
மகனின் அன்றாட நடவடிக்கை முதல்கொண்டு முழு வாழ்வையும் அப்பா தீர்மானித்தால் எப்படி இருக்கும்? இது தான் சந்தோஷ் சுப்ரமணியம்
படத்தின் ஒரு வரிக் கதை. இந்தக் குடும்பக் கதைக்குள் காதலைக் குழைத்து ஒரு சுவையான திரைப்படத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார்
இயக்குநர் எம்.ராஜா. தெலுங்கில் பொம்மரில்லு என்ற பெயரில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படத்தின் தமிழ் வடிவம் இது.
மகன் சந்தோஷாக ஜெயம் ரவி; அப்பா சுப்ரமணியமாக பிரகாஷ்ராஜ். மகன் என்ன நிறத்தில் சட்டை அணிய வேண்டும் என்பதிலிருந்து கேரம்
விளையாட்டில் அவன் எந்தக் காயை, எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து படிப்பு, தொழில், கல்யாணம் என அடுத்தடுத்து எல்லா
முடிவுகளையும் அப்பாவே எடுக்கிறார். மகனுக்கு நல்லது செய்வதாக அப்பா நினைக்கிறார். ஆனால், சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை இழந்துவிட்டு,
வேண்டா வெறுப்பாக மகன் ஒத்துழைக்கிறான்.
தன் வாழ்வில் தொழில், திருமணம் என்ற இரண்டு விஷயத்தில் மட்டுமாவது தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று மகன் நினைக்கிறான். ஆனால்,
அப்பா, மகனுக்கு அவர் விருப்பப்படி ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிடுகிறார். இந்நிலையில் தான் மகன், ஹாசினி என்ற பெண்ணை
(ஜெனிலியா) சந்திக்கிறான். தவறுதலாக ஒரு முறை முட்டினால், மறு முறையும் முட்டிக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் தலையில் கொம்பு
முளைக்கும் என்று நம்பும் விளையாட்டுப் பெண் அவள். அவளின் குறும்பும் கள்ளம் கபடம் இல்லா அன்பும் வெள்ளைச் சிரிப்பும் மகனைக்
கவர்கின்றன. இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் அப்பாவிடம் தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறான் மகன். 'அவளை அழைத்து வா. ஒரு வாரம் நம் வீட்டில்
இருக்கட்டும். நம் குடும்பத்திற்கு அவள் ஏற்றவளா என்று பார்க்கலாம்' என்கிறார் அப்பா. சுற்றுலா போவதாகத் தன் அப்பாவிடம் (சாயாஜி ஷிண்டே)
சொல்லிவிட்டு, ஜெயம் ரவி வீட்டிற்கு வருகிறாள் ஜெனிலியா. அங்கு தங்கும் ஒரு வாரத்தில் அந்த வீட்டார் அனைவரின் மனத்திலும் இடம்
பிடிக்கிறாள். ஆனால், தொடரும் சம்பவங்களால் அவளாகவே அந்த வீட்டை விட்டுப் போகிறாள். பிறகு காதலர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே
மீதிக் கதை.
இந்தப் படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு, மிக மிக அற்புதமாக அமைந்துள்ளது. வசீகர அழகு; வாய் நிறைய சிரிப்பு; துருதுரு பேச்சு; சுட்டித்தனம்;
அப்பாவியான பார்வை; கொஞ்சு தமிழ்... என ஒரு மான்குட்டி போல் படமெங்கும் செய்யும் மாயம் செய்கிறார். யார் கை நீட்டினாலும் அவர்களின்
தோளுக்குத் தாவும் குழந்தை போல், எல்லோரையும் ஒன்றாகவே அவர் பார்ப்பது அருமை. தேநீர்க் கடைக்காரர், பானி பூரி விற்பவர், ஐஸ்கிரீம்
விற்பவர் என எல்லோரையும் நட்புடன் பெயர் சொல்லி அழைப்பது அழகு. மகிழ்ச்சியை மட்டுமில்லாமல், சோகம், குழப்பம், கவலை என எல்லா
உணர்வுகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெனிலியா. இந்தப் படத்துக்காக அவருக்குப் பல விருதுகள் கிடைப்பது உறுதி.
அனைத்துப் பாத்திரங்களையும் ஜெனிலியா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். என்றாலும் அவருக்கு அடுத்த படியாக ஜெயம் ரவி, தன் பங்கை நன்கு
நிறைவேற்றியுள்ளார். அப்பாவின் வற்புறுத்தலுக்காகத் தன் ஆசைகளை விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிர்கிறார். பிரகாஷ்ராஜ்,
சாயாஜி ஷிண்டே, கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள்.... என அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவிக்கு நிச்சயிக்கப்பட்ட கீரத், சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பூச்செடி போல் இருக்கிறார். அவரை இன்னும் நன்றாகப்
பயன்படுத்தி இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. டி.கண்ணனின் ஒளிப்பதிவு நன்று. எம்.எஸ்.பாஸ்கர்,
ஆசிரியராகப் படத்தில் நடித்துள்ளார். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பார்களோ! அதுவும் அப்துல் கலாம் போல்
அவர் வேடம் பூண்டது, மிகத் தவறு.
ரீமேக் எனப்படும் மறுஉருவாக்கக் கதைகளை அதிகமாக இயக்கி வெற்றி பெற்றவர், எம்.ராஜா. ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி,
உனக்கும் எனக்கும் (சம்திங் சம்திங்) என மூன்று வெற்றிப் படங்களை எடுத்த அவருக்கு, நான்காவது படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. 7
ஆவது நாள் முடிவில் ஜெனிலியா பற்றி முடிவு எடுக்க, ஜெயம் ரவி வீட்டார் கூடியிருக்கின்றனர்; பிரகாஷ்ராஜூம் ஜெயம் ரவியும் தங்கள் கருத்தை
முதலில் பேச முயலுகின்றனர். அப்போது ஜெனிலியாவை முதலில் பேச வைத்தது, இயக்குநரின் முதிர்ச்சிக்குச் சான்று. இந்தப் படத்தின் இறுதிக்
காட்சி, சிறப்பாக அமைந்துள்ளது.
என்.பாஸ்கரின் கதைக்குத் திரைக் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜா. Love Makes Like Beautiful என்ற வாசகத்தைப் படத்தின்
தலைப்புடன் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள். இதே வசனத்துடன் ஒரு பாடலும் இதில் உள்ளது. சந்தோஷ் சுப்ரமணியம் என்ற தலைப்பே தமிழாக
இல்லாதபோது, துணை வாசகத்தைத் தமிழில் எப்படி எதிர்பார்ப்பது?
நல்ல கதைக்காக, ஜெனிலியாவின் அபார நடிப்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
நன்றி: தமிழ் சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, April 18, 2008
சந்தோஷ் சுப்ரமணியம் திரை விமர்சனம்
Posted by அண்ணாகண்ணன் at 3:00 PM 3 comments Links to this post
Labels: திரை விமர்சனம்
Monday, April 14, 2008
நேபாளி திரை விமர்சனம்

விக்ரமுக்கு அந்நியன் கிடைத்தது போல், பரத்துக்கு நேபாளி கிடைத்திருக்கிறது. மூன்று விதமான தோற்றங்களில் பரத். பாலியல் துன்புறுத்தலில்
ஈடுபடும் தீயவர்களைத் தேடிச் சென்று, வித்தியாசமாக, புத்திசாலித்தனமாகக் கொல்லும் ஒருவனின் கதையே நேபாளி. அவரது நடிப்புக்கு நல்ல தீனி
கொடுத்திருக்கிறது கதை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் கார்த்திக் என்ற பாத்திரத்தில் பரத். ஒயிலாக முகத்தில் வந்து விழும் வண்ண முடியும் ரோசா நிற
இதழ்களும் நேர்த்தியான உடைகளும் அழகான சிரிப்புமாக பரத், வசீகரிக்கிறார். இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருவார். அவருக்கு
ஏற்ற அழகிய இணையாக மீரா ஜாஸ்மின். இருவருடைய ஜோடிப் பொருத்தம் மிக அருமை. இருவரும் முதலில் சந்திக்கும் காட்சியிலிருந்து,
காதலிக்கத் தொடங்கி, வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து, நவ நாகரீக மாளிகையில் உல்லாசமாகக் களியாட்டம் போடுவது... எனப் பார்க்கப் பார்க்கச் சலிக்காத காட்சிகள்.
பரத் - மீரா இணையிடம் ஒரு விசாரணைக்காக வரும் அப்பகுதி காவல் துறை உதவி ஆய்வாளர் (ராஜா ரவீந்தர்), மீரா மீது கண் வைக்கிறார். பரத்
இல்லாத நேரத்தில் தனித்திருக்கும் மீராவிடம் அத்துமீறுகிறார். 'பரத்தை அடித்துப் போட்டு வந்திருக்கிறேன். அவன் வேண்டுமானால் என்னோடு படு'
என்று காவல் அதிகாரி, மீராவை மிரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பிக்க மீரா, தன்னை மாய்த்துக்கொள்கிறாள். மீராவைக் கொன்ற பழி, பரத் மீது
விழுகிறது.
கார் டிக்கியில் அடைக்கப்பட்டிருந்த பரத், இரண்டு நாள் கழித்து வந்து, காவல் அதிகாரியைக் கொடூரமாகக் கொல்கிறார். அதற்காக 6 ஆண்டு
சிறை வாசம். அங்கு பல முறைகள் பரத் தற்கொலைக்கு முயல்கிறார். பரத்துக்கு அடுத்த அறையில் ஒரு நேபாளி (கோவிந்த் நாம்தேவ்)
அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு சமயம் பரத்தும் அந்த நேபாளியும் ஒரே அறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில் பரத்தின் முதுகில்
எழுதியே தான் சேகரித்த எல்லாச் செய்திகளையும் சொல்லிவிடுகிறார் நேபாளி. பிறகு அந்த நேபாளி கொல்லப்படுகிறார்.
சிறையிலிருந்து வெளிவந்த பரத், நேபாளியாக அவதாரம் எடுக்கிறார். சங்கரபாண்டி ஸ்டோ ர்ஸில் மூன்று சக்கர மிதிவண்டியில் பொருள்களை
வீட்டுக்கு வீடு கொண்டு சென்று போடும் நேபாளி ஆகிறார். மென்பொருள் பொறியாளர், பேராசிரியர், தொழிலதிபர், மருத்துவர் என அடுத்தடுத்து
ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளுகிறார். அதுவும் காவல் துறைக்கு முன்னதாகவே புகைப்படத்துடன் தகவல் கொடுத்துவிட்டு வந்து, சொன்ன
நேரத்தில் கன கச்சிதமாகச் சாகடிக்கிறார். அவருடைய கோணலான புருவமும் உடைந்த தமிழும் காலை அகட்டிய நடையும் அவரது பாத்திரத்தை வித்தியாசமாகக் காட்டுகின்றன.
ஒவ்வொருவரைக் கொன்றதும் அவருக்கு மரணம் எப்படி நேர்கிறது என்று நேபாளியின் குரல், கிராஃபிக்சுடன் ஒலிக்கிறது. கொலையாளியைக்
கண்டுபிடிக்கும் காவல் துறை உதவி ஆணையர் வேடத்தில் பிரேம். ஒவ்வொரு தடயமாகக் கண்டுபிடித்து, நேபாளியை நெருங்குகிறது பிரேமின் குழு.
இறுதியில் நேபாளி பிடிபட்டாரா? என்பதை வெள்ளித் திரையில் காணலாம்.
சிறையில் அசல் நேபாளியைச் சிறை அதிகாரி (சேரன் ராஜ்), மிரட்டும் போது அடிக்கடி கன்னையா என்பவருடன் தொலைபேசியில் பேசுகிறார்.
ஆனால், அந்தக் கன்னையா யார் என்பதைக் கடைசி வரை காட்டவே இல்லை. பரத்தின் பின்னணி, அப்பா- அம்மா பற்றிக் கதையில் எந்த
விவரமும் இல்லை.
பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. மதியின் ஒளிப்பதிவு மிக அருமை. அரங்க அமைப்பும் சிறப்பு. கலை இயக்குநர்
செல்வகுமாரைப் பாராட்டலாம். பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், அழகாகப் பொருந்தி இருக்கிறது. ஒவ்வொரு கொலையாக நடந்துகொண்டே இருக்க, என்ன காரணத்திற்காக நேபாளி அவர்களைக் கொல்கிறார் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மர்ம முடிச்சை நீட்டிச் சென்றதில் இயக்குநர் வி.இசெட். துரை வெற்றி பெற்றுள்ளார். படத்தின் இறுதிக் காட்சி, ஒரு கவிதையைப் போல் அமைந்துள்ளது.
இப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்று காட்டுவது போல் ஒவ்வொரு படமாக வந்துகொண்டே இருக்கிறதே என்ற கவலை ஒரு புறம்
தோன்றுகிறது. ஆயினும் தீமை செய்பவர் தண்டிக்கப்படுவார் என்ற நீதியை ஒவ்வொரு படமும் காட்டுவதால் ஓரளவு சமாதானம் அடையலாம்.
தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் கதை, நமக்குப் பழசுதான்; ஆனால், புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தி இருப்பதால் பாராட்டலாம்.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by அண்ணாகண்ணன் at 4:03 PM 4 comments Links to this post
Labels: திரை விமர்சனம்


