!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தங்கம்மாவின் ஆன்மா அமைதி கொள்ளட்டும் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 02, 2008

தங்கம்மாவின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்

காந்தளகம் பதிப்பகத்தை நடத்தி வரும் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் தாயார் திருமதி தங்கம்மாள் கணபதிப்பிள்ளை, ஆகஸ்டு 1 அன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு இயற்கை எய்திவிட்டார். இவருக்கு வயது 91.

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து, கிராமத்துப் பெண்ணாக, குடும்பத் தலைவியாக, தாயாக, பாட்டியாக.... பல்வேறு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த இனிய, தூய உள்ளத்தவர். என்னைத் தன் இன்னொரு மகன் என அழைத்து, அன்பு பாராட்டியவர்.

இவரைப் பற்றித் 'தகத்தகாய தங்கம்மா' என்ற நூலைக் கி.பி.2001இல் நான் எழுதினேன். அது, காந்தளகம் வெளியீடாக வெளிவந்தது.

இந்த நூலிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கே:

அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?

வேளாண் தொழிலுடன் ஆசிரியத் தொழிலையும் பார்த்து, சிறீகாந்தா அச்சகம் என்ற அச்சகத்தையும் காந்தளகம் என்ற பதிப்பகத்தையும் உருவாக்கிய முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் இல்லக் கிழத்தி; ஐ.நா. உணவு வேளாண்மை நிறுவனத்தின் ஆலோசகராக 23 நாடுகளில் பணியாற்றி, 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்த மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் சிறந்த இல்லத்தரசிகளான சரோஜினிதேவி, சாந்தாதேவி ஆகிய இரு பெண்மக்களுக்கும் தாய்; அமெரிக்க மாநிலங்கள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வாழும் ஒன்பது பேரப் பிள்ளைகளுக்குப் பாட்டி; ஐந்து கொள்ளுப் பெயரர்களுக்குப் பூட்டி (2001).

அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?

உணவாலும் சமயத்தாலும் சைவர்; அன்பும் கருணையும் கொண்டவர்; எந்த உயிருக்கும் தீங்கு செய்து விடக் கூடாது என்று எண்ணுபவர்; மன உறுதியும் வீரமும் உடையவர்.

அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?

ஆடு, மாடு, கோழி ஆகியன வளர்த்தவர்; மரம் நிறை தோட்டம் அமைத்துப் பேணியவர்; பால் வணிகம் செய்தவர்; சீட்டுப் பிடிக்கும் தொழில் தெரிந்தவர்; நகையின் பொருட்டோ, வாயுறுதியின் பேரிலோ ஏழையர்க்குச் செல்வந்தரிடமிருந்து கடன் பெற்றுத் தரும் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர்; சுற்றத்தவரின் பிள்ளைகளையும் தன் வீட்டில் தங்க வைத்து ஆண்டுக் கணக்கில் ஊட்டி வளர்த்தவர்.

அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?

தன் பிள்ளைகளையும் பெயரர்களையும் ஒப்பற்ற குணவான்களாக உருவாக்கிய மூதாட்டி; ஐயனார் கோயிலடி, மறவன்புலவுச் சிற்றூர் மக்கள் மதித்துப் போற்றும் ஒரு சீமாட்டி; குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயைந்து கொடுத்து, அரவணைத்து, அவர்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த ஒரு பெருமாட்டி; சிந்தனைச் செல்வங்களை வாரி வழங்கும் ஒரு திருவாட்டி.

அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?

நான்கடி உயரத்து ஞானப் பழம்; திருநீறு பூசிய திருவுரு; குழந்தையின் விழிகள்; மலர்ந்த முகம்; வெள்ளைச் சிரிப்பினாலேயே இவ்வுலகை வெல்லுவேன் என்று கண்களால் எழுதி, மவுனத்தால் கையொப்பம் இடுகிறாரே, அவர்தான் 'அம்மை' என நான் கூறிவந்த திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள்.


'யாழ்ப்பாணம்தான் இன்பக் கேணி; தமிழீழம்தான் என் ஒரே கனவு' என்றார் தங்கம்மா.

அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

3 comments:

Mugundan | முகுந்தன் said...

அண்ணா கண்ணன்,

என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

கடலூர் முகு

Anonymous said...

Thanks for the information. Please convey my sympathys to Mr. Sachchithananthan.

Thanga Mukunthan (TULF)

Unknown said...

என் ஆழ்ந்த இரங்கல்கள்.