!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, August 14, 2005

இலக்கிய அமைப்புகள் என்ன செய்கின்றன?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கட்சியிலும் 'இலக்கிய அணி' உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் 'இலக்கிய மன்றம்' உண்டு. ஊருக்கு நான்கு இலக்கிய அமைப்புகள் உண்டு. பதிவு பெற்றவை-பெறாதவை, செயல்படுபவை-படாதவை என ஏராளமான அமைப்புகள் இலக்கியத்தின் பேரால் இருக்கின்றன.

இன்னும் தமிழகத்தில் எழுத்தினை முழுநேரத் தொழிலாக ஏற்க முடியாது. அவ்வாறு மேற்கொள்வோர் பிழைக்கத் தெரியாதவர் என்ற கருத்து நிலவுகிறது. பொதுச் சந்தையில் 1000 புத்தகங்கள் விற்பதற்கு நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன. இலக்கிய இதழ்களின் விற்பனை தேய்முகத்தில் இருக்கிறது. பெரும்பாலான இலக்கியவாதிகளுக்குச் சமுதாய மதிப்பு இல்லை. இலக்கியவாதிகளிடையே குழு மனப்பான்மையும் காழ்ப்புணர்வும் அதிகரித்திருக்கின்றன. உலக இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தமிழ் எழுத்தாளர்க்குக் குறைவு. எது தரமான படைப்பு? ரசிப்பு? வாசிப்பு? என்ற தெளிவு குறைவு. எழுதுவோர் சொல் வேறு செயல் வேறாய் இருக்கின்றனர். தமிழ் எழுத்தாளரிடையே ஒற்றுமை இல்லை. கடுமையான உழைப்பு இல்லை.

இலக்கியத் துறைக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 'இலக்கிய அமைப்புகள் என்ன செய்கின்றன?' என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐந்து அமைப்புகள் குறித்து இங்கே:

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்: 1950-ம் ஆண்டு கல்கி இதனைத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். கல்கி இறந்தபிறகு ம.பொ.சி., தேவன், A.G.வெங்கடாச்சாரி, வெ.சாமிநாத சர்மா, மீ.ப.சோமு, கி.வா.ஜ. ஆகியோர் தலைவர்களாய் இருந்தனர். ஆண்டுதோறும் மாநாடு நடைபெற்றது. இது 1970 வரை நீடித்தது. அதன்பிறகு 1977 வரை சங்கம் செயல்படவில்லை. 1978-லிருந்து இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இதன் கிளைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

பத்திரிகைகளில் 5 படைப்புகள் வெளிவந்தவரோ, நூல் வெளியிட்டவரோ, அல்லது நூலொன்றைக் கையெழுத்துப் படியில் கொண்டவரோ இதில் உறுப்பினராகச் சேரலாம். தற்போது ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 'E.V.K. சம்பத் மாளிகை' என்ற அரசுக் கட்டடத்தில் இதற்கு அலுவலகம் உள்ளது.

ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமை மாலையிலும் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்கிறது. நூல் அறிமுகம், சிறந்த சிறுகதையைப் பற்றிப் பேசுவது, கவிதை வாசிப்பது போன்ற உருப்படிகளை இக்கூட்டம் கொண்டுள்ளது. ஆறு ஆண்டுகளாகப் பாரதியார் பிறந்த நாளில் எட்டயபுரத்திற்கு எழுத்தாளர்களை அழைத்துச் சென்று ஊர்வலம் நடத்தி, கவிதை வாசித்து விழா கொண்டாடி 'பாரதி பணிச் செல்வர்' என்ற விருதினை வழங்கி வருகிறது.

கோவையில் சென்ற ஆண்டு 'சிறுகதைப் போட்டி' கல்லூரி மாணவரிடையே நடந்துள்ளது. தொடர்ந்து இதனை எல்லா மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நூலகம், 850 நூல்களை வாங்கவும் பாரத்திற்கு 1 ரூபாய் 60 பைசாவிலிருந்து 2 ரூபாய் 10 பைசாவாகத் தொகை வழங்கவும் வழி வகுத்தலில் இச்சங்கத்திற்கும் பங்குண்டு. இவ்வாண்டு சிறுகதைத் தொகுதிகளையும் கவிதைத் தொகுதிகளையும் வெளியிட எண்ணியுள்ளது. எழுத்தாளர்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகளோடு பேச்சு நடத்தி வருகிறது.

தலைவர்: கலைமாமணி விக்கிரமன்.
--------------------------------------------------------------------------------

உரத்த சிந்தனை: 1983-ம் ஆண்டு தொடங்கி, மாதம்தோறும் கூடி கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகளை நடத்தி வருகிறது. வாசகர்களைப் படைப்பாளர்களாக்குவதையும், திறமைசாலிகளைக் கண்டுபிடிப்பதையும் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கி.வி.விருது, பெருமைக்குரிய பெண்மணி விருது, சுடர் விருது, செயல்வீரர் விருது, சாதனையாளர் விருது, டாக்டர் விக்கிரமன் விருது, அறிவியல் மாமணி விருது, ஒளி விருது போன்ற பெயர்களில் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கிறது.

நல்லோர் வங்கி, வானொலி இளைஞர் மன்றம், உறுப்பினர் குடும்பக் குழாம் என்ற துணை அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. 'உரத்த சிந்தனை' என்ற பெயரிலான காலாண்டிதழை மூன்றாண்டுகள் நடத்தியது. கடற்கரையில் 'புத்தகச் சந்தை' என்ற திட்டத்தை உருவாக்கிக் 'கவிதை உறவு'டன் இணைந்து பிரபலங்களை அழைத்து நூல் வெளியிடச் செய்து அவர்களின் கைகளாலேயே நூல் விற்பனையை மேற்கொண்டது. தன் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் நூல்களைப் பரிசாக வழங்குகிறது. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கும் 'நேருக்கு நேர்', கவிதைப் போட்டியில் தேர்வு பெறும் 50 கவிதைகளைக் கண்காட்சிபோல் ஓர் அரங்கில் வைத்து வாசகர்களுக்கு வாக்குச் சீட்டு அளித்துச் சிறந்த கவிதையைத் தேர்வு செய்யும் 'கவிதைத் தேர்தல்' போன்றவற்றைச் செய்து வருகிறது. கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 'இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்தல்' என்ற முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தலைவர்: எஸ்.வி.ராஜசேகர்-செயலாளர்: உதயம்ராம்.
--------------------------------------------------------------------------------

கவிதை உறவு: 28 ஆண்டுகளாய் இயங்கி வருகிறது. பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்ற பிளவை நீக்கி ஒன்றுபடுத்த உருவாக்கப்பட்டது. 15 ஆண்டுகளாய்க் 'கவிதை உறவு' என்ற இதழை நடத்தி வருகிறது. 'விக்கிரமன் விருது' நர்மதா பதிப்பகத்துடன் இணைந்து 'கண்ணதாசன் விருது' ஆகியவற்றை வழங்குகிறது. 'இல்லந்தோறும் இலக்கிய நிகழ்ச்சி' என்பதன் மூலம் கவிஞர்களின் வீடுகளில் கூடி அவர்களின் குடும்ப முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுகிறது. 'கவிதை உறவுச் சுற்றுலா' என்பதன் மூலம் கன்னியாகுமரி, மதுரை, கூரம் போன்ற இடங்களுக்குச் சென்று வந்துள்ளது. 'கிராமம்தோறும் கவியரங்கம்' என்ற முறை மூலம் கிராமங்களில் கவியரங்கங்கள் நடத்தி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக 'கவிதை இரவு' எனும் பெயரில் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் கவியரங்கு நடத்துகிறது. உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க மருத்துவர் குழு ஒன்றினைக் கொண்டுள்ளது.

நாகர்கோவிலில் கிளையொன்றைக் கொண்டதோடு மேலும் சில மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளது. 'புத்தகக் கூப்பன்' திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளது. வாழ்த்து அட்டையோடு கூடிய கூப்பனைத் தேவையான தொகைக்குப் பெற்று விரும்புவோர்க்குப் பரிசளிக்கலாம். பெறுவோர் அந்த விலைக்கு நூல் பெறலாம். கூப்பனைப் பதிப்பகம் கவிதை உறவுக்கு அனுப்பித் தொகை பெறலாம் என்று திட்டமிட்டுள்ளது.

நிறுவனர்: கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்.
--------------------------------------------------------------------------------

தமிழ்க் கவிஞர் மன்றம்: 1962 ஜனவரி 26-ல் பாவேந்தரால் தொடங்கப்பட்டது. முதல் தலைவராகப் பாவேந்தர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவர்க்குப் பிறகு கு.மா.பா., கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன், சுரதா, கே.சி.எஸ்.அருணாசலம் ஆகியோர் தலைவர்களாய் இருந்துள்ளனர்.

முப்பது ஆண்டுகளாய் மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று கடற்கரை-திருவள்ளுவர் சிலை பின்புறம் 'கடற்கரைக் கவியரங்கம்' நடத்தி வருகிறது. சாதி, சமய, அரசியல் காழ்ப்புணர்வற்ற போக்கில் கவிதைகள் வாசிக்கப் பெறுகின்றன.

இருபத்தெட்டு ஆண்டுகளாய்த் 'திறனாய்வரங்கம்' என்ற பெயரில் மாதந்தோறும் முதல் ஞாயிறில் படிக்கப் பெற்ற கவிதைகளைத் திறனாய்வு செய்வதும் சிறுகதை, கவிதை வாசிப்பும் நிகழ்ந்து வருகின்றன. யாப்பிலக்கணமும் கற்றுத்தரப் பெறுகிறது.

'முல்லைச்சரம்' என்ற ஏடு 35 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 'அலைகள் ஆயிரம்' என்ற தலைப்பில் கடற்கரையில் படிக்கப்பெற்ற கவிதைகள் நூலாக வந்துள்ளன.

பூங்காக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், ஓடை, மலைக்கோட்டை, ஆற்றங்கரை, குளத்தங்கரைக் கவியரங்கங்கள் இதன் கிளைகள் சார்பாக நடந்து வருகின்றன.

பொதுச் செயலாளர்: கவிஞர் பொன்னடியான்.
--------------------------------------------------------------------------------

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்: 1977-ல் தொடங்கியது. உலகளாவிய தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிறமொழிக் கவிஞர்களின் மாநாடுகளில் கலந்துகொண்டு அவர்களைப் பற்றி அறிந்து தமிழ்க் கவிஞர்களைப் பற்றித் தெரிவித்தும் வருகிறது. உலகு தழுவி 4 மாநாடுகளை நடத்தி இருக்கிறது. அவற்றுள் இரண்டு, ஜெர்மனியிலும் தாய்லாந்திலும் நடந்துள்ளன.

முப்பத்திமூன்று ஆண்டுகளாகத் 'தமிழ்ப்பணி' என்ற மாத இதழை நடத்தி வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நடைப் பயணம் மேற்கொண்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலும் இதற்குக் கிளைகள் உண்டு. அமெரிக்காவின் பல நகரங்களிலும் கிளைகள் உண்டு. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன.

ஒரு போராட்ட இயக்கமாகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழ்வழிக் கல்வி அரசாணை செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நகல் எரிப்புப் போராட்டத்தில் தமிழகப் புலவர் குழுவுடன் இணைந்து இயங்குகிறது.

தமிழ்க் கவிதையின் தரம் தாழ்ந்திருக்கிறது என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒரு லட்சம் கவிதைகளை எழுதிப் பதிப்பித்ததாகவும் இயலாது என்ற குரல்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் நோபல் பரிசு பெறுவதே தனது நோக்கம் என்றும் இதன் நிறுவனர் தெரிவிக்கிறார்.

நிறுவனர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 11-6-2000)

No comments: