!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 23, 2009

தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா

தோத்தாத்திரி தெய்வநாயகம் திருமலை என்பதன் சுருக்கமே, தோ.தெ.திருமலை (1921-1993); இவரை டி.டி.திருமலை என்றும் அழைப்பர். இவர், காந்தியத் தொண்டர். 1942இல் கல்லூரியில் படித்தபோது, காந்தியின் அழைப்பை ஏற்று, கல்லூரிப் படிப்பைத் துறந்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் துணைத் தலைவராகச் சிறிது காலம் இருந்தார். பின்னர், மதுரையில் 1969இல் காந்திய தத்துவ பிரசாரகர் ஆக நியமிக்கப்பெற்றார். அப்போது காந்தியைப் பற்றிக் கற்பிக்கும் நோக்குடன், 'காந்தியின் வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பிலான பாடங்களுடன் தொலைதூரக் கல்வி மையத்தைத் தொடங்கினார். டி.கே.சி., அ.சீ.ரா., ஜஸ்டிஸ் மகராஜன் உடன் தோ.தெ.திருமலை நெருங்கிப் பழகியவர்; காந்தி கல்வி நிலையப் பணிகளுடன் கலை - இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர், தம் 72ஆம் வயதில் மறைந்தார்.

இவர் நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெறுகின்றன.

தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தலைமை வகிக்கிறார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்குகிறார்.

இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன், சென்னை ஆன்லைன் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் அண்ணாகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

விழா அழைப்பிதழ்

Gandhi,T.D.Tirumalai

பரிசு பெறும் மாணவர்களும் பள்ளிகளும்

Gandhi,T.D.Tirumalai

அனைவரும் வருக.

No comments: