!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 30, 2005

கவிதாயினி சுகந்தி சுப்ரமணியன்

ஒரு பெரிய அணை. நீர் நிரம்பிய நிலை. மேலும் நீர் வருகிறது. உடைப்பெடுக்கும் நிலை. இப்போது நீர் எப்படி வெளியேறும்? அணையின் பலவீனமான பகுதியின் வழியாகத்தான் முதலில் வெளியேறும். அந்த நீர் மேற்புறமாக வழியலாம்; சுவரில் வலுக்குன்றிய பகுதி உடையலாம்; மதகுகள் லேசாக இருந்தால் பிய்த்துக்கொண்டு போகலாம்; அல்லது வந்த வழியாகவே வெளியேறிவிடலாம்....

இப்போது மனித மனத்திற்கு வருவோம். பெரும் துயரத்தைச் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறலாம்; சினமுற்றுக் கத்தலாம்; மன அழுத்தத்தால் மெளனம் காக்கலாம்; புலம்பித் தள்ளலாம்; அதிரடியாய்ப் போராட்டத்தில் இறங்கலாம்.... இப்படி மனம் எந்த இடத்தில் பலவீனமாய் இருக்கிறதோ, அந்த இடத்தின் வழியே துயரம் வெளிப்பட்டுவிடும். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் துயரம் வெளிப்படுகிறது. துயரங்களின் கனம் தாங்காத சுகந்தி சுப்ரமணியன் (37), கவிதை எழுதுகிறார்.

மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

மாத விடாயின் போதும் கருவுற்ற போதும் பெண் படும் துயரங்கள், மற்றவர்களுக்காக அவள் வாழவேண்டியிருப்பது, அவள் எதிர்கொள்ளும் வசை, வன்முறை, உரிமை மறுப்பு, அடையாளம் இழப்பு, அவமானம், 'எதிர்வீட்டுக்காரியின் என் முகம் பற்றிய வர்ணனை', பாதுகாப்பின்மை, எதிலிருந்தும் தப்பிக்க முடியாத வாழ்க்கை, தனிமைத் துயர், குடும்பத்திற்குள் அகதியான நிலை, 'போதும் கலைத்துவிடு எனச் சொல்ல பக்கத்து வீட்டில்கூட ஆட்கள் இருக்கும்' சமூகம், உறவுகளின் உண்மை முகம், நிலையின்மை, நழுவிச் செல்லும் வாழ்க்கை.... எனச் சுகந்தியின் விரல், இந்தச் சிரிக்கும் உலகின் உண்மைத் தோற்றத்தை அம்பலப்படுத்துகிறது.

இத்தகைய உலகத்தை நெருக்கமாகக் காணும் ஒருவர், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என நாம் கணிக்க முடியும்.

'என்னைக் கவலைகள் தின்னத் தகாதென நின்னைச் சரணடைந்தேன்' என்றான் பாரதி. கவலை, ஒரு விபரீத நோய்க் கிருமி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதைதான். உள்ளே நுழையவிட்டால் பிறகு, நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடும். கவலையின் கரங்களில் நாம் ஒரு பொம்மையாகிவிடக் கூடாது. நம் சூத்திரக் கயிறு, நம்மிடமே இருக்கவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான செயலா என்ன?

'ஆகாயத்தில் கண்ணும் பூமியிலே மனசுமாய்' இருக்கும் சுகந்தி, மென்மையான-நுண்மையான மனத்தவர். அவரால் இந்தக் கவலைகளை வெல்ல முடியவில்லை.

எனக்குள் சிதைந்து போகிறேன்.
என்றாலும்
என்னை மீட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
என் எலும்புகளில் ரத்தத்தோடு
உணர்வுகளையும் நான் மீட்டாகவேண்டும்.
என் சுவாசத்தினூடே விஷம்
உறிஞ்சப்படுவதையும் நான்
நிறுத்தியாக வேண்டும்....
- என்ற கவிதையில் ஒரு மிதமிஞ்சிய அச்சமும் பதற்றமும் விரிகின்றன.

சிரித்திரு என்கிறாய்.
சரிதான்.
என்னால் முடியவில்லை.
எல்லோரும் அப்படித்தான் என்கிறாய்.
என்றாலும் முடியாதென்கிறேன்.
சும்மாகிட என்கிறாய்.
மாட்டேன் என்றேன்.
செத்துப்போ என்கிறாய்
என்னை உன் காலால் எட்டித் தள்ளியபடி.
எனக்கென நான் வாழ்க்கையை
மிச்சம் வைத்திருக்கிறேன்
வாழமுடியாமல்
-'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' எனப் பாடியதெல்லாம் என்னாயிற்று? நம் பெண்கள் பலருக்கு இந்த அனுபவம் என்ன புதிதா? இப்படி ஒரு நாள் கழியாவிட்டால் அதுதானே புதிது.

அவள் முகம் பார்க்கும்போதெல்லாம்
சுடுசொற்கள் வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்; என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது:
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்
-இப்போது சிக்கலின் அடித்தளம் என்னவென்று புரிகிறது. நான் என்ற உள்மன வேட்கை, ஒவ்வொரு மனத்திற்குள்ளும் சாம்பல் மூடிய தீயெனக் கனலுகிறது. இன்னொரு கவிதையில் பாருங்கள்.

சுகந்தி பெரும்பாலும் துயரத்தையும் எதிர்மறை உணர்வுகளையுமே எழுதுகிறார். ஆனால், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாய் அமைந்துள்ளது. வாசிக்கையில் அதே உணர்வில் நாம் இழுத்துச் செல்லப்படுவதை உணருகிறோம்.

இந்த மரம் என்னைத் திட்டியதில்லை
அல்லது எந்த மரமும்.
என் நன்றியைத் தெரிவிக்கிறேன்
மீண்டும்.
-இந்தக் கவிதை, வலியைப் பேசுகிறது. ஆனால், இதில் ஒரு புதுமையான வெளிப்பாடு இருப்பதைக் கவனித்தீர்களா?

சப்தங்களின் கூடாரங்களில்
நடனமாடிய சொற்களை
ஆணியடித்து அறைந்த பின்னும்
அலையடித்துக் கிடக்கும் மனசை
மணல் வெளியில் எறிந்த பின்னும்
எங்கோ இருக்கும் பறவை தேடும்
தன் இனத்தை வீட்டில் தொலைத்தபின்னும்
எதுவுமில்லை இனி தொலைக்க என்று
ஆகிப்போன பின்னும்
நான் சப்தங்களின்...
-மொத்தக் கவிதையுமே இவ்வளவுதான். இந்தக் கவிதையின் வடிவத்தில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கிய சொல்லிலேயே முடிவதோடு, ஒரு சுழலும் தன்மை இதில் இருக்கிறது. முடியும் இடத்தில் கவிதை, மீண்டும் மீண்டும் தொடங்கிவிடுகிறது.

மனம் ஒரு விசித்திரம். அது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கிறது. 'மதம் பிடித்த யானையாய்', 'அறுந்துவிடப்போகும் பட்டம்போல்', 'விடை தேடும் பறவையாய்', 'ரயிலும் தண்டவாளமும் இணையும் தருணத்தில் சிக்கித் தவிக்கும் உயிராய்', 'தத்திப் பறக்கும் சிறுகுருவிபோல்' எனப் பல வகைகளில் சுகந்தியின் கவிதை மனம், அவதாரம் எடுக்கிறது.

புதையுண்ட வாழ்க்கை(1988), மீண்டெழுதலின் ரகசியம்(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகளைச் சுகந்தி படைத்துள்ளார். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன்பே பெண்ணியத்தின் குரலை ஒலித்தவர். கவிஞர் மீரா இலக்கிய விருது பெற்றவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. திருப்பூரில் வசிக்கிறார். தற்சமயம் உடல்நலன் குன்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.

உண்மையில் எல்லோருக்கும்
பிடித்தமானதைப் பற்றிப் பேசத் தெரியவில்லைதான்.
ஆனாலும் நட்பு தோழமை போன்றவை
வெற்று வார்த்தைகளாகிப் போனபின்
எனக்கெதற்கு இந்த விசாரம்.
மனித நடமாட்டமில்லாத இடங்கள்
ஆபூர்வமானவை; அழகானவை கூட....
- மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும்போது இந்த இடத்திற்குத்தான் வந்துசேர வேண்டியிருக்கிறது.

இந்த உலகில் மனிதர்கள் குறைவு; வேறு உயிரினங்களே மிகுதி. ஆனால், உலகின் அமைதி, பெரும்பாலும் மனிதர்களால்தான் கெடுகிறது. மனிதன், பிற உயிரினங்களுக்கு மட்டுமில்லை; தன் சக மனிதனுக்குக்கூட மகிழ்ச்சியை அளிப்பதில்லை. சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் இந்த அழகான பூமிப் பந்தை, துயரக் கிண்ணமாக மாற்றி விடுகின்றன.

நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமா என அறிய, ஒரு சிறிய சோதனை. நீங்கள் இந்த உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெட்ட வெளிக்கு வாருங்கள். உங்கள் காலின் கீழ், தலைக்கு மேல், எட்டுத் திசைகள் என 360 பாகை அளவில் ஒரு சுற்று சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திலும் மனிதன் அல்லாத ஏதேனும் ஓர் உயிரைப் பார்க்கிறீர்களா? அதுவே சிறந்த இடம். நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமாக இல்லையென்றால் அதைச் சிறந்ததாக மாற்றுங்கள்.

ஒரு சின்னஞ்சிறு குருவியாலும் மலராலும் நாய்க்குட்டியாலும் நமக்கு மகிழ்ச்சியைத் தரமுடிகிறது! ஆறு அறிவு படைத்த மனிதர் பலரால் அது முடியவில்லை. இ·து ஒரு விநோதம்தான். ஆனாலும் நல்லவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதனால்தானே அவ்வப்போது மழை பெய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.

நமக்கென ஒரு கதவு திறக்கும். நம் வெக்கையைப் போக்க, ஒரு குளிர்த்தென்றல் நம்மைத் தழுவும். முட்செடியிலிருந்தும் ஒரு பூ மலரும்.

சொல்லத் தெரியாத பறவை
தன் சந்தோஷத்தை
பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்
- என்கிறார் சுகந்தி.

அந்தப் பறவை, உங்கள் தோளில் வந்து உட்காருவதாக!

No comments: