!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, April 13, 2005

கிழக்குச் சூரியன்

கோடானு கோடிஅணு குண்டுகளைச் சத்தமின்றிச்
சூடாகத் தூரத்தில் தூக்கிஒரே - போடாகப்
போட்டாற்போல் மீமீமீ போர்க்களமாய் வானம்!ஒளி
தோட்டாவாய்ப் பாய்கின்ற தோ!

யாரந்த வண்ணான்?ஏய்! யெளவனத்தில் முக்கிமுக்கித்
தூரக் கிழக்கைத் துவைக்கின்றான்! - பாரடாடோய்!
தண்கதிர்நீர் தான்தெளிக்க தக்க வெளுப்போடு
விண்கொடியில் காயும் விதம்.

ஆடுகளம் ஆடுபவர் ஆரோ? சுழற்பந்தைப்
போடுகையில் பாய்ந்தடிக்க பூமிமேல் - ஓடி
விரிகடலில் சிக்சரென வீழ்கிறது! ஆகா
பரிதி கிரிக்கெட்டு பந்து!

ஊற்றாகி ஓடையாய் ஊர்ந்த ஒளித்தண்ணீர்
ஆற்றுள்ளும் காட்டாறாய் ஆர்ப்பரித்து - காற்றோடு
காற்றாய் விரிந்து கடலாகி விண்மீனாம்
நாற்றுகளை மூழ்கடிக்கும் நன்று!

வானவில்லைத் தன்வீட்டு வாளியிலே கரைத்துக்
கானக் கிழக்காம் கருந்தரையில் - மோனமகள்
அள்ளித் தெளித்துப்பின் ஆதவனாம் கோலமதால்
அள்ளுகிறாள்! கிள்ளுகிறாள்! ஆ!

விண்கோழி இட்ட வெகுவெப்ப முட்டையிலே
கண்விழித்த குஞ்சே கதிரவனா? - கோயிலிலே
நேற்று சுடச்சுட நின்றுபெற்ற வெண்பொங்கல்
சோற்றுருண்டை தானோ சுடர்!

No comments: