!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பொய் சொல்ல போறோம் - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, September 15, 2008

பொய் சொல்ல போறோம் - திரை விமர்சனம்

முள்ளை முள்ளால் எடுக்கும் ஒரு கதையை முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக வழங்கியதற்காக இயக்குநர் விஜயைப் பாராட்ட வேண்டும். நடுத்தர குடும்பம் ஒன்றின் மனை வாங்கி, வீடு கட்டும் முயற்சியில் ஏற்படும் சிக்கல்களை நயமுடன், நம்பும்படியாகப் படமாக்கி இருக்கிறார்கள். ஜெய்தீப் சாஹினியின் கோசலா கா கோசலா என்ற படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் இது. ஆயினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துகிறது.

சத்தியநாதன் (நெடுமுடி வேணு), ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருக்கு மகன்கள் இருவர்; மகள் ஒருவர். கணினிக் கல்வி கற்ற முதல் மகன் உப்பிலிநாதன் (கார்த்திக்), இரண்டாம் மகன் கல்லூரி மாணவன் விஸ்வநாதன் (ஓம்). பதின் பருவத்தில் மகள். சத்தியநாதனுக்குச் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு, மனைத் தரகர் (ஹனீபா) மூலம், சென்னை வேளச்சேரி அருகே ஒரு மனை வாங்குகிறார். அங்கு வீடு கட்டிக் குடியேறுவது அவர் திட்டம்.

வீட்டுக்குப் பூமி பூஜை போடச் செல்லும் போது, அந்த மனையில் பேபி என்ற நில முதலை (நாசர்), வளாகச் சுவர் எழுப்பி, அது தன் இடம் என்கிறார். அதற்கான போலிப் பத்திரங்களையும் அவர் வைத்திருக்கிறார். தான் அந்த இடத்திலிருந்து காலி செய்ய வேண்டுமானால் 15 லட்சம் தர வேண்டும் என்று கேட்கிறார். காவல் துறை, வழக்கறிஞர், மனித உரிமைகள் அமைப்பு... எனப் பல பிரிவையும் அணுகியும் அவர் சிக்கல் தீரவில்லை.

சட்டப்படி பேபியை மடக்க முடியாத நிலையில் பேபியின் முன்னாள் உதவியாளரும் அவரால் பாதிக்கப்பட்டவருமான ஆசிப் இக்பால் (பாஸ்கி), திருப்பதிக்கே லட்டு கொடுக்கும் யோசனையைச் சொல்கிறார். எப்படி பொய்ப் பத்திரத்தின் மூலம் நிலத்தை பேபி அபகரித்தாரோ அதே வழியில் ஒரு போலிப் பத்திரத்தின் மூலம் அவரையே ஏமாற்றிப் பணம் பெறுவது ஆசிப்பின் திட்டம்.

இதற்கு ஒரு நாடகக் குழு உதவுகிறது. உப்பிலிநாதனின் தோழியும் நாடக நடிகையுமான பியா, அவரின் அப்பா (படத்தில்) 36 விருதுகள் பெற்ற நடிகர் மெளலி, பாலாஜி ஆகியோர் எப்படி பொய்யான மனிதர், பொய்யான நிலம், பொய்யான பத்திரம் ஆகியவற்றைக் காட்டி, பேபியை ஏமாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படம், மேட்டுக்குடி பாத்திரங்களைக் கொண்ட நாடகம் போன்று ஒரு சாயலில் இருந்தாலும் குலுங்கிச் சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் இயல்பான நடிப்பும் காட்சிகளும் அரவிந்த் கிருஷ்ணாவின் துல்லியமான ஒளிப்பதிவும் ஆண்டனியின் சிறந்த படத் தொகுப்பும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. எம்.ஜி.சிறீகுமாரின் இசை பரவாயில்லை.

அதிகாலையில் பூங்காவில் கூட்டமாகக் கைகளை உயர்த்திச் சிரிப்புப் பயிற்சி எடுப்பது; வெற்று நிலத்தில் வீட்டின் அறைகள், மாடி... போன்றவை இருப்பது போல் விளக்குவது; பேபியை விரட்ட ரவுடிப் பட்டாளம் வருவது; பேபி புல்லறுக்க வரும் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுவது... எனப் படம் முழுக்க சிரிப்பு வெடிகள் நிறைந்திருக்கின்றன. இவையே படத்திற்குப் பெரும் வலிமை சேர்க்கின்றன.

நெடுமுடி வேணுவின் நடிப்பு, நன்று; ஆயினும் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த ராஜேஷின் குரல் தனியாகத் தெரிகிறது. நாசரின் நடிப்பு அருமை; ஆயினும் வெக்காளி அம்மனின் பக்தரான அவரின் வண்ண வண்ண உடைகளைப் பார்த்தால் முஸ்லிம் போல் தெரிகிறது. நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடித்துள்ள கார்த்திக், அதிகப் படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக நடித்தவர். இந்தப் படம், இவருக்குள் இருக்கும் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. அவர் தம்பியாக நடித்துள்ள ஓம், புதிய நடிகரைப் போல இல்லை. இவர்களின் தங்கையாக நடித்துள்ளவரும் கவர்கிறார். மெளலியின் உதவியாளராக நடித்துள்ள பாலாஜி, கலக்கியிருக்கிறார்.

படத்தின் நாயகி பியா, அம்சமாக இருக்கிறார். உயர் குடும்பத்துப் பெண்ணின் தோற்றம், அவருக்கு வாய்த்துள்ளது. காதல் உள்பட பல உணர்வுகளை இயல்பாக வழங்குகிறார். புதுமுகம் ஆனாலும் தமிழில் ஒரு வட்டம் வருவார். தயாரிப்பாளர்கள், இப்போதே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ள இயக்குநர் விஜய், திரை ஆளுமை மிக்கவராகத் தெரிகிறார். பல்வேறு திறமைகளைப் பொருத்தமாக ஒன்று சேர்ப்பதில் அவர் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய ரோனி ஸ்குருவாலாவும் பிரியதர்ஷனும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இயக்குநர் விஜய், தன் பெயரை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது. ஏற்கெனவே நடிகர் விஜய் இருக்கிறார். தலைவாசல் விஜய் உள்பட வேறு பல விஜய்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்குப் பெயர் வைப்பதில் என்ன பஞ்சம்? நல்ல புதிய பெயராக வைத்துக்கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லது. நாளைக்கே நடிகர் விஜய் படத்தை இவர் இயக்கும் தருணத்தில் பெரிய குழப்பம் ஏற்படலாம் இல்லையா?

இந்தப் படத்திற்குப் பிறகு நாயகி பியா, தன் பெயரைப் பிரீத்தி என மாற்றிக்கொண்டுள்ளார். இன்னும்கூட நல்ல பெயராக மாற்றிக்கொண்டிருக்கலாம் என்றாலும் பியாவுக்குப் பிரீத்தி பரவாயில்லை.

பொய் சொல்ல போறோம் என்று தமிழில் தலைப்பு வைத்தது நன்று. ஆயினும் 'ப்' என்ற ஒற்று இல்லாமல் எழுதியது தவறு. அடுத்த படங்களிலாவது இவற்றிலும் கவனம் செலுத்தலாம்.

எனினும் அண்மையில் வந்த சிறந்த நகைச்சுவைப் படமாக இதையே சுட்டுவேன்.

நன்றி: தமிழ் சிஃபி

4 comments:

A Blog for Edutainment said...

இந்தப் படத்திற்கு எக்கச்சக்கமாக தொலைக்காட்சி விளம்பரங்கள் வருகின்றன. அப்படி என்ன ஸ்பெசல்

narsim said...

ஹிந்தியில் பார்க்கும்பொழுதே இதை தமிழில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

தமிழில் இன்னும் பார்க்கவில்லை.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

நர்சிம்

முரளிகண்ணன் said...

பார்க்க வேண்டியதுதான்

Anonymous said...

பளிச் விமர்சனம் ! நடுநிலையோடு இருப்பதாய் படுகிறது. படம் இன்னும் பார்க்கவில்லை ;)