!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தலைமகன் - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 28, 2006

தலைமகன் - திரை விமர்சனம்



தலைமகன், நேர்மையான, துணிச்சலான பத்திரிகையாளன் ஒருவனின் கதை.

'எவரெஸ்ட்' என்ற நாளிதழில் தீரன் (சரத்குமார்), முதன்மை நிருபர். மேகலா (நயன்தாரா) புதிய நிருபர். இன்னொரு நிருபராக எரிமலை (வடிவேலு). அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக சத்தியமூர்த்தி (விஜயகுமார்). அரசியல்வாதிகளின் லஞ்சம், ஊழல், மோசடி, காவல் துறையின் முறைகேடுகள், சமூக விரோத சக்திகளின் தோலுரிப்புகள்..... எனப் புலனாய்வு இதழுக்குரிய அம்சங்களுடன் அநீதியை எதிர்த்துப் போராடுகிறது 'எவரெஸ்ட்' இதழ். சரத்தின் செல்பேசி எண்ணைக் காவல் துறையின் ஏட்டு முதல் இல்லத்தரசி வரை அறிந்து வைத்து, ஆபத்து வரும்போது அவருக்குத் தொலைபேசி செய்கிறார்கள். சரத்தும் உடனே அங்கு பறந்து போய் எதிரிகளைப் பந்தாடுகிறார்.

ஆளுங்கட்சி அமைச்சராக உள்ள சண்முகவடிவேல் (முகேஷ் திவாரி), காவல் துறை அதிகாரி அலங்காரத்தின் (சீமா பிஸ்வாஸ்) உதவியுடன் பல்வேறு ஊழல்களைச் செய்து வருகிறார். ரவுடிப் படையும் அவருக்கு உண்டு. இந்த அமைச்சர், 3 கோடி லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, நெடுங்குளம் என்ற கிராமத்தில் மினரல் வாட்டர் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கிறார். அந்தத் தொழிற்சாலையால் சுத்துப்பட்டு கிராமங்கள் அனைத்தும் வறண்டு, சுடுகாடாகிவிடும் என்று 'எவரெஸ்ட்' பத்திரிகையில் சரத்குமார் எழுதுகிறார். அதனைத் தொடர்ந்து அமைச்சர், சரத்தைக் கொல்ல முயல்கிறார். அந்த முயற்சியில் அதிருஷ்டவசமாகச் சரத் தப்புகிறார்.

அதன் பிறகு அவர் எப்படி மீண்டு வந்து, அமைச்சரையும் காவல் துறை அதிகாரியையும் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்பதே கதை.

பத்திரிகையாளனின் பொறுப்பினை, சமூக உணர்வை, தலைமுறைகள் தாண்டிய தொலைநோக்கினை, முன்னெச்சரிக்கை உணர்வை, வீரத்தை, அநீதியை எதிர்ப்பதில் வேகத்தை, சமயோசித புத்தியை, துப்பறியும் ஆற்றலை, விலைபோகாத தன்மையைச் சரத்குமார் அழகாகக் காட்டியுள்ளார். அதனால்தான் படத்தின் தலைப்பின் கீழேயே 'தலைமகன் - அச்சமற்றவன்' என்று பொறித்துள்ளார். 'பேனாக்காரன் வருகிறான்; பிரளயம் போல வருகிறான்' என்று பாடலும் பாடுகிறார்.

எதிரிகளால் விஜயகுமார் கொல்லப்பட, அவருக்குப் பிறகு சரத்குமாரே ஆசிரியர் பொறுப்பேற்றுப் பத்திரிகையை நடத்துகிறார். பத்திரிகைக்கு 'நியூ எவரெஸ்ட்' என்று புதுப் பெயர் சூட்டுகிறார். மறைக்கப்படுகிற உண்மைகளைக் கண்டறிய, மாறுவேடத்தில் அலைகிறார். அமைச்சரின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுகிறார். கடைசியில் நெடுங்குளம் கிராம மக்களை அமைச்சரிடமிருந்து காப்பாற்றுகிறார்.

நயன்தாரா, படம் முழுக்கக் குளிர்ச்சியாக வலம் வருகிறார். 'தீந்தேனா தீவடியும் தேனா' பாடலில் அவரின் அழகை இயக்குநர் அமோகமாக வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான வரிகள் சிறப்பாக உள்ள இந்தப் பாடலின் இடையே 'என் நெஞ்சில் கிழங்கெடுத்தவன் நீயே' என்று நயன்தாரா பாடுவது போல் வைரமுத்து 'துணிச்சலுடன்' எழுதியுள்ளார். அங்க வர்ணனை இப்படி எல்லாமா போகவேண்டும்?

வடிவேலுவின் சிரிப்பு வெடிகள், சில இடங்களில் வெடிக்கின்றன. பல இடங்களில்.... ஊகூம். சேரனின் திரைக்கதை, படத்தைக் கடைசி வரை பார்க்க வைக்கிறது. பால்.ஜே. இசையில் 'தீந்தேனா', 'வெள்ளிக் கிண்ணத்தில்', 'பேனாக்காரன்' ஆகிய பாடல்களைக் கேட்கலாம். ஸ்ரீகாந்த் தேவா, 'நூறு நூறு' என்ற ஒரே பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலைச் சரத்குமாரே பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடுவே கே.எஸ்.ரவிகுமாரும் குஷ்புவும் கெளரவ வேடத்தில் வந்து நான்கு வரிகளுக்கு ஆட்டம் போடுகிறார்கள். இவர்கள், எதற்கு? ராசி பார்க்கிறாரா சரத்?

தன் நூறாவது படமான தலைமகனைச் சரத்குமாரே இயக்கியுள்ளார். சரத் இயக்கும் முதல் படமும் இதுவே. நடிப்புக்கும் இயக்கத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் கொடுக்கலாம். சரத்தின் கட்டுமஸ்தான உடலழகைப் படத்தில் பல இடங்களில் காண முடிகிறது. இன்றைய இளம் கதாநாயகர்கள், சரத்திடமிருந்து உடல்கட்டை மெனக்கெட்டுக் கற்க வேண்டும்.

கொலை முயற்சியில் தப்பும் சரத், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு வருகிறார். அமைச்சரின் ஊழல் ஆதாரங்களைத் தேடி அவர் கல்லறைத் தோட்டத்துக்குச் செல்லும்போது, அங்கே நயன்தாராவை அவர் சந்திப்பது எப்படி? அமைச்சரின் ரகசிய கோப்புகள் அங்கிருப்பது, நயனுக்கு எப்படித் தெரியும்? நெடுங்குளம் தண்ணீர்த் தொழிற்சாலையில் கையில் வானொலிப் பெட்டியும் ஜோல்னாப் பையுமாக மாறு வேடத்தில் நுழையும் சரத், கணினி, இணையம் ஆகியவற்றை நிலத்தடி அறையில் வைத்துத் துப்பறிவது எப்படி? நெடுங்குளம் தொழிற்சாலையை நடத்த அனுமதி பெற்றது வெள்ளையர்கள் என்றால், அங்கு வெள்ளைத் தலைகள் ஒன்றுகூட தெரியவில்லையே! எனச் சில கேள்விகள் எழுகின்றன.

மேலும், அமைச்சர், டிஜிபி அலங்காரத்தைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தன் கைரேகையை அழித்துவிட்டு அலங்காரத்தில் கைகளுக்குள் அதைத் திணிக்கும் காட்சி சரியில்லை. அங்கு துப்பாக்கியில் கைரேகையை அழிக்கும் அமைச்சர், மீண்டும் கைக்குட்டையால் இல்லாமல், தன் கைகளாலேயே அதை எடுத்து, டிஜிபி கைகளுக்குள் வைக்கிறார். அப்போது அமைச்சரின் கைரேகை அதில் படாதா? அதிலும் துப்பாக்கியின் கோணம், இயல்பாக இல்லை; திணிக்கப்பட்டது தெளிவாகத் தெரியும் விதத்தில் உள்ளது.

இப்படி சில லாஜிக், காட்சிப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் கடைசிக் காட்சியில் சரத்தைத் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கேள்வி கேட்கிறார்கள். அங்கு பல மைக்குகள் சரத் முன்னே நீளுகின்றன. ஆனால், அவற்றில் சன் டிவி மைக் இல்லை. இயக்குநர் கவனமாக அதைத் தவிர்த்திருக்கிறார். ஆனால், ஒரு பாடலுக்கு இடையில் 'சொல்லுவதைச் செய்வேன்; செய்வதைத்தான் சொல்லுவேன்;' என்று திமுகவின் வசனத்தைச் சரத் பாடுகிறார். இது, 'அம்மா' கண்ணில் படாமல் இருந்தால் சரி.

பத்திரிகைத் துறை என்ற கதைக் களத்தில் சரத் நன்றாகவே விளையாடியிருக்கிறார். அரசியல்வாதிக்கும் காவல் துறைக்கும் ரவுடிகளுக்கும் உள்ள தொடர்பைப் படம் எடுத்துக் காட்டுகிறது. சமூக நோக்குடைய நல்ல கருத்துகளை மக்கள் நெஞ்சில் விதைக்கிறது. ராதிகா சரத்குமாரின் தயாரிப்பில் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திலிருந்து வந்திருக்கும் படம், சரத்திற்குள் உள்ள இயக்குநரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

தலைமகன்: இந்த வெடி, வெடிக்கும்.


நன்றி: தமிழ்சிஃபி

1 comment:

முனைவர் அண்ணாகண்ணன் said...

ராடன் மீடியா பங்கு எதுவும் எனக்கு இல்லை. படத்தின் குறைகளையும் சொல்லியிருக்கிறேனே! இதைப் படுமோசம் என்று சொல்லிவிட முடியாது; ஏனெனில் படு மோசமான படங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன்.