!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 'கண்ணன் பாட்டு' வலைப்பதிவின் நூறாவது இடுகைக்கு வாழ்த்து ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, May 02, 2009

'கண்ணன் பாட்டு' வலைப்பதிவின் நூறாவது இடுகைக்கு வாழ்த்து

2008 ஜூன் மாதம் கூடல் வலைப் பதிவில் வெளியான இந்த இடுகையை, ஆவணமாகக் கருதி, இங்கே மீளவும் இடுகிறேன்.

==================================================

கண்ணன் பாட்டு என்ற இந்தக் கூட்டு வலைப் பதிவு, நூறாவது இடுகையைக் கண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எட்டு பேர்கள் இணைந்து ஒன்றரை ஆண்டில் நூறு பதிவுகள் இட்டுள்ளார்கள். கண்ணனின் அழகை, அருளை, புகழை, லீலைகளை... கண்ணன் தொடர்பான ஒவ்வொன்றையும் ரசித்து, ருசித்துத் தொகுத்துள்ளார்கள். கண்ணன் பாட்டு என்று பதிவின் பெயர் இருந்தாலும் கண்ணனுடன் சேர்த்து ராமனும் அவர்களின் அடியவர்களும் காதல் பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் கண்ணனாகப் பார்ப்பது ஒரு வகை உயர்ந்த ஆன்மீகம். அதனால் தான் உலகில் 660 கோடி ஆழ்வார்கள் இருக்கிறார்கள் என இவர்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

கோயிலில் கொசுத் தொல்லை என்பதால் அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வைத்துக் கொடுக்கும் அன்பு மயமான உள்ளத்தை இங்குதான் நான் கண்டேன்.

ஒவ்வொரு பதிவாகப் பின்னால் பார்த்துக்கொண்டே சென்றேன். அழகிய பாடல்கள், அவற்றின் உரை வடிவம், இசை வடிவம், வாய்ப்பிருந்தால் வீடியோ எனப்படும் ஒளி வடிவம், எழில் சிந்தும் புகைப்படங்கள், கண்ணன் தொடர்பான செய்திகள், கேள்விகள் - விளக்கங்கள்... எனத் தேடித் தேடித் தொகுத்த ஒவ்வொன்றும் ஈர்த்தன.

திரைப் பாடல்கள், தனிப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள்... எனக் கண்ணன் தொடர்பான எல்லாப் பாடல்களையும் அவற்றின் வரி வடிவத்துடன் வெளியிட்டு வருவது அருமை. புகழ் பெற்ற பாடல்கள் ஒரு புறம் அணி சேர, பதிவாளர்களே சொந்தமாகப் பாட்டெழுதி அதைப் பாடியும் வெளியிட்டுள்ளது இன்னும் சிறப்பு.

கே ஆர் எஸ் எனப்படும் கண்ணபிரான் ரவிஷங்கர், வேற்று மொழிப் பாடலைத் தமிழில் தந்துள்ளதும் கவர்ந்தது. தாயாருக்குத் திருமஞ்சனம் செய்விக்கையில் அதனை ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவதுடன் ஒப்பிட்டது கவித்துவமாக ஒளிர்கிறது.

ஷைலஜாவுக்குத் திருவரங்கப்ரியா என்றொரு பேர் இருப்பதை இந்த வலைப்பதிவிலிருந்து அறிந்துகொண்டேன். அவரும் நாகி நாராயணனும் இணைந்து பாடியது, செவிக்கினிமை சேர்த்தது.

இப்படியாக

* தி. ரா. ச.(T.R.C.)
* மடல்காரன்
* மலைநாடான்
* G.Ragavan
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* Raghavan
* kannabiran, RAVI SHANKAR (KRS)
* dubukudisciple

ஆகிய ஒன்பது பேர்களும் ஒரு புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு மதம் தொடர்புடைய வலைப் பதிவு என்றாலும் கூட, மதத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கம் இவர்களிடம் இல்லை. தங்களை அடியவர்களாகக் கருதி, தங்கள் இறைவனை ரசித்து, ஆழந்து பக்தியில் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். இந்த 21ஆம் நூற்றாண்டில், பரபரப்பான இணைய வெளியில் அமைதியைப் பரப்பும் உயர்ந்த நோக்கம் இவர்களிடம் உள்ளது. அதற்காக இவர்களைத் தனித் தனியாகப் பாராட்டுகிறேன்.

வலைப் பதிவின் இடுகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை என்றால், பல பின்னூட்டங்களும்கூட சுவையாகவே இருக்கின்றன. இந்த எட்டு பேர் அல்லாது மேலும் பலரின் பங்களிப்பும் உள்ளதை இந்த வலைப் பதிவுத் தடத்தில் கண்டேன். மதுமிதாவின் பாடலாகட்டும் வல்லிசிம்ஹனின் இசையாகட்டும் நா.கண்ணனின் சுட்டியாகட்டும் ஒவ்வொன்றும் இந்த வலைப் பதிவுக்கு வலிமை சேர்க்கின்றன.

இந்த இனிய முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். நான் இந்த வலைப்பதிவையும் அதன் உறுப்பினர்களையும் வாழ்த்தத் தகுதியுடையவன்தானா? என் பெயரில் கண்ணன் இருப்பதால் எனக்கு இதில் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா? நான் கண்ணனை ஒரு கடவுளாக ஏற்கிறேனா? என்ற கேள்விகள் என் முன்பு எழுகின்றன. இவை தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை நான் அளிக்க வேண்டும்.

கண்ணனை ஒரு கதாபாத்திரமாக நான் மிகவும் ரசிக்கிறேன். சிறையில் பிறந்து, நதியைக் கடந்து, ஆயர்பாடியில் வளர்ந்து, காளிங்க நர்த்தனம் ஆடி, புல்லாங்குழல் இசைத்து, மாடுகள் மேய்த்து, வெண்ணெய் திருடி, சேலைகளை ஒளித்துவைத்து, கோபிகையருடன் விளையாடி, காதலில் குழைந்து, கம்சனைக் கொன்று.... என அழகான கதாநாயகனாக அவனை ஏற்கிறேன். கண்ணன் என்றில்லை; எந்தக் கடவுளையும் நம்பி, வணங்கி, துதித்து, வேண்டும் வழக்கம் என்னிடம் இல்லை.

நான் ஒரு நாத்திகனா? என்ற கேள்விக்கும் என்னிடம் தெளிவான பதில் இல்லை. கடவுள் வெளியில் இல்லை; நமக்குள் இருக்கிறார் என்ற கருத்தினை நான் ஏற்கிறேன். இதன் மூலம் நாமே கடவுளாக வாய்ப்பிருப்பதை உணர்கிறேன். யோகம், தியானத்தின் வழியே ஓர் உன்னத நிலையை அடையலாம் என்ற வழியை நான் ஏற்கிறேன். தாய்மை உணர்வு பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடம் இருந்தாலும் அவரும் தாயே என்ற கருத்து எனக்கு உண்டு. கடவுளுக்கு உருவம் கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அறிவியல்பூர்வம் அல்லாத சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு ஈடுபாடில்லை. என் ஆன்மீகக் கோட்பாடு இப்படியாகச் சில புள்ளிகள் கொண்டது.

ஒரு பயணியாக நான் ஆலயங்களுக்குச் செல்வேன். சுற்றிப் பார்ப்பேன். அங்கு துளசியும் நீரும் கொடுத்தால் விருப்பத்துடன் பருகுவேன். தல விருட்சங்களின் காற்றினை ஆழ நுகர்வேன். கலைநயம் மிகு சிற்பங்களை ரசிப்பேன். விக்கிரகங்களுக்குச் செய்த அலங்காரங்களை ஆர்வத்துடன் கவனிப்பேன். மனத்தை உருக்கும் பாடல்களைக் கேட்டு அந்த இசையில் கரைவேன். ஆனால் கடவுளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் என் மதம் அறிவியல். அது ஏற்கும் எதையும் நான் ஏற்பேன். அது மறுக்கும் எதையும் நான் வெளிப்படையாக மறுக்க மாட்டேன். விடை தெரியாத பலவற்றையும் ஆய்வுக்குரியது என்ற தலைப்பிலேயே வைக்க விரும்புகிறேன்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரு புள்ளியில் சந்திக்குமானால் அங்கு தாராளமாக என்னைப் பொருத்தலாம். ஏனெனில் நிரந்தரக் கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை. அவ்வப்போதைய நிரூபணங்களுக்கு ஏற்ப, நெகிழ்ந்து கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்.

இவ்வளவு விளக்கமாக நான் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிட்டால் நான் கிருஷ்ண பக்தி கொண்டவன் என்ற தவறான கருத்து ஏற்பட வாய்ப்புண்டு.

கண்ணன் பாட்டு என்ற வலைப்பதிவினைப் பாராட்டும் நான் அதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்துள்ளேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

நண்பர்களே,

கண்ணன் பாட்டின் மூலம், இணைய தளத்தில் தமிழின் ஆன்மீகச் சாரத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்கள் முயற்சியின் மூலமாக ஆன்மீகம் வளருவது இருக்கட்டும். உறுதியாகத் தமிழ் வளர்கிறது. அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

திரை இசை முதல் தனி இசை வரை இனிய இசையை வளர்க்கிறீர்கள். அவற்றைக் கேட்கக் கேட்க மனம் மகிழ்கிறது. அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.

வலைப் பதிவில் எழுத்து, இசை ஆகியவற்றுடன் இனிய புகைப்படங்களையும் ஒளிப்படங்களையும் இணைத்து, இணையத்தின் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்துகிறீர்கள். இவற்றுக்குத் தமிழ்த் தொன்மம் என்ற அடையாளம் இருப்பதால் இதன் மூலம் தமிழரின் நம்பிக்கைகள், வழிபாடு, தத்துவம், இலக்கியம்.... ஆகிய பலவற்றையும் பாதுகாத்து இணையத்தில் சேமிக்கும் அரிய பணியில் உங்கள் கைகளையும் சேர்த்துள்ளீர்கள். இந்த நற்பணிக்காக உங்களை நாவினிக்கப் போற்றுகிறேன்.

தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற அவதூறு ஒன்றுண்டு. அதைப் பொய்யாக்கி, எட்டு பேர் இணைந்து ஒரு கூட்டு வலைப்பதிவை வெற்றிகரமாய், ஒரு வீணையின் தந்திகளைப் போல் நடத்துகிறீர்களே அதற்காக உங்களை வானளாவ வாழ்த்துகிறேன்.

========================

நன்றி: கூடல் வலைப் பதிவு

No comments: