!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2010 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 25, 2010

4 திரைப்படங்களின் குறு விமர்சனம்

'மன் மதன் அம்பு' படத்தினை 24.12.2010 அன்று பார்த்தேன். கமல், திரிஷா, மாதவன் என அனுபவம் வாய்ந்த பெரும் நட்சத்திரங்கள், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம், நல்ல ஒளிப்பதிவு.... எனப் பல பலங்கள்; பணத்திற்குப் பஞ்சமில்லாதபடி உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு; இவ்வளவு இருந்தும் கதையில் ஏன் இப்படி சொதப்பினார்கள் என்பது புரியாத புதிர். அதிலும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள், மகா சொதப்பல். துப்பறியும் மன்னார், தொழிலதிபர் மதன கோபால், நடிகை அம்புஜாஸ்ரீ ஆகிய மூவரின் பெயர்ச் சுருக்கமே 'மன் மதன் அம்பு'.


தான் காதலிக்கும் திரிஷாவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமா எனத் துப்பறிய,  மாதவன், கமலை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கும் திரிஷாவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. சந்தேகத்தினால் மாதவன், காதலியை இழக்கிறார். இந்தக் கதையை நிறைய குழப்பி, தேவையற்ற பாத்திரங்களை நுழைத்து, நாடகத்தனமாக்கி வீணடித்துள்ளார்கள். நகைச்சுவை உணர்வினை எதிர்பார்த்து, நகைப்பிற்கு இடமாகிவிட்டார்கள்! கமல் - உஷா உதுப் ஆகியோரின் இயல்பான நடிப்பு, 'நீல வானம்' என்ற இனிய பாடல் போன்ற சில நல்லவற்றையும் பின்தள்ளிவிட்டது, கதையின் பலவீனம். அது எப்படி அனுபவசாலிகளுக்கும் அடி சறுக்குகிறது?

==========================

ராம்கோபால் வர்மாவின் 'ரத்த சரித்திரம்' படத்தினை 2010 திசம்பர் 14 அன்று பார்த்தேன். காதல் பாடல், கவர்ச்சி நடனம், நகைச்சுவைச் சரடு போன்ற வழக்கமான பகுதிகளை அறவே தவிர்த்துள்ளனர். ஆனால், சண்டைக் காட்சி்கள் நீக்கமற நிறைந்துள்ளன. முழுக்க முழுக்கப் பழி வாங்குதலும் பதவி வேட்டையும் அரிவாளும் துப்பாக்கியுமாகப் படம் முழுக்க ரத்தச் சகதி.

தனிப்பட்ட பகை, வன்முறை வெறியாட்டமாக வளர்கிறது. அது விதைக்கும் அச்சத்தினால் மாயச் செல்வாக்கு உருவாகிறது. அதன் பயனாக அரசியல் அதிகாரமும் கிட்டுகிறது. அதைத் தக்கவைக்க, அரசியலில் எதிர்ப்பாளர்களை அடியோடு தீர்த்துக் கட்ட முயல்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் (சூர்யா), காரணகர்த்தாவைப் பழிவாங்கப் புறப்படுகிறான். அவன் வெல்கிறானா என்பதே கதை. இது, ஆந்திராவில் நிகழ்ந்த உண்மைக் கதையாம்.
மொழிமாற்றப் படம் எனத் தெளிவாகத் தெரிவது, ஒரு குறைபாடு. ஆயினும் எடுத்துக்கொண்ட கதையை இயல்பாக நகர்த்தியுள்ளமை, பாராட்டத்தக்கது.

==========================

10.12.2010 அன்று 'சித்து +2' படம் பார்த்தேன். கே.பாக்யராஜ், திரைக் கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார். அவர் மகன் சாந்தனுவும் புதுமுகம் சாந்தினியும் நாயக - நாயகியாக நடி்த்துள்ளனர். +2 தேர்வில் தோற்று, தற்கொலை செய்துகொள்ள எண்ணி வந்த நாயகன்; +2 தேர்வில் தோற்றதாக எண்ணி, ஊரை விட்டு ஓடி வந்த நாயகி. இவர்கள் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இதை நகைச்சுவையாகவும் சினிமாத்தனமாகவும் காட்டியிருக்கிறார்கள். கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய கதை. முன்கணிக்கக் கூடிய திரைக்கதை, நயமில்லாத வசனங்கள், வலுவில்லாத பாத்திரங்கள் ஆகியவற்றால் படம் நீர்த்துவிட்டது. இது, கேளிக்கையே நோக்கமாகக் கொண்ட செயற்கைச் சேர்க்கை.

==========================

'மைனா' படத்தினை 2010 நவம்பர் 25 அன்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுடன் இணைந்து பார்த்தேன். நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஓரளவுக்கு இயல்பான காட்சி அமைப்புகள், பொருத்தமான நடிகர்கள், தகுந்த ஒளிப்பதிவு.... எனப் படம் என்னைக் கவர்ந்தது. சிறு தகராறில் நாயகன், சிறைக்கு வருகிறான். தன் காதலிக்கு அவசரத் திருமணம் நடப்பதை அறிகிறான். தீபாவளிக்கு முந்தைய நாள் சிறையிலிருந்து தப்பிக்கிறான். அந்தச் சிறையின் பொறுப்பில் இருக்கும் காவல் துறை அதிகாரியும் அவர் உதவியாளரும் அவனைப் பிடிக்கச் செல்கிறார்கள். இதனால் அவர்களால் தீபாவளியைக் குடும்பத்தாரோடு கொண்டாட முடியவில்லை. சிறை அதிகாரிக்கு அது, தலை தீபாவளி. அவரால் வர முடியாததால் அவரின் புது மனைவி, கடுப்பு அடைகிறார்.


கைதியைப் பிடித்தார்களா? கைதியின் காதல் கை கூடியதா? சிறை அதிகாரியின் மனைவி, அடுத்துச் செய்தது என்ன? ஆகியவற்றை விறுவிறுப்பாகக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. எனினும் இத்தகைய கதையை எடுத்து, வெற்றிகரமாகப் படமாக்கியதன் மூலம், இயல்பான கதைகளின் மேல் தமிழ்த் திரையுலகின் கவனத்தை மீண்டும் திருப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

=========================
நன்றி - வல்லமை.காம்

படங்களுக்கு நன்றி – lankafocus.com, behindwoods.com

Monday, November 29, 2010

மலேசியாவில் அண்ணாகண்ணன்

2010 நவம்பர் 28 அன்று காலை, சென்னையிலிருந்து பினாங்கை நோக்கி விமானம் புறப்பட்டது. 10.15க்குப் புறப்பட வேண்டிய ஏர்ஏசியா விமானம், 10.40க்குத்தான் கிளம்பியது. எனக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பட்டப் பகலாய் இருந்ததால், அனைத்தும் துல்லியமாகத் தெரிந்தன.  சென்னையின் பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்க் குறுகின. மேலே மேகக் கூட்டங்கள் கட்டற்றுத் திரிந்தன. சிறிது நேரத்தில் மேகங்களையும் கடந்து, விமானம் உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் மேகங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்த் தெரிந்தன. சற்றே நிமிர்ந்து பார்த்தால் விமானத்திற்கு மேலும் மேகங்கள் இருந்தன. தரையிலிருந்து பார்க்கையில் ஒரே அடுக்கில் மேகங்கள் தெரிகின்றன. ஆனால், உண்மையில் மேகங்களில் பல அடுக்குகள் உள்ளன.

மேகங்களைத் தவிர கடலை மட்டுமே பார்க்க முடிந்தது. தரையே தெரியவில்லை. முழுக்க முழுக்க, கடல். நீல நிற நீர்ப் பரப்பில் வரி வரியாய் அலைகள். 3.15 மணி நேரப் பயணத்தின் முடிவில் மலேசியக் கரை, கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால், வானிலை சாதகமாக இல்லாததால் விமானம் உடனே தரையிறங்கவில்லை.

தரையிறங்கிய தருணம், மிக இனிது. விதவிதமான மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றும் ஒரு மலையளவுக்கு இருந்தன. அந்திச் சூரியன் அருள் ஒளி பொழிய, பிரமாண்டமான வெண்மேகக் குன்றுகளுக்கு நடுவில், மரகதத் தீவு போல் பினாங்கு மின்னியது. பச்சையம் பூசிய கடல். அதன் மீது ஓரிரு கப்பல்கள், நீரைக் கிழித்துச் சென்றன. அது, ஒரு வெள்ளைக் கோடு போல், நீண்ட வால் போல் தெரிந்தது.

மலேசிய நேரப்படி அன்று மாலை 5 மணியளவில் விமானம், பினாங்கில் தரையிறங்கியது. நண்பர் சேது குமணனின் உறவினரான பூபாலன் மாணிக்கம், இணையவழித் தோழி யமுனேஸ்வரி ஆறுமுகம் ஆகியோர், விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். அங்கிரிட் விடுதியில் எனக்கு அறை பதிந்திருந்தனர். தமிழ்ப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியரான சங்கர், உடனே அறைக்கு வந்தார். இருவரும் கலந்துரையாடினோம்.

பினாங்கில் உள்ள உளவியல் பேராசிரியரும் சைவத் தத்துவங்களில் தோய்ந்தவருமான கி.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன். சுமேரிய ஒலி வடிவங்கள், தமிழுடன் ஒத்திருப்பதை விளக்கினார். அவை, முதற்சங்கத் தமிழாக இருக்க வேண்டும் என்ற அவரின் கருத்து, எனக்குப் புதிது. சுமேரிய களிமண் பலகைகளிலிருந்து பெயர்த்து எழுதிய வரிவடிவங்களை அவர் படித்துக் காட்டினார். நினைவிலிருந்து பலவற்றை மனப்பாடமாகச் சொன்னார். அவை, தமிழின் ஒலி வடிவங்களுடன் நெருக்கமாக உள்ளன. அவற்றுக்கு அஸ்கிரிய மொழியின் அடிப்படையில் அவர் பொருள் கூறினார். என் ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தேன்.

10 ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தைத் தன் இல்லத்தில் பராமரித்து வருகிறார். சைவத் தத்துவங்கள் தொடர்பான வகுப்புகளை நடத்தி வருகிறார். ஆகம உளவியல் என்ற பிரிவினை உருவாக்கியுள்ளார். இதன் வழி, ஒருவரின் மனத்தினைத் துல்லியமாகப் படிக்க முடியும் என அறிந்து வியந்தேன்.

முனைவர் கி.லோகநாதன், தம் இல்லத்திலேயே தங்க அழைத்தார். அதை ஏற்று, நவம்பர் 29 அன்று காலை, அங்கிரிட் விடுதியிலிருந்து பெயர்ந்து, அவர் இல்லத்திற்கே  வந்து சேர்ந்தேன். இங்கு மேலும் நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். 2010 டிசம்பர் 6ஆம் தேதி காலை, சென்னைக்குத் திரும்புகிறேன்.

=========================
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

Monday, November 22, 2010

வெள்ளையர் பாடும் தமிழ்ப் பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவாஜி படத்தில் இடம் பெற்ற ‘பல்லேலக்கா’ பாடலை, கனடாவின் வெள்ளைக்கார மாணவர்களைக் கொண்ட கல்லூரிக் குழு ஒன்று, இசைக்கிறது.



ஆஹா, வெள்ளையர் உதடுகளில் தமிழ்ப் பாடலைக் கேட்கும்போது மகிழ்ச்சி கரை புரள்கிறது. தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதில் ஆவலாய் இருக்க, அவர்கள் தமிழ்ப் பாடலைப் பாடுவது எத்தகைய முன்னேற்றம்!

வாழ்க ரகுமான். வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, கொட்டு முரசே!

Saturday, November 06, 2010

இலங்கை காவல் துறையின் தீபாவளி விழா

இலங்கை காவல் துறை, முதன் முதலாகத் தீபாவளி விழாவை 2010 நவம்பர் 6 அன்று நடத்தியது. இது, கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அரசின் கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பொலிஸ் மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரியா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, இலங்கை பொலிஸ் பெளத்த மற்றும் ஏனைய மத அலுவல்கள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான மொரீசியஸ் கெளரவத் தூதர் தெ.ஈஸ்வரன் அழைப்பின் பேரில் நான், பார்வையாளனாகப் பங்கேற்றேன். ‘தீபாவளி, நவம்பர் 5ஆம் தேதி என இருக்க, விழாவினை 6ஆம் தேதி நடத்துவது ஏன்?’ எனக் கேட்டேன். ‘சனிக்கிழமை விடுமுறை என்பதால் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக இன்று நடத்தியிருக்கலாம்’ என ஈஸ்வரன் கூறினார்.

காவல் துறை மைதானம் முழுக்க மின்விளக்குச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடை அலங்காரம், மிக நேர்த்தியாக இருந்தது. நடு நாயகமாக நடராஜரும் விநாயகரும் கிருஷ்ணரும் அவருக்கு இரு புறங்களிலும் வீற்றிருந்தார்கள். மேடைக்கு முன்னதாக இருந்த சிறு மேடை முழுக்கக் குத்து விளக்குகள் நிறைந்திருந்தது. அதில் பெரிதான ஒன்றுக்குச் சிறப்பு விருந்தினர்கள் ஒளி ஏற்றினார்கள். மேடைக்குப் பக்கத்தில் இருந்த தனி மேடையில் அகல் விளக்குகள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. காற்றில் அணைய அணைய, அவற்றைத் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

விழாவின் தொடக்கத்தில் விநாயகருக்குப் பூஜைகள் நடந்தன. வாண வேடிக்கைகள் வானை நிறைத்தன. விழாவை நடத்திய அமைப்பின் தலைவர் மகிந்த பாலசூரியா, வரவேற்புரை ஆற்றினார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆலோசனையின் பேரில் இந்த விழா நடைபெறுவதாகவும் இனி விசாக் பண்டிகையைப் போல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகியவையும் அரசின் சார்பில் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டங்கள்தோறும் ஊராட்சி அளவில் இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அவரது சிங்கள உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கப்பெற்றது.

சிவகுருநாதன் குழுவினரின் நாகஸ்வர இசை, கணீரென்று ஒலித்தது. தமிழ்ப் பாடல்களுடன் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மேல்நாட்டு இசை ஒன்றையும் நாகஸ்வரத்தில் வாசித்தனர்.

நிர்மலா ஜான் நடத்தும் நிர்மலாஞ்சலி நடனப் பள்ளியின் மாணவிகள் அருமையாக நடனம் ஆடினர். ராதை குமாரதாஸ் நடத்தும் வீணா வித்யாலயாவின் மாணவியர், மேடையில் எட்டு வீணைகளைக் கொண்டு அருமையான இசையை வழங்கினர். மேலும் பல குழுக்களின் நடன நிகழ்ச்சிகள், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. ‘முகுந்தா முகுந்தா’ என்ற பாடலுக்கான நடனமும் நன்று.

கழுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிலும் தமிழ்ப் பெண் காவலர்கள் ஆறு பேர், ‘சலங்கை ஒலி’ படத்தில் வரும் ‘ஓம் நமசிவாயா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் சற்றே அடக்கமாக ஆடினர். இந்தப் பாடலுக்கு இன்னும் துடிப்புடன் ஆடியிருக்கலாம். இறுதியில் இடம்பெற்ற நடனம் ஒன்று, நல்ல துடிப்புடன் அமைந்திருந்தது.

நடன மணிகளின் ஒப்பனை, பாவங்கள், ஒருங்கிணைவு, இசைக்கு இயைந்த அசைவுகள் யாவும் சிறப்பாக இருந்தன. நடனங்களை வடிவமைத்த ஆசிரியர்கள், கலைத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்திருந்தனர். இறுதியில் பஜனை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் விழாவுக்கு வருபவர்களைச் சந்தனக் கிண்ணத்துடன் வரவேற்பார்கள். இந்த நிகழ்ச்சியிலோ வரவேற்பாளர்கள், தங்கள் கைகளால் சந்தனத்தைத் தொட்டு, வருகையாளரின் நெற்றியில் இட்டு வரவேற்றது, சிறப்பு. மேலும் வந்திருந்த அனைவருக்கும் பலகாரப் பெட்டியும் மைலோ என்ற பானமும் வழங்கி உபசரித்தனர். காவல் துறையினரில் உள்ள சிங்களப் பெண்கள், அவர்களின் பாரம்பரிய சேலையிலும் ஆண்கள் பட்டுச் சட்டை – வேட்டியிலும் ஆங்காங்கே தென்பட்டனர். விழாவின் தொகுப்புரைகளைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழும் மூன்று மொழிகளிலும் அச்சடிக்கப்பெற்றிருந்தது.

பவுத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையை அவர்களின் முறைப்படியே அரசு விழாவாக எடுத்தது, நல்ல முயற்சி. இது, சமுதாய நல்லிணக்கத்தை நோக்கிய, நம்பிக்கையூட்டும் நகர்வு.

===============================================
படங்களுக்கு நன்றி – http://www.police.lk | http://www.news.lk

முதல் பதிவு - வல்லமை.காம்

Wednesday, October 27, 2010

அறிஞர் உமாமகேசுவரன் உடன் ஒரு சந்திப்பு

கொழும்பின் ஒரு பகுதியாக உள்ள தெகிவிளை என்ற பகுதியில் தமிழறிஞர் உமாமகேசுவரன் வசிக்கிறார், இவரை  22.10.2010 அன்று, மறவன்புலவு க.சச்சிதானந்தனுடன் சென்று சந்தித்தேன்.


 இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி, பண்ணிசை ஆகியவற்றில் தலைசிறந்த புலமை வாய்ந்தவர் எனச் சச்சி அறிமுகப்படுத்தினார். தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட பன்னிரு திருமுறைகள் தொகுதிகளின் ஒன்று முதல் 10 வரையான திருமுறைகளுக்கு மெய்ப்பு நோக்கியவர் இவரே என்பது கூடுதல் தகவல். அந்தத் திருமுறைகளைத் தேவாரம்  தளத்தில் வாசிக்கலாம்.

இவரின் இல்லத்திலிருந்த சிறிது நேரத்தில், இந்து சாதனம் என்ற இதழில் மறுபதிப்பு கண்ட, இவரின் 'அதிதீரன்' என்ற கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் திருக்குறளின் ஒரு பாடலுக்குப் பரிமேலழகர்  அளித்த உதாரணத்தை இவர் மறுத்துள்ளார்.

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

திரு.பரிமேலழகர் உரை

தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3) 

பேராண்மை, ஊராண்மை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, பரிமேலழகரின் உரையினை விமர்சித்துள்ள இவர், இக்குறளுக்கு இராவணனிடம் இராமன், 'இன்று போய் நாளை வா' எனக் கூறியதை எடுத்துக் காட்டியது, இமாலயத் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.





இராமன் இவ்வாறு கூறியதால் இராவணனுக்குப் பெரும் அவப்பெயரே ஏற்பட்டது. எதிராளிக்கு இவ்வாறு இழப்பை ஏற்படுத்தியது பேராண்மை ஆகாது. அப்படியாயின்  பேராண்மைக்குச் சான்று எங்கே என்று கேட்பவர்களுக்காக இவர், ஏனாதிநாதர், அதிதீரன் ஆகியோரை எடுத்துக் காட்டுகிறார். இவர்கள், சைவத் திருமுறைகளில் வாழும் சமயப் பெரியார்கள் ஆவர்.

மேலும் அவருடன் பேசுகையில், பெரியார் முன்னெடுத்து, எம்.ஜி.ஆர். நிறைவேற்றிய எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்றார். அந்தக் கால எழுத்துகளைக் கொண்டே கணினியில் தட்டச்சு செய்திட முடியும் என்று கூறி, அவ்வாறு தட்டச்சு  செய்த படி ஒன்றினையும் காட்டினார்.

 அதில் முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்றும் அதற்கான விளக்கமும் இருந்தது.

வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை!

இந்தப் பாடல், தற்கால ஈழ மக்களின் மன நிலையை எதிரொலிப்பதாகச் சச்சிதானந்தன் கூறினார். அவர், கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பலரையும் சந்தித்தவர்.

இப்பாடலை மேற்கோள் காட்டிய உமாமகேசுவரன், தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள ‘பரிச்சயம்‘ என்ற சொல்லமைப்பு தவறு என்றும் ‘பரிசயம்‘ என்ற சொல்லே சரியென்றும் குறிப்பிட்டார்.

எங்கள் உரையாடலின் இடையே தம் மனைவியாரை உமாமகேசுவரன் அழைத்தார். அவரின் பெயர் சொல்லி அழைக்காமல், ‘கேட்டீரா‘ என அழைத்தது, மிக நளினமாகவும் உயர்வாகவும் இருந்தது. இதைச் சுட்டிக் காட்டிய சச்சி, தம் தாயை தம் தந்தையார் ‘மெய்யே‘ என்று அழைத்ததை நினைவுகூர்ந்தார்.

 காலத்தினாலும் அன்பினாலும் அறிவினாலும் பழுத்த இந்தப் பெரியவரை வணங்கி விடை பெற்றோம்.

=================
நன்றி - வல்லமை

Thursday, October 21, 2010

கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் வாணி விழா

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள விவேகானந்தா கல்லூரி, ஆரம்பப் பாட சாலை மாணவர்களின் வாணி விழாவினை 2010 அக்.19 அன்று கண்டு களித்தேன்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வேப்பிலை நடனம், கரகாட்டம், மாரியம்மன் நடனம், காளியம்மன் நடனம், சக்தி வழிபாடு குறித்த தனி்ப் பேச்சுகள் (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி), குழுப் பாடல்கள் (ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்), நாடகம்… எனப் பலவும் மிக நேர்த்தியாக இருந்தன. தமிழும் சைவமும் அவர்கள் வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துரைத்தன.

நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களின் ஒப்பனை, இசைக்கேற்ப உடல் உறுப்புகளை அசைக்கும் திறன், கண்களின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல், நினைவாற்றல் ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அவர்களைச் செம்மையாகப் பயிற்றுவித்துள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது.

மொரீசியசுக்கான இலங்கையின் கவுரவத் தூதர் தெ.ஈஸ்வரன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

இக்கல்லூரியில் விவேகானந்தர், விபுலானந்தர், நாவலர், மகேசன் ஆகியோர் பெயர்களில் தனித் தனிக் கட்டடங்கள் உள்ளன. முதல் மூவருக்கும் சிலைகளும் உள்ளன. வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் கட்டடச் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அடுக்குகள் உள்ளன. இலங்கையிலோ, முதல் தரம் முதல் 13ஆம் தரம் வரை வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு தரத்திலும் சிறந்த மாணவர் ஒருவர், Prefect என்ற பட்டத்திற்குத் தேர்வு பெறுகிறார். இவர், பிற மாணவர்களை வழி நடத்துகிறார். இவர்கள், தனியே கோட் உடை அணிந்து, வலம் வருகிறார்கள்.  12, 13ஆம் தரங்களில் Senior Prefect என ஒருவர் தேர்வு பெறுகிறார். இவ்வாறு தேர்வு பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பெறுகின்றன. அவற்றுக்கு வேலை வாய்ப்புக் களத்தில் சரியான மதிப்பு உண்டு எனப் பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களின் பெயர்களை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மாணவர்கள், அவ்வப்பொழுது அறிவித்தார்கள். அவற்றுள் வடமொழித் தாக்கம் மிகுந்திருப்பதைக் கண்டேன். முதெலழுத்துகளை ஆனா, ஆவன்னா என்ற முறையில் குறிப்பிட்டனர் (எ.கா. – சூவன்னா ஆனந்த ரூபிணி). ஆங்கிலத்தில் முன்னெழுத்துகளைக் குறிப்பிட்ட பொழுது, இவ்வாறு சொல்ல இயலவில்லை (எ.கா. – எம்.தர்ஷிகா).

இந்தக் கல்லூரிக்கெனத் தனியே விளையாட்டுத் திடல் எதுவும் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை வெளியே உள்ள பொது விளையாட்டு்த் திடலினை முன்பதிந்து பயன்படுத்துகிறார்கள். இந்தத் திடலுக்கு ஒரு நாள் வாடகை, இலங்கை ரூபாய் மதிப்பில் 85 ஆயிரம். இவ்வாறு இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் பள்ளியின் பழைய மாணவர் சங்கம் இயங்கி வருகிறது. இவர்களை, முக மண்டலத்தில் காணலாம். இவர்களுள் ஒருவர், வாணி விழா நடைபெறும் பொழுதே அது குறித்த செய்திகளையும் படங்களையும் தங்கள் முக மண்டலப் பக்கத்தில் ஏற்றினார். அதனை மடிக்கணினியில் எடுத்துக் காட்டினார். வலைப்பதிவும் தொடங்குங்கள் என வழி காட்டினேன். முக மண்டலத்தில் ஏற்றினால் முக மண்டல உறுப்பினர்கள் மட்டுமே அவற்றைக் காண முடியும்; வலைப்பதிவினை யாரும் காண முடியும் என்றேன். முயல்வதாகக் கூறினார்.
நிகழ்ச்சியின் இடையே பேசிய இக்கல்லூரியின் அதிபர், ‘இந்த மாணவர்களைப் பார்க்கிறபோது, விவேகானந்தா கல்லூரியின் எதிர்காலம் பிரகாசமாய் இருப்பது தெரிகிறது’ என்றார். எனக்கோ, இலங்கையின் எதிர்காலமே பிரகாசமாய் இருக்கும் எனத் தோன்றியது.

நன்றி - வல்லமை.காம்

தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான சில இயல்புகள்

அண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழர் வாழ்வியல் தொடர்பான 25 காட்சிகள் இருந்தன. தமிழர்களின் இயல்புகள் குறித்த ஒரு விமர்சனமாக அவை இருந்தன. அவற்றுள் 5 மட்டும் இங்கே:


1. கோயிலுக்கு ஒரு டியூப் லைட்டைத் தானமாகக் கொடுத்தால் கூட டியூப் லைட்டின் பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தைப் பதிக்கிற இனம்.

2. காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.

3. எங்க ஊரு அரசுப் பள்ளி ஆசிரியர் அவர்களின் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பார்.

4. பள்ளிக்கூடம், மருத்துவமனைகளைத் தனியார் நடத்த, அரசாங்கம் சாராயக் கடை நடத்தும்.

5. உடலும் மனமும் ஒத்துழைக்காது என பியூனுக்குக் கூட 60 வயதில் பணி ஓய்வு கொடுப்பார்கள். ஆனால், 60 வயசுக்கு மேல இருப்பவர்கள், அமைச்சராக நம்மை ஆளுவார்கள்.

இவற்றைப் படிக்கிறபோது, தமிழரின் முரண்கள், போலித்தனங்கள், தன் முனைப்பு, சுயநலம், அந்நிய மோகம்… உள்ளிட்ட பலவும் வெளிப்படுவதைக் காண்கிறோம். இவை முழுக்க எதிர்மறையாக இருந்தபோதிலும் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதை உணரலாம்.

தமிழர்களின் இயல்புகளை நானும் தொடர்ச்சியாக உள்வாங்கி வருகிறேன். தமிழர்கள் வெவ்வெறு தருணங்களில் எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்வையாளனாகவும் பங்கேற்பாளனாகவும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த வகையில், இந்தத் தமிழ்ச் சமூகம் குறித்த என் பார்வைகள் சிலவற்றை இங்கே பதிகிறேன். ஒரு கோணத்தில் இதனைச் சமூகவியல் ஆய்வாகவும் கருதிட இடம் உண்டு. தமிழர்கள் அனைவரிடமும் இந்த இயல்புகள் உண்டு என நான் கூறவில்லை. இவற்றுக்கு மாறுபட்டவர்களையும் நான் கண்டதுண்டு. ஆனால், இக்காலத் தமிழ்ச் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சில தன்மைகள் ஓங்கி இருக்கின்றன. அவற்றுள் சில இங்கே:

எதுகை மோனையில் ஆர்வம்

தமிழர்களுக்கு எதுகை மோனையின் மீது தனித்த ஆர்வம் உள்ளது. அவர்களின் கவிதை, பாட்டு, இலக்கியம் ஆகியவற்றில் இதன் ஆதிக்கம் இருப்பது இயற்கையானது. ஆனால், அன்றாடப் பேச்சு வழக்கிலும் இதன் தாக்கம் அதிகம். நாட்டுப்புறப் பாடல்கள், சொலவடைகள், பழமொழிகள், புதுமொழிகள், கானா பாடல்கள்… எனப் பலவும் எதுகை மோனையுடனே உள்ளன.
மரபுக் கவிதைகளிலிருந்து வேறுபட்டு, புதுக்கவிதை படைக்க விரும்பிய போது, பலரும் எதுகை மோனைகளைக் கைவிடவில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு முத்திரை வாசகத்திலும் (பஞ்ச் டயலாக்) எதுகை, மோனைகள் துள்ளி விளையாடுகின்றன. வாசகர் கடிதம், துணுக்கு, நகைச்சுவை முதல் கவிதை, சிறுகதை, கட்டுரை வரை எழுதுவோர், தமக்கு வைத்துக்கொள்ளும் பெயர்கள், தனித்த ஓசை நயத்துடன் உள்ளன. அறிவிப்புகள், விளம்பரங்கள், அரசியல் முழக்கங்கள், கடவுள் துதி எனப் பலவற்றிலும் இந்த ஓசை நயத்தைக் காணலாம்.

சாதாரணமாகப் பேசும்போதே, கிழிந்தது கிருஷ்ணகிரி என்பார்கள். வெட்டிப் பேச்சிலும்கூட கிருஷ்ணகிரியைக் கிழிப்பதில் ஒரு மகிழ்ச்சி. பட்டப் பெயர்கள் பெரும்பாலும் மோனை நயத்துடனே அமைகின்றன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், வித்தகக் கவிஞர் பா.விஜய், நாவுக்கரசர் நாராயணன், சித்தாந்த சிகாமணி, அடுக்களை அலமேலு…. என விரியும் பெயர்கள், மோனைப் புள்ளியில் மையம் கொண்டவை.
இரட்டைப் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளை, இரண்டு பெண் பிள்ளை போன்றோர் பிறந்தால் இயைபு மிளிரப் பெயர் வைப்பது, இப்போதும் தொடர்கிறது (அங்கவை – சங்கவை, ஜெயா – விஜயா, காமாட்சி – மீனாட்சி, வரலட்சுமி – வீரலட்சுமி, இந்திரன் – சந்திரன், சுரேஷ் – ரமேஷ், ராமு – சோமு, அருண் – வருண்). நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் (கில்லி?) தாதாக்களின் பெயர்கள் சுவையானவை. சனியன் சகடை, பட்டாசு பாலு… என அதிலும் மோனை நயம் மிளிரும். குரங்கு குமார், அசால்ட்டு ஆறுமுகம்…. என்றெல்லாம் உள்ள பெயர்கள், தமிழ் மக்களின் இயல்பைக் காட்டக் கூடியவை.

எதுகை, மோனை என மேலோட்டமாகப் பார்த்தாலும் ஆழ்ந்த நோக்கில் சந்தத்தின் மீதான ஈர்ப்பாகவே இதனைக் கருத வேண்டும். சந்தத்தின் மீது பல நூற்றாண்டுகளாக ஈடுபாடு கொண்ட ஒரு சமூகம், ஒரு பொதுவான ஒழுங்கமைவினை நம்புகிறது, விரும்புகிறது எனக் கொள்ளலாம். அதனால்தான் ஒவ்வொன்றுக்கும் இலக்கணம் வரைந்திட இச்சமூகம் விரும்புகிறது. அந்த இலக்கண வரையறை, எழுத்து, இலக்கியம் ஆகியவற்றைத் தாண்டி, பெண்கள், குழந்தைகள், அரசன், அமைச்சன்… என அனைவருக்காவும் விரிந்தது.

தொல்காப்பியமும் திருக்குறளும் மொழி, நிலம், காலம், ஒழுக்கம், சமூகம் உள்ளிட்டவற்றை வரையறுத்துக் கூறியதை நினைவுகூரலாம். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது, நெறிமுறைகள், கட்டுப்பாடுகள்… என அனைத்துத் துறை சார்ந்து இந்த இலக்கண ஆதிக்கம் பரவியது. இதன் அடிப்படை, இசையின் மீது கொண்ட ஈர்ப்பே ஆகும். இந்த இசைக் கூறுக்கான ஓர் எடுத்துக் காட்டே எதுகை, மோனைகள்.

தமிழ்ச் சமூகம், அளவையியல் கூறுகளுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் நாலடியார், ஐந்திணை, எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பன்னிரு திருமுறை, பதினெண் கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்…. என எண்களின் அடிப்படையில் அமைந்தவை ஏராளம். எழுத்தெண்ணிப் பாடும் முறையும் தமிழில் உண்டு. செய்யுள்கள் பெரும்பாலும் கூர்மையான எண்ணிலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன. செய்யுள்களுக்கு வெளியிலும் இத்தகைய எண்களில் ஆதிக்கத்தைக் காணலாம். கோவில் மாடங்களின் எண்ணிக்கை, கும்பங்களின் எண்ணிக்கை, சுற்றுகளின் எண்ணிக்கை, சிலைகளின் ஒவ்வொரு பகுதியும் அமையும் விதம், உணவு சமைப்பதில், வயலுக்கு நீர் பாய்ச்சுவதில், மரம் வளர்ப்பதில்…. என ஒவ்வொன்றிலும் அளவையியல் கண்ணோட்டத்தினை அறியலாம். காற்று வீசுவதை வைத்து, கதிரொளியை வைத்து, அலையடிப்பதை வைத்து அளக்கிறார்கள். நேர அளவு, கைப்பிடியளவு, படியளவு…. என நுணுக்கமாகத் தமிழர்கள் அளந்துள்ளனர்.

எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக்கோ, அதில் எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ என்ற அண்மைக் காலப் பாடலும் தமிழர்களிடம் எண்கள் கொண்டுள்ள தாக்கத்தை எடுத்துக் காட்டும். இந்த அளவையியல் கூறுகளும் இசைக் கூறுகளுடன் தொடர்புடையவை. எனவே, எதுகையும் மோனையும் தமிழர்கள் மீது தாக்கம் செலுத்துவதற்கு ஆழ்ந்த பின்புலம் உண்டு.

வரலாற்று உணர்வு குறைவு

தமிழர்களிடையே வரலாற்று உணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. பல பழந்தமிழ்ப் பாடல்களுக்கும் நூல்களுக்கும் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. அதனால்தான் அந்தப் பாடலில் வரும் அடியினைக் கொண்டு, அணிலாடு முன்றிலார், இரும்பிடர்த்தலையார், கல்பொரு சிறுநுரையார், கொட்டம்பலவனார், இம்மென்கீரனார், தேய்புரி பழங்கயிற்றினார்…. போன்ற பெயர்களால் அழைக்க வேண்டி வந்தது. இன்னும் பலருக்குப் பெயர் தெரிந்தும் அவரின் பிறப்பு, வளர்ப்பு, காலம் உள்ளிட்டவை தெளிவாகத் தெரியவில்லை. திருவள்ளுவருக்கும் இதே நிலைதான். இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் எனக் கணிக்கவே முடிகிறது. இன்றைக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் மூன்று தலைமுறைக்கு முந்தையவர்களின் பெயர்கள் பலருக்கும் தெரியாது. துல்லியமான வரலாற்றுப் பதிவுகள் எவரிடமும் இல்லை. 

தமிழர்களின் நில ஆவணங்கள், குறுகிய கால எல்லைகளைக் கொண்டவை. அவையும் அந்நியர் ஆட்சியின் விளைவாகத் தோன்றியவை.
தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்களின் விவரங்கள் மட்டுமே கிடைக்கவில்லை எனக் கருதிவிட வேண்டாம். கோயில்களைக் கட்டியவர்கள், சிலைகளை வடித்தவர்கள், ஓவியங்களைத் தீட்டியவர்கள்…. எனப் பல விவரங்களும் தெரியாது. மன்னர்களுள்ளும் சிலரின் சில விவரங்களே உள்ளன. முறையான ஆவணப் பதிவுகள் இல்லை. இந்தப் பண்புக்கு முக்கிய காரணம், அவர்களின் அவையடக்கம். தன்னை முன்னிறுத்திக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் குறைந்தபட்ச அடையாளங்களைக்கூட அவர்கள் பதியவில்லை. இதனால், தமிழகத்தின் சமூக – கலை – இலக்கிய வரலாறு, பெரும் பின்னடைவைக் கண்டது.

அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பலருக்கே முறையான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. பாரதிக்கும் கட்டபொம்மனுக்குமே முழுமையான விவரங்கள் இல்லை. தகவல் தொடர்பு நுட்பங்கள் இவ்வளவு வளர்ந்துள்ள இன்றைக்கும் கோடிக்கணக்கானோரின் புகைப்படங்கள், குரல்கள், பங்களிப்புகள் முறையாகப் பதியப்பெறுவதில்லை. இப்படி ஒருவர் வாழ்ந்து மறைந்தார் என்பதற்கான எந்தச் சுவடுமே இல்லாமல் பலரும் வந்து செல்கிறார்கள். நாட்குறிப்புகள் பதிதல், வாழ்க்கை வரலாறு எழுதுதல், குடும்பக் கிளைகளை வரைதல்… ஆகியவற்றைத் தமிழர்களிடம் அரிதாகவே காண முடிகிறது.

இந்தப் பின்னணியால், தமிழர்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது. யார், எதை, எப்போது கூறினார் என்பதை அவர்களால் நிறுவ முடிவதில்லை. இது, அரசியல்வாதிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. கடன் கொடுக்கும்போது, எழுத்து ஆவணங்கள் இல்லாமல் கொடுப்போர் இன்றும் உண்டு. அவையடக்கமும் நட்பும் நம்பிக்கையும் இவர்களின் வரலாற்று உணர்வைக் கெடுக்கின்றன. இந்தப் பின்னணியில் கோவிலுக்குக் கொடுத்த குழல் விளக்கில் பெயரை எழுதுவோரை வரலாற்று நோக்கில் பாராட்டவே வேண்டும்.

நெகிழ்வுத்தன்மை

தமிழர்களிடம் அதிக அளவில் ஒழுக்கக் கோட்பாடுகள் உண்டு. வாழ்வின் ஒவ்வோர் கூறுக்கும் ஏராளமான இலக்கணங்களும் வரையறைகளும் உண்டு. ஆனால், இவை அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா எனில் இல்லை என்பதே பதில்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது, தனிப்பட்ட முறையில் ஒன்றும் மேடையில் ஒன்றுமாகப் பேசுவது, உள்ளூரில் ஒன்றும் வெளியூரில் ஒன்றுமாகப் பேசுவது… போன்றவை தமிழர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. உண்மையைச் சொல்வது என்பதைவிட, அதன் பலாபலன்களை எண்ணியே சொல்கிறார்கள். இவற்றை இரட்டை நிலைப்பாடு என்பது, ஒரு பார்வை. உண்மையில் இரண்டு நிலைப்பாடு என்றும் சொல்ல முடியாது. சிலர், சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள். அங்கு எண்ணிக்கையே கிடையாது. ஆனால், வேறொரு கோணத்திலிருந்து இவற்றைப் பார்க்கிற போது, தமிழர்களிடம் நெகிழ்வுத்தன்மை அதிகமாக இருப்பது புலனாகிறது.

தமிழர்களைக் கரப்பான்பூச்சிகள் என ஒருவர் குறிப்பிட்டார். அவர்களை எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, பிழைத்துவிடுவார்கள் என்பதே அவர் தந்த விளக்கம். தமிழக அரசியல் களத்தில் எவ்வளவு முரண்பட்டவர்களும் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதை நினைத்துப் பார்க்கலாம். கூட்டணிகள் எப்படி மாறினாலும் அவர்களுக்குத் தொடர்ந்து மக்கள் வாக்களித்து வருகிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. தமிழர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த நாட்டிற்குச் செல்ல நேர்ந்தாலும் அவர்களால் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறிவிட இயலும். புற அழுத்தங்கள் எவ்வளவு இருப்பினும், அவற்றை வாழ்வியலுக்கு ஏற்ப உள்வாங்குவதில் அவர்களின் ஆற்றலை நாம் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும்.

அந்நிய மோகம்

பொதுவாகவே, எதிரெதிர் தன்மை கொண்டவர்களிடையே ஓர் ஈர்ப்பு எழுவது இயற்கையே. காந்தத்திலும்கூட எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கும். ஆனால், தமிழரின் தன்மை இதில் மிதமிஞ்சி இருப்பதாகவே தோன்றுகிறது. இந்திய சுதந்திரப் போரின்போதே, அந்நியத் துணிகளைத் தவிர்க்கத் தனி இயக்கத்தினைக் காந்தி தொடங்க வேண்டியிருந்தது. இன்றும் ஆங்கில மோகம், எங்கும் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் தமிழில் படித்தவரை விட, ஆங்கிலத்தில் படித்தவருக்கே வேலை கிடைக்கும் என்ற நிலை ஆழமாக உருவெடுத்துள்ளது.

சிவந்த நிறத்தவரைக் கண்டு மயங்குவதும் அந்நிறத்தைப் பெறத் தமிழ்ப் பெண்கள் பற்பல பசைகளைப் பூசித் திரிவதும் எங்கும் காணக் கூடியதாய் இருக்கிறது. திரைத் துறையில் சிவந்த நடிகர்கள் – நடிகைகளின் ஆதிக்கமே அதிகம். அவர்களே விளம்பரப் படங்களிலும் தோன்றுவார்கள்.

தொலைக்காட்சித் தொடர்களிலும் அதே நிலைதான். தமிழரின் சாதனைகளை வெளிநாட்டார் அங்கீகரித்த பிறகே தமிழர்கள் ஏற்பார்கள் என்ற நிலை உள்ளது.
தமிழரின் கலைகள், ஆடைகள், விளையாட்டுகள், இசை…. எனப் பலவும் நசிந்துள்ளன. இந்நிலையிலும் அயல் புலத்துக் கலைகள், ஆடைகள், விளையாட்டுகள், இசை ஆகியவற்றின் மீது அவர்களுக்கு நாட்டம் உள்ளது. இது, பெரும்பாலும் தகுதியை மதித்து நிகழவில்லை. அயல் மோகத்தினாலேயே நிகழ்ந்துள்ளது. தமிழரின் ஆங்கிலத்தில் ஒருவர் பேசினால், அவரை அறிவாளி எனக் கருதும் மனோபாவம் மேலோங்கியுள்ளது. இதனால், தம் பேச்சினிடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் வழக்கம், தமிழ்ச் சமூகம் முழுதும் ஆழமாகப் பரவிவிட்டது. இப்போது, அத்தகைய கலப்புத் தமிங்கிலமே இயல்பானதாகவும் கலப்பில்லாத் தமிழ் செயற்கையானதாகவும் மாறிவிட்டது.

அறத்தின் வீழ்ச்சி

‘தமிழ்ச் சமூக அடுக்குகளில் உள்ள பலரும் அறத்தின்வழி நிற்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்வும் அதற்கு ஒப்பவே இருக்கிறது’ என்ற உண்மையை என் இனிய நண்பர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எனக்கு உணர்த்தினார். எங்கும் இலஞ்சம், ஊழல், முறைகேடுகள், ஆக்கிரமிப்புகள், கையாடல்….. எனப் பெருகும் தீச்செயல்கள், அறத்திற்கு முற்றிலும் எதிரானவை. அரசியல் தலைவர்கள் எல்லா முறைகேடுகளின் சங்கமமாகவே மாறிவிட்டார்கள். மூன்று சக்கரத் தானியை ஓட்டுபவர் கூட, போகுமிடத்திற்குக் கூடுதலான கூலியைக் கோருகிறார். மீட்டருக்குச் சூடு வைக்கிறார். போய்ச் சேர்ந்த பிறகு கூடுதல் கட்டணம் கேட்டுத் தகராறு செய்கிறார். தன் வண்டியில் விட்டுச் சென்ற பையைக் காவல் நிலையத்தில் ஒப்படைப்பவரும் உண்டு எனினும் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உடல்நலனுக்கும் கேடு என அறிவித்துவிட்டு, அரசே அதை விற்கிறது. அரசு அலுவலகங்கள் பெரும்பாலானவற்றில் ஆதாயம் கருதி, கோப்புகள் அறிதுயில் கொள்கின்றன. காவல் துறையில் பொய் வழக்குகள், போலிப் பழிதீர்ப்புக் கொலைகள் (என்கவுன்டர்கள்), சிறைக்குள் மர்ம மரணங்கள்…. தொடர்கின்றன. நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. கல்வி, தெளிவாகவே வணிகமாகிவிட்டது. மக்கள், சர்வ சாதாரணமாக விதிகளை மீறுகிறார்கள். பலர் பிடிபடுபவதில்லை. பிடிபடுபவர்களையும் காப்பாற்ற, வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சட்டத்தைத் தேவைக்கேற்ப வளைக்கலாம். அப்படியே தண்டனை பெற்றாலும் மேல் முறையீடு இருக்கிறது. அதில் தவறினால், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சென்று படுத்துக்கொள்ளலாம் என இந்தச் சமூகம் கற்றுத் தருகிறது.

பணமே பிரதானம். அதைக் கொண்டு பதவிகளைப் பெறலாம். அவ்வாறே செல்வாக்கும் அதிகாரமும் பெறலாம். எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு….. இந்தக் கண்ணோட்டத்துடன் ஒரு தலைமுறை உருவாகிறது. பல திருமணங்கள், அன்பையும் புரிந்துணர்வையும் முன்னிறுத்தாமல் பணத்தை முன்னிறுத்தியே நிகழ்கின்றன. பிரதி பலன் எதிர்பாராமல் பலரும் எந்தச் செயலையும் செய்வதில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகள் மிக விரிகின்றன. எல்லாத் துறைகளிலும், எல்லா மட்டங்களிலும், எல்லாத் தருணங்களிலும் அறம் வீழ்கிறது. இந்தச் சமூகத்தில் குறுக்கு வழியில் செல்வதே வாழ்வதற்கான வழி என நேற்று பிறந்த குழந்தையும் உணரத் தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டினை முழுமையாக நம்புகிறேன். எனவே இந்த அபாயகரமான சூழலை எண்ணி, மனம் நடுங்குகிறது. திருக்குறளை உருவாக்கிய ஓர் இனம், அறம் பிறழ்ந்த வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக மாறிவிடலாமா? உண்மையும் நேர்மையும் நடைமுறை வாழ்வுக்குப் பயனற்றவை என்பதுதான் நம் சமூகம் கூறும் செய்தியா? இந்தப் பரிதாபத்திற்குரிய பந்தயத்தில் முந்திச் செல்வது யார் என்பதில்தான் போட்டியா?

அதிர்ச்சிகளையே உணர முடியாத அளவுக்குத் தமிழ்ச் சமூகம், மரத்துப் போய்விட்டதோ என்பதே என் ஐயம்.

இவற்றைச் சுட்டிக் காட்டுவது, எதிர்மறைத் தன்மையோடு அல்ல. இந்த நிலையை உணர்ந்து மக்கள் மாற வேண்டும் என்பதற்காகவே. ஆழ்துயில் கொள்ளும் மனச் சான்று சற்றே விழிக்குமானால், எட்டும் தொலைவிலேயே புதிய விடியல் கிட்டும். அக்கினிக் குஞ்சிலிருந்து காடுகள் வெந்து தணியும் என்பது நமக்குத் தெரியாதா, என்ன?

==================================
நன்றி – அகநாழிகை இதழ் 5 (செப் – நவ.2010) | வல்லமை.காம்

Sunday, October 03, 2010

பூங்காற்று தனசேகரின் புதிய பாதை



பூங்காற்று தனசேகர், எழுத்தாளர், கவிஞர், இதழாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். பூங்காற்று என்ற பத்திரிகையை நடத்தியதால், அந்தப் பெயராலேயே அழைக்கப்பெற்றார். முதல் காதல் கவிதை என்ற கவிதைத் தொகுப்பு, மகாராஜாவுக்குப் பசிக்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு உள்பட பல நூல்களைப் படைத்தவர். மாலைச் சுடர், தமிழரசி, புதிய பார்வை, அரும்பு, ஜெயா தொலைக்காட்சி உள்பட ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியவர்.

பல ஆண்டுகளாக இவருக்குக் குடிப் பழக்கம் இருந்துவந்தது. அது, பல தீவிர எல்லைகளைத் தொட்டதும் உண்டு. இந்நிலையில், குடும்பத்தினரும் நண்பர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தியதன் பயனாக, இப்போது குடிப் பழக்கத்தை விடுவது என்ற திடமான முடிவினை எடுத்துள்ளார்.

நான் கடந்த வாரம் அவரைச் சந்தித்த போது, 10 நாட்களாக மதுவிலிருந்து விலகியிருப்பதாகக் கூறினார். இது, உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த முடிவு. இதற்காக அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இந்த முடிவில் அவர் நிலைத்து நின்று, குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் என்பது என் நம்பிக்கை.

மதுவின் பிடியிலிருந்து ஒருவர் விலகியுள்ளார் என்ற நற்செய்தியை, மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அறிவிப்பது, மிகவும் பொருத்தமானது.

மேற்கண்ட புகைப்படம், பூங்காற்று தனசேகரின் 'முதல் காதல் கவிதை' நூல் வெளியீட்டு விழாவின் போது (2004-05) எடுத்தது. இதில் இசையமைப்பாளர் தினா வெளியிட, நானும் கவிஞர்கள் குகை மா.புகழேந்தி, இளையகம்பன் ஆகியோரும் இணைந்து பெற்றுக்கொண்டோம். படத்தில் இயக்குநர் ராசி.அழகப்பன் உள்ளார். இந்தப் படத்தில் நடுநாயகமாக, கோடு போட்ட சட்டையில் இருப்பவர், பூங்காற்று தனசேகர்.

புதிய பாதைக்குத் திரும்பியிருக்கும் பூங்காற்று தனசேகரை  வாழ்த்துங்கள். இவரின் செல்பேசி எண்: 91-9380641397

==============================
நன்றி - http://www.vallamai.com/?p=1026

Tuesday, September 21, 2010

அப்பா டக்கர் என்றால் என்ன?

(திவாகர் - அண்ணாகண்ணன் இடையே நிகழ்ந்த சிறு அரட்டை)

diwakar.k: hi, one doubt. what is "appa takkar" in tamil

Anna: usage in which sentence?

diwakar.k: i've listen through one movie

Anna: ஆஹா அருமை என்பது போல் இருக்கலாம்

diwakar.k: no it comes like this
"nee enna avvalo peria appa takkar aaaaaa"

Anna: டாப் டக்கர் எனக் கேள்விப்படுகிறோம் இல்லையா? அதில் டாப் என்பதை அப்(UP) என்று கொண்டால், UPஆ, டக்கரா? எனக் கேட்கலாம்.

diwakar.k: sir super sir

Anna: :-)

diwakar.k: but its a single word... appatakkar

Anna: முதலில் அப்படி ஆரம்பித்து, பின்னர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.

diwakar.k: ok.

Anna: 'ஹப்பா டக்கர்' என்பதே பின்னர், 'அப்பா டக்கர்' ஆகியிருக்கலாம்.


Sent at 5:04 PM on Monday | 20.09.2010

Thursday, September 02, 2010

சென்னைக் கீற்றுகள்

Annakannan

அண்மையில் சென்னையில் நான் பங்கேற்ற நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பதிகிறேன்

========================================

சென்னை பெரியார் திடலில் 26.08.2010 அன்று  நிகழ்ந்த பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1794ஆம் நிகழ்வுக்குச் சென்றேன். ஒரிசா சிவ.பாலசுப்பிரமணியன் பி+, ‘குமரிக் கண்ட கடலியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் காட்சியுரையுடன் பேசினார். கடலில் தமிழர் நிலத்தின் பல பகுதிகள் மூழ்கியுள்ளன என்றும் அது தொடர்பான தம் ஆய்வின் வளர்ச்சிப் போக்குகளையும் எடுத்துரைத்தார். கடலில் ஆமைகளைப் பின்தொடர்ந்து தமிழர்கள் சென்றனர் என்றார். உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைச் சான்று காட்டினார்.

மக்களின் நம்பிக்கைகளையும் பதிந்தார். தேரி மண் கொண்ட மக்களிடம் உங்கள் மண் ஏன் சிவந்துள்ளது எனக் கேட்டதற்கு, கடலில் உள்ள ஒரு தீவு பொசுங்கியதால் அந்த வெப்பத்தில் இந்த மண் சிவந்துவிட்டது எனக் கூறினார்களாம். தமிழகக் கடலோரத்தை ஒட்டி, எரிமலை இருந்ததற்கான வாய்ப்புகளை மறுக்க இயலாது என்றார்.

========================================

சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 28-08-2010 அன்று நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கில் பங்கேற்றேன். காட்சியுரையுடன் சொற்பொழிவு்கள் அமைந்தன. கட்டற்ற மென்பொருள்களை அடுத்து எந்தெந்தத் துறைகளுக்கு விரிவாக்கலாம் என மா.சிவகுமார் அடையாளம் காட்டினார். குமரகுருபரர் கல்லூரி மாணவர்கள் தமிழ் சார்ந்த சில திட்டங்களை மேற்கொண்டு வருவதை முனைவர் முத்துக்குமார் கூறினார்.

உரை-ஒலி, ஒலி-உரை மாற்றி, எழுத்துணரி, எழுத்துப் பெயர்ப்பு – மொழிபெயர்ப்பு, கட்டற்ற தமிழ்த் தரவு…. உள்ளிட்ட தலைப்புகளில் பலரும் உரையாற்றினர்.  ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் (ஆமாச்சு) ஒருங்கிணைத்தார்.  என் ஆலோசனைகள் சிலவற்றையும் வழங்கினேன்.

இந்த நிகழ்வு தொடர்பான நிழற்படங்கள் இங்குள்ளன:

* http://www.flickr.com/photos/saga123/archives/date-taken/2010/08/28/

* http://picasaweb.google.com/viky.nandha/TamConf?authkey=Gv1sRgCOOSg5aGjfnyjAE

========================================

எழுத்தாளர், நண்பர் ஜெயகுமார் (கார்கில் ஜெய்) – ஜெயலட்சுமி (ஜெயா) ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னை நங்கநல்லூரில் 2010 ஆகஸ்டு 28 அன்று மாலை நடைபெற்றது. நான் நேரில் சென்று வாழ்த்தினேன். 29 அன்று காலை இவர்களின் திருமணம் நடைபெற்றது. இளம் இசைக் கலைஞர் ஒருவர் சிறப்பாகக் கீபோர்ட் வாசித்தார்.

========================================

எழுத்தாளர், நண்பர் ஜே.எஸ்.ராகவனின் மகன் பாலச்சந்தர் – கிருத்திகா ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னையில் 30.08.2010 அன்று நடந்தது. என் அம்மாவுடன் நேரில் சென்று வாழ்த்தினேன். அடாது மழை பெய்தாலும் விடாது சென்று வாழ்த்தினோம். நண்பர்கள் பலரையும் சந்தித்து மகிழ்ந்தேன்.

========================================

எழுத்தாளரும் ஊடக நண்பருமான இரா.நாகப்பனின் தங்கை ரேவதி – பூபாலசந்திரன் ஆகியோரின் திருமணம், 27.08.2010 அன்று நடந்தது. அதற்கு நேரில் செல்ல இயலாமையால், 30.08.2010 அன்று, அவர்களின் வீட்டிற்குச் சென்று நானும் என் அம்மாவும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

========================================

அம்பத்தூர் கம்பன் கழகத்தி்ன் 20ஆம் நிகழ்ச்சி, 31.08.2010 அன்று மாலை நிகழ்ந்தது.

முனைவர் சங்கீதா பழனி, ‘இளைஞர்க்குக் கம்பன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். குடி இன்பமே குடும்பம் ஆயிற்று எனப் போகிற போக்கில் கூறிச் சென்றது, புதுமை. அன்பு, ஒழுக்கம், விருந்தோம்பல்… உள்ளிட்ட சிலவற்றைக் கம்பனிடமிருந்து இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என எளிய கதைகளுடன் பேசினார்.

பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ‘கம்ப சூத்திரம்’ என்ற தலைப்பில் சொற்பெருக்கு ஆற்றினார்.  கம்பன், முடிச்சினை ஓரிடத்தில் இட்டுவிட்டு, அதனை அவிழ்க்கும் விதத்தினை ஆறாயிரம் பாடல்களுக்கு அப்புறம் வைத்துள்ளான் என்றார். இதற்குச் சில எடுத்துக்காட்டுகளையும் அழகுற விரித்துரைத்தார். கம்ப ராமாயணத்தை உரை வழியே அல்லாது. மூலத்தி்ல் படித்துப் புரிந்துகொள்ளும் தம் வழக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.
மண் என்பது இறுகியது; அவ்வாறு அல்லாதது (மண் + அல்) மணல்; ஊழ் என்பது விதிப்படி நடப்பது; விதிப்படி அல்லாதது (ஊழ் + அல்) ஊழல் என்ற அவரின் விளக்கம் அருமை.

அது போன்றே, சத்தியம் என்பது இயல்பாக இருப்பது. அதனை வாயால் உரைப்பது வாய்மை; உள்ளத்தால் உரைப்பது உண்மை; மெய்யால் (அதாவது செயலால்) உரைப்பது மெய்மை என்றார். வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே சத்தியம் என்பதை எளிமையாக விளக்கினார்.


கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன், வரவேற்புரை ஆற்றினார். செல்வி சரண்யா இறை வணக்கம் இசைத்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பர்வீன் சுல்தானா பரிசுகளை வழங்கினார்.

========================
http://www.vallamai.com/?p=688

யோசனை 7: திருமண மண்டப வாயிலில் வாழை மரங்கள்

(அகவழி 7)

விழாக்களின் போது, வாயிலில் வாழை மரத்தினைக் கட்டுவது, தமிழர் வழக்கம். வீடுகளிலும் ஆலயங்களிலும் திருமண மண்டபங்களிலும் தொழிலகங்களிலும் இன்னும் விழாக்கள் நிகழ்கிற எல்லா இடங்களிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது.

திருமணம் நிகழ்கிற இடங்களில், கன்றுகள் ஈன்று, குலை தள்ளிய வாழையினைக் கட்டுவது, ஒரு குறியீடாகக் கருதப் பெற்றிருக்கலாம். இந்த வாழையினைப் போன்று, மணமக்களும் பிள்ளைகள் பெற்று, வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழட்டும் என்ற வாழ்த்தாகவும் அது இருக்கலாம். நாளடைவில் இந்த வழக்கம், திருமணத்தினைத் தாண்டி, அனைத்துச் சுப நிகழ்ச்சிகளுக்குமாக நீண்டிருக்கலாம்.

குலை தள்ளிய வாழையினை கட்ட வேண்டும் என்ற மரபினை மீறி, ஆயுத பூஜையின் போது, இரு சக்கர வாகனங்கள், மகிழுந்து, பொதியுந்து.... உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளின் வாழைக் குருத்துகளைக் கட்டி வைக்கிறார்கள். இது, முன்னோரின் நோக்கத்திற்கு மாறானது. இத்தகைய செயல், வாழையை வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறது.

வீடுகள், தொழிலகங்களில் எப்போதாவது ஒரு முறைதான் விழா நிகழ்கிறது. ஆனால், திருமண மண்டபங்களில் நாள்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே நாள்தோறும் புதிதாக வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டி வைக்கிறார்கள். முதல் நாள் கட்டப்பெற்ற வாழை மரமானது, அடுத்த நாள் ஒரு குப்பையாக வீசப்படுகிறது. பெரும்பாலும் தெருவில் திரியும் மாடுகள், அவற்றின் இலைகளைத் தின்னுகின்றன.

இந்த வாழை மரங்களை அவை வளர்ந்த இடத்திலிருந்து வெட்டி, திருமண மண்டபத்திற்குக் கொண்டு வரும் காட்சியை நீங்கள் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். டிரை சைக்கிள் எனப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் படுக்கை வாட்டில் வைத்துக் கட்டப்படும். வாழையிலைகள் கொண்ட தலைப்பகுதி, வண்டியை விட்டு வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை தரையில் தேய்ந்தபடி, புழுதியில் புரண்டபடி, அலங்கோலமாக வந்து சேரும். பிறகு, அவற்றைத் தூக்கிக் கட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். இப்படித்தான் அந்த மங்கலச் சின்னம், எல்லோரையும் வரவேற்க வருகிறது.

வாயிலில் துவார பாலகர்களைப் போல நிற்கும் இவை, எவ்வளவு ரணங்களைத் தம்முள் கொண்டிருக்கும் என எளிதில் கணிக்கலாம். கால் வெட்டப்பட்டு, உடல் கட்டப்பட்டு, இலை கிழிந்து நிற்கிற இவை, ஒரு சடங்காக அன்றோ மாறிவிட்டன?

இதற்கு மாற்று வழி என்ன எனச் சிந்தித்தபோது, இந்த யோசனை பிறந்தது.

திருமண மண்டபங்களின் வெளியே, முதன்மை வாயிற் கதவின் ஓரத்தி்ல், நிலையாக இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து விடலாமே! அவை எல்லா நாட்களிலும் மங்கலச் சின்னமாகத் திகழுமே! தன் கன்றுகளோடு அவை மகிழ்ந்து சிரிக்குமே! இதன் மூலம் அவற்றுக்கு விலை தந்து, வெட்டி, தரதரவென இழுத்துவந்து, வாயிலில் கட்டும் கொடுமையும் நிகழாது; அதற்கென நேரமும் பணமும் உழைப்பும் செலவிடவும் வேண்டாமே!

மாடுகள் வந்து தின்னாவண்ணம், ஒரு வேலியிட்டால் போதும். வாசல் தெளித்துக் கோலம் போடும்போதே, அதற்கும் சிறிது நீர் வார்த்தால் போதும். அல்லது, மண்டபத்தின் கால்-கை கழுவும் தண்ணீரையும் அவற்றில் சேரச் செய்யலாம். இதன் மூலம், கழிவு நீரை அப்புறப்படுத்தும் செலவிலும் சிறிது குறையும். முற்றிய பிறகு அந்த மரத்தின் இலை, பழம், நார்... என அனைத்தையும் மண்டபத்தினரே பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து மண்டபத்தினர் சிந்திப்பார்களா?

நன்றி: சென்னை லைவ் நியூஸ்

================================
முந்தைய யோசனைகள்:

யோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது?

யோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க

யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்

யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்

யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?

யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்

Friday, August 20, 2010

பொதிகைக் கலந்துரையாடலின் விழியப் பதிவு

பொதிகை தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டினை ஒட்டி, 'வாழிய செம்மொழி' என்ற தலைப்பில், 'இளைஞர்களும் தமிழும்' என்ற கருவில், சிறப்புக் கலந்துரையாடல், 15.06.2010 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், த.இராமலிங்கம், அண்ணாகண்ணன். இதோ அதன் விழியப் பதிவு.


நேர அளவு - 48 நிமிடங்கள் 

நன்றி - பொதிகை தொலைக்காட்சி

Wednesday, August 11, 2010

சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன்.


இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார்.



இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.


“விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,
எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”

என்ற பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். எனவே பரிபாடல், 3 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் திருவள்ளுவரின் ‘அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து’, இளங்கோவடிகளின் ‘திங்களைப் போற்றுதும்’, ‘ஞாயிறு போற்றுதும்’, மாணிக்கவாசகரின் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’,  ஆண்டாளின் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’… உள்ளிட்ட பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

சிவன் உருவில் பிரபஞ்சத் தோற்றம் வரையப்பெற்றதாகப் படத்துடன் விளக்கினார். கோயில்களில் நவகிரகங்களை உருவாக்கிய பண்டைத் தமிழர்கள், சிறந்த வானவியல் அறிவு பெற்றிருந்தனர் என்றார். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கூறினார்.

தலைமையுரை நிகழ்த்திய நெல்லை சு.முத்து, தாம் இது வரை 103 நூல்கள் எழுதியிருப்பதாகக் கூறினார். அவற்றுள் 50க்கும் மேற்பட்டவை அறிவியல் நூல்கள் என்றார்.


‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற சங்க இலக்கிய வரிகளைச் சுட்டிய இவர், இந்த ஆளில்லா வானூர்தி என்பது, விமானம் போன்றது என்பதை விட, ஏவூர்தி (ராக்கெட்)யாக இருக்கலாம் என்றார்.

‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற தொடரை விளக்கிய இவர், அருந்ததியைப் பகலில் பார்க்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் இரவில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளதை இவ்வரியின் மூலம் அறியலாம். மேலும் அருந்ததி என்ற விண்மீன் மிகச் சிறியது. எனவே அதை ஒருவர் பார்க்க முடியுமானால், அவரின் கண் பார்வை கூர்மையாக உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்பதற்காக இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம் என்றார். உடு மண்டலம் உள்ளிட்ட சில நல்ல தமிழ்ச் சொற்களை நினைவூட்டினார்.

பட்டிமன்றத்தின் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்ற, புலவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி நவின்றார்.

சிறப்புரை நிகழ்த்திய ஐயம்பெருமாள், ‘சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சங்க காலத்தைத் தாண்டியும் அவர் சான்றுகள் உரைத்தார். இது, தலைப்பினை விட்டுச் சற்றே வெளியே சென்றது போல் இருந்தது.

பரிபாடலின் அந்தப் பாடல், 7ஆம் நூற்றாண்டு என இவர் உரைக்க, இராம.கி. வேறு ஒரு குறிப்பினை அவர் வலைப்பதிவில் காட்டியுள்ளார்.

இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா: வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று சொல்லுவதாக 1969இல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற் பதிப்பு கூறுகிறது.
http://valavu.blogspot.com/2008/01/6.html
எனினும் இத்தகைய ஆராய்ச்சிகளும் விவாதங்களும் வரவேற்கத் தக்கவை.

படங்கள்: அண்ணாகண்ணன்.

Monday, August 09, 2010

திருப்பூர் கிருஷ்ணனின் நகைச்சுவை முத்துகள்

அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்தி வருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடந்தது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்மிகு எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர், 'சிலேடைச் செல்வம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். ஏராளமான இலக்கிய, வரலாற்று, சமூகக் குறிப்புகள் அவர் உரையில் கிடைத்தன.

"வாமன அவதாரத்தில் இருந்தவர், விஸ்வரூபம் எடுத்த போது, அவர் போட்டிருந்த ஆடைகளும் வளர்ந்தனவா என ஒருவர் கேட்டார். தெரியவில்லையே என அடுத்தவர் கூற, ஆடைகள் வளரவில்லை; உடல்மட்டும்தான் வளர்ந்தது; இதற்கு இலக்கியச் சான்று உள்ளது என்றாராம். என்ன அந்தச் சான்று எனக் கேட்க, 'ஓங்கி உலகளந்து உத்தமன் பேர்பாடி' என்ற பாடலே இதற்குச் சான்று. பேர்பாடி (Bare body) என்பது, வெற்றுடம்பைத்தானே காட்டுகிறது என்றாராம்.

"சிலேடையை மொழிபெயர்க்க இயலாது. கயா கயா கயா என்ற வாக்கியத்திற்குக் கயா என்பவன் கயாவுக்குப் போனான் என்பது பொருள். இதை வேறு எந்த மொழியிலும் பெயர்க்க இயலாது.

"சங்க இலக்கியத்தில் சிலேடை இல்லை. இடைக்காலத்தில் தான் அதன் வீச்சு, உச்சத்தில் இருந்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவேங்கடத்தந்தாதி என்ற நூலில் 100 பாடல்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு பாடலிலும் இரண்டாம் சீர் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அந்தச் சொல்லைப் பிரித்தால் வெவ்வேறு பொருள் தரும். சிலேடை என்பது, ஒரே சொல்லுக்கு இரு பொருள்கள் தருவது. ஆனால் இதுவோ, ஒரே சொல்லுக்கு நான்கு பொருள்கள் தருவது. இது, சிலேடையில் அசுர சாதனை ஆகும்.

"விநோத ரஸ மஞ்சரி என்ற உரைநடை நூல், நகைச்சுவை அம்சம் கொண்டது. அதன் மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதனைப் படித்து மகிழ வேண்டும்.

"ரெயிலில் ஒரு முறை ஒரு பாட்டி, வெற்றிலையைக் குதப்பியபடி பயணி்த்தார். அவருக்கு எதிரில் இளம் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் அந்தப் பெண் சற்றே கண்ணயர, ஜன்னல் வழியே காற்று வீசியது. அதில் அந்தப் பெண்ணின் துப்பட்டா வெளியே பறக்கத் தொடங்கியது. உடனே அந்தப் பெண்ணை எழுப்பிய பாட்டி, துப்பட்டா, துப்பட்டா எனக் கூறினார். அவர் வெற்றிலை மெல்வதைக் கண்ட பெண், துப்ப வேண்டியது தானே, என்னை ஏன் கேட்கிறீர்கள் என வினவ, அதற்குள் துப்பட்டா பறந்தே போனது."

இவ்வாறு பேசி வந்த அவரது உரையில் காளமேகம், கி.வா.ஜ., நா.பா., நா.காமராசன், சாவி, கண்ணதாசன், கலைஞர், சுப்புடு, செம்மங்குடி சீனிவாச ஐயர்.... உள்ளிட்ட பலரின் சிலேடைகளும் சமத்காரங்களும் ஒளிர்ந்தன. தம் வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றையும் எடுத்துரைத்தார்.

காதியில் தள்ளுபடியுடன் கதர் வேட்டி எடுக்கச் சென்ற திருப்பூர் கிருஷ்ணன், வெவ்வேறு நிறங்களில் கறையி்ட்ட 5 வேட்டிகளைத் தேர்ந்தெடுத்தார். அதனைக் கட்டி வைத்தனர். அதே போன்று இன்னொருவரும் 5 வேட்டிகளைத் தேர்ந்தெடுக்க, அவற்றையும் கட்டி வைத்தனர். பணம் கட்டிய பின் தமக்குரிய கட்டுகளை எடுக்கவேண்டிய நேரம். ஒரே அளவான கட்டாக இருந்ததால், திருப்பூர் கிருஷ்ணனின் கட்டினை அந்த நபர் எடுக்கச் சென்றார். உடனே கல்லாவில் இருந்தவர், வேட்டி அவுருதுங்க என்றார். அதற்கு அவர், அடடா, இன்று பெல்ட் சரியாகப் போடவில்லை எனச் சரி செய்யத் தொடங்கினார். பிறகு தான், வேட்டி அவருடையது என விளங்கிக்கொண்டார். இவ்வாறு சொந்த வாழ்விலும் சிலேடைகள் தோன்றுவதுண்டு.

திருப்பூர் கிருஷ்ணன், தம் மனைவி ஜானகி, மகன் அரவிந்த் ஆகியோருடன் வந்திருந்தார். என் பேச்சை என் மனைவி கேட்டார் என நான் சொல்லிக்கொள்ளலாம் இல்லையா? அதற்காகத்தான் அழைத்து வந்தேன் என அதிலும் ஒரு சிலேடையை எடுத்து விட்டார். அவர் மனைவி, கேந்திரிய வித்தியாலயா என்ற பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார்.

நகைச்சுவைச் சங்க உறுப்பினர்கள் பலரும் சிரிப்பு வெடிகளை வீசினர். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஜோ என்ற ஒருவர் வந்தார். "திருப்பூர் கிருஷ்ணன், பழம்பெரும் எழுத்தாளர்" என்றார். அடுத்த நொடி, ஒரு வாழைப் பழத்தை எடுத்து, திருப்பூர் கிருஷ்ணன் கையில் கொடுத்து, "இதோ பழம் பெறும் எழுத்தாளர்" எனக் கூறியது ஏகப் பொருத்தம்.

எழுத்தாளர்கள் கே.ஜி.ஜவஹர், நகுபோலியன் என்ற பாரதி பாலு, பழ.பழனியப்பன், கிளிக் ரவி ஆகியோருடன் நானும் நகைச்சுவைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்த நிகழ்வில் என் அம்மா செளந்திரவல்லி, என் அக்கா மகன் அரவிந்த் ஆகியோருடன் சென்றிருந்தேன். கிளிக் ரவி கூறிய நகைச்சுவைக்கு முதல் பரிசு அளித்தனர். நான் கூறிய நகைச்சுவைக்கு இரண்டாம் இடம். நகுபோலியனின் நகைச்சுவையும் பலே.

நகைச்சுவை வழங்கிய அனைவருக்கும் எழுதுகோல் பரிசாக வழங்கப்பெற்றது. இன்னும் சிலருக்கு விளையாட்டுப் பொருட்களும் நூல்களும் பரிசாகக் கிடைத்தன. வந்திருந்த அனைவருக்கும் சூடான சுண்டல் பரிமாறினர்.

இலட்சுமி நாராயணன் கீபோர்டு இசை வழங்க, சரண்யா அழகாகத் தொகுத்து வழங்க, சங்கப் பொறுப்பாளர் சிரிப்பானந்தா கலகலப்புடன் நன்றி நவின்றார். இறை வணக்கத்திற்குப் பதில், அரங்கில் அனைவரும் கூட்டாகச் சிரிக்க, விழா தொடங்கியது. அதே போன்று, அனைவரும் கூட்டாகச் சிரிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

http://www.vallamai.com/?p=422

Sunday, July 25, 2010

தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம்

Thanimai - A play
ஓர் இரண்டு மணி நேர நாடகம், பார்வையாளரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம். நாடகம் முடிந்த பின்னும் நிமிர்ந்து நடக்க வைக்க முடியுமா? முடியும் என்று காட்டியது, ‘தனிமை’ என்ற நாடகம். ஆனந்த் ராகவ் கதையை எழுத, தீபா ராமானுஜம் இயக்க, அமெரிக்கத் தமிழர்கள் நடிக்க, இந்த ரசவாதம், அரங்கில் நிகழ்ந்தது.

சென்னையில் 24.07.2010 அன்று மாலை. வார இறுதி என்றபோதும் தி.நகர் வாணி மகாலில் நிறைவான கூட்டம். 7 மணிக்குச் சரியாக நாடகம் தொடங்கியது.

அமெரிக்காவுக்குச் செல்லும் மகனும் மகளும் அப்பாவிடம் விடைபெறுகிறார்கள். அவர்கள் சென்றதும் அப்பா மணி, தனிமையில் விடப்படுகிறார். 70 வயதில் அவருக்கு உடல் உபாதைகளுடன் தனிமையும் சேர்ந்துகொள்ள மிகவும் வருந்துகிறார். பழங்கால நினைவுகளில் மூழ்குகிறார்.

அந்தக் காலக் கூட்டுக் குடும்ப வாழ்வில் வீடு முழுக்க மனிதர்கள். புதிதாகத் திருமணம் ஆன மணிக்கு மனைவியிடம் தனிமையில் பேசக்கூட இயலவில்லை. இந்தச் சூழலில் சென்னையில் மணிக்கு வேலை கிடைக்கிறது. இதுதான் சாக்கென்று குடும்ப உறவுகளை விட்டுப் பிரிகிறான். எல்லோருக்கும் ஒரே உணவு; ஒரே உடை; எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது ஆகியவற்றை விமர்சிக்கிறான். எதிர்ப்புகளைத் தாண்டி, மனைவியுடன் சென்னையில் தனிக் குடித்தனம் வைக்கிறான். படிப்படியாக அவனது குடு்ம்பம் கலைகிறது. அப்போது மணியின் அம்மா, ‘மணி, இப்போ வேண்டாம்னு நினைக்கிற மனிதர்கள், நீ கழி ஊன்றி நடக்கிற போது, வேண்டியிருப்பார்கள்’ எனச்  சொல்கிறாள். அதை மணி இந்த 70 வயதுத் தனிமையில் நினைத்து வருந்துகிறார். முதுமையின் அனைத்து அவதிகளையும் அனுபவிக்கிறார்.

அப்போது தான் அவருக்குப் புதிய நண்பர் கிடைக்கிறார். அவர், மும்பையில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். சமூக சேவைகளில் ஈடுபடுபதோடு, நாடகங்களும் போடுகிறார். அவர் மணியை மாற்றுகிறார்.

முதலில் இந்தக் கழியைத் தூக்கிப் போடுங்கள், நிமி்ர்ந்து உட்காருங்கள் என்கிற அவர், மணியை யோசிப்பதற்குக்கூட நேரமி்ல்லாதபடி வேலைகளில் ஐக்கியமாகச் சொல்கிறார். அவர் ஆலோசனைப்படி, 20 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்து, 5 ஆண்டுகள் பங்குச் சந்தையிலும் அனுபவம் பெற்ற மணி, பங்குச் சந்தையின் புதிய தரகர் ஆகிறார். அவரின் வாடிக்கையாளர்கள் வட்டம் வேகமாக விரிகிறது. வெளியே பெரிய பெயர்ப் பலகை; வேலைக்கு இரண்டு ஆட்கள்; தினந்தோறும் பலரின் வருகை என வீடு களை கட்டுகிறது.
இப்போது, மணி நிமி்ர்ந்து நடக்கிறார். அவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. ‘யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி’ என்ற பாடலுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடனம் ஆடுகிறார். வெளிநாட்டிலிருந்து பேசும் மகனிடம், இப்போது பிஸி. பிறகு பேசுகிறேன் என்கிறார்.

மணியின் மனப்பாங்கு மாறியதும் இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. இவ்வாறு மணியைத் தூண்டிவிட்ட பேராசிரியர், மீண்டும் மும்பை செல்கிறார். இப்போது மணி மீண்டும் தனிமையைச் சந்திக்கிறார். ஆனால், சோர்வாக இல்லை; தன்னம்பிக்கையுடன். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் ஏக உற்சாகம். அதிலிருந்த நிகழ்கால முதியோரும் எதிர்கால முதியோருக்கும் பிரமாதமான செய்தி. புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் பொங்குகிறது.

ஒரே மேடையை இரண்டாகப் பிரித்து, மணியின் முதுமைக் கால நிகழ்வுகள் ஒரு புறமும் இளமைக் கால நினைவுகள் இன்னொரு புறமும் நிகழும் விதமாக அமைத்திருந்தார்கள். ஒலி-ஒளி அமைப்புகள், சரியாக இருந்தன. நடிகர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள். மிகச் செம்மையாக, பாத்திரத்துடன் ஒன்றி, இயல்பாக நடித்திருந்தார்கள். காட்சி மாறும் போது, பாத்திரங்கள் அப்படி அப்படியே உறையும் விதம், மிக அருமை.

Deepa Ramanujam

Anand Raghavஇளமைக் கால நிகழ்வுகளில் வரும் மணியின் மனைவி, ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை இனிமையாகப் பாடினார். சித்தப்பாவின் சிகரெட் நகைச்சுவை நன்று. அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம், மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறப்பாக இயக்கியும் இருந்தார்.

ஆனந்த் ராகவின் வசனங்கள், கூர்மையாக இருந்தன. ஐஸ்வர்யா ராய் 60 வயதில் எப்படி இருப்பாள் என்று பார்ப்பதற்காகவாவது நான் இன்னும் 30 வருடங்கள் இருக்க வேண்டும் என மணி கூறுவது வெறும் நகைச்சுவை இல்லை. வாழ்க்கை போதும் என இருந்தவர், வாழ வேண்டும் என மாறியதற்கான சான்று.

பெற்றோரை விட்டுவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டுக்குச் செல்வதை மணி குறிப்பிட்டு, இனி என்னை யார் பார்த்துக்கொள்வார்? எனக் கேட்கிற போது, அவர்கள் பார்த்துக்கொள்வார் என நினைத்தா பெற்றுக்கொண்டீர்கள்? எனப் பேராசிரியர் கேட்கிறார். உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்றும் வலியுறுத்துகிறார். இன்றைக்கு எங்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு வாழ வேண்டிய சூழல் நம் பிள்ளைகளுக்கு இருக்கிறது. நமக்காக அவர்கள், அதனை இழக்க வேண்டுமா? அப்படிக் கேட்பது, நல்ல பெற்றோருக்கு அழகா? எனப் பேராசிரியர் கேட்பது, இக்காலப் பிள்ளைகளைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கக்கூடிய வசனம்.

அமுதசுரபி தீபாவளி மலரில் (2004) ‘விழிப்பாவை‘ (http://annakannan-kavithaigal.blogspot.com/2005/08/blog-post_11.html) என்ற நீண்ட கவிதையை எழுதியிருந்தேன். அதில் ஒரு பாடல் இது:

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

தனிமை விரியும் முதுமையின் மேன்மையை இந்தத் தனிமை என்ற நாடகம், மென்மையாய் மீட்டியது.

இந்த நாடகம் நிகழ இருப்பதைச் சொன்னதும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராசன், உடனே வருவதற்கு ஒப்புக்கொண்டார். தம் மனைவியுடன் வந்து சிறப்பித்தார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், முன்னிலை வகித்தார். நடிகர் நகுல், கூத்தபிரான், பாத்திமா பாபு… உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிகழ்வினை அலங்கரித்தார்கள்.

கிரியா கிரியேஷன்ஸ் (http://www.kreacreations.com), இந்த நாடகத்தை அமெரிக்காவில் மூன்று முறைகள் நடத்திய பிறகு, சென்னையில் ஏழு முறைகள் நடத்தியது. நாடகத்தில் நடித்த அனைவரும்  தங்கள் சொந்தச் செலவில் அமெரிக்காவிலிருந்து வந்து நடித்துள்ளார்கள். இதே குழுவினர், இதற்கு முன்பு ‘சுருதி பேதம்’ என்ற நாடகத்தினையும் நிகழ்த்தினார்கள். இத்தகைய தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் தமிழ் நாடகக் கலை, இன்னும் பிழைத்திருக்கிறது. தக்க ஊக்கமும் உதவிகளும் அளித்தால், இவர்களால் தமிழ் நாடக உலகம் தழைக்கும்.

http://www.vallamai.com/?p=312

செம்மொழி மாநாட்டின் உதவித் தட எண்: 7373000000

செம்மொழி மாநாட்டின் அவசர உதவிக்காகப் பின்வரும் உதவித் தட எண்கள் அறிவிக்கப்பெற்றன:

7373111111
7373666666
7373222222
7373444444
7373001001
7373000002
7373000000

இவை ஏர்செல் நிறுவன எண்கள். இவற்றுள் 7373000000 என்ற எண், 'தமிழ் வளர்க்க வந்தோருக்கு வழிகாட்டி' என்ற அறிவிப்புடன் பல இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளின் பின்புறங்கள், தட்டிகள், அறிவி்ப்புப் பலகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் எனப் பல இடங்களிலும் இந்த எண்களைக் காண முடிந்தது.

இந்த எண்கள், மிக உதவிகரமாக இருந்தன. நான் 7373000000 என்ற எண்ணை அழைத்து, என் தேவையைச் சொன்னபோது, அதற்குத் தக்க தீர்வு உடனே கிட்டவில்லை என்ற போதும், இன்னொரு எண்ணைத் தந்து பேசச் சொன்னார்கள். நம் பிரச்சினைக்குத் தீ்ர்வு கிடைக்கிறதோ, இல்லையோ, நாம் கேட்பதற்கு ஓர் இடமாவது இருக்கிறது என்ற நிறைவு, பலருக்குக் கிட்டியிருக்கும்.

என் கேள்வியெல்லாம், இதுதான். மாநாடு முடிந்த பின், ஏன் இந்த எண்ணைக் கைவி்ட்டீர்கள்? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, குறிப்பிட்ட கால இடைவெளியில்  நடக்க உள்ளது; இதற்கென மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைய உள்ளது. மரபணுப் பூங்கா, புத்தக வெளியீடு, ஆவணக் காப்பகம், அறிவியல் தமிழ் மேம்பாடு, தமிழ் மொழிபெயர்ப்புகள்,....... என ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

அப்படி இருக்க, இவை பற்றிய செய்திகளை மக்கள் தொடர்ந்து அறியும் வண்ணம், இந்த உதவித்தட எண்களை அப்படியே வைத்திருக்கலாமே. குறைந்தபட்சம் 7373000000 என்ற எண்ணையாவது, செம்மொழித் தமிழுக்கான நிலையான உதவித் தட எண்ணாக வைத்திருக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவி்ல்லை. அந்த எண்ணை மீட்டு, செம்மொழிக்கு ஒதுக்க ஆவன செய்யலாம்.

பொருளாதார நோக்கில், அந்த எண்ணைப் பிரபலப்படுத்த ஆன செலவு, எடுத்துக்காட்டுக்கு ரூ.10 இலட்சம் எனில், ஒரு மாதம் மட்டுமே அந்த எண் பயனில் இருக்குமானால், ஒரு மாதத்திற்குப் பிறகு, ரூ.10 இலட்சத்தின் பயன் முடிந்ததாகப் பொருள். இதே எண்ணைச் செம்மொழித் தகவல்களுக்கு என நிரந்தரமாக ஒதுக்கினால், ரூ.10 இலட்சத்தின் பயன் நீடிக்கிறது என்று பொருள்.

கி்ட்டிப்புள் ஆட்டத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு. கில்லித் தண்டினைக் கொண்டு, புள்ளினைத் தட்டி, அந்தரத்தில் எழுப்பி, ஒரு முறை தட்டினால் ஒரு கில்லியாகும். அந்தப் புள்ளினைக் கீழே விழ விடாமல் மீண்டும் மீண்டும் தட்டினால், பல கில்லிகளை அடிக்கலாம். இங்கு நான் வேண்டுவதும் அதுவே.

செம்மொழி மாநாட்டுக்கு என ஒதுக்கிய எண்ணை விட்டுவிடாமல், மீண்டும் மீண்டும் அதே கருவில் பயன்பாட்டில் வைத்தால் ஆதாயம் கூடும். மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு சிறு தொகையும் பல பயன்களை ஈட்ட வேண்டும். அதாவது, ஒரே கிளப்பலி்ல் பல கில்லிகள்.

Saturday, July 24, 2010

அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்



பாரத போர் நடந்த போது 13ஆம் நாள் போரில் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனனின் மகன் அபிமன்யு, கௌரவர்களின் சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்ற பிறகு வெளியே வருவதற்கு அவன் கற்கவி்ல்லை. எனவே, அவன் மாண்டான்.

செம்மொழி மாநாட்டிலும் இத்தகைய ஒரு சூழலைக் கண்டேன். மாநாட்டின் முதல் நாள் (ஜூன் 23), தொடக்க விழா. அதைத் தொடர்ந்து, இனியவை நாற்பது என்ற பெயரில் வரிசையாக நாற்பது அலங்கார ஊர்திகள் சாலைகளில் பவனி வந்தன. தொடக்க விழாவைக் காணவும் அணிவகுப்பினைக் காணவும் இலட்சக்கணக்கானோர் கூடினர். காலையிலிருந்து முற்பகல் வரை பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்த பிறகு, வெளியே செல்வதற்குப் பொது வாகனம் ஏதுமில்லை. பேருந்து, தானி (ஆட்டோ), மிதி ரிக்சா, மாட்டு வண்டி என எதுவும் கிடையாது. கூடுதல் கட்டணம் செலுத்த மக்கள் தயார் என்ற போதும், எந்த வாகனமும் கிட்டவி்ல்லை. இலட்சக்கணக்கான மக்கள், சுமார் 10 கி.மீ. நடந்து சென்றால் தான் வேறு பொது வாகனத்தைப் பிடிக்க முடியும் என்ற நிலை. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள்... என எந்தப் பேதமும் இல்லாமல், எல்லோரும் நடந்தாக வேண்டிய நிலை.

இரவு வீட்டிற்கு அல்லது விடுதிக்குச் சென்று சாப்பிடுவோம் எனக் கிளம்பியவர்கள் பலரும் பசியுடன் 10 கி.மீ. நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இனிமேல் என்னால் நடக்க முடியாது எனப் பலரும் ஆங்காங்கே உட்கார்ந்தனர். எவ்வளவு நேரம்தான் உட்காருவது என எழுந்து சிறிது தூரம் நடந்தனர். இவ்வாறு நடக்க முடியாதவர்கள், பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இத்தனைக்கும் காரணம், அணிவகுப்பு முடிந்ததும் பேருந்துகள் உள்ளிட்ட பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாமையே.

நாங்கள் மாநாட்டுக்குக் கட்டுரை படிக்க வந்த பேராளர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 7 பேர்கள், முதல் நாள் நிகழ்வின்போது, உள்ளேயே
காத்திருக்க நேரிட்டது. சிலருக்கு அடையாள அட்டை வந்து சேரவில்லை. அந்த அட்டை இருந்தால்தான் அடுத்த நாள் நிகழ்வில் பங்கேற்க முடியும் என்ற நிலை. எனவே, அவற்றைப் பெற்ற பிறகு, நாங்கள் இரவு சுமார் 9 மணி அளவில் மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்தோம். அப்போது, அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்திருந்தது. விடுதியிலிருந்து எங்களை அழைத்து வந்த பேருந்து, போய்விட்டிருந்தது. நாங்கள் வெளிச்செல்ல வேறு வாகனங்களுக்காகக் காத்திருந்தோம். எந்தப் பொது வாகனமும் இல்லை.

ஓரிருவர் மட்டும் அமர்ந்திருந்த நிலையில் பல பேருந்துகள், நிற்காமல் சென்றன. அவை, எங்களைப் போன்ற தனிக் குழுவினருக்கானவையாக இருக்கலாம். சிறிது தொலைவு சென்றால் பேருந்துகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கினோம். எங்கள் 7 பேரில் என்  நான், 64 வயதுடைய என் அம்மா, முனைவர் துரையரசன், அவரின் மனைவி - இரண்டு குழந்தைகள், முனைவர் பட்ட ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் இருந்தோம். நாங்கள் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்தும் எங்களுக்கு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நாங்கள் மிகவும் களைத்துப் போனோம். அடுத்த நாள் காலை, முதல் அமர்வில் முதல் பேச்சு, என்னுடையது. இப்போது போய் ஓய்வெடுத்தால் தான் அந்த அமர்வில் என்னால் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை. என் அம்மாவுக்கு நீரிழிவு, மூட்டு வலி உள்ளிட்ட சில சிக்கல்கள் உண்டு. அவர் தன்னால் இனி நடக்க முடியாது என உட்கார்ந்துவிட்டார். குழந்தைகளின் நிலையும் அதுவே.

பிறகு நான், நண்பர் உமாபதிக்குச் சொ்ல்லி, அவர் ரெத்தினகிரிக்குச் சொல்லி, ரெத்தினகிரி ஒரு மகிழுந்தில் வந்து சேர்ந்தார். அந்தச் சிறு வாகனத்தில் நாங்கள் 7 பேரும் சமாளித்து அமர்ந்தோம். அப்போது நேரம் இரவு சுமார் 11. மாநாட்டு அரங்கிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இருந்த எங்கள் விடுதிக்கு 11.30 மணி அளவில் வந்து விழுந்தோம். எங்களைக் கொண்டு சேர்க்க ரெத்தினகிரி கிடைத்தார். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள் வாகனம் இன்றி, நடந்து வந்ததைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மாநாட்டின் உள்ளே நுழைவோருக்குப் பேருந்து வசதி உண்டு; வெளியே செல்வோருக்குப் பேருந்து வசதி  இல்லை என்ற நிலை, அபிமன்யு, சக்கர வியூகத்திற்குள் அகப்பட்டது போன்றதே. இத்தகைய அவதி, பெருங்கூட்டங்கள் கூடும் பல மாநாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால், எத்தனை முறைகள் அவதிப்பட்டாலும் அரசு அல்லது மாநாடு கூட்டுவோர், இதில் தேவையான அக்கறையோடு செயல்படுவதில்லை. ஆர்வ மிகுதியால் மக்களும் மீண்டும் மீண்டும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.

இறுதி நாளான ஜூன் 27 அன்று நிறைவுரை ஆற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி, மாநாட்டுக்கு வந்தோர் நலமுடன் வீடு திரும்பினார்கள் என்ற செய்தி கேட்ட பிறகே நான் நிம்மதி அடைவேன் என உருக்கமாகக் குறிப்பிட்டார். மிகவும் பொறுப்பான பேச்சு. ஆனால், முதல் நாள் அன்று இருந்து நிலைமை வேறு. கூட்டத்தைக் கூட்டுவதோடு ஏற்பாட்டாளர்களின் கடமை முடியவில்லை. வந்தவர்கள், மீண்டும் சென்று சேருவது வரை அவர்களுக்குப் பொறுப்பு உண்டு.

இத்தகைய தருணங்களில் மக்கள் என்ன செய்ய முடியும்?

எனக்குத் தோன்றும் உடனடி உபாயம், இதுவே. ஒரு சிறு கருவி தேவை. தசாவதாரம் படத்தில் வைரஸ் ஆய்வு நிகழும் ஆய்வகத்தினுள் செல்வதற்கு விஞ்ஞானிகள், கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறு உருளையைப் பயன்டுத்தியதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போன்ற பயன்பாட்டினைத் தரும் மிக மலிவான கருவி ஒன்று தேவை. இது, மிகவும் எடை குறைவாக இருக்க வேண்டும். மடித்து, பையில் வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். இதனைச் சேமக் கலன் கொண்டும் இயக்கலாம். அல்லது சூரிய ஒளி மூலமாகவும் இயக்கலாம் என்ற வகையில் தயாரிக்க வேண்டும்.

இதே கருவியின் இன்னொரு மாதிரியில் மிதிவண்டி போல மிதித்தும் இயக்கும்படி வடிவமைக்கலாம். இது, சாலைகளில் மட்டுமின்றி, மாநாட்டு அரங்கில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு கி.மீ. தள்ளிப் போக வேண்டும் எனில் அங்கும் பயன்படு்த்தலாம். இவ்வாறான ஒரு கருவி, மக்களுக்கு உடனடித் தேவை. பேருந்துக்கும் தானிக்கும் செலவிடும் தொகையை இதற்கு மக்கள் செலவிடலாம். நின்றுகொண்டே செல்வதற்குப் பதில் உட்கார்ந்தும் செல்ல வழி வகை காணலாம். இதன் மூலம் வேகமாகச் செல்ல முடியாவிடினும், குறைந்தபட்சம் நடக்கும் வேலையை மிச்சப்படுத்தலாம். அதன் மூலம், வேகமாகக் களைப்படைவதைத் தவிர்க்கலாம். இந்தக் கருவியை உருவாக்க, பொறியாளர்கள் முயல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, July 07, 2010

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்

06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்விற்குச் சென்றேன். 'செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் மலேசியா சீனி நைனார் முகமது, பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.

சிங்கப்பூர் அமலதாசன் முதலில் பேசினார். சிங்கப்பூர்த் தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியைச் செம்மொழி மாநாட்டில் நினைவுகூரவி்ல்லை என வருந்தினார். தன் ஆய்வுக் கட்டுரையும் அவரைப் பற்றியதே எனக் கூறிய அவர், தமிழவேள் நினைவாக அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைய வேண்டும் எனச் சில கோரிக்கைகளைப் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய மலேசியா இளவழகு, தாம் எப்போதும் தம் அண்ணன் கவிஞர் ஐ.உலகநாதன் அவர்களின் பெயரால் நினைவுகூரப்பெறுவதை மறுத்தார். தாம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, புதினம் உள்ளிட்டவற்றைப் படைத்து வரும்போதும் தம் படைப்பு முகத்தை முன்னிறுத்தாது தம் தவறே என்றும் குறிப்பிட்டார்.

மலேசியா சீனி நைனார் முகமது, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.

தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.

முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் ல் என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.

செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். 'அசத்தப் போவது யாரு?' என்ற தலைப்பினை விமர்சித்த அவர், 'அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே' எனக் கேட்டார்.

தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.

அடுத்துப் பேசிய பெஞ்சமின் லெபோ, செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை வந்தனைகள், நிந்தனைகள் என இரு பிரிவுகளாகப் பிரித்துப் பேசினார்.

எல்லோரையும் ஒன்று திரட்டியது, கட்சிக் கொடி இல்லாதது, அனைவருக்கும் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஊட்டியது, வணிகர்கள் மகிழ்ந்தது, தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் அரங்குகளை அமைத்தது, அதில் கம்பன் பெயரையும் சேர்த்துக்கொண்டது, ஆய்வரங்குகளின் பெயர்களுடன் கூடிய ஓவியங்களைத் தமிழ் ஓவியர்கள் வரைந்தது உள்ளிட்டவற்றை வந்தனைகள் என்று பாராட்டினார். எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதித்திட இந்த நிகழ்வு, வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறினார்.

தமிழர் மரபுப்படி கடவுள் வாழ்த்துப் பாடாதது (மதம் சாராமலும் அப்படி பாடலாம்; திருக்குறளும் சிலப்பதிகாரமுமே உதாரணங்கள்), தொடக்க விழாவில் தமிழறிஞர்கள் இருக்க வேண்டிய முன் வரிசைகளில் முதல்வரின் உறவினர்கள் அமர்ந்திருந்தது, ஆய்வரங்குகளில் ஒரே நேரத்தில் பல அமர்வுகளை அமைத்தது, பார்வையாளர் இருவர் – ஐவர் என்ற எண்ணிக்கையில் இருந்தமை உள்ளிட்டவற்றை நிந்தனைகள் என வரிசைப்படுத்தினார். இனி மேல் இப்படி ஒரு மாநாடு நடக்கவே முடியாது என உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதையும் கண்டித்தார். இதை விடச் சிறப்பாக அடுத்தது எனச் செல்வதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றார்.

தலைமை தாங்கிய மறைமலை, செம்மொழி மாநாடு கிளச்சியையும் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது உண்மை; அதே நேரம் இன்னும் செய்ய வேண்டியவையும் நிறைய உள்ளன என்று கூறினார்.

அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கெ.பக்தவத்சலம் வரவேற்புரையும் பு.ச.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையும் நிகழ்த்தினர். அரங்கு நிறைந்தது மட்டுமின்றி, பலரும் நின்றபடி செவி மடுத்தனர்.

Saturday, July 03, 2010

தமிழில் செல்லிட ஆளுகை: அண்ணாகண்ணன் உரை - விழியப் பதிவு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, 'கையடக்கப் பேசியில் தமிழ்' என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், 'தமிழில் செல்லிட ஆளுகை' என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

என் உரையினை 4 பகுதிகளாக இணையத்தில் ஏற்றியுள்ளனர். அவற்றை இங்கே காணலாம்.

அ.க. உரை - பகுதி 1:

http://www.youtube.com/watch?v=bj1zUg3f8VI



அ.க. உரை - பகுதி 2:

http://www.youtube.com/watch?v=9XyzVnTj2To




அ.க. உரை - பகுதி 3:

http://www.youtube.com/watch?v=E97NXHyXWMc




அ.க. உரை - பகுதி 4:

http://www.youtube.com/watch?v=kSDbMtJ6lKA




தமிழக அரசுக்கும் உத்தமம் அமைப்பிற்கும் நன்றி.

Wednesday, June 16, 2010

'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் புனல் க.முருகையன் எழுதி, காந்தளகம் வெளியி்ட்ட 'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சென்னைப் பல்கலைக்கழகப் பவழ விழா அரங்கில் 15.06.2010 என்று மாலை நடந்தது. சத்குருநாதன் குழுவினரின் திருமுறை இன்னிசையுடன் விழா தொடங்கியது.


தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நூலை வெளியிட்டார். பெரியகருப்பன் இடையில் செல்ல வேண்டி இருந்ததால், வழக்கறிஞர் இரா.காந்தியிடம் நிகழ்வின் தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்துச் சென்றார்.

இந்நிகழ்வில் திருப்பனந்தாள், தருமபுரம், திருவாடுதுறை ஆகிய திருமடங்களைச் சார்ந்த தம்பிரான் சுவாமிகள், சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன், ஆஸ்திரேலியா தமிழ்ப் பேராசிரியர் ஆ. கந்தையா பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கவுரை ஆற்ற, மறவன்புலவு க. சச்சிதானந்தன் அறிமுகவுரை ஆற்ற, பேராசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். ஒலிபெயர்ப்புக் குறியீடுகளை இணையத்தில் (http://www.virtualvinodh.com/tamilipa/tamilipa.php) ஏற்றிய வினோத் ராஜன், கணித் திரையில், செயலாக்க முறைகளை விளக்கினார்.



சென்னைப் பல்கலைக்கழக மாணவி பார்கவி விழாவுக்கு ஒத்துழைத்தார். காந்தளகம் நித்தியா கணேசன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Monday, May 10, 2010

கல்கி ஆசிரியர் சீதா ரவி உடன் ஒரு மாலைப் பொழுது

அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் சார்பில் 2010 மே 09 அன்று மாலை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்கி ஆசிரியர் சீதா ரவி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாதந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியினைச் சிரிப்பானந்தா என அழைக்கப்பெறும் சு. சம்பத் நடத்தி வருகிறார்.

முதலில் நகைச்சுவை சங்கத்தின் உறுப்பினர்கள், தங்கள் சிரிப்பு முத்துகளை உதிர்த்தார்கள். பல குரலில் அசத்திய பாண்டித்துரை, சிறுமி ஸ்ரீதேவி (இவர், அசத்தப் போவது நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக உள்ளது), பேசும் பொம்மையுடன் வந்து கலக்கியவர், துபாயி்ல் நகைச்சுவை சங்கம் நடத்துபவர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிக்குச் சுவை கூட்டினார்கள்.

19 வயதே ஆன விவேக் கிஷோர், 2010 மே 8 அன்று, சென்னை ஆவடி பகுதியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக் தொலைக்காட்சியில் (JAK TV) 24 மணி நேரம் தொடர்ந்து நேரடி நிகழ்ச்சித் தொகுப்புரை (Live Compering) நடத்தி, லிம்கா புக் ஆப் இந்தியன் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். நகைச்சுவை சங்க உறுப்பினரான அவரை இந்த நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். சீதா ரவி, அவருக்குச் சால்வை அணிவி்த்துப் பாராட்டினார்.  விவேகானந்தரின் நூல் ஒன்றினை விவேக் கிஷோருக்கு வழங்கும் வாய்ப்பினைச் சிரிப்பானந்தா எனக்கு வழங்கினார்.


 அதைத் தொடர்ந்து, சீதா ரவி, சிரிப்பானந்தா, வினோத் கிஷோரின் குடும்பத்தினர் ஆகியோரோடு நானும் இணைந்திருக்க, நிழற்படம் எடுத்தனர்.

 

சீதா ரவி, அவர் குடும்பத்தில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சிலிருந்து சில முத்துகள்:

கல்கியின் குடும்பத்தினர் ஒருவரின் மனைவி கருவுற்றார். அவர் ஆண் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதமும் ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்தார்கள். அப்படிப் படித்த பிறகு, ஆண் குழந்தையே பிறந்தது. அந்தக் குழந்தை வளர வளர, மிகவும் குறும்பு செய்தான். யார் சொன்னாலும் கேட்பதில்லை. அவனைக் கல்கி ஒரு நாள் கண்டு, 'இவன் பிறக்கும்போது சுந்தர காண்டம் படித்தார்களா? கிஷ்கிந்தா காண்டம் படித்தார்களா?' எனக் கேட்டாராம் (அந்தப் பிள்ளை இன்று மிகவும் நல்ல பையனாக, அமெரிக்காவில் பணிபுரிகிறான்).

கௌரி ராம்நாராயணின் கணவர் ராம்நாராயணுக்கு, ஒரு முறை அவசரமாக ரூ.2 ஆயிரம் தேவைப்பட்டது. அவர் வேகமாகக் கீழே இறங்கி வந்தார். அவரின் மாமனார் அங்கிருந்தார். அவரிடம், பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாமனார், 'என்னிடம் பணம் இல்லை. ஆனால், பணம் இருக்கும் என்று நம்பி வந்து கேட்டாய் பார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது' என்றாராம்.

கல்கி அலுவலகத்தில் அந்தக் காலத்தில் விருந்தோம்புதல் மிகப் பிரசித்தம். அந்தச் சமையலில் சீதாப்பாட்டி என்பவர் முழு நேரமாக ஈடுபட்டிருந்தார். எந்நேரமும் சமைப்பதும் சாப்பாடு பரிமாறுவதும் இலை எடுப்பதுமாக மிகப் பரபரப்பாக இருப்பார். யார் வந்தார் போனார் என்றுகூட அவரால் கவனிக்க முடியாத நிலை. ஒரு நாள் அவரிடம் ஒருவர் அவசரமாக வந்து, 'பாட்டி, ஸ்குரு டிரைவரைப் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நான் பார்க்கவில்லை. ஆனால், எல்லா டிரைவரும் வந்து சாப்பிட்டுப் போயாகிவிட்டது' என்று கூறினாராம்.

சீதா ரவியின் கார் ஓட்டுநர், வயதான மனிதர். கார் ஓட்டாமல் நிறுத்தியிருக்கும்போது தூங்கிவிடுவது அவர் வழக்கம். ஒரு முறை வீட்டிலிருந்து சீதா ரவி வெளியில் வந்தார். அவர் வருவதைக் கண்ட ஓட்டுநர், விழித்துக்கொண்டார். ஆனால், எதையோ மறந்துவிட்ட சீதா ரவி, மீண்டும் வீட்டிற்குள் சென்று எடுத்து வந்துள்ளார். வெளியே வந்தார் காரினைக் காணோம். இவர் ஏறிவிட்டதாக நினைத்து, ஓட்டுநர் வண்டியை எடுத்துச் சென்றுவிட்டார். அடையாறிலிருந்து காந்தி மண்டபம் வரை வந்த பிறகுதான் வண்டியில் அவர் இல்லை எனத் தெரிந்து, அவர் மீண்டும் வந்துள்ளார்.

சீதா ரவி, கல்லூரி மாணவியாக இருந்தபோது நிகழ்ந்தது, இது. அன்று கல்லூரியில் ஒரு கூட்டம். யாரோ ஒரு பெரியவரை அழைத்துப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர் பேசினார் பேசினார் பேசினார் பேசினார்.... விடாமல் பேசிக்கொண்டிருந்தார். மாணவர்கள் அந்தப் பேச்சில் பெரிதும் ஈடுபடவேயில்லை. சீதாவின் இரு பக்கங்களிலும் தோழியர் சுசிலாவும் சுமதியும் அமர்ந்திருந்தார்கள். 'ரம்பம் போடுறார் இல்லே' என சுசிலாவின் காதில் சீதா சொல்ல, அவர் பதில் பேசவில்லை. சுமதியிடம் 'ரொம்ப போர் அடிக்குதே' என்கிறார். மீண்டும் சுசிலாவிடம் 'எப்போ நிறுத்துவாரோ?' எனக் கூற, சுமதி, சீதாவின் இடுப்பில் கிள்ளினார். இப்படியாகச் சுமதி பல முறைகள், சீதாவைக் கிள்ளிவிட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் 'ஏன் இப்படி கிள்ளினாய்?' எனச் சீதா கேட்க, 'பேசியவர், சுசிலாவின் அப்பா' எனக் கூறியுள்ளார் சுமதி.

இப்படியாகப் பல்வேறு நகைச்சுவை நிகழ்வுகளைச் சீதா ரவி சுவையுற எடுத்துரைத்தார்.

நகைச்சுவை சங்க உறுப்பினர் நேமத்து ஞானம், அண்மையில் மறைந்தார். அவருக்கு நிகழ்வில் மலரஞ்சலி செலுத்தப்பெற்றது.

நிகழ்ச்சி, சரியான நேரத்தில் தொடங்கி, சரியான நேரத்தில் நிறைவடைந்தது. நிகழ்வின் இறுதியில் ஒரு நிமிடம் அரங்கில் இருந்த அனைவரும் இடைவிடாமல் சிரித்து மகிழ்ந்தனர்.

நிகழ்வின் படங்களை விரிவாகப் பார்க்க:
http://picasaweb.google.co.in/skambadi/AHC?feat=directlink#

Saturday, May 01, 2010

'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' நூல் வெளியீடு

திரிசக்தி பதிப்பகம் பதிப்பித்த 'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற என் நூலைச் சென்னையில் 30.04.2010 அன்று, காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் மனோகரன் வெளியிட, சாதி்க் பாட்சா பெற்றுக்கொண்டார். 


இதே நிகழ்வி்ல் மேலும் 11 பேர்களின் நூல்களும் வெளியாயின. பதிப்பாளர் நளினி சுந்தர்ராமன், நூலாசிரியர்களுக்கு அதே மேடையிலேயே கையோடு ராயல்டி தொகையை வழங்கி மகிழ்ந்தார். அன்று வெளியான 12 நூல்களின் பட்டியல் இதோ இங்கே:
பாரதி பாஸ்கரின் சிறப்புரையும் ரமணனின் தொகுப்புரையும் மிக அருமை. காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் மனோகரன், தம் வளர்ச்சியின் அடிப்படைகள் சிலவற்றை அழகாக விளக்கினார். திரிசக்தி சுந்தர்ராமன், தினமும் இரவி்ல் 1 மணிக்கு மேல் கண்விழி்த்து, 2 மணி நேரங்கள் எழுதுவதே தமக்குப் பெரும் இன்பம் அளிப்பதாகக் கூறினார்.

இயக்குநர் மதுமிதா, ஓவியர் ஜீவநாதனின் திரைச்சீலை நூல் குறித்துச் சிற்றுரை நிகழ்த்தியதோடு, அடுத்து வரவிருக்கும்  தம் கொலகொலயா முந்திரிக்கா என்ற படத்திலிருந்து ஒரு பாடலைத் திரையிட்டுக் காட்டினார்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன், விக்கிரமன், அப்துல் ஜப்பார், இராம.கோபாலன், ரவி தமிழ்வாணன், சுப்பு, வீரராகவன், தமிழ்த்தேனீ, பிரபுசங்கர், ஷைலஜா, துளசி கோபால், நிர்மலா, ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, யுகமாயினி சித்தன், அம்சப்ரியா, அய்யப்ப மாதவன், நிலா ரசிகன், ரீச் சந்திரா, சைதை முரளி.... உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தேன். ஓவியர் ஜீவநாதன், சிமுலேஷன்,அந்தக் கால எழுத்தாளரான அவரின் தாயார் விஜயஸ்ரீ, வசந்தகுமார் ஆகியோரை முதன் முதலில் சந்தித்தேன்.

மிக இனிய இந்தச் சந்திப்பு, மனத்திற்கு நிறைவாக இருந்தது.

படங்களுக்கு நன்றி: தமிழ்த்தேனீ, 'ரீச்' சந்திரா