!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, April 11, 2005

கடற்கரையில் புதிய காற்று

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு, மெரினா கடற்கரையில் 2005 ஏப்ரல் 9ஆம் தேதி மாலை நடந்தது. அதே கடற்கரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடற்கரைக் கவியரங்கம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி சுமாருக்கு இது நடக்கும். வந்திருக்கும் கவிஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய வட்டமாகவோ, பெரிய வட்டமாகவோ அமர்ந்து கவிதை வாசிப்பார்கள். இதைப் பொன்னடியான், தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற அமைப்பின் மூலம் நடத்தி வருகிறார்.

சிலம்பொலி தமிழ்த்தரணி என்ற அமைப்பும் இத்தகைய நிகழ்ச்சியை மாதத்தின் ஒவ்வொரு பெளர்ணமி நாளன்றும் நடத்தியது. முழுநிலாக் கவியரங்கம் என்று பெயர். இவை தவிர இன்னும் பல அமைப்புகளும் பல தேதிகளில் பல சிலைகளுக்குப் பின் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தின; நடத்தி வருகின்றன.

இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, எளிது. அழைப்பிதழ், சுவரொட்டி, அரங்கம், ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, நாற்காலி, தேநீர், இனிப்பு / காரம் என எதுவும் தேவையில்லை. முதல் முறை நடத்திவிட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் வந்தால் போதும். அதே கூட்ட முடிவில் அடுத்த மாதம் என்று நடைபெறும் என்று தெரிவித்து விடுவார்கள். பெரும்பாலும் அதே நாள் (இரண்டாம் சனிக்கிழமை/ மூன்றாம் சனிக்கிழமை/ கடைசி ஞாயிறு...) நடக்கும்.
நிகழ்ச்சி எப்படி நடந்தாலும், எவ்வளவு பேர் வந்தாலும் அமைப்பினர் சிலர், அதுகுறித்து செய்தி இதழ்களில் ஒரு குட்டிச் செய்தி வருவதில் குறியாக இருப்பார்கள். இன்றைய நிகழ்ச்சிகளில் செய்தி வரவேண்டும் என்பது அவர்களின் துடிப்பாய் இருக்கும். ஏனெனில் நிகழ்ச்சிக்குப் பலர் வராவிட்டாலும் இன்றைய நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். எனவே ஒரு நல்ல அறிமுகம் இருக்கும்.

பெரும்பாலும் வந்திருப்பவர்களிலேயே யாரையாவது திடீர்த் தலைமை தாங்க அழைப்பார்கள். பல வகையான வேடிக்கைகள் அங்கு அரங்கேறுவது வாடிக்கை. அவை பற்றியெல்லாம் இப்பொழுது வேண்டாம்.

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு வருவோம். 'இகாரஸ்' பிரகாஷ் கணக்குப்படி 23 பேர் வந்திருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்தகைய கடற்கரைக் கூட்டத்திற்குச் சென்றேன். ஆர்.வெங்கடேஷ், பத்ரி சேஷாத்ரி, மாலன், 'இகாரஸ்' பிரகாஷ், 'அம்பலம்' சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, சுரேஷ் கண்ணன், 'சுவடு' ஷங்கர், 'ரஜினி' ராம்கி உள்ளிட்ட ஏற்கெனவே அறிமுகமான, முகம் தெரிந்த நண்பர்கள் பலரைக் கண்டேன்.

முகம் தெரியாவிட்டாலும் இணையம் வழியாக அறிந்த புதிய நண்பர்கள் பலரைக் கண்டேன். அமுதசுரபி மார்ச்சு '05 இதழில் பங்குச் சந்தை உள்ளும் புறமும் என்ற கட்டுரை எழுதிய தமிழ்சசியை நேரில் கண்டேன். அமுதசுரபி ஏப்ரல் இதழில் நாட்டின் மின்தேவைக்கு அணுவாற்றல் என்ற அருமையான கட்டுரையை எழுதிய எல்.வி.கிருஷ்ணனின் மகன் சத்யநாராயணன், வளமையான தமிழை வலியுறுத்தி வரும் இராம.கி. அய்யா, வித்தியாசமான பெயர் கொண்ட 'டோண்டு' ராகவன், 'சைவர் பிரம்மா' எஸ்.கே., அருணா சீனிவாசன், நாமக்கல் ராஜா, அருள்செல்வன், சந்தோஷ் குரு, வா.மணிகண்டன், 'உருப்படாதது' நாராயணன், சந்தையாக்க நிபுணர் மீனாக்ஸ் ஆகியோரை இங்குதான் முதன்முதலில் கண்டேன். அருள்செல்வனை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம்!

என்னைப் பொறுத்தவரை இது, மிகவும் பயனுள்ள சந்திப்பு. இதன் மூலம் நட்பு வளரும் வாய்ப்பு உள்ளது. அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டது, நல்ல முறை. ஆனால், ஒலிவாங்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

நான் கவனித்த, என் நினைவில் உள்ள சில உரையாடல்கள் பின்வருமாறு:

"1. தனிப்பட்ட பதிவுகளாகவே உள்ளன; சமூகப் பதிவுகளாக இல்லை. 2. பதிவுகளால் நேரம் வீணாகிறது. பயன் இல்லை." - மாலன்

"வலைப்பதிவுகளைப் பயனுள்ளதாக்க வேண்டும். பின்னூட்டத்தில் பாராட்டுவோர், கூகுள் ஆட்சென்ஸைச் சொடுக்கினால் அதன் மூலம் வலைப்பதிந்தவருக்குப் பண வருவாய் வர வாய்ப்பு உள்ளதா?" - அண்ணாகண்ணன்

"இல்லை. அப்படிச் சொடுக்கக் கூடாது. அதன் மூலம் பணத்தைப் பெருக்க முடியாது. வருவாய் கருதாமல் விக்கிபீடியா போன்ற ஒரு கலைக் களஞ்சியத்தில் சேர்க்கும் வகையில் சிறப்பானவற்றை, புதிய துறைகளைப் பற்றிப் பதியவேண்டும்." - பத்ரி

"பின்னூட்டங்களில் அடிப்படை நாகரிகம் இல்லை." - ஆர்.வெங்கடேஷ்.

"தமிழ்மணம் தளத்தால் காசிக்கு நிறைய செலவாகிறது. அதைப் பயன்படுத்தும் நாம் அந்தச் செலவில் பங்குகொள்ளவேண்டும்." - எஸ்.கே.

"எதிர்காலத்தில் வலைப்பதிவு இலவசமாகக் கிடைக்காது. வீடியோ பிளாக்ஸ் வருகிறது." - நாராயணன்.

"பெண்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. தோழியர் கூட்டு வலைப்பதிவிற்கு யாரேனும் உங்கள் பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளீர்களா?" - ராமச்சந்திரன் உஷா

"இதை மேல்கைண்டு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்"
:-$ - ரஜினி ராம்கி.

"1. அப்படிக் கொடுத்துவிட்டால் என்ன சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்கள்? 2. தொழில்நுட்பத்தைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள். உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசுங்கள்" - சுரேஷ்கண்ணன்

"பின்னூட்டத்தை ஒருவர் நீக்கியதால் தனி வலைப்பதிவு தொடங்கினேன்." - வா.மணிகண்டன்.

"இயல்பியல், மட்டுறுத்தர் ஆகிய சொற்களை அறிமுகம் செய்தவன் இங்குதான் உள்ளேன். முருக்க மரத்தை அறிவீர்களா? ஆங்கிலத்தில் flame of the forest என்பதே தமிழில் முருக்க மரம். மார்க்கெட்டிங் என்பதை மாறுகொள்ளுதல் எனலாம். மொழியில் பழைய சொற்கள் கழிவதும் புதிய சொற்கள் புகுவதும் இயற்கை." - இராம.கி.

"இராம.கி. சொல்வது சரி. contentதான் முக்கியம்" - அருணா சீனிவாசன்.

மேலும் பலரும் பலவிதக் கருத்துகளை முன்வைத்தார்கள். ஒலிவாங்கி இல்லாததால் அவற்றைச் சரியாகக் கவனிக்க இயலவில்லை. படிப்படியாக ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, இறுதியில் பத்துப் பன்னிரண்டு பேர்களே எஞ்சியிருந்தார்கள்.

'சுவடு' ஷங்கர், வந்தவர்களுக்கு வறுவலும் தண்ணீரும் அளித்துத் தெம்பளித்தார். பருமனானவர்களையே விரும்புவதாக வலைப்பதிந்திருந்த மீனாக்ஸ், "கடுமையாக உழைத்து, உடலைச் சற்றே மெலியவைத்துள்ளேன்" என்றார்.

எனினும் இந்த முயற்சி, ஒரு நல்ல தொடக்கம்.

No comments: