!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 28, 2004

கவிதாயினி கிருஷாங்கினி

நவீன கவிதைகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுள் முதன்மையானது, அவை புரிவதில்லை என்பதே. பூட்டினை மட்டுமே அக்கவிதைகள் கொண்டுள்ளன; சாவிகளைத் தொலைத்துவிட்டன; வாசகர், எளிதில் வந்து சேர முடியாதபடி அவற்றின் பாதைகள் மிகவும் சிக்கலானவையாய் உள்ளன என்றெல்லாம் பரவலான கருத்துகள் உள்ளன. நாயிடம் முழுத் தேங்காய் அகப்பட்டால் சும்மா, உருட்டி விளையாடலாமே தவிர, அதனால் நாய்க்கும் பயனில்லை; தேங்காய்க்கும் பயனில்லை. தேங்காய் திறந்தால்தானே அதைச் சுவை பார்க்க முடியும். அப்புறம்தானே உயர்ந்த சுவையுள்ளதையும் சுவையற்றதையும் கண்டறிய முடியும். ஒன்று, தேங்காயை உடைப்பதற்கான கூர்மையையும் வலிமையையும் வாசகர்கள் பெறவேண்டும். அல்லது, கவிதை, வாழைப் பழம் போன்றோ, மாம்பழம் போன்றோ மாற்று வடிவம் எடுக்கவேண்டும்.
கைக்குழந்தைக்குத் திரவ உணவுதான் சிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திட உணவுக்கும் கடின உணவுக்கும் அதைப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகம், கல்வி கேள்வி ஞானத்தில் மிக உயர்ந்துவிட்டால்( குழந்தை வளர்ந்துவிட்டால்) அதற்கு எத்தகைய உணவும் செரிமானமாகிவிடும். ஆனால், இதையே காரணம் காட்டி, கல்லூரி செல்லுபவருக்குப் பருப்புச் சோறு பிசைந்து ஊட்டிவிடக் கூடாது. ஒரு கவிதையை எழுதி, நாமே வைத்திருக்கும் வரை சிக்கல் இல்லை. அதை வெளியிடும் போது அதை யார் வேண்டுமானாலும் படிக்கக்கூடும். எவர் படித்தாலும் அது அவரவர்க்குத் தகுந்த பொருள் தரும்படி எழுதுவது, பெரிய சவால். இதனால்தான் சிறுவர்க்கானவை, பெரியவர்க்கானவை என முதலிலேயே இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள்.
பெரியவர்க்கான கவிதைகள் எனப் பிரித்தாலும் இதிலும் சிக்கல்கள் உண்டு. பெரியோர் எல்லோரும் ஒரே தகுதி, அனுபவம், கல்வியுடையவர் அல்லர். எனவே ஒரு கவிதையை எந்தப் பெரியவர் படித்தாலும் அவருக்கு ஒரே உணர்வு உண்டாகும் எனக் கூற முடியாது. எனவே, பொறுப்புள்ள படைப்பாளி, கலவையான வாசகர் கூட்டத்தைக் கவனத்தில் கொண்டு, கூடிய வரை எளிமையாகப் படைக்கவேண்டும். அப்போதுதான் முதன்மை நோக்கமான உணர்வுக் கடத்தலுக்கு வாய்ப்புண்டு.
விடுகதைத் தன்மையுள்ள கவிதைகளில் முடியுமிடத்தில் கவிதையின் கதவைத் திறப்பார்கள். இன்னும் சிலவற்றில் கதவு, தலைப்பிலேயே இருக்கும். வேறு சிலவற்றில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு சொல்லுக்குள் திறப்பிருக்கும். உட்குவிதலும் வெளிவிரிதலும் இருவேறு கவிதைப் பாணிகள். எந்தப் பாணியை எடுத்துக்கொண்டாலும் நம் ஒரே வேண்டுகோள், வாசகர்களைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்பதே.
வாசகர் மேல் அக்கறையுள்ள கிருஷாங்கினி, தன் சில கவிதைகளில் ஒரு புதிய முறையைப் பின்பற்றியுள்ளார்.
பிரதான நுழைவாயில், அகலமாக, அழகாக;
சில விசாலமான அறைகள்
பிரதான வாயிலை நோக்கி.
......முற்றத்தில் சந்திப்பும்
அடிக்கடி வார்த்தை பரிமாற்றமும் குசலமும்
பரஸ்பரம் உண்டு.
அறைக் கதவுகள் அடைபடாத நிலை.

இப்போதெல்லாம்
அறைகளில் அவர்கள்.
அறைகள் எல்லாம் மாடப் பிறைகளாயின.
ஒவ்வொரு பிறைக்கும் கதவுண்டு
தாழ்ப்பாளும் உடன் உண்டு, அழுத்தமாக.

.........
எப்போதும் பிறைகளாகும் தயார் நிலையில்
அறைகள் மறுபடியும் பிறைகளாகும்.

-இந்தக் கவிதை, எதைப் பற்றிச் சொல்கிறது என வாசகர் ஒருவேளை புரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்வது? சிந்தித்த கிருஷாங்கினி, இதற்கு, தேசீயம் எனத் தலைப்பிட்டுள்ளார். இப்போது சிக்கலே இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிந்துவிடும்.
வேறொரு கவிதையைப் பார்ப்போம்.

ஒட்டியிருந்த அடி அரிசியில்
எங்கிருந்தோ ஒரு பல்லிக் குட்டி;
குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி
அரிசியைக் கடைகிறது- சுற்றி
பக்கச் சுவரினதிர்வுகளுக்கு
ஆளாகி 'சில்வர்' அடுக்கின்
அரைக் கிணறு தாண்டி
மறுபடியும் கீழே விழும்
வழவழப்பை மீறி ஏது செய்ய?

சிறு மத்தை சார்த்தியிட
பிடிப்புற்று வெளியேறி
வானம் பார்க்கலாயிற்று
கடைத்தேற
- இக்கவிதையைத் தான் எந்தப் பொருளை வலியுறுத்த வேண்டி இயற்றினோமோ அதை வாசகர் புரிந்துகொள்வாரா? சிந்தித்த கிருஷாங்கினி, எனக்கும் ஒரு மத்து எனத் தலைப்பிட்டுள்ளார்.
சூழலின் காரணமாக துயரச் சேற்றில் சிக்குண்ட ஒவ்வொருவரும் மேலேற முயன்றுகொண்டே உள்ளனர். அவர்களால் மேலே வர முடிவதில்லை. அவர்கள் மேலே வர, மேம்பட, நம் கை கொடுப்போம்; உதவுவோம் எனச் சொல்ல விரும்பித்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்துள்ளார்.
அழகான பசு அதிகம் கறக்கும்
ஊசி போட்டு மருந்திட்டாவது,
இறந்தது இளமையும் திறமையும்
உடன்வர யாருமில்லை
யாரையும் விடவுமில்லை
கூட்டத்தைத் திருப்தி செய்
கடமை அதுவே
கற! கற! அதிகம் கற!
வலி, வலி, வலி!
பிழி, பிழி, பிழிந்தெடு!
- நெகிழ்ந்த கடிகாரம் என்ற தலைப்பிலான கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. இத்தலைப்பிலுள்ள நெகிழ்ந்த என்ற சொல், காலாகாலமாய்ப் பெண்களின் நிலை, இவ்வாறுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
கிருஷாங்கினி, அங்கதம் தொனிக்கும் சில கவிதைகளையும் படைத்துள்ளார்.

....................
பரிசு பெற அதிகம் உழைக்க வேண்டும்
இப்படியாகத்தானே- அல்ல
நிறைய ப்ரயாசைப்படு
அதிகம் சென்று பார்,
கொண்டு கொடு
பக்கக் கிளைகளைத் தனதாக்கிக்கொள்
உரியன கொடுத்து.
அப்பாடா!

பெற்ற பின் பேசு, எல்லாம்
தகுதியின் அடிப்படைதான்.
நடுவர்கள் முட்டாள்களல்ல;
ஸ்தாபிதம் பெற்றபின்
கிடைத்த விதம் பற்றி
பகிராதே எவரிடமும்
அங்கீகாரம் பெறாத
எவரிடமும் இரக்கம் காட்டாதே
அவர்கள் அப்படித்தான்
எப்போதும்
வெளியில் பேசும் வீரர்கள்
உன் வழியில் செல்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

- பரிசுகளின் முன்னும் பின்னுமுள்ள பெருங்கதைகளை இக்கவிதை, பிட்டுப் பிட்டு வைக்கிறது.
பிருந்தா என்ற இயற்பெயர் கொண்ட இவர், எழுதுகோல் பிடித்த பின் கிருஷாங்கினி எனப் பெயர் சூட்டிக்கொண்டார். இந்தப் புனைபெயருக்குப் புல் போன்ற உடல்கொண்டவள் எனப் பொருள் கூறுகிறார். கோவை மாவட்டம் தாராபுரத்தில் 20.11.1948 அன்று பிறந்த இவரின் முதல் சிறுகதை, 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது.
இவரின் கணவர் நாகராஜன், ஓவியர். மகள் நீரஜா ரமணி கிருஷ்ணா, பரத நாட்டியக் கலைஞர். ஓவியமும் நாட்டியமும் உலவும் இடத்தில் இருப்பதால் அவற்றின் தாக்கம், இவர் படைப்புகளில் உள்ளன.
மேல் திண்ணை, கீழ்த் திண்ணை;
மண்வாசல் பிறகு
பின்வாசல்.

சதுர அடி
450, 500 முதல்
1000மும் அதற்கும் மேலும்.
ஆயினும்
வாசல் என்னவோ
4 அடி அகலமும் 12 அடி நீளமும்
...முதுகின் சுமை காரணமாய்
ஐங்கோணம், அறுகோணம், எண்கோணமாய்

தினம் தினம் காலையில்
மின்னும் நட்சத்திரங்கள்!
- அழகியல் மிகுந்த இக்கவிதையில், தானே வரைந்த கோலங்களை இடையில் இட்டுள்ளார். இப்படி, கவிதையையும் ஓவியத்தையும் ஒருசேரப் பின்னுவது, இதர கவிஞர்களிடம் இல்லாத ஒன்று.
கவிதையில் மட்டுமின்றி, சிறுகதைக் கலையிலும் கிருஷாங்கினி தேர்ந்துள்ளார். கானல் சதுரம் என்ற கவிதைத் தொகுப்பையும் சமகாலப் புள்ளிகள், கிருஷாங்கினி கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். தன் மகளுடன் இணைந்து, பரதம் புரிதல் என்ற பரதக் கலை நூலைப் படைத்துள்ள இவர், தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் திரட்டி, பறத்தல் அதன் சுதந்திரம் என்ற நூலையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரின் சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி, 1998ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசு பெற்றது. தமிழ் வளர்ச்சித் துறையின் தேர்வு. "கானல் சதுரம்" கவிதைத் தொகுதி-1998, கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான "கவிச்சிறகு" விருது அளித்துச் சிறப்பித்தது. மத்திய அரசின் கலை மற்றும் கலாசார மையத்தின் உயர்நிலை மானியம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர், "தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் பெரும்பான்மையான கவிதைகள், எதிர்மறை உலகைப் படம்பிடிப்பவை. துன்பியல் நிகழ்வுகளை விவரிக்கும் இவரின் ஆக்கங்கள், பலவீனமான மனம் கொண்டவராக இவரை அடையாளப்படுத்துகின்றன. சில இடங்களில் இவரின் கேள்விகளில் கூர்மை, வெளிப்படுகிறது. பல இடங்களில் விரிவான ஆலாபனைக்குத்தான் இவர் முயல்கிறார்; இரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு முயல்வது, இன்னும் நலம் சேர்க்கும்.
எனது வாத்யத்தைக் கையிலெடுத்து
மீட்ட ஆரம்பிக்கிறேன்;

தெருஓர பெஞ்சுகளில், மரத்தடியில்
தெருவின் நடுவில், ஓரத்தில்
சந்தோஷமாய், நெகிழ்ச்சியாய், சோர்வாய்.

நாற்புறமும் நிழல்கள்
என்னை ஊடுருவி ஊடுருவி
எங்கெங்கோ பின்னல்களாய்
சென்று சென்று மீள்கின்றன.

ஸ்தூலமாய், திடப் பொருளாய்
நிணம் நரம்புடன்
மனிதர் மத்தியில் நான் அரூபமாய் நிழலாய்க் கரைகிறேன்
- என்கிறார் கிருஷாங்கினி.
காவல் துறையினரின் கனிவான கவனத்திற்கு, இங்கிருந்த கிருஷாங்கினி என்பவரைக் காணவில்லை......


No comments: