!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புதிய இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 23, 2008

புதிய இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன்

தமிழ்த் திரையுலகம், மறுமலர்ச்சி கண்டு வரும் காலம் இது.

முன்பு ஒரு சில கோடி முதலீடு கொண்ட படங்களையே பிரமாண்ட படமாகக் கூறிவந்தது தமிழ்த் திரையுலகம். இன்றோ, 30 கோடி, 40 கோடி எனச் செலவழித்து ஒரு படத்தை எடுக்கத் தயாரிப்பாளர்களுக்குத் துணிவு பிறந்துள்ளது. அடுத்து வரவுள்ள கமலின் 'மர்மயோகி'யின் மொத்தச் செலவு, 150 கோடி என்கிறார்கள். கார்ப்பரேட் எனப்படும் பெருவணிக நிறுவனங்களும் வெளிநாட்டுப் பட நிறுவனங்களும் இங்கு ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றன. படங்களுக்கு அதிக பிரிண்ட் போடப்படுகிறது.

முன்பு திரையரங்குகளை இடித்து, வணிக வளாகங்களாகக் கட்டினார்கள். இன்றோ, மல்ட்டிபிளக்ஸ் எனப்படும் கொத்துக் கொத்தான திரையரங்குகள் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.

மிஷ்கின், அமீர், பாலா, வசந்தபாலன், ராதாமோகன், சிம்புதேவன்... எனப் புதிய இயக்குநர்கள் பலரும் உள்ளே வந்து கொடி நாட்டியிருக்கிறார்கள். இவர்களுள் மிஷ்கின், அமீர் போன்று சிலர் கதாநாயகர்களாகவும் மலர்ந்து வருகிறார்கள். ஷங்கர், லிங்குசாமி... போன்று இயக்குநர்கள் சிலர், புதிய தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இது, இந்தத் தொழிலில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக், கருணாஸ் ஆகியோரைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது, உருவக் கவர்ச்சியையும் தாண்டி, திறமையை மதிக்கும் நல்ல அணுகுமுறைக்கு அறிகுறி.

இவை போன்று ஜோஸ்வா ஸ்ரீதர், ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.... என இசையமைப்பாளர்கள் பலரும் நல்ல முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இப்படி நாலா திசைகளிலிருந்தும் புதிய திறமைகள் வந்து குவியும் இடமாகக் கோலிவுட் திகழுகிறது. அந்தப் புதிய ஆற்றல் மிகு கண்டுபிடிப்புகளில் ஒருவர் செந்தில் குமரன் என்கிற எஸ்.எஸ். குமரன். சசி இயக்கத்தில் 'பூ' என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படம், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. மண்ணிற்குள் விதையாய் புதைந்து கிடந்தாலும், நீரின்றி வெயிலில் காய்ந்து கிடந்தாலும், புயல்காற்றில் ஒடிந்தே கிடந்தாலும் பூப்பதையே இயல்பாய்க் கொண்டிருக்கிற இரு மனிதப் பூக்களின் கதை என்று கவித்துவமாய்ச் சொல்கிறார், இயக்குநர் சசி. (இவர், சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், டிஷ்யூம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.)

"பூ" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நோட்புக், ஃப்ளாஷ் ஆகிய மலையாள வெற்றிப் படங்களில் நடித்த முன்னணி நடிகை பார்வதி நடிக்கிறார்.

எஸ்.எஸ். குமரன் இசையமைப்பாளரானது எப்படி?

இசை மீது உள்ள காதலினால், வள்ளியூரிலிருந்து சென்னைக்கு வந்தவர் குமரன். திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பில் சேர்ந்தார். மெல்ல மெல்ல பலவற்றையும் கற்றுக்கொண்டார். படிப்பு முசிந்ததும் சென்னை துறைமுகத்தில் ஆடியோ விஷூவல் ஸ்பெஷலிஸ்ட் பணியில் சேர்ந்த இவர், அங்கு 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்தக் காலத்தில் துறைமுகம் சார்ந்த 300 விவரணப் படங்களைத் தானே ஒளிப்பதிவு செய்து, இயக்கி, இசையமைத்துள்ளார்.

இவரின் அண்ணன்கள் நாலு பேர்; ஒருவர், பிபிசியில் பணிபுரிகிறார். இன்னொருவர் ஸ்டார் தொலைக்காட்சியில் ஆசிரியர். பிபிசி அண்ணன், 'நாளை' என்ற படம் எடுத்தார். அவரிடம் இசையமைக்க வாய்ப்பு கேட்டுள்ளார் குமரன். ஆனால், 'டேய் விளையாடதடா. நிறைய முதலீடு பண்ணியிருக்கேன். போய்ப் பொழைப்பைப் பாரு' என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டுத் துடித்தார் குமரன்.

அண்ணனிடமாவது தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. கைவசம் இருந்த 11 லட்சம் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு, வீட்டில் தனி ஸ்டுடியோ அமைத்தார். உலகத்தில் கிடைக்கும் அனைத்து டோன்களையும் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அவர் மனைவி திகைத்துவிட்டார். 'என்னை நம்பு; சாதிப்பேன்' என்று தைரியம் சொன்னவர், ஓர் ஆண்டு இரவு பகலாக உழைத்தார். ஆயிரக்கணக்கான மெட்டுகள் போட்டார். ஆயினும் எப்படி, யாரிடம் வாய்ப்பு கேட்பது?

அப்போது தான் ஒருநாள், அந்தப் பொன்னான தருணம் வாய்த்தது. அவர் வீட்டுக்கு அருகில் சிவன் பூங்கா உள்ளது. அங்கு நடைபயிலும் போது ஏற்பட்ட சந்திப்புகளில் குமரனின் மனைவியும் இயக்குநர் சசியும் ஹலோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள் ஆனார்கள். சசியிடம் குமரனின் மெட்டுகள் நிறைந்த குறுந்தட்டைக் கொடுத்து, 'வாய்ப்பிருந்தால் உதவுங்க' என்று கேட்டிருக்கிறார் குமரனின் மனைவி.

சசி, குமரனைத் தன் அலுவலகத்துக்கு அழைத்தார். ஏற்கெனவே போட்ட மெட்டுகள் இருக்கட்டும்; நான் சொல்லும் சூழ்நிலைக்கு மெட்டு போடுங்க என்று இரண்டு சூழ்நிலைகள் சொன்னார். ஒரு மணி நேரத்தில் ரெண்டு மெட்டுகள் போட்டார் குமரன். அப்புறம் என்ன, குமரனுக்குக் கோடம்பாக்கத்தின் நெடுங்கதவு திறந்தது.

அண்மையில் இவரின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தப் படத்தில் இவர் இசை அமைத்துள்ள 6 பாடல்களும் அவ்வளவு அழகு. கச்சிதமாக, உயிர்த் துடிப்புடன், உணர்வு மிளிரும் வண்ணம் பாடல்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு பாடலிலும் மண் மணம் கமழ்கிறது. 'சூச்சூ மாரி' என்ற பாடலில் குழந்தைகளின் உல்லாச உலகம் அழகாகப் பதிவாகியுள்ளது. 'ஆவாரம்பூ' பாடலில் இயல்பான ஏக்கமும் துயரமும் பின்னிப் பிணைந்துள்ளன. இப்படியாகப் பாடல் ஒவ்வொன்றிலும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. தன் குரலிலேயே ஒரு பாடலைப் பாடியுள்ளார், இவர்.

குமரனின் பாடல்களைக் கேட்டுவிட்டு, பிரபலங்கள் பலரும் பாராட்டி உச்சி முகர்ந்து வருகிறார்கள். மேலும் பல புதிய படங்கள், அவரைத் தேடி வருகின்றன.

"நான் அதிகம் தூங்கமாட்டேன். மிகவும் சுறுசுறுப்பானவன். இது வரை ரெண்டாயிரம் மெட்டுகள் போட்டு வைத்திருக்கிறேன். பெரிய அளவில் சாதிக்க வேண்டும்" என்ற கனவு மிதக்கும் கண்களுடன் சொல்கிறார் குமரன்.

வாருங்கள் குமரன்! புதிய இசை மலரட்டும்; இந்த மண் குளிரும்படி, கேட்ட மனங்கள் துளிரும்படி, காலத்தை வென்று ஒளிரும்படி உங்கள் இசை அமையட்டும். திடமான நம்பிக்கையும் தன் துறை மீது தீராத காதலும் கொண்டவர்கள் வெல்வது திண்ணம்; அதற்கு குமரனே உதாரணம்.

நன்றி: தமிழ் சிஃபி விடுதலைத் திருநாள் சிறப்பிதழ்

No comments: