!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அ ஆ இ ஈ - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, February 01, 2009

அ ஆ இ ஈ - திரை விமர்சனம்

முன்பு 'ஏபிசிடி' என்ற பெயரில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தின் விமர்சனத்தின் போது நான் எழுதியதாவது:

"ஆனந்த்(ஏ), பாரதி(பி), சந்திரா(சி), திவ்யா டெய்சி(டி) இந்த நால்வரின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துகளை வைத்தே படத்திற்குத் தலைப்பு இட்டுள்ளார்கள். தமிழ்ப் பெயர்களின் முதல் எழுத்துகளை எடுத்து அ, ஆ, இ, ஈ (அமுதா, ஆனந்தி, இனியா, ஈசன் என்ற ஈஸ்வரன்) எனக் கூட பெயர் வைக்கலாமே."

இப்போது அது நடந்திருக்கிறது. பெயர்களில் மட்டுமே மாற்றம். அனிதா, ஆகாஷ், இளங்கோ, ஈஸ்வரி ஆகிய நால்வரைச் சுற்றியே கதை நடக்கிறது. எனவே தான் இதற்கு இப்படி ஒரு பெயர்.

ஒரு கிராமத்தில் சுப்பிரமணியம் (பிரபு) என்ற பெரிய நில உடைமையாளர் இருக்கிறார். அவரின் ஒரே மகள் அனிதா (மோனிகா). அவளுக்கு அந்த ஊரில் உள்ள இளங்கோ (அரவிந்த்) என்பவரைத் திருமணத்திற்காக நிச்சயம் செய்கிறார் சுப்பிரமணியம். இதற்கிடையே இளங்கோவைத் தனிமையில் சந்திக்கும் அனிதா, தனக்குச் சென்னையில் ஆகாஷ் (நவ்தீப்) என்ற காதலர் இருப்பதாகச் சொல்கிறார். இந்த ஆகாஷ், தொலைக்காட்சி நிலையத்தில் நேரடி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். உடனே இளங்கோ, சென்னைக்குச் சென்று ஆகாஷைக் கிராமத்துக்கு அழைத்து வருகிறார். வந்தவர், அனிதாவின் ஒன்றுவிட்ட தங்கை ஈஸ்வரி (சரண்யா மோகன்) மீது காதல் வசப்படுகிறார்.

பெரியோர்களின் முந்தைய திட்டப்படி அனிதா - இளங்கோ ஜோடிக்கும் ஆகாஷ் - ஈஸ்வரி ஜோடிக்கும் திருமணம் உறுதியாகி மணமேடை வரை வந்துவிடுகிறது. மாறிவிட்ட இந்த ஜோடிகள், தங்கள் விருப்பமான இணையுடன் சேருகிறார்களா என்பதே கதை.

விஜய் ஆண்டனி இசை, படத்திற்குப் பக்க பலமாய் அமைந்துள்ளது. 'நட்ட நடு ராத்திரியில்' என்ற பாடல், கேட்க இதமாய் இருக்கிறது. ஹனீபா, மனோரமா, கஞ்சா கருப்பு ஆகியோரின் நகைச்சுவை முயற்சிகளில் நிறைய செயற்கை இருக்கிறது.

படத்தின் காட்சி அமைப்பே, கொஞ்சம் நாடக பாணியில்தான் அமைந்துள்ளது. ஏவிஎம் தன் பழைய படங்களின் வாசனையை இன்னும் மறக்கவில்லை போலும். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும்படியான படமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால், விறுவிறுப்பைக் காணவில்லை. முன்கூட்டியே கணிக்கக்கூடிய விதத்தில் கதையும் காட்சிகளும் அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

பிரபு அன்பான அப்பாவாக, கம்பீரமாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சென்டிமென்டில் பிழிந்து எடுக்கிறார். அவர் மகளாக நடித்துள்ள மோனிகா, பரவாயில்லை. சரண்யா மோகன், எப்போதும் போல் விடலைத்தனமாக, கலகல சிரிப்போடு கலக்கி இருக்கிறார். அரவிந்த், பாடல் காட்சிகளில் இயல்பாகவும் அசல் காட்சிகளில் ஒன்றும் தெரியாத பேக்கு மாதிரியும் நடித்துள்ளார். நவ்தீப், மிரட்டலாக நடித்துள்ளார். துணிவான வெளிப்பாடு, அவருடையது.

ஹனீபா, கடைசியில் 'உங்க அந்தஸ்துக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்' எனப் பேசுவது சகிக்கவில்லை. பிறகு பிரபு நீண்ட வசனம் பேசுவதும் அதுக்குப் பிறகு ஹனீபா சம்மதிப்பதும்... அரத பழசப்பா இதெல்லாம்.

கஞ்சா கருப்பு, நீண்ட தாடியும் கண்ணாடியுமாக போலி சாமியார் வேடத்தில் செல்லுவது அசல் நாடகக் காட்சி. காதல் ஜோடி மாறிய நிலையில் எப்படி அவர்களை ஒன்று சேர்ப்பது என இயக்குநர் சபாபதி தெட்சிணாமூர்த்தி திணறியிருக்கிறார். அசட்டுத்தனமான பல காட்சிகளை நகைச்சுவை என்ற பெயரில் அனுமதிக்கத்தான் வேண்டுமா?

அ, ஆ, இ, ஈ... எனத் தமிழில் தலைப்பு வைத்ததற்காகப் பாராட்டலாம். ஆனால், கதையே சிறப்பாக இல்லாத போது, படம் சிறப்பாக இருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்ப்பது?

நன்றி: தமிழ் சிஃபி

No comments: