!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/03 - 2005/04 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 29, 2005

சாலை

இதுதான் சாலை கண்மணியே! - நீ
எங்கே செல்ல விரும்புகிறாய்?
இதன்மேல் எத்தனை வாகனங்கள்! - நீ
எதிலே செல்ல விரும்புகிறாய்?
முதலில் செல்வது முக்கியமா?- நீ
முழுதாய்ச் செல்வது முக்கியமா?
மதித்து நேர்வழி நடப்பாயா? - குறுக்கு
வழியைத் தேர்ந்து எடுப்பாயா?

கரடு முரடாய் இருக்கலாம்- கூர்
கல்லும் முள்ளும் குத்தலாம்.
நெரிசல் மிகவும் இருக்கலாம்-கொடு
நீசர் உடைமை பறிக்கலாம்.
இருளில் எதுவும் நடக்கலாம்!- நீ
எதற்கும் தயாரா? நடக்கலாம்.
வருக வருக கண்மணியே - உனை
வாழ்த்தித் தோரணம் கட்டுகிறேன்.

எல்லாம் உனது காலடியில்
யாவும் உனது கைக்குள்ளே
எல்லை இல்லாப் பெரும்பயணம்
ஏகம் அநேகம் அனுபவங்கள்
வல்லமை உண்டேல் வழியுண்டு
வாழ்வும் சாலையும் ஒன்றாகும்
செல்வமே சீரே கண்மணியே! - உன்
சிறிய பாதம் எடுத்து வை.

Tuesday, March 15, 2005

நானும் வலம்புரி ஜானும்


1997 டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன். 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற என் இரண்டாவது கவிதை நூலுக்கு அணிந்துரை பெறவேண்டி வலம்புரி ஜானை அணுகினேன். போய்த் தொகுப்பைக் கொடுத்தேன். நான்கைந்து நாள் கழித்து வரச் சொன்னார். அதன்படி போனேன். அணிந்துரை எழுதி வைத்திருந்தார். அதை என்னிடம் கொடுக்கும் முன் என் எதிரில் ஒருமுறை வாசித்துக் காட்டினார்.


அவருடைய அணிந்துரையில் ஒரு பகுதி:
'கவிஞர் அண்ணாகண்ணன் உயிரின் மூலம் ஒன்று என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். அவர் வயதிற்கு இந்த உணர்தல் வாழ்த்திற்கு அல்ல; வணக்கத்திற்கே உரியது. அவ்வளவு எளிதாக அழித்துவிட இயலாத அவரின் பெயரை அவரின் கவிதைகள், கல்வெட்டில் கண்விழிக்க வைக்கின்றன.வெண்பாவிற்குப் 'பழைய ஏற்பாடு' என்று பொட்டு வைப்பதும் 'கவிதைக்குமாரன்' என்ற நெகிழவைக்கிற நெசவும் 'ஒட்டுமாமரத்தின் எட்டாம் கிளை' என்கிற பிரபஞ்சப் பிழிவும் என்னை வியக்க வைத்தன.
புதிய சிந்தனைகள், சிந்திக்கிற புதிய விதம், எல்லையற்ற சந்தர்ப்ப வானம், கவிஞரின் வியர்வை சிந்துகிற உழைப்பு இவற்றைப் பார்க்கிற போது கவிஞர் அண்ணாகண்ணன் தமிழ்க் கவிதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துகிற ஒருவராக வருவாரோ என்கிற எண்ணமே மேலோங்குகிறது.
உலக இலக்கியத்திற்கு அழுத்தமான, அர்த்தமுள்ள இந்தப் பங்களிப்பால் நெகிழ்ந்து நிற்கிறேன்'
என்றெல்லாம் எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். நூலில் அச்சேற்றும் போது 'கவிஞானி வலம்புரி ஜான்' என்று வெளியிடச் சொன்னார். 'இதற்கு நிச்சயம் நூலக ஆணை கிடைத்துவிடும்' எனச் சொன்னார்.


'இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'சுதந்திரமான இதழாளராக ஏழெட்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்' என்றேன். 'என்னிடம் வந்துவிடுகிறீர்களா?' என்று கேட்டார். 'என்ன செய்யவேண்டும்?' எனக் கேட்டேன்.'வாருங்கள், சொல்கிறேன்' என்றார். சென்றேன். அவர், 'முதலில் ஒரு கடிதத்தைச் சொல்கிறேன்; எழுதுங்கள்' என்றார். எழுதிக் கொடுத்தேன். 'கையெழுத்து அழகாக இருக்கிறது' என்று பாராட்டினார். முக்கிய வேலை அதுதான் என்று புரிந்தது.


அதன் பிறகு நாள்தோறும் சூளைமேட்டில் இருந்த அவரின் இல்லத்திற்குச் சென்றேன். அவர், சில இதழ்களில் தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கெல்லாம் அவர் சொல்லச் சொல்ல எழுதித் தரவேண்டும். அவர் சொல்லும் வேகத்திற்கு எழுதவேண்டும். ஒரு தலைப்பை அல்லது கருவை எடுத்துவிட்டால் போதும். நூல் பிடித்தமாதிரி சரசரவெனச் சொல்லுவார். அது, கதையோ, கட்டுரையோ, வாழ்த்துச் செய்தியோ, பரிந்துரைக் கடிதமோ..எதுவாக இருந்தாலும் அதில் ஒரு நீரோட்டத்தின் போக்கு இருக்கும்.


சில நாள்கள் காரில் செல்லும்போதே சொல்வார். கார் ஆடும் ஆட்டத்தில் என் 'அ' எழுதவருவேன். அதற்குள் அ முதல் அக்கன்னா வரை பேனா தானாகவே எழுதிக்கொள்ளும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, அவர் சொல்லச் சொல்லக் கிறுக்கெழுத்தில் எழுதிக்கொள்வேன். பிறகு அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுப்பேன். ஜானுக்கு மிகவும் மகிழ்ச்சி. சில நேரங்களில் எழுதவேண்டும் என்று சொல்லமாட்டார். பக்கத்தில் இருப்பவரோடு பேசிக்கொண்டிருப்பார். நான் அந்த உரையாடலைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.


1998இன் முதல் மூன்று மாதங்களுக்குள் ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை சிலருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். நான் உடனிருந்து கவனித்து மனத்திற்குள் குறித்துக்கொண்டேன். அடுத்த நாள், அது தொடர்பாக அவருக்கு ஏதோ ஒரு விவரம் வேண்டியிருந்தது. அதைக் குறித்துப் பலமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். என்னிடம் சாதாரணமாக அதைப் பற்றிச் சிந்திப்பதைச் சொன்னார். நான் அந்தக் குறிப்பிட்ட உரையாடலை, ஒரு சொல் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னேன். அவர் வியந்துபோய் என் கை குலுக்கினார். 'இன்னும் அஞ்சு வருசத்துல நீங்க பெரியாளா ஆயிடுவீங்க' என உடனே சொன்னார்.


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் நான் அமுதசுரபியின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றேன். இது ஏதோ நான் பெரிய ஆள் ஆகிவிட்டதற்கான சான்று கிடையாது. இது தொடர்பாக வேறொரு நிகழ்வைச் சொல்லவேண்டும்.


1999ஆம் ஆண்டு என்று நினைவு. என் நண்பரின் உறவுப்பெண், கனடாவிலிருந்து சென்னைக்கு ஒருமுறை வந்தார். என் கவிதை நூலைப் படித்த அவர், என்னைப் பாராட்டி விட்டு, 'எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதீங்க' என்று சிரித்தபடி சொன்னார்.


நான் அவரிடம் சிரிக்காமல் சொன்னேன்: 'நான் இப்பவும் பெரிய ஆள்தான். நான் எப்பொழுதோ பெரிய ஆள் ஆகிவிட்டேன். நான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்வதற்கு வேண்டுமானால் காலம் பிடிக்கலாம்'. உடனே அந்தப் பெண்மணி, 'நீங்கள் பெரிய ஆள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளும் போது எங்களை மறந்துவிடாதீர்கள்' என்று மீண்டும் சிரித்தபடி சொன்னார்.


இதை எதற்குச் சொன்னேன் என்றால் வலம்புரி ஜானுக்கு, நான் பெரிய ஆள் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அவருடைய நம்பிக்கையை நான் தொடர்ந்து அதிகப்படுத்தி வந்தேன்.


இதழ்களுக்குக் கிறுக்கெழுத்தில் எழுதி அனுப்பி, அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என அங்கிருந்து தொலைபேசி அழைப்பு வருவது நான் வந்ததும் நின்றது.


அவருக்கு வரும் கடிதங்களுக்கு என்னைப் பதில் எழுதச் சொன்னார். முக்கிய கடிதங்களுக்கு மட்டும் என்ன பதில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்வேன். மற்றபடி பொதுவான கடிதங்களுக்கு நானே பதில் எழுதிவிடுவேன். அவர் கையொப்பம் இட்டு அனுப்பிவிடுவார்.


அதன்பிறகு அவர் படிக்கவேண்டிய புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகும் முன் அந்த நூலைக் குறித்து என்னிடம் கேட்டுக்கொள்வார். நான் முக்கியமான சில இடங்களை அடையாளமிட்டுக் கொடுப்பேன். அவரும் காரில் போகும்போதே புத்தகத்தை ஒருமுறை புரட்டிவிடுவார்.


எந்த நிகழ்ச்சியானாலும் வலம்புரி ஜான் மேடையேறிவிட்டால் களைகட்டிவிடும். அடுக்குத் தொடர்களும் எதுகை மோனைகளும் அவர் பேச்சில் கொஞ்சி விளையாடும். திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்களைப் போல் வெற்று எதுகை மோனைகளாய் இருக்காது. ஆழ்ந்த பொருளுடன் அவர் அவற்றைக் கையாளுவார். எழுத்திலும் இப்படியே. 'நூலகங்களும் நூலாம்படைகளும்' என்பது அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு.


ஜான் தொடாத துறையே இல்லை எனலாம். அரசியல், இலக்கியம் தவிர, சோதிடம், வாஸ்து, அதிருஷ்டக் கற்கள்... என எதைப் பற்றியும் பேசக் கூடியவர். சோதிடத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. வடபழனியில் அவர் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. தலைப்பு: 'இந்த ஆண்டு குரு பெயர்ச்சி நல்லதா? தீயதா?'


சமையல் நிகழ்ச்சியிலும்கூட அவர் வருவார். பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஒட்டலின் சமையற்காரர், ஒரு கேக் செய்து காண்பித்தார். அதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு இவர் சென்றார். 'அனைவரையும் மீண்டும் மீண்டும் கேக்க வைப்பதால் இதற்குக் கேக் எனப் பெயர் வந்தது' என்பதுபோல் பேசினார்.


நான் இருந்தபோது அவர், தமிழ் மாநில காங்கிரஸில் இருந்தார். கண்ணதாசனைப் போல் இவர் மீதும் கட்சித் தாவல் குற்றச்சாட்டு உண்டு. இவருடைய பேச்சுத் திறனுக்காக, முதலில் எல்லாக் கட்சிகளுமே இவரை விரும்பின. ஆனால், ஒரு கட்சிக்குள் நுழைவதற்கு வேண்டுமானால் பேச்சும் எழுத்தும் உதவலாம். அதன் தலைமையை நெருங்குவதற்கும் அவர் மனத்தில் இடம் பிடிப்பதற்கும் பேச்சு மட்டும் போதாது.


ஆயினும் வலம்புரி ஜான், எம்.ஜி.ஆர். மனத்தில் இடம் பிடித்தார். அவர் ஆதரவுடன் இரண்டு முறைகள் மக்களவை உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகள் அவர், எம்.பி.யாக இருந்தார். அதைக் கொண்டு பலருக்கு அவர் உதவியிருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டுமா? பொறியியல் கல்லூரியில் இடம் வேண்டுமா? அரசு எந்திரத்திடம் வேலை ஆகவேண்டுமா? எல்லாவற்றுக்கும் பதவியில் இருப்பவரின் ஒரு சிபாரிசுக் கடிதம் இருந்தால் நல்லது. இந்தக் காலத்தில் வெறும் கடிதம் மட்டும் போதாது. காந்தி நோட்டும் நிறைய வேண்டும்; அந்தச் சிபாரிசு கடிதம் கொடுப்பதற்கே சில்லறை செலவாகும். ஆனால் ஜான், உண்மையிலேயே வறுமையில் இருப்பவரை மேலும் துன்பப்படுத்தமாட்டார். தன்னால் முடிந்தவரை உதவுவார்.


இக்கால அரசியல்வாதிகள் எல்லோருக்குமே ஒரு பொதுக் குணம் உண்டு. 'சும்மா புகழாதீங்க' என்பார்கள். ஆனால், உள்ளுக்குள் அவர்களை அடிக்கடி புகழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். திட்டமிட்டுத் தன்னை முன்னிறுத்துவதும் உண்டு. பட்டிமன்றங்களில் பேச வாய்ப்புக் கேட்டு வருவார்கள். அவர்களிடம் நடுவராய் இருப்பவர், சொல்வார். 'நல்லாப் பேசுங்க. அப்பப்போ என்னைப் பார்த்து, நீங்க அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் என்று நாலு வார்த்தை சொல்லுங்க' என்று கூறுவது உண்டு.


இதே போல், தொலைக்காட்சி நிகழ்ச்சியாகட்டும்; அமைப்புகளும் அரசும் வழங்கும் விருதுகள் ஆகட்டும் எல்லாவற்றுக்கும் ஒரு பின்நிகழ்வு உண்டு.
பரபரப்புத்தான் அரசியல்வாதிக்குப் பிடிக்கும். அவன் பொதுக்கூட்டத்தில் பேசப்போனால் அங்கே ஒரு பிரச்சினை வெடிக்கவேண்டும். தானாகக் கல் விழவேண்டும். இல்லாவிட்டால் அதற்காக இவனே நாலு பேரை ஏற்பாடு செய்து பேச்சாளர் மேல் கல் எறியச் சொல்வான். அதைக் கையோடு புகைப்படம் எடுக்கச் சொல்வான். அடுத்த நாள் நாளிதழ்களில் படத்துடன் செய்தி வரும். செல்வாக்கை வளர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட உத்திகள் வெகுவாகப் பயன்படும்.


எனக்கு இதுபோன்ற உத்தி பிடிக்காது. தந்திரங்களும் செல்வாக்குகளும் இடும் போட்டிக்கு முன்னால் தகுதி பின்னடைவதை என்னால் சகிக்கமுடிவதில்லை.


வலம்புரி ஜான் அரசியல்வாதிதான்; ஆனால், நல்ல மனிதர். அவரிடம் தந்திரங்களே கிடையாது என்று சொல்லமுடியாது. ஆனால், சிறந்த குணங்கள் பல அவரிடம் இருந்தன.
'மூப்பனார் பிறந்த நாளுக்காக ஒரு மலர் தயாராகிறது. அதில் மூப்பனாரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதுங்கள். அப்படி எழுதி அனுப்பினால், அது மூப்பனாரின் கண்ணில் படும். அவர் உங்களைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுவார்' என்றார் ஜான். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே நான் எழுதவில்லை.


அவர் எனக்குத் தந்த ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. என் நேரமும் அதிகம் செலவானது. காலை 6,7க்குத் தொடங்கினால் இரவு 10,11கூட ஆகிவிடும். இதனால் என் சொந்தப் படைப்பியக்கம் தடைப்பட்டது. இப்படி என் நேரத்தை இழப்பதை நான் கட்டோடு விரும்பவில்லை.


அந்த நேரத்தில் வாலி, புதிய பார்வை இதழில் நானும் இந்த நூற்றாண்டும் என்று ஒரு தொடர் எழுதிவந்தார். அதில் ஓர் இடத்தில் யாரோ ஒருவர், அவரை இன்னொரு கவிஞரிடம் உதவியாளராய்ச் சேரச் சொன்னதாகவும் அவர் மறுத்ததாகவும் எழுதியிருந்தார். நான், என்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டேன். 'நான் செய்வது சரியா? நான் இந்தப் பாதையிலா செல்வது?'


'நீங்க என்கூடத் தொடர்ந்து இருங்க. உங்களுக்கு ஒரு நல்ல அரசாங்க வேலை வாங்கித் தருகிறேன்' என்றார், ஒருமுறை. அவருக்கு நல்ல மனம் இருந்தது. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. இப்படியான ஆசை காட்டி, ஏமாற்றப்பட்ட பலரை நான் அறிவேன்.


உதவியாளராய்ச் சேர்ந்த மூன்றே மாதங்களில் எனக்கு அந்த வேலை பிடிக்காமல் போனது. நான் அந்த வேலையை விட்டு விலகினேன். இறுதியாக ஓரிரு நாள்கள் ஊதியம் வரவேண்டியிருந்தது. ஆயினும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். ஓர் அஞ்சல் அட்டையில் என் முடிவை எழுதிப் போட்டுவிட்டு, நான் அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினேன்.


மேலும் சிறிது காலம் கழிந்தது. நான் அமுதசுரபிக்கு வந்த பிறகு, அவரைத் தொடர்பு கொண்டேன். 2004 தீபாவளி மலருக்கு அவரிடம் ஒரு கவிதை பெற்று வெளியிட்டேன்.


மிகவும் உடல்நலம் குன்றி இருக்கிறார்; இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். இதழ்களில் பார்த்தேன். இன்று(14-3-2005) சென்னை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தேன். நல்ல திடகாத்திரமான மனிதர், அவர். மிகவும் இளைத்திருந்தார். நான் கொண்டு போன பழவகைகளைக் கொடுத்தேன்.


அவர் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தூக்கி விடச் சொன்னார். தூக்கி விட்டேன். அமர்ந்தபடியே என்னிடம் பேசினார். "நீங்கள் நிச்சயம் குணமடைவீர்கள்" என்றேன். ஆமோதித்தார். அவர் கையில் சுருக்கங்களுக்கு இடையில் ஒரு கொடி பச்சைக் குத்தியிருந்தது தெரிந்தது. "அது என்ன?" என்றேன். "எம்.ஜி.ஆர். காலத்தில் குத்திக்கொண்ட அ.தி.மு.க. கொடி" என்றார்.


"புத்தகம் எதுவும் வேண்டுமா?" என்று கேட்டேன். "என்னால் இப்பொழுது படிக்க முடியாது" என்றார்.


"நீங்கள் எழுதியவை பல இன்னும் நூலாக வேண்டி இருக்கின்றன இல்லையா?" என்றேன்.

"ஆமாம். வலம்புரி ஜான் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எனத் தொகுக்கத் தொடங்கினேன். அதற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டது" என்று வருந்தினார்.


பிறகு "அமுதசுரபி எப்படி நடக்கிறது?" என்று கேட்டார். "நன்றாக நடக்கிறது. நீங்கள் குணமாகி வந்து எழுதுங்கள்" என்றேன்.


"என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்றேன்."வழக்கம் போலத்தான். இனிப்பு, ரொம்ப காலமாகவே சாப்பிடுவதில்லை; இப்போது உப்பும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் டாக்டர்" என்றார்.


"நீங்கள் எவ்வளவோ இளைஞர்களை வானளாவத் தூக்கி விட்டிருக்கிறீர்கள். இயற்கை உணவை வலியுறுத்தியிருக்கிறீர்கள். யோகாசனத்தைப் பரப்பியிருக்கிறீர்கள்" என்று சிலவற்றை நினைவுகூர்ந்தேன்.


"அறுபதைக் கடந்துவிட்டீர்களா?" என்றேன். "இந்த அக்டோபர் 14 வந்தால் 60 வயது தொடங்குகிறது" என்றார்.


"உங்களுக்கு மணிவிழா எடுத்துவிடுவோம். அதில் நீங்கள் வந்து ஒரு நீண்ட உரை ஆற்றவேண்டும்" என்றேன். "நல்ல உள்ளங்கள், எங்கெங்கோ இருக்கிறீர்கள். வந்து பேசுவேன்" என்றார்.


விடைபெறும் முன் அவர் மனைவியிடம் பேசினேன். "அவர் பி பாசிட்டிவ் குருதி வகையைச் சேர்ந்தவர்; அந்தக் குருதி வகையைச் சேர்ந்தவரின் சிறுநீரகத்தைத்தான் பொருத்தவேண்டும். யாருடையதைப் பொருத்தவேண்டும் என்று மருத்துவர்களே முடிவு செய்வார்கள்" என்றார்.


"என்ன செலவு ஆகும்?" என்று கேட்டேன்.

"ஐந்து லட்சம் ஆகும்" என்றார்.


"தேவையான பணம் சேர்ந்துவிட்டதா? இன்னும் தேவைப்படுகிறதா?" என்று கேட்டேன். "இன்னும் தேவைப்படுகிறது" என்றார்.


"என்னால் முடிந்த சிறுதொகையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றேன். முதலில் மறுத்தவர், பின்னர் பெற்றுக்கொண்டார்.


வலம்புரி ஜான் பிழைத்துவிடுவார் என்று உற்சாகத்தோடு திரும்பினேன்.

Friday, March 04, 2005

தமிழில் மெய்ப்பாளர் பயிற்சி - ஒரு புதிய முயற்சி

காந்தளகம் நடத்திவரும் பதிப்புத் தொழில் உலகம் மாத இதழின் மாசி 2036 (பிப்ரவரி 2005) இதழில் பட்டய மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஒரு திட்ட வரைவினை அளித்துள்ளார். புரூப் பார்ப்பது, பிழை திருத்தம் பார்ப்பது எனப் பரவலாக அறியப்படும் ஒன்றினைத் தமிழில் மெய்ப்பு என அழைக்கிறார்கள். மெய்ப்புப் பார்ப்போரை மெய்ப்பாளர் என்கிறார்கள்.

எப்படி ஒருவர் மெய்ப்பாளர் ஆவது? இதை முறைப்படிக் கற்றுக்கொள்ள முடியுமா? அப்படிக் கற்பதன் தேவை என்ன? எங்கே கற்பது? மாணவர் ஆவதற்கு என்ன தகுதி? அதற்கான பாடத் திட்டத்தில் இடம்பெறக் கூடியவை என்னென்ன? எவ்வளவு நாட்கள் பயிற்சி? எங்கெல்லாம் இந்தப் பயிற்சியை அளிக்க முடியும்? இதற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?.... எனப் பலவற்றை மிக நுணுக்கமாகச் சிந்தித்து ஒரு திட்ட வரைவாக அளித்துள்ளார் சச்சிதானந்தன். அவர் அளித்துள்ள வரைவில் பாடத்திட்டம் பற்றிய பகுதியை மட்டும் இங்கு அளிக்கிறேன்.

2.1 பாடத் திட்டம்:

2.1.1 அச்சுத் தொழில்- வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் பயிற்சி)

2.1.2 நூலாக்க முறைகள்- பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள் - தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண்முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.

2.1.3 செய்தி - விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு -சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.

2.1.4 சொல்லியல்: பெயர்ச்சொல், வினைச்சொல், பேதச்சொல், கலைச்சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற.

2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.

2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழாநிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெருவழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.

2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.

2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.

2.1.9 மெய்ப்புக் குறியீடுகள்.

-மிகவும் நேர்த்தியான முறையில் பாடத் திட்டத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெற வேண்டும் என்பதனை அவர் சிந்தித்துள்ளார். ஒரு கருவை முழுமையாக அணுகுவதற்கு இ·து ஒரு சிறந்த சான்று. இந்தத் திட்டவரைவில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுமாறும் அவர் வேண்டியுள்ளார்.

தமிழ்ப் பதிப்புலகும் இதழுலகும் இணைய உலகும் வளர்ந்து வரும் இந்நாளில் மெய்ப்பாளர் மிகவும் தேவை. இதன் இன்றியமையாமையை இது தொடர்புடைய துறையினர் உணராமல் இருப்பதால் மெய்ப்பின் தேவை, மிக மிக அதிகரித்துவிட்டது.
இவர்களுள் இரண்டு வகைகள் உண்டு. மூலப் படி எப்படி இருக்கிறதோ அப்படியே, தட்டச்சு ஆன பிறகு உள்ள படியில் உள்ளதா எனப் பார்ப்போர் ஒரு வகை. மூலப் படியிலேயே தவறு இருந்தால் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பி, மூலத்தை எழுதியவரிடம் விளக்கி, பிழை திருத்துவோர் இன்னொரு வகை. இரண்டாம் வகையினரைக் காண்பது மிக அரிது.

சிறப்பான மெய்ப்பாளர்கள் அருங்காட்சியகங்களில் வைக்கும் அளவுக்கு அருகிவிட்டார்கள். அதிலும் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இன்னும் அதிகம். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி ஆகியவற்றை எங்கெங்கே இடவேண்டும் என்பது குறித்து மெய்ப்பாளர் பலரும் கருத்து மாறுபடுகிறார்கள். இடைவெளி இடும் இடங்களில்கூட இந்த அல்லாட்டம் உண்டு. ஒற்றை / இரட்டை மேற்கோள் குறிகளை இடுவதிலும் பெரும் வேறுபாடுகள் உண்டு. எங்கு பந்தி பிரிப்பது என்பதும் இறுதியானதில்லை.

வேற்றுமொழிச் சொற்களை ஒலிபெயர்ப்பதிலும் இத்தகைய மாறுபாடு உண்டு. வடசொற்களைத் தமிழில் எழுதும் முறையிலும் ஒத்த கருத்து கிடையாது.
கருப்பு/ கறுப்பு, கோயில்/ கோவில், பவளம்/ பவழம் எனப் பல சொற்கள் தமிழில் புழங்குகின்றன. இவற்றில் எது சரி எனக் கேட்டால் இரண்டுமே சரிதான் என்போர் பலர். இப்படித்தான் எழுதவேண்டும் என ஒன்றை மட்டும் சொல்லுவோர் சிலர்.

பிழை, எப்பொழுதுமே நம்மை வீழ்த்துவதற்குக் காத்திருக்கும் ஒரு புலி போலத்தான். 700 பக்கங்கள் உள்ள ஒரு நூலினைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு மெய்ப்புப் பார்த்தாலும் கடைசியில் அச்சான பிறகு 70 பிழைகளாவது இருக்கும். இது, குறைந்தபட்சம். கணக்கு வழக்கில்லாமல் பிழைகள் இருப்பதே பொதுவழக்கு. பிழை திருத்தம் எனக் கடைசிப் பக்கத்தில் சிலர் இடுவதுண்டு. சில நேரங்களில் அந்தப் பிழை திருத்தத்திலேயே பிழை இருக்கும்.

பிழையை மாயமான் என்றும் சொல்லலாம். பிழை என நினைக்கும் இடத்தில் பிழை இருக்காது. பிழை இல்லை என எண்ணும் இடத்தில் பிழை வந்து நிற்கும்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பலர் தாம் பிழை செய்கிறோம் என்பதையே அறியவில்லை. பிழையையே சரியென எண்ணிக்கொண்டு அதையே ஆணித்தரமாகச் செய்து வருகின்றனர். இப்படி இருப்பவர்கள், சரியான பாதைக்கு வருவது என்பது கடினம். ஆனால், தாம் எழுதுவது பிழையோ என்ற ஐயம் இருப்பவர்களும் பிழை எனச் சுட்டிக்காட்டும் போது திருத்திக்கொள்வோரும் பிழை வரக்கூடாது என்ற அடிப்படை எண்ணம் உள்ளவர்களும் எவ்வளவோ தேவலாம். இத்தகையவர்கள், தங்களைச் சிறப்பாக வளர்த்துக்கொள்ள முடியும்.

அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இந்த மெய்ப்பாளர் பயிற்சி.

ஒரு பிரபல வார இதழில் நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, முதல் நாள் ஒரு புதினம் அச்சுக்குப் போகத் தயாராய் இருந்தது. புதிதாய் வந்திருந்த என்னிடம் அதன் இறுதிப் படியைக் கொடுத்துச் சரிபார்க்கச் சொன்னார்கள். நான் அந்த நூறு பக்கப் படியைப் பார்த்து முடித்தபோது சராசரியாகப் பக்கத்திற்கு 20 பிழைகள் இருந்தன. அவற்றைப் பக்க ஓரங்களில் குறித்தேன். தட்டச்சு செய்தவரும் அங்கிருந்த மெய்ப்பாளரும் என்னைச் சினத்தோடு பார்த்தார்கள். 'நீங்க ரொம்ப க்,ச்,ப் போடுறீங்க' என்றும் 'பக்கத்தை என்ன இப்படிக் குதறி வச்சிருக்கீங்க?' என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்கள். 'இப்படியெல்லாம் போட்டுக்கொண்டிருந்தால் இது இன்றைக்கு அச்சுக்குப் போகாது. சரியான நேரத்தில் அச்சுக்குப் போகாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லிவிடுவோம்' என அச்சுறுத்தவும் செய்தார்கள்.

அதன் பிறகு நான் எப்படியெல்லாம் மெய்ப்புத் திருத்தலாம் என எனக்கு ஒரு கையேட்டினை நிருவாகம் அளித்தது. அதில் நிறைய வழிகாட்டுதல்கள். 'மனத்தை என எழுதினால் எழுத்துக் கூட்டிப் படிக்கும் பாமரர்கள் சிரமப்படுவார்கள்; எனவே மனதை என எழுதினால் போதும்' என்பது போன்ற பல விதிகள் அதில் இருந்தன.

வார இதழுக்கு மட்டுமின்றி, நாளிதழுக்கும் இதே நிலைதான். இன்னும் சொல்லப் போனால் அங்கு இந்த நிலை, மிகவும் மோசம். நான் ஒரு நாளிதழில் பணியாற்றியபோது, ஒரு செய்தி மெய்ப்புப் பிரிவுக்கு வந்தது. சொல், வாக்கிய அமைப்பு, பந்தி, முன்பின் நிரல் என எதுவுமே சரியில்லை. நான் அதை முற்றிலும் மாற்றி, முறையாக எழுதி, தட்டச்சுக்கு அனுப்பினேன். அடுத்த நாள், மதுரையில் இருந்த தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பாய் வந்துகொண்டிருந்தது. 'யார் புரூப் பார்த்தது?' எனத் தேடினார்கள். பிறகு கடைசியில் பார்த்தால் நான் மாற்றித் திருத்தி எழுதிய பிரதியைத் தூக்கி வைத்துவிட்டு, ஏற்கெனவே இருந்தபடியே தட்டச்சாளர் விட்டுவிட்டார். பிழை திருத்தத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அதனால் இதழின் பெயர் கெட்டதோடு, அவருக்கு அபராதமும் விதித்தார்கள். நான் திருத்திய படியைப் படித்த செய்தி ஆசிரியர், மிகவும் பாராட்டினார்.

ஒருமுறை, ஒரு படத்தின் அடிக்குறிப்பில் 'ம.தி.மு.க. தலைவர் வைகோ' என இருந்தது. அடுத்தநாள் விசாரணை வைத்தார்கள். 'ம.தி.மு.க.வுக்குத் தலைவர் கிடையாது; பொதுச் செயலாளர்தான் உண்டு. சட்டப்படி இது தவறு' என்பது செய்தி ஆசிரியரின் வாதம். அதன் பிறகு இது சிறிய பிழை என விடப்பட்டது.

இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் மெய்ப்புப் பார்ப்பது, சாதாரண வேலையில்லை. மிகவும் பொறுப்பாகச் செய்யவேண்டிய வேலை. வார இதழில் ஒருமுறை 'அவன் வசதியோடு வாழ்ந்தான்' என வந்த இடத்தில், 'அவன் வசந்தியோடு வாழ்ந்தான்' என வந்துவிட்டது. பொருளே மாறிவிட்டது பார்த்தீர்களா? அதனால் மிகவும் கவனம் தேவை.

நாளிதழ்களில் லாட்டரிச் சீட்டு முடிவு வெளியிடும் பகுதியையும் பத்தாம் வகுப்பு/ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் பகுதியையும் மெய்ப்புப் பார்ப்பது மிகவும் கடினம். முழுக்க முழுக்க எண்கள் மட்டுமே இருக்கும். ஓர் எண் தப்பானாலும் போச்சு. தேர்வான மாணவர் ஒருவரின் எண் விடுபட்டால் என்னாவது? தோல்வியடைந்தவரின் எண் வெற்றிபெற்றதாக வந்துவிட்டால் என்னாவது?

லாட்டரியிலும் இப்படித்தான். பரிசு விழாதவர்க்கு விழுந்ததாகவோ, விழுந்தவர்க்கு விழாததாகவோ அச்சானால் மெய்ப்புப் பார்த்தவர் தீர்ந்தார்.

மூலத்தை ஒருவர் வாசிக்க, இன்னொருவர் திருத்தம் பார்க்கவேண்டும் என்பது மெய்ப்பின் பொதுவிதி. ஆள் பற்றாக்குறை காரணமாக இது, பெரும்பாலும் நடக்காது. ஒருவரே பார்க்கவேண்டியிருக்கும். இருவர் இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் கிடைப்பது கடினம். ஒருவர் உட்காரும்போது, இன்னொருவர், தேநீர் குடிக்கச் சென்றுவிடுவார். அவர் திரும்பி வரும்போது, முன்னவர், தொலைபேசியில் மும்முரமாய் இருப்பார். வேறு எதற்குப் பார்க்கிறார்களோ இல்லையோ, எண்கள் வெளிவரும் போது மட்டும் இருவர் பார்க்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், எழுத்தை விட எண்தான் மிகவும் சிக்கலானது. இதழ்களின் மெய்ப்பாளர் முதலில் பார்க்கவேண்டியது, அந்த இதழின் தேதி, சரியானபடி இருக்கிறதா? சில தருணங்களில் அந்த தேதியே மாற்றாமல் பழைய தேதியிலேயே அச்சாகும் ஆபத்தும் உண்டு. அதன்பிறகு, 'க்,ச்,ப் எல்லாம் பார்க்கிறவர், தேதியில் பிழை விட்டுவிட்டாரே' எனக் குத்திக் குத்திக் காட்டுவார்கள்.

அடுத்து, இதழின் பக்கங்கள் முறையாக, எண் வரிசைப்படி இருக்கின்றனவா? எனப் பார்க்கவேண்டும். இதழ்கள், ·பாரம் எனப்படும் முறையில் அச்சுக்குப் போவதால் முதல் ·பாரம், இரண்டாம் ·பாரம் எனத் தயாராகும். ஏற்கெனவே போன ·பாரத்தின் எண்களில் மீண்டும் போய்விடக் கூடாது.

அதுபோன்றே பூச்சியங்கள்கூட நம்மைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும். பத்து இலட்சம் என்ற எண்ணைக் குறிக்கும்போது ஒரு பூச்சியம் குறைந்தாலும் அதிகமானாலும் சிக்கல்தான். தொகையே மாறிவிடும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 10 இலட்சம் எனப் பாதி எண்ணும் பாதி எழுத்துமாக எழுதிச் சமாளிப்பவர் உண்டு.

கிராமத்திலிருந்து வேலை தேடி இதழியல் அலுவலகத்திற்கு வரும் பலருக்கும் முதலில் கொடுக்கப்படுவது, (புரூப்)மெய்ப்புப் பார்க்கும் வேலைதான். அவர்கள் அதில் ஓரளவு தேரினால்தான் அடுத்து, செய்தியாளர்(நிருபர்) பணி. அதில் ஏதும் தவறு நடந்தால் அவர் வேலை காலி. தட்டச்சு செய்தவர், உதவி ஆசிரியர், ஆசிரியர் எனப் பலரைக் கடந்துதான் ஓர் இதழ் அச்சுக்குப் போகிறது. அதில் தவறு நடந்தால் ஆசிரியர், உதவி ஆசிரியரைப் பார்ப்பார். உதவி ஆசிரியர், மெய்ப்பாளரைப் பார்ப்பார். மெய்ப்பாளர், தட்டச்சாளரைப் பார்ப்பார். தட்டச்சாளர், 'தப்பைச் சரிபண்ணத்தானே நீங்க இருக்கீங்க?' என மெய்ப்பாளர் மேல் பழியைப் போட்டுவிடுவார். பெரிய தவறு இல்லாமல் என்றுகூட சொல்ல முடியாது; கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்வரை மெய்ப்பாளர் பிழைத்தார்.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் இன்று பலரும் மெய்ப்பாளர் பணியாற்றுகிறார்கள். தெரியாதவற்றையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டும் பலரும் இருக்கிறார்கள். அண்மையில் பதிப்பாசிரியர் ஒருவரின் கட்டுரையில் 'காரி உமிழ்ந்தான்' என்ற வரி இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி, "சரியா?" என வினவினேன். "சரிதான்" என்றார். "'காறி உமிழ்ந்தான்' என்றுதானே வரவேண்டும்?" என்றதற்குக் கொஞ்சம் யோசித்துவிட்டு, "'காரி'தான் சரி; நான் அப்படித்தான் எழுதுவேன்" என்றார்.
அடுத்து, ஓரிடத்தில் 'அரைகுறை' என்ற சொல் வந்திருந்தது. ஒரு பழைய நூலில் அறைகுறை என இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே அகராதியை எடுத்துப் பார்த்தேன். அறைகுறை என்றால் அறுத்தலும் குறைத்தலும் எனப் பொருள் இட்டிருந்தது. அரைகுறைக்காரரிடம் அதை எடுத்துக் காட்டினேன். அந்த அகராதியே தவறு என்றார்.

வாழ்த்துக்கள் என எழுதுவோர் இன்னும் பலர். 'க்' வராது என்று சொன்னால், கேட்பதில்லை. 'பல ஆண்டுகளாக இப்படித்தான் எழுதி வருகிறோம். இப்பொழுது வந்து விதியை மாற்றாதீர்கள்' என எரிந்து விழுவார்கள்.

கண் செருகும்போது, பசிக்கும்போது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, வானொலி கேட்டுக்கொண்டே, பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டே மெய்ப்புப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அதுபோல் அச்செழுத்து, கருப்பாய் இருந்தால் நீலம்/ சிவப்பு/ பச்சை என வேறு வண்ண எழுதுகோலால்தான் திருத்தத்தைக் குறிக்கவேண்டும்.
இவை போன்று நிறைய விதிமுறைகளைப் பின்பற்றினால்தான் ஓரளவுக்காவது மெய்ப்பு சிறக்கும். இவை குறித்து இந்தப் பயிற்சியில் கற்றுத் தருவர் என எதிர்பார்க்கலாம்.

இந்தத் துறை வளராததற்கு உரிய காரணங்களுள் ஒன்று: இதில் வருவாய் மிகக் குறைவு. பக்கத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் அதுவே அதிகம் என்ற நிலை. ஐந்து ரூபாய் கொடுத்தால் சிறிது முன்னேற்றம் உண்டு.

இன்றைய தமிழ்ச் சூழலில் எவ்விதம் மெய்ப்புப் பார்ப்பது என்பதில் இன்னும் பொதுக் கருத்து உருவாகவில்லை. முதலில் இதுவே பெரிய சவால்தான். தமிழில் இதுவரை மெய்ப்பை மட்டுமே மையப் பாடமாகக் கொண்டு ஒரு பட்டயப் படிப்பு என்ற சிந்தனையே புதுமையானது.

இதனை இணையதளத்தில் ஒரு செய்முறைப் பாடமாக அளித்தால் மிகவும் பயன்படும். எந்தச் சொல்/ வாக்கிய அமைப்பு சரி எனச் சொல்வதற்கும் இந்தத் தளம் பயன்படும். அது குறித்துக் கேள்வி எழுப்பவும் பதில் அளிக்கவும் நிபுணர் குழு இயங்கவேண்டும். ஆயினும் இவை அனைத்திற்கும் நிதி முதற்கொண்டு செயலாக்கம் வரையில் பலரின் உதவி தேவை. ஆர்வம் உள்ளவர்கள் உதவுமாறு அவர் வேண்டியுள்ளார். இந்த நல்ல முயற்சி வெற்றியடைய நம்மால் முடிந்தவரை உதவுவோம்.

இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், அடுத்து இன்னும் பலவற்றுக்கும் பயிற்சி அளிக்கலாம்.
1, தமிழை உச்சரிப்பதற்கும் தெளிவாகப் பேசுவதற்குமான பயிற்சி
2, பதிப்பாசிரியர் பயிற்சி
3, திறனாய்வாளர் பயிற்சி
போன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கவேண்டிய தேவையும் நம் சமூகத்தில் உள்ளது. அவற்றைப் படிப்படியாகச் செயலாக்கலாம்.


மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மேலும் அறிய விரும்புவோர்,
பதிப்புத் தொழில் உலகம்,
2, மனோகரன் தெரு,
சென்னை- 600031
tamilnool@touchtelindia.net
என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தக் கடினமான, சிக்கலான கருவை எடுத்துக்கொண்டு கற்றுத்தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் முன்வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Wednesday, March 02, 2005

விழிப்பாவை


கொய்யாப் பழத்தில் குடியிருக்கும் சில்வண்டே!
கொட்டம் அடிக்கின்ற கும்மிருட்டு வெüவாலே!
செய்யாப் பிறப்பே! சிறகடிக்கும் கொக்கே!
சிலிர்க்கின்ற காற்றில் வெடுக்கென்று பாய்ந்திடும்
ஒய்யாரச் சிட்டே! ஒளிப்பூக்கும் மின்மினியே!
ஓங்காரக் கோட்டானே! ஒத்தூதும் ஊர்க்கொசுவே!
மெய்யாகக் காற்றில் மிதக்கும் கச்சேரி!
பறக்கின்ற தோழரைப் பாராய் விழிப்பாவாய்!


மாய மழைவான்; மழிக்காத மண்கன்னம்;
மாறிலியாய்க் கோப்பை. விதவிதமாய் வண்ணங்'கள்'!
மையக் குழியம்; மகரந்தத் தூவியம்;
வண்டுவாய்ச் சீழ்க்கை; வயதுவரும் வைகறை;
தூய கிழக்கு; சுவரில்லாச் சித்திரங்கள்;
துய்த்துத் துணித்துத் துளையம் அடித்தாடி
ஏய நெகிழாமல் இன்னுமா தூக்கம்?
இமைஎறிந்து விட்டே எழாயோ விழிப்பாவாய்!


முட்டியிட்டுத் தாய்மடியை முட்டும் கருப்பாடு;
முத்தமிடும் தத்தை. முகையவிழும் மந்தாரை;
சொட்டுவிடும் கீற்று; சுழற்றிவிடும் பேரிளமை;
தொட்டுவிடும் பாட்டு; துவைத்துவிடும் நாதலயம்;
தட்டிலைகள் ஏந்தும் தடாகம்; மழலையுடன்
தத்திவரும் சிட்டுகள்; தாவிவரும் ஆழியலை
எட்டும் அசைவெல்லாம் காற்றின் வரிவடிவம்.
ஈதைப் பயின்று விரிவாய் விழிப்பாவாய்!

பேழை திறப்பதுபோல் பேசுகிற பைம்பெண்ணே!
பெய்யும் மழைக்கட்டி கையேந்தி, உள்ளங்கை
ஆழ உறைந்தே எறிந்து விளை யாடாயோ!
ஆர்க்கும் அருவிக்குள் காதடைய நில்லாயோ!
நாழிகள் சேமித்து நாத இயற்கைக்குள்
நட்டு வளர்த்து நிழல்காய வாராயோ!
தாழை இறுக்கித் திரைக்குள் புதையாது
தாகங்கள் தீர்த்துமீண்டும் தாராய் விழிப்பாவாய்!

மேகத்தின் மெந்நீழல் மெல்ல நகர்கிறது.
மேற்கின் அலகிற்குள் செம்பூச்சி வீழ்கிறது.
ஆக அகஅகழ்வில் அத்வைதம் பூக்கிறது.
ஐந்து புலத்தும் அமரம் வழிகிறது.
ஊகத்தின் பேரில் உடலை வருடுகிறோம்.
ஊறும் உயிரில் உருஅருவம் ஆகின்றோம்.
ஏகத் திரைவிழுங்கும் ஏக்கத்தில் ஆழாமல்
எங்கே தொலைந்தாய்? எழுவாய் விழிப்பாவாய்!

சாயும் காலங்கள் சயனத்தில் ஆழ்கையிலே
சாயல் தெரிகிறது சாரங்கீ! உன்இதழில்
தோயும் தொழிலைத் தொழப்புகுமென் சிந்தையிலே
தூறல் விழுகிறது தூவம்மே! நானுனக்கு
வேயும் விதானம் வெறிப்பரிவால் என்கையிலே
வெள்ளம் புரள்கிறது மாதங்கீ! என்னிடத்தில்
நேயம் இருக்கிறது. நீயும் இருக்கின்றாய்.
நித்தம் கனவிருக்கும். நீசொல் விழிப்பாவாய்!

வார்த்தையற்ற மெட்டுகளை வாயில் குதப்பி
வடித்த இசைச் சிற்ப வடிவமென வந்துநிற்கும்
நேர்த்தியான தேவியின் நித்திரையை ஆராய,
நீள்வெட்டுத் தோற்றத்தில் நானும் குறுக்குவெட்டுத்
தோற்றத்தில் அந்தத் துணைமயிலும் பூத்திருக்க,
தூவிகளில் என்கை துழாவித் துழாவியொரு
தேர்ந்த மயக்கத்தைத் தீட்ட, செருகும்உன்
தேவ சுயசரிதம் தேவை விழிப்பாவாய்!

நாடிய மேனகை சேலைத் தலைப்பின்
நயமிகு பாவனை நோக்காயோ! நீள்குழல்
சூடிய பூச்சரம் மெல்லிடை மேலிடும்
சுந்தர நாட்டியம் காணாயோ! அன்னவர்
தோடு ஜிமிக்கி துணைநடம் ஆடும்
சுறுசுறுப் பிற்குள் சுருளாயோ! எங்கெங்கும்
ஊடும் ஒளிக்கூழை ஒட்ட வழிக்காது
உறக்கம் தகுமோ உனக்கே விழிப்பாவாய்!

முத்தக் கறைபடிந்த கன்னங்கள்; செங்குருதி
முட்டிச் சிவந்துவிட்ட பாகங்கள்; பேராவல்
பித்துப் பிடித்தலையும் சித்தங்கள்; இல்லையிதில்
பின்னென்றும் முன்னென்றும் பேதங்கள்; அந்தரங்கம்
அத்துப் படியாகி ஆட்டங்கள்; தீபூத்த
ஆவி நிறையமிகு ஊட்டங்கள்; மூழ்கியெழில்
முத்தை எடுத்துவரும் நேரங்கள்; வாழ்வின்
வெளிச்சங்கள் என்றே விரிப்பாய் விழிப்பாவாய்!

'கிட்டுங்கால் கிட்டும்; கிடக்கட்டும்' என்றின்றிக்
'கிட்டாமல் விட்டோமோ' என்றே முழக்கமிடும்
கட்டிளங் காளையரும் கன்னியரும் சேர்ந்திருக்க,
கைக்குள் வலுவிருக்க, கண்ணில் ஒளியிருக்க,
நெஞ்சில் உரமிருக்க, நீதியெனும் வாளிருக்க,
நீசரின் சூழ்ச்சியின்முன் நீர்வடிய நிற்பதினும்
வெட்கப் படுமோர் விடயம்வே றில்லை
விசைமுடுக்கி என்தோழா இன்றே விழிப்பாவாய்!

நாலெழுத்துக் கற்றறிந்து நால்வர் உடன்பழகி
நாலுபேர் கையால் நறுக்கெனக் குட்டுவாங்கி
நாலுகால் பாய்ச்சலில் நாலுதிசை சுற்றிவந்து
நாலுகாசு பார்த்து, ஒரு நாற்காலி வாய்ப்பதற்குள்
நாலு கழுதை வயதேறி, பாரம்
நசுக்கிவிட, நாலுகால் இல்லாத கட்டிலை
நாலுபேர் தூக்கும் நலிவுற்ற வாழ்வினை
நாலிமையும் கொட்டி நகைப்பாய் விழிப்பாவாய்!

கேணி மிகப்பெரிது; கெட்டிச் சுவருண்டு;
கீர்த்தனம் பாடும் சகடை; கயிறுகொஞ்சம்
நாணிச் சிறிதுகோணும்; எத்தனையோ பேரழகு
நங்கையர்கை பட்ட நினைப்புத்தான்; உள்ளிறங்க
ஏணி வளைவாய்ப் படியுண்டு; கொஞ்சமே
எட்டிநாம் பார்த்தால் திகிலுண்டு; பாதாள
வாணிபம் போல வளர்ந்திருக்கும் தண்ணீரைப்
பார்க்க முடிந்தால் பார்த்துக்கொள் விழிப்பாவாய்!

சுற்றும் விசிறியே! சும்மா புலம்பாதே!
நேர்கீழே நின்றும்உன் மூச்சென்னை எட்டவில்லை.
வெற்றுச் சுழற்சி; வெறும்பயிற்சி! மின்சாரம்
வேறு குடிக்கிறாய்; வண்ணம் தொலைத்தாய்; உன்
அற்றைநாள் வீரம் நினைக்கிறேன். தென்றலை
அள்ளிக் கொடுத்தாய் அலையெகிற! இன்றுன்னைச்
சுற்றிவிட ஒற்றைக் கழிதேவை. காலச்
சுவடுகளின் மாறாட்டம் பாராய் விழிப்பாவாய்!

நிலத்தினை நீர்விழுங்கி நின்றதோர் காலமுண்டு
நீரை நிலம்விழுங்கக் காணுகின்றோம் இன்று.
நலந்தரு நீர்நிலைக்கு நல்ல சமாதியேபோல்
நஞ்சேறும் வேகத்தில் நீள்நெடு மாடங்கள்
உலக்கை மனிதர் ஒருநீள் வரிசையில்
ஓர்கைக்குப் பத்தாய்க் குடங்களுடன். யாகம்
வளர்த்தால் மழையென்பார் வண்ணம்பார். புத்தி
வளர்க்கும் வழிசொல்ல வாராய் விழிப்பாவாய்!

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

உத்தமா எங்கே? உறங்கும்இவ் வூரில்
ஒளிந்துகொண்டா? யாரோ எறிந்த குப்பையில்
பத்தோடு மற்றொன்றாய்? வெங்காற்றில் சுற்றுகிற
பாலிதீன் பையினுள்? கத்தலிடை கூவலாய்?
புத்தம் புதிய படச்சுவ ரொட்டியைத்
தீன்னும் பசுவைத் தடவிக் கொடுத்தபடி?
பொத்தாம் பொதுவில் கரித்துண்டு வாக்கியங்கள்
தீட்டும் அவனெங்கே? தேடேன் விழிப்பாவாய்!

கையில் கழியும் கழியில் இசையுமாய்க்
காற்றைத் தடவும் கருமை உலகம். இம்
மையில் உறையும் வடிவ கணங்கள்
மயங்குழல் வாழ்வின் பெருஞ்சல னங்கள்.இவ்
வையவான் திக்கெலாம் மையம் இழுக்க
விழியும்அதில் பார்வையும் வேண்டும். இறந்தபின்
தாயேன் உனையிங்கு தானமாய். ஊழிதாண்டும்
தக்கவாய்ப்பைத் தக்கவைத்துத் தங்கு விழிப்பாவாய்!

வெய்யில் மழைக்குள் வெளிச்சஇருள் நின்றமர,
வித்துமரம் ஆழ்ந்தோங்க, மொட்டுமலர் ஆடிஅற,
மெய்ப்பொய்யாய்க் காட்சி விழுந்துஎழ, காற்று
மிதவேக மாய்க்கதவை மூடித் திறக்கவொரு
தெய்வ மிருகம் சிரித்துஅழ, எங்கெங்கும்
சேய்க்கிழமாய்க் கேட்கும் ஒலியமைதி, உள்வெளியில்
ஒய்யார கோரம் உயிர்ச்சவமாய்த் தீக்குளிரில்
ஓய்வாய் உழைக்கப் பயில்வாய் விழிப்பாவாய்!

Tuesday, March 01, 2005

கவிதாயினி லீனா மணிமேகலை

கரப்பான் பூச்சிகளைப் பார்த்துச் சிலர் 'மிகவும்' அஞ்சுவதைப் பார்த்திருப்போம். பல்லியைப் பார்த்துச் சிலர்; எட்டுக்கால் பூச்சியைப் பார்த்துச் சிலர்.. என அஞ்சுவது அன்றாடக் காட்சி. இரத்தத்தைப் பார்த்தால் சிலருக்கு மயக்கமே வந்துவிடும். ஆடு, கோழி, பன்றி, ஒட்டகம்....எனப் பாவப்பட்ட பிறவிகளைப் பலி கொடுக்கும் இடத்திலிருந்து தலைதெறிக்கச் சிலர் ஓடுவதுண்டு. தாய் மார்கள் தம் பிள்ளைகள் இந்தக் காட்சிகளைப் பார்த்துவிடாமல் சேலைத் தலைப்பால் பிள்ளை முகத்தை மூடுவதுண்டு.

ஆனால், இந்த குணம், பெரிய அளவில் மாறி வருகிறது. இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் அடிதடி, குத்துவெட்டு, கொடூரம், குரூரம், படுபயங்கரம்...என்ற அடைமொழிகளுக்கு உரிய காட்சிகள் அடிக்கடி வருகின்றன. அப்பொழுதெல்லாம் ஏதேனும் சிற்றுணவைக் கொறித்தபடி வேடிக்கை பார்ப்போர் அதிகரித்து வருகின் றனர். காரணம், இவை, சாதாரண காட்சி களாகிவிட்டன. பலர் வீட்டுக் குழந்தைகளே கூட "டிஷ்யூம் டிஷ்யூம்' எனச் சிறப்பு ஒலி யெழுப்பி, "சடசடசடசட'வெனத் துப்பாக்கி யால் சுடுவது, பெற்றோருக்குப் பெருமையாய் இருக்கிறது.

வாழ்வின் மீது வன் முறையின் தாக்கம் இவ்வாறு இருக்க, படைப்பில் அதன் வீச்சு இருக்கத்தானே செய்யும்!

வீசிய சொல்லில்
அறுந்து தொங்கியது
தலை
- என்கிற லீனா மணிமேகலையின் படைப்புகளுள் வன்முறையின் பல கோணங் களைக் காண முடிகிறது.

பயணத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும்
உதிர்த்துவிட நேர்கிறது
உறவுகளை
ரத்தம் சொட்ட சொட்ட

தலைகளை மிதித்துக் கொண்டே
எடுத்து வைக்கிறேன்
அடுத்த அடிகளை...
- என்றும்

தனிமை என்னை
மூர்க்கமாகத் தாக்கியது...
- என்றும்

உணர்வுகள் ஏறி மிதித்து
மனசு முழுக்க ரணம்

மூளையெங்கும் விதைத்த
தீயின் நாற்றுகள்

கண்களில் கசியும்
கனவுகளின் குருதி...
- என்றும்

மௌனங்கள்
எப்பொழுதும்
செயலற்றவையாகவே
தோன்றினாலும்
கூர் கத்தியின் பதத்தை
தடவிப் பார்க்கும்
நடுக்கத்தை
ஏற்படுத்தவே செய்கின்றன
- என்றும்

பழைய நண்பன்
என்ற சொல்
கறுப்பு ரத்தத்தால் எழுதப் பட்டது
- என்றும் லீனாவின் வரிகள் தொடர்கின்றன.

இங்கு எடுத்துக் காட்டிய வரிகளைக் கூர்ந்து பாருங்கள். அழுத்தம், அடர்த்தி, தீவிரம் ஆகியவற்றோடு ஒரு புதிய வெளிப்பாட்டு முறையைக் காணலாம். அதே நேரம் வன்முறையின் தீநாக்குகள் கடுநடம் ஆடுவதையும் கவனிக் கலாம். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருகிற பணியாளரைப் போல், சொற்கள் இவருக்குக் கீழ்ப் படிந்துள்ளன; இவரின் உணர்வுகளை-எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளன. எதிர்மறையான சொற்களை உரத்த குரலில் நாடகத் தன்மை யுடன் சொல்லி, சினத்தை வெளிப்படுத்துவோர் பலர். ஆனால் லீனா, இத்தகைய உணர்வுகளைக் கவித்துவத் துடன் வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

கவிஞர்கள் பலர், பொதுவாக ஒரே முறையில், கருவில் - தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களைப் போல் - படைத்துத் தள்ளுவது கிடையாது. வெவ்வேறு உணர்வுகளை ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுத்து வதில்தான் ஒருவரின் தனித் துவம் புலனாகும். லீனாவின் கவிதைகளில் வன்முறையின் தாக்கம் மட்டும் இருப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. பாலியல் உணர்வுகளையும் இவர், மிகவும் நளினமாகச் சித்திரிக்கிறார்.

தனிமை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த
தருணத்தில்
நீயும் நானும்

நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க
நீ உறுத்துப் பார்த்திருந்த
அவயவங்களின் சலனங்களை
என் உதட்டில் அழுந்தியபடி

நேர்ந்துவிடப்போகும்
தொடுதலை
அறிவித்துக்கொண்டிருந்தன
அவிழ்ந்து நழுவும்
உணர்வுகள்

அறையில்
நீயும் நானும்
இல்லாத ஏதோ ஒன்று
நம்மை இயக்குவித்தபடி
எப்படி நிகழ்ந்தது
என்று தெரியாமலே
நிகழ்ந்துவிட்டிருந்தது

அந்த முதல் முத்தம்
- என்ற இவரின் விவரணை, ஒரு படம் போல் நம் மனங் களில் ஓடுவதைக் காணலாம்.

விடைபெற்றுச்
சென்ற பின்னும்
நீ
அமர்ந்திருந்த தடமும்
தொட்டிருந்த தோளும்
தந்திராத முத்தங்களும்
உன்னை நிகழ்த்திக்கொண்டேயிருந்தன
பிழையில்லாமல்
- என்கிறார்.

சிக்கிக்கொண்ட இசைப்பேழையின் இழை, ஒரே வரியை மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் சில நிகழ்வுகள், நம் மனங்களில் ரீங்கரிக்கும். அந்த உணர்வை இந்தக் கவிதையின் வழியே மிக அழகாக நமக்குள் மீண்டும் நிகழ்த்துகிறார், லீனா.

...என் ஆறாவது புலனாய்
அறியப்பட்டிருந்த உன்னிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்டு விட்டிருந்தது
என் பூமிப் பந்து

திசை மாறும் ரேகைகள்
வளர்ந்துவிட்ட திசைகள்
ஏதோ ஒரு காரணம்
நம்மைச் சுரந்துகொண்டிருந்த
மெல்லிய உணர்வு பிளந்து
முத்தமிட்ட இடங்கள்
சுட்ட புண்களாய்
குழிந்துவிட்டிருந்தது
பிடுங்கி எறியப்பட்ட
புதிய நிலத்தின்
நீரும் வெளிச்சமும்
பழகிவிடும் என்றாலும்
முதல் சந்திப்பின்
கபடமற்ற
அறிமுகச் சிரிப்பை
அன்று கண்ட
கனவுகளின் பிரதேசத்தில்
பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்

என்றாவது
உன்னைப் பார்க்க நேர்கையில்
சலனமற்றுச் சிரிக்க
- என்ற கவிதைக்குள் ஒரு பெரிய கதையே புதைந் திருக்கிறது.

ஒற்றையிலையென என்ற கவிதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரரான லீனா, விருதுநகர் மாவட்டம்- மகராஜபுரம், புதுப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். திரைத் துறையில் பணியாற்றுகிறார். மாத்தம்மா, பறை, தீர்ந்து போயிருந்தது காதல், Break the shackles, Connecting Lines ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். செல்லம்மா, வெள்ளைப் பூனை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கனவுப்பட்டறை என்ற ஊடகவியல் நிறுவனத்தை நிறுவியிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான லீனா, கவிதைகள் "கட்டி' வருகிறார்.

நான்
விரும்பும் என்னை
எப்பொழுதும்
விரும்புவதில்லை
இந்த உலகம்

யார் விரும்பும் என்னையும்
ஒருபொழுதும்
விரும்புவதில்லைநான்
-என்கிறார் லீனா மணிமேகலை.

நாணயத்தின் பூம்பக்கத்தில் லீனா; தலைப்பக்கத்தில் உலகம். இதோ, சுண்டுகிறேன். சரசரவெனச் சுழன்று, என் உள்ளங்கைகளுக்குள் நாணயம் ஒளிந்துகொள்கிறது. வாசகர்களே நீங்கள் சொல்லுங்கள். என் கைக்குள் இருப்பது, பூவா? தலையா?



அமுதசுரபி, மார்ச் 2005