!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 10, 2009

யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்

(அகவழி 4)


சென்னையில் உள்ள டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்தில் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். மதிய உணவு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கட்டடத்தைப் பார்க்கையில் எனக்கு இந்த எண்ணம் எழுந்தது.

கிட்டத்தட்ட 14 மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தினைச் சுற்றிக் கண்ணாடி ஜன்னல்களை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ஜன்னல்களைத் திறக்காமலே வைத்திருக்கும். மேலும் உள்பக்கமாக ஒரு திரையையும் வைத்திருக்கும். எப்போதாவது மழை நின்றுவிட்டதா எனப் பார்க்க மட்டுமே அந்தத் திரையை விலக்குவார்கள். மற்றபடி இவை மூடியே இருக்கும்.

இப்படி கண்ணாடி ஜன்னல்களை வைத்திருப்பதற்கு, அவற்றைச் சூரிய ஒளித் தகடுகளாய் வைக்கலாம். அவற்றைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அப்போது இவை அழகுக்கும் உதவும்; அதே நேரம், பயனும் மிகும். சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்துவது, ஒரு முறை ஆகும் செலவினம். ஆனால், அவற்றிலிருந்து தினமும் மின்சாரம் கிடைக்கும்.


இப்படி சூரிய ஒளித் தகடுகளைக் கொண்டு மூடிவிட்டால், தேவைப்படும்போது திறக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை வேண்டாம். தேவைப்பட்டால் ஜன்னலைத் திறப்பதுபோல் இவற்றையும் திறக்க வழி செய்யலாம். நமக்கு ஏற்றாற்போல் இவற்றை வடிவமைத்துக்கொள்ளலாம். ஒரு கட்டடத்தின் ஒரு பக்கத்தில் ஆயிரம் கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதாகக் கொள்வோம். அதில் 10 கண்ணாடிகளுக்கு ஒரு கண்ணாடியை வழக்கமான கண்ணாடியாக வைக்கலாம்.

அல்லது, இன்னொரு வழியும் உண்டு. ஒரு கண்ணாடி ஒரு அடி உயரமும் அகலமும் கொண்டு இருப்பதாகக் கொள்வோம். இதன் நான்கு புறமும் மூன்று அங்குலம் இடம் விடலாம். இந்த மூன்று அங்குலம் மட்டும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட சாதாரணக் கண்ணாடி; மீதப் பகுதிகள், சூரிய ஒளித் தகடுகள். இவ்வாறு செய்தால், இயற்கையான ஒளியில் அலுவலகத்தை இயக்க நினைக்கிறவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. இந்த மூன்று அங்குலத்திலிருந்து தாராளமாக வெளிச்சம் பரவும். இப்படியான நிறுவனங்கள் மிகவும் குறைவு என்ற போதிலும் அவற்றுக்கும் நாம் இடம் அளிக்கலாம்.

டைடல் பூங்கா மட்டுமின்றி, இத்தகைய கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டுள்ள பெரிய கட்டடங்கள் அனைத்தும் இந்த உத்தியைப் பின்பற்றலாம்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் விழும் சுட்டெரிக்கும் வெயிலை இயற்கையின் வரமாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும்.

==============================
படத்திற்கு நன்றி:

http://www.sunandclimate.com

http://travel.webshots.com

1 comment:

வடுவூர் குமார் said...

இதற்காகும் முன் பண செலவு “இன்றுவரை” அதிகமாவே உள்ளது.சூரிய ஒளி 11 மணியில் இருந்து 2 மணி வரை உள்ள வெளிச்சமே அதிக மின்சாரத்தை கொடுக்கக்கூடியது என்று எப்போதோ படித்த ஞாபகம்.சரியான விபரம் கைவசம் இப்போது இல்லை.