!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/12 - 2010/01 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 14, 2009

திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா

திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 20.12.2009 அன்று மாலை நடைபெறுகிறது. இதில் நம் நண்பர்கள் விக்கிரமன், வெங்கட் சாமிநாதன், ரமணன், ஹரிகிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, விழியன், நிலாரசிகன், சைதை முரளி ஆகியோரின் நூல்களும் வெளியாகின்றன. இந்தப் புதிய பதிப்பகத்தின் தலைமை ஆசிரியராக ரமணன் பணியாற்றுகிறார்.

இந்த விழாவின் அழைப்பிதழ் வருமாறு:








திரிசக்தி பதிப்பகத்திற்கும் நூலாசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

Sunday, December 13, 2009

கவிக்கோ ஞானச்செல்வன் அகவை 70 நிறைவு விழா


கவிக்கோ ஞானச்செல்வனின் அகவை 70 நிறைவு விழாவும் அவரின் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் 28.11.2009 அன்று சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றன. உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பேச்சாளரும் எழுத்தாளருமான கவிக்கோ ஞானச்செல்வன், 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சிக்கு நடுவராக வீற்றிருக்கிறார். மேலும் மக்கள் தொலைக்காட்சியில் தவறின்றித் தமிழ் பேசுவது, எழுதுவது தொடர்பான நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மலர்மாமணி புலவர் இளஞ்செழியன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவுக்கு முன்னாள் அமைச்சர் அருளாளர் இராம.வீரப்பன் தலைமை தாங்கினார். 'ஞானச்செல்வன் கவிதைகள்', 'அர்த்தமுள்ள அரங்குகள்' ஆகிய நூல்களைக் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, தொழிலதிபர்கள் மாம்பலம் சந்திரசேகர், கிருத்திவாசன், அழ,ஆறுமுகம், கவிஞர் புரட்சிதாசன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் நூல் திறனாய்வுரை நிகழ்த்தினர். கவிஞர் முத்துலிங்கம் வாழ்த்திப் பேசினார். கவிஞர் மானா பாஸ்கரன் நன்றியுரை நிகழ்த்தினார். கவிஞர் எஸ்.இராஜகுமாரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த ஞானச்செல்வனின் மாணவர்கள், நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அந்த மாணவர்களுள் நானும் ஒருவன்; 1992-93 ஆண்டுகளில் ஞானச்செல்வன் எனக்கு வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் அமைந்தார். இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் கவிப் பட்டிமன்றம் ஒன்றை உருவாக்கி, அதற்கு என்னை நடுவராக அமர்த்தினார். சில போட்டிகளில் கலந்துகொள்ளவும் என்னை ஊக்குவித்தார். அந்தப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு ஊக்கத்தை அளித்தன. அந்த வகையில் என் வளர்ச்சியில் ஞானச்செல்வனுக்குப் பங்குண்டு. அவருக்கு என் நன்றிகள். அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Thursday, December 03, 2009

மறவன்புலவு க.சச்சிதானந்தன் பிறந்த நாள்



தமிழுக்கும் தமிழருக்கும் நாளும் பொழுதும் வலிவும் பொலிவும் சேர்க்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், கார்த்திகை 17ஆம் நாள், மிருகசீரிட நடத்திரத்து அன்று (டிசம்பர் 3ஆம் தேதி) பிறந்த நாள் காண்கிறார். ஆங்கில நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 5ஆம் நாள் என்றாலும் தமிழ் நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 3ஆம் தேதியே.

நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு - வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர் - வழிகாட்டி - காப்பாளர்; அண்மையில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்....... எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு:
The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ - தனி நபர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கபூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை..... ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

மனிதன், மரணத்தை வெல்லும் நாள் நெருங்கி வருவதால், ஒரு நூற்றாண்டு வாழ்க என்பதே கூட சுருக்கமாக வாழ்த்தாகலாம். எனவே சச்சிதானந்தன், காலத்தை வென்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

(சச்சியைப் பற்றி மேலும் அறிய:
http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html)