!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, February 10, 2005

படித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள்

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

ஒரு புத்தகத்துள் அதை எழுதியவர் உயிர் வாழ்கிறார். ஒர் நூலகத்திலோ ஓர் உலகமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தேசிய நூலகங்களுள் ஒன்றான கன்னிமாரா, நூற்றாண்டு கண்ட நூலகம். ஐ.நா.சபை, யுனெஸ்கோ நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தகவல் மையமாகவும் இது உள்ளது. கன்னிமாரா பொது நூலகத்துக்குள் நாம் நுழைந்தபோது ஓர் உன்னத உலகத்துக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது.

1890-ஆம் ஆண்டு இதற்கு அடிக்கல் நாட்டியவர், சென்னையின் அன்றைய ஆளுநர் கன்னிமாரா பிரபு. ஆகவே அவர் பெயரிலேயே இந்த நூலகம் அழைக்கப்படுகிறது. முன்னதாக 1860-ல் சென்னை அருங்காட்சியகத்தின் பகுதி நேரக் கண்காணிப்பாளரான கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் அரசை அணுகி, அருங்காட்சியக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டினார். அந்நூலகம் 1862 முதல் செயலாற்றத் தொடங்கிற்று. பின்னர் அதில் நூல்கள் பெருகப் பெருக அதற்கு ஒரு புதிய கட்டடம் தேவையாயிற்று. அக்கட்டடத்திற்குத்தான் கன்னிமாரா பிரபு அடிக்கல் நாட்டினார். எனவே, கன்னிமாரா நூலகத்தின் நிறுவனர் ளன்ற பெருமை காப்டன் ஜெஸ்ஸி மிட்செலுக்குத்தான். பதினாறாம் நூற்றாண்டு நூல்கள் முதல் இன்றைக்கு வெளிவந்த நூல்கள் வரை சேமிக்கப்பெறும் இந்த நூலகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்து 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

குறிப்புதவி நூல்களாக ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூல்கம் நூல்களை இரவல் தருவதோடு மாதம் 100 ரூபாய் கட்டினால் குறைந்தபட்சம் 2 நூல்களை வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறது. பெரும்பாலான நூல்கள் பாடவாரியாக, ஆசிரியர்வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளும் 60 கல்வி ஒளிநாடாக்களும் உள்ளன. கணிப்பொறி மயமாகி வரும் இந்நூலகத்துள் ஒரு லட்சம் நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பான குறுந்தகடுகள் 140 உள்ளன. நகலெடுக்கும் வசதி உள்ளது.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ ·பிலிமில் முக்கிய நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

தேசிய விடுமுறை நாள்கள் மூன்றையும் மாநில அரசின் ஆறு விடுமுறை நாள்களையும் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாய் ஆயிரத்து இருநூறு பேர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை, 2000 வரை போகிறது.
பயன்பாட்டினைப் பொறுத்து நூல்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ - மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தூசு தட்டிச் சுத்தம் செய்யப்படுகின்றன. மிகப் பழைய நூல்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஷிபான்சில்க் என்ற துணி ஒட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

பொது நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பெறுவதோடு தனக்கென்று நூல் தேர்வுக் குழு ஒன்றையும் இந்த நூலகம் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் பாட நூல்கள், வெளிநாட்டு நூல்கள் போன்றவை வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் வாங்கப்பட்டன.

கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதற்குத் தலைவர் உள்ளார். செயற்குழு உள்ளது. ஆனால் இதுவரை கூட்டங்கள் ஏதும் கூட்டப்பெறவில்லை. இந்த நூலகத்திற்கு 68 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்கள் உள்ளனர். 36 ஆண்டுகளாய் இந்த நூலகத்தில் பணியாற்றி வரும் நூலகர் ந.கி. நடராஜனைச் சந்தித்து வாசகர்கனளப் பற்றிக் கேட்டோம்.

''பொதுவாக வாசகர்கள் நல்ல செயல்வேகத்தோடு இருக்கிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிப்பொறியியல் போன்ற அறிவியல் நூல்களை அதிகம் பேர் வாசிக்கின்றனர். இதற்கடுத்து இலக்கியம் வருகின்றது. அதன் பின் வரலாறு, சமயம் போன்றவை வருகின்றன.

ஆனால், பல விநோத வாசகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். சிலர் தாள்களைக் கிழித்து எடுத்துச் சென்றுவிடுகின்றனர். சிலர் திருடி எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு மாதங்கள் நாங்கள் தேடினோம். கிடைக்கவில்லை. பிறகு அவர்களே ஒரு நாள் கொண்டு வந்து எடுத்த இடத்திலேயே வைத்துள்ளனர். கலைந்திருக்கும் புத்தகங்களை அடுக்க உதவுபவர்கள் உண்டு. உபத்திரவம் செய்வோரும் உண்டு. சில வாசகர்கள் தூங்குவதும் உண்டு. நாம் எழுப்பினால், 'சிந்தனை செய்கிறேன் தொந்தரவு செய்யாதீர்கள்' என்பார்கள். சிலர் அழகான புத்தகங்களைப் பேனாக் கத்தியினால் கன்னாபின்னாவென்று கிழித்து வைப்பார்கள். (அப்படி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.) அப்படிப்பட்ட மன நோயாளிகளும் உள்ளனர். கணிப்பொறியில் ஒரு லட்சம் புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்தோம். கணினி விஷயம் தெரிந்தவர்கள் வந்து அவற்றை அழித்துவிட்டு ஏதாவது பேர், ஊர், கதைகளையெல்லாம் எழுதி வைத்திருந்தனர். நல்லவேளையாக, பிரதானக் கணிப்பொறியில் அந்தத் தகவல்கள் இருந்ததால் தப்பித்தோம். இல்லையேல் பெரும் உழைப்பு வீணாகியிருக்கும்.
ஜ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வெழுதுவோரில் சிலர் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துப் படிப்பதில்லை. பத்துப் பன்னிரண்டு நூல்களை எடுத்து வைத்துக்கொள்வார்கள். அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்துக்குப் புறம்பான நூல்களும் இருக்கும். கேட்டால், 'நண்பர் வரப்போகிறார். அவருக்காக எடுத்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.

சிலர் தனக்குத் தேவையான நல்ல புத்தகத்தைக் கண்டால் அதை யாரும் எடுக்காமல் இருக்க வேறு நூல் வரிசைகளில் செருகிவைத்துவிட்டுச் செல்வர், பின்னர் நாங்கள் தூய்மைப் பணி செய்யும் போதுதான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும். 'எனக்கு இந்தப் புத்தகம் தேவை. எடுத்து வையுங்கள்' என்றால், நாங்களே எடுத்து வைப்போம். சிலர் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை அந்தப் புத்தகத்திலேயே கிறுக்கி வைப்பார்கள்.'

சிலர் 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' போன்றவற்றில் வெளிவரும் விளம்பரங்களையும் அறிவிப்புகளையும் கிழித்து எடுத்துச் சென்றுவிடுவர். இதனால் எல்லோருக்கும் இந்தப் பத்திரிகை பத்திரமாகக் கிடைக்க அவற்றைப் பூட்டி வைக்க வேண்டியிருக்கிறது. இது தெரியாத சிலர், 'இதைப் போய்ப் பூட்டிவைத்திருக்கிறீர்களே' என்று வருத்தப்படுவார்கள்.

திருப்பித் தரும் தேதியை இரவல் நூல்களில் பொறிப்போம். ஒருவர் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பித் தராமல் ஓராண்டு கழித்து வந்து அவரே ஒரு தேதியைப் புத்தகத்தில் பொறித்துக் கொண்டுவந்து தந்தார். அந்தத் தேதியில் தேடினால் அவரது நூலக அட்டை கிடைக்கவில்லை. பிறகுதான் அவரது வேலை அது என்று தெரிந்தது.
எங்களிடம் ஊழியர்கள் குறைவு. தரைத் தளத்தோடு சேர்த்து நான்கு தளங்களிலும் நூல்கள் உண்டு. எல்லாப் பிரிவையும் எப்போதும் கண்காணிக்க இயலாது. ஆகவே வாசகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றினால் எங்களுக்கு மிக உதவியாய் இருக்கும்'' என்கிறார் நடராஜன்.

இவ்வளவு பெரிய நூலகத்துக்கு ஒரே ஒரு தொலைபேசிதான் உள்ளது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சுமார் 1200 வாசகர்கள் தினம்தோறும் வரும் இந்த நூலகத்தில் வாசகர்கள் பலர் நீண்ட நேரம் அமர்ந்து படிப்பதைப் பார்க்க முடிந்தது. களைப்படையும் வாசகர்கள், தேநீர் அருந்தக் கூட வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓர் உணவகம் இங்கு அமைத்தால் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. மூளை சற்றே களைப்படையும்போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படவேண்டுமல்லவா?



தினமணி கதிர், 23.4.2000

No comments: