!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 03, 2005

சென்னை மழை: கண்ணீர் வடிக்கும் பயணிகள்

தொடர் மழை காரணமாக சென்னையில் எண்ணற்ற இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் போக்குவரத்தும் ஒன்று. இங்கங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரம் பார்த்து, சாலை விரிவாக்கத்திற்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் சாலையின் இரு புறமும் பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகள் மிகுந்த சிக்கலில் உள்ளன. எல்லா வாகனங்களும் சாலையின் மையப் பகுதியில் செல்லவே விரும்புகின்றன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கையில் அது சாத்தியமில்லை. எனவே, ஒரு குருட்டுத் துணிச்சலில் சாலையோரம் செல்லும் வாகனங்கள் சேற்றிலும் பள்ளத்திலும் சிக்கிக்கொள்கின்றன. பேருந்து, லாரி, கார் போன்ற பெரிய வாகனங்கள் சாலைப் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும்போது சாலை மேலும் குறுகிவிடுகிறது.

சென்னையில் சாதாரண நாளிலேயே பல இடங்களில் சாலைகள் மோசம்தான். இந்த மழையால் அரிப்பு ஏற்பட்டு, சாலை ஓரங்களைப் பெரும்பாலும் காணவில்லை. சுற்றுப்புற மண்ணும் கல்லும் சரளைக் கற்களும் முட்களும் கண்ணாடித் துண்டு போன்றவையும் சாலை எங்கிலும் விரவிக் கிடக்கின்றன. இவற்றின் மேல் மழை நீர் ஓடிக்கொண்டிருப்பதால் அவை இருப்பதையும் மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் குண்டும் குழியும் இல்லாத சாலைகளே இல்லை எனும்படி எல்லாச் சாலைகளும் சிறிதளவேனும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாகனம் ஓட்டுவது, சாகசச் செயல் என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்கள், பரிதாபத்துக்கு உரியவர்கள். இடுப்பளவுத் தண்ணீரில் அவர்கள், வேறு வழியில்லாமல் செல்கின்றனர். இதனால் இன்ஜின் நனைந்து, உடனே வாகனம் உட்கார்ந்து விடுகிறது. நகரில் போதுமான எந்திரவியலாளர்கள் (மெக்கானிக்குகள்) இல்லை என்பதும் இருப்பவர்களும் திறமை மிகுந்தவர்கள் இல்லை என்பதும் இப்போது நிரூபணம் ஆகிவருகிறது. பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பஞ்சர் ஆன வண்டிகளுக்குக் காற்று அடிக்கவும் முடியாத நிலை. காலால் அழுத்திக் காற்றடிக்கும் கருவி உள்ள இடத்தைத் தேடி அலையவேண்டி இருக்கிறது. வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் தள்ளிக்கொண்டு வந்தும் பயனில்லை.

பல இடங்களில் தானிகளும் (ஆட்டோ க்கள்) பழுதடைந்து நின்றுவிடுகின்றன. இதனால் அதில் பயணித்தவர்கள், நடு வழியில் இறங்கி நடக்கவேண்டி இருக்கிறது. தண்டவாளங்கள் நீரால் நிரம்பியுள்ளதால் தொடர்வண்டிகளும் (ரயில்) பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து சீராக இல்லை. பேருந்துகள் மட்டுமே நகரின் இயக்கத்திற்கு ஒரே காரணமாகத் திகழ்கின்றன.

பல்லாயிரம் மதிப்புள்ள வாகனம், இயங்காத போது, அது ஒரு பிணம் போல் கனக்கிறது. அதைத் தள்ளிக்கொண்டு செல்வது, மிகவும் கொடூரமான தண்டனையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் மெக்கானிக்குகளின் பணி மிகவும் முக்கியமானது. நான் கண்ட சிலர், ஏதோ அலுவல் நேரத்தில் மட்டும்தான் வேலை செய்வோம் என்பதுபோல் பேசினர். மாலை ஆறு மணி ஆனதும் இனிமே நாளைக்குத்தான் என்றனர். அவர்கள், மிகவும் அவசிய / அவசரப் பணியாளர்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். வீட்டிலும் இல்லாமல் அலுவலகத்திலும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் பலருக்கும் எவ்வளவோ வேலைகள் இருக்கும். அவர்கள் கையறு நிலையில் நிற்கும்போது, அவர்களின் துன்பத்தைத் துடைக்கவேண்டியது, அவர்களின் பணி மட்டும் அன்று; துயர் துடைக்கும் மனிதாபிமானமும் ஆகும்.

இது பேரிடர் காலம். ஒருவருக்கு ஒருவர் உதவுவது சாலச் சிறந்தது. பேருந்துகளும் கிடைக்காமல் நடு வழியில் நிற்பவர்கள் யாரேனும் விரலை மடக்கி உங்களுக்கு முன் லிப்ட் கேட்கக்கூடும். உங்கள் சக்கரத்தில் காற்றும் இருந்து, அது ஓடவும் செய்கிறது என்றால் யாரோ செய்த புண்ணியம்தான் காரணம். எதிரில் கட்டை விரலை நீட்டும் அந்த முகம் தெரியாத மனிதரைப் பரிவுடன் பாருங்கள்.

நன்றி: தமிழ்சிஃபி

முந்தைய பதிவு: சென்னை: மழையின் பின்விளைவுகள்

1 comment:

TBCD said...

இந்த பதிவு படிக்கப்படும் தேதி...டிசெம்பர் 3..2007...இன்றும் மழையால் சென்னையிலே விடுமுறையாம்... :)