும் புதிய திறமையாளர்களின் மீதும் அவர் வைத்துள்ள நம்பிக்கை பாராட்டத்தக்கது. பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அதிலும் இவ்வளவு அழுத்தமான படத்தைக் கொடுத்ததற்காக அவரையும் இயக்குநரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தான் தயாரிக்கும் படம் என்பதால் தானே நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் மற்றவருக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

'அதிகாலை காஃபி போல அழகான சினிமா' என்ற அடைமொழியுடன் இந்தப் படம் வந்திருக்கிறது. உண்மையிலேயே காஃபி சூடாக, சுவையாக இருக்கிறது.

நன்றி: தமிழ்சிஃபி

Monday, December 05, 2005

ஏபிசிடி - திரை விமர்சனம்

ஆனந்த்(ஏ), பாரதி(பி), சந்திரா(சி), திவ்யா டெய்சி(டி) இந்த நால்வரின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துகளை வைத்தே படத்திற்குத் தலைப்பு இட்டுள்ளார்கள். இந்த நாலு பேரையும் தனித்தனியே அறிமுகப்படுத்தி, இவர்கள் நால்வரும் சந்திக்கப் போகிறார்கள் என வித்தியாசமாகப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ஷரவண சுப்பையா.

கதாநாயகன் ஆனந்த்தாக ஷாம் நடித்துள்ளார். இவரை பிற மூன்று பெண்களும் காதலிக்கிறார்கள். இவர்களுள் யாருடைய காதலை ஷாம் ஏற்றுக்கொள்கிறார் என்பதே கதை. இதை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வேலை தேடும் இளைஞன், ஷாம். இவர், பேருந்தில் ஏறும்போது தன் சான்றிதழ்களை பாரதியிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொல்கிறார். இடையில் அந்தச் சான்றிதழ்களோடு பாரதி(நந்தனா குமார்) இறங்கிச் சென்றுவிட, அவரைத் தேடி இவர் அலைந்து, ஒரு வழியாகக் கண்டுபிடித்து... அவர்களுக்குள் தொடர்பு ஏற்படுகிறது.

ஷாம் தெருவில் நடந்து செல்லும்போது அவர் எதிரில் திவ்யா டெய்சி(அபர்ணா), ஒரு விபத்தில் அடிபட்டு விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து, அவர் அறுவை சிகிச்சைக்காக உறவினரின் கையொப்பத்தை ஷாம் இடுகிறார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு தொடங்குகிறது.

அடுத்தவர் சந்திரா(சினேகா). ஷாம் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள். கொடுமைப்படுத்தும் கணவனை எதிர்த்து, வெள்ளைச் சேலையோடு தனியாக இருக்கிறார். கணவன் இறந்ததும் வண்ணச் சேலையோடு தன் பெற்றோரிடம் வந்து சேர்கிறார். அங்கு மாடியில் இருக்கும் ஷாமுடன் பழக்கம் ஏற்படுகிறது.

நாளடைவில் மூவரும் ஆனந்த்தை விரும்பத் தொடங்கிவிடுகிறார்கள். இதில் ஒவ்வொரு பாத்திரமும் நன்றாக படைக்கப்பட்டுள்ளது. பத்தாம்பசலியான பெண்களாக இல்லாமல் மூவரும் வெவ்வேறு கோணங்களில் புதுமைப் பெண்களாக இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பேசும் வசனங்களே சான்று.

வரதட்சிணையை எதிர்த்து வீரம் பொங்கப் பேசுகிறார், பாரதி. தேவாலயத்தில் தன் இடுப்பைக் கிள்ளியவனின் கன்னத்தில் அறைகிறார், திவ்யா டெய்சி. சந்திராவோ, கொடிய கணவன் இருக்கும்போது வெள்ளைச் சேலையும் இறந்த பிறகு வண்ணச் சேலையும் கட்டுகிறார்.

ஷாமுடன் இவர்களின் உறவு, காதலாக மலருவதை இயக்குநர் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஷாம், இவர்களைத் தோழமையுடன், கண்ணியத்துடன் அணுகிப் பழகுவதையும் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார். படத்தின் தேவைக்காகக் கனவுக் காட்சியில் அவர்களை டூயட் பாடவைக்கவும் இயக்குநர் தவறவில்லை. நீச்சல் அடித்தபடி காதல் செய்யும் அந்த 'மிக்சிங்' காட்சிகள் புதுமையாக உள்ளன.

ஷாமின் நடிப்பு, மிகவும் சிறப்பாக உள்ளது. அமைதியாக, பெரிதாக உணர்ச்சிவசப்படாமல், வார்த்தைகளைப் பக்குவத்தோடு உச்சரித்து கவர்ந்திருக்கிறார். அவருடைய உடல்மொழியும் அவருக்குத் துணை சேர்த்திருக்கிறது.

வடிவேலுவின் நகைச்சுவை டிராக், படத்திலிருந்து பெரும்பாலும் தனியே பிரிந்துள்ளது. என்றாலும் ஓரிரு காட்சிகளில் பாரதியுடன் அவர் பேசுவது போல் காட்டி, அவரையும் படத்தில் ஒரு பகுதியாக்கியுள்ளனர்.

படத்தின் மிகப் பெரிய குறைபாடு, அதன் இசைதான். டி. இமான், மிகவும் முயற்சி செய்தால் நல்ல பாடகராக வரலாம். ஆனால், பாடல் காட்சிகளிலும் பின்னணி இசையிலும் அவர் டமால் டமால் என பெருத்த ஓசையுடன் எழுப்புவதற்கு இசை என்றா பெயர்? இடையிடையே கதைக்கேற்ற பாடல்களை செருகியுள்ளதும் சிறப்பாக இல்லை. எல்லாப் பாடல்களையும் இமானே பாடவேண்டுமா? அவற்றையும் இப்படி உச்சகட்டையிலா பாடவேண்டும்? மஞ்சள் முகமே, மங்கள விளக்கே பாடல், கொஞ்சம் மென்மையாக உள்ளது.

ஆயினும் கதைக்காகவும் நடிகர்களின் இயல்பான நடிப்புக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆங்கிலத் தலைப்புகளில் பெயர் வைக்கக்கூடாது என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வரும் வேளையில் ஏபிசிடி என்று பெயர் வைத்துள்ளார்கள். தமிழ்ப் பெயர்களின் முதல் எழுத்துகளை எடுத்து அ, ஆ, இ, ஈ(அமுதா, ஆனந்தி, இனியா, ஈசன் என்ற ஈஸ்வரன்) எனக் கூட பெயர் வைக்கலாமே. அ(ன்பே)ஆ(ருயிரே) என ஏற்கனவே ஒரு படம் அதற்குள் வந்துவிட்டது.

ஆயினும் இயல்பாகக் காதல் மலருவதைச் சிறப்பாகக் காட்டியுள்ளார்கள். வசனங்களும் யதார்த்தமாக உள்ளன. ஷாமின் நடிப்பில் நல்ல மெருகு ஏறியிருக்கிறது.

இது, வெற்றிப் படமாகும் வாய்ப்பு உண்டு.


நன்றி: தமிழ்சிஃபி

Saturday, December 03, 2005

சென்னை மழை: கண்ணீர் வடிக்கும் பயணிகள்

தொடர் மழை காரணமாக சென்னையில் எண்ணற்ற இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் போக்குவரத்தும் ஒன்று. இங்கங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரம் பார்த்து, சாலை விரிவாக்கத்திற்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் சாலையின் இரு புறமும் பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகள் மிகுந்த சிக்கலில் உள்ளன. எல்லா வாகனங்களும் சாலையின் மையப் பகுதியில் செல்லவே விரும்புகின்றன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கையில் அது சாத்தியமில்லை. எனவே, ஒரு குருட்டுத் துணிச்சலில் சாலையோரம் செல்லும் வாகனங்கள் சேற்றிலும் பள்ளத்திலும் சிக்கிக்கொள்கின்றன. பேருந்து, லாரி, கார் போன்ற பெரிய வாகனங்கள் சாலைப் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும்போது சாலை மேலும் குறுகிவிடுகிறது.

சென்னையில் சாதாரண நாளிலேயே பல இடங்களில் சாலைகள் மோசம்தான். இந்த மழையால் அரிப்பு ஏற்பட்டு, சாலை ஓரங்களைப் பெரும்பாலும் காணவில்லை. சுற்றுப்புற மண்ணும் கல்லும் சரளைக் கற்களும் முட்களும் கண்ணாடித் துண்டு போன்றவையும் சாலை எங்கிலும் விரவிக் கிடக்கின்றன. இவற்றின் மேல் மழை நீர் ஓடிக்கொண்டிருப்பதால் அவை இருப்பதையும் மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் குண்டும் குழியும் இல்லாத சாலைகளே இல்லை எனும்படி எல்லாச் சாலைகளும் சிறிதளவேனும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாகனம் ஓட்டுவது, சாகசச் செயல் என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்கள், பரிதாபத்துக்கு உரியவர்கள். இடுப்பளவுத் தண்ணீரில் அவர்கள், வேறு வழியில்லாமல் செல்கின்றனர். இதனால் இன்ஜின் நனைந்து, உடனே வாகனம் உட்கார்ந்து விடுகிறது. நகரில் போதுமான எந்திரவியலாளர்கள் (மெக்கானிக்குகள்) இல்லை என்பதும் இருப்பவர்களும் திறமை மிகுந்தவர்கள் இல்லை என்பதும் இப்போது நிரூபணம் ஆகிவருகிறது. பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பஞ்சர் ஆன வண்டிகளுக்குக் காற்று அடிக்கவும் முடியாத நிலை. காலால் அழுத்திக் காற்றடிக்கும் கருவி உள்ள இடத்தைத் தேடி அலையவேண்டி இருக்கிறது. வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் தள்ளிக்கொண்டு வந்தும் பயனில்லை.

பல இடங்களில் தானிகளும் (ஆட்டோ க்கள்) பழுதடைந்து நின்றுவிடுகின்றன. இதனால் அதில் பயணித்தவர்கள், நடு வழியில் இறங்கி நடக்கவேண்டி இருக்கிறது. தண்டவாளங்கள் நீரால் நிரம்பியுள்ளதால் தொடர்வண்டிகளும் (ரயில்) பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து சீராக இல்லை. பேருந்துகள் மட்டுமே நகரின் இயக்கத்திற்கு ஒரே காரணமாகத் திகழ்கின்றன.

பல்லாயிரம் மதிப்புள்ள வாகனம், இயங்காத போது, அது ஒரு பிணம் போல் கனக்கிறது. அதைத் தள்ளிக்கொண்டு செல்வது, மிகவும் கொடூரமான தண்டனையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் மெக்கானிக்குகளின் பணி மிகவும் முக்கியமானது. நான் கண்ட சிலர், ஏதோ அலுவல் நேரத்தில் மட்டும்தான் வேலை செய்வோம் என்பதுபோல் பேசினர். மாலை ஆறு மணி ஆனதும் இனிமே நாளைக்குத்தான் என்றனர். அவர்கள், மிகவும் அவசிய / அவசரப் பணியாளர்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். வீட்டிலும் இல்லாமல் அலுவலகத்திலும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் பலருக்கும் எவ்வளவோ வேலைகள் இருக்கும். அவர்கள் கையறு நிலையில் நிற்கும்போது, அவர்களின் துன்பத்தைத் துடைக்கவேண்டியது, அவர்களின் பணி மட்டும் அன்று; துயர் துடைக்கும் மனிதாபிமானமும் ஆகும்.

இது பேரிடர் காலம். ஒருவருக்கு ஒருவர் உதவுவது சாலச் சிறந்தது. பேருந்துகளும் கிடைக்காமல் நடு வழியில் நிற்பவர்கள் யாரேனும் விரலை மடக்கி உங்களுக்கு முன் லிப்ட் கேட்கக்கூடும். உங்கள் சக்கரத்தில் காற்றும் இருந்து, அது ஓடவும் செய்கிறது என்றால் யாரோ செய்த புண்ணியம்தான் காரணம். எதிரில் கட்டை விரலை நீட்டும் அந்த முகம் தெரியாத மனிதரைப் பரிவுடன் பாருங்கள்.

நன்றி: தமிழ்சிஃபி

முந்தைய பதிவு: சென்னை: மழையின் பின்விளைவுகள்