!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/04 - 2009/05 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, April 30, 2009

செல்பேசிக்குள் ஒரு நூலகம்

செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துவது பழங்கதை. அதைக் கொண்டு செய்தி அனுப்பலாம். படம் பிடிக்கலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இணையத்தில் உலாவலாம். பல்வேறு கட்டணங்களையும் கட்டலாம். ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..... இப்படி அதன் பயன்பாடுகள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் இதோ, இன்னொரு வசதி. செல்பேசியில் இனி புத்தகம் படிக்கலாம். அதையும் தமிழில் படிக்கலாம். ஒன்றிரண்டு புத்தகங்கள் அல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தையே உங்கள் செல்பேசியில் எடுத்துச் செல்ல முடியும். வேண்டிய இடங்களில் வேண்டிய நேரத்தில் படிக்க முடியும்.

பயணங்களின் போது செல்நூல்கள் பெரிதும் பயன்படும். எங்காவது யாருக்காவது காத்திருக்கும் போது இனி நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் செல்பேசியைத் திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம். பாதி படித்திருக்கும் போது, வேறு வேலை வந்துவிட்டதா? செல்பேசியை மூடிவிட்டு, பிறகு மீண்டும் அதே இடத்தைத் திறந்து படிக்கலாம். இதற்கு ஏற்ற பக்கக் குறிப்பீடு (புக் மார்க்) வசதியும் உண்டு. உங்கள் பார்வைத் திறனுக்கு ஏற்ப, எழுத்துகளின் அளவைப் பெரிதாக்கிப் படிக்கலாம். அதன் நிறங்களையும் மாற்றிக்கொள்ளலாம். விரலால் மீண்டும் மீண்டும் அழுத்தி, அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போக வேண்டுமே என்ற சோர்வா? கவலையை விடுங்கள். நீங்கள் விரும்பும் நேரப்படி, தானே பக்கங்கள் மாறும் வசதியும் இதில் உண்டு.

படிக்கச் சோம்பலாய் இருக்கிறதா? அதற்கும் வழி உண்டு. இனி புத்தகத்தைக் கேட்கலாம். ஆம், ஒரு பாட்டுக் கேட்பது போல் இனி புத்தகத்தைக் கேட்கலாம். செல்பேசியின் செவியிழையை (இயர் போனை) மாட்டிக்கொண்டு விசையை அழுத்தினால் போதும்.

இந்த புத்தகங்களைப் பெறுவது எளிதே. இணைய (இன்டர்நெட்) வசதியுடன் கூடிய செல்பேசி வைத்திருப்பவர்கள், www.fublish.com வலைத்தளத்திலிருந்து சுமார் 300 நூல்களை நேரடியாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். இணைய வசதி இல்லாமல் புளூடூத் (Bluetooth), இன்பிராரெட் (Infrared), டேடா கேபிள் (Data cable) வசதி உள்ளவர்கள் கணினி வழியே இந்தத் தளத்திற்குள் நுழைந்து தரவிறக்கலாம்.

நுண்சில்லிலும் (Memory chip) நூல் பொதிகளைப் பெறலாம். 'சீட்' (SEED) என்ற பெயரில் ஒரே நுண்சில்லில் ஆயிரம் புத்தகங்கள் கிடைக்கின்றன. விலை, ரூ.499 மட்டுமே. இதில் தொல்காப்பியம், திருக்குறள், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் மேற்கணக்கு நூல்கள், கம்ப ராமாயணம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான 600 தமிழ் நூல்களும் 400 ஆங்கில நூல்களும் உள்ளன. பத்து ஒலி நூல்களும் உள்ளன. இந்த நுண்சில்லை 27.1.2009 அன்று வேலூரில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் அதன் வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட்டார். இத்தகைய முயற்சி, இந்தியாவிலேயே தமிழில்தான் முதல் முறையாக நடந்துள்ளது.

இதற்கடுத்து, ராஜேஷ்குமாரின் நாவல்கள் அனைத்தும் செல்நூல்களாக உருவாக்க முயன்று வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளத்திலும் செல்நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல மொழிகளிலும் இந்த வசதியை விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.

இந்த வசதிகளை எல்லாம் கண்டறிந்து, மேம்படுத்தி, தமிழில் அறிமுகப்படுத்தி இருப்பவர், கணேஷ்ராம் (30). உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர், இளங்கலை வணிகவியல் பட்டதாரி. தன் சொந்த முயற்சியின் பேரில் கணினி மென்பொருள், வன்பொருள் தொழில்நுட்பங்களைக் கற்றவர். புதிய கண்டுபிடிப்பாளரை அடையாளம் காணும் திட்டத்தின்கீழ் தேர்வுபெற்ற இவர், செல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினார். இவருடைய முதல் வணிகரீதியான படைப்பாக, ஆயிரம் நூல்களுடன் 'சீட்' (SEED) என்ற நுண்சில் வெளியிடப்பட்டது. இவருடைய மொபைல்வேதா (Mobilveda) நிறுவனம், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் அடைகாப்பு மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

கணேஷ்ராமின் முயற்சிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். 14.4.2009 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது, கணேஷ்ராமுக்கு அவர் கேடயம் வழங்கியுள்ளார்.

கணேஷ்ராமின் முயற்சிகள், பலரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றன. இவருடைய தொழில்நுட்ப சேவைகளை விகடன் குழுமம் பயன்படுத்தி வருகிறது. தன் செல்நூல்களை ஊர்தோறும் விற்க, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.

அடுத்து, இணையம் நுழையாத கிராமங்களிலும்கூட செல்பேசி வழியே ஒலி-ஒளி வசதியுடன் அடிப்படைக் கல்வியை வழங்கும் வகையில் முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி தமிழ், ஆங்கில மொழிகளைக் கற்பிக்க வாய்ப்புண்டு.

புதிய சிந்தனை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றுக்குக் கணேஷ்ராம், சிறந்த எடுத்துக்காட்டு. தொழில்நுட்ப ஆற்றலுடன், தொழில்முனைவுத் திறனுடன் சாதித்து வரும் இந்தத் தமிழ் இளைஞரை நாம் கொண்டாடி வரவேற்போம்.

==============================

நன்றி: சென்னை டைஜஸ்ட், ஏப்ரல் 17, 2009

'ஏடிஎம் / போன் பேங்கிங்' அபாயங்கள்

இந்தியா முழுவதும் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கு எந்திரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அது தொடர்பான புகார்களும் நீள்கின்றன. பண அட்டையாளரை மிரட்டிப் பணம் எடுத்துக் கொள்ளை; ஏடிஎம்மில் கள்ள நோட்டுகள்; பண அட்டைகள், எந்திரத்தில் மாட்டிக்கொள்ளுதல்; ஒரு முறை விவரங்களை உள்ளிட்டுப் பணம் வராததால் அடுத்த முறை மீண்டும் விவரங்களை உள்ளிட்டால் கணக்கில் இரு முறை பணம் கழிந்தது.... எனப் பல வகைப் புகார்கள். இவை அல்லாமல் வேறு பல சிக்கல்களும் உள்ளன.

ஏடிஎம் வங்கிச் சேவையைத் தொடங்கியதிலிருந்தே வங்கிகள் ஒர் எச்சரிக்கையை விடுத்து வருகின்றன. உங்கள் தனி அடையாள எண்ணை (PIN - Personnel Identification No.) எவரிடமும் சொல்லக் கூடாது. எங்கும் எழுதி வைக்கக் கூடாது. எவரையும் விட்டு பணம் எடுத்துவரச் சொல்லக் கூடாது... எனப் பல அறிவுரைகள்; பத்திரிகைகளில் விளம்பரங்கள். ஆனால், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பு, அவர்களின் அறிவுரைகளுக்கு மாறாக உள்ளது.

அண்மையில் புகழ்பெற்ற வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றேன். இந்த வங்கியின் மையங்களில் தொலைபேசி வங்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. சுவரில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு தொலைபேசி நெடுக்குவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது. அதை எடுத்து ஒரு சேவை தொடர்பாக அவர்களை அழைத்தேன். தானியங்கிக் கருவி என்னைச் சோதிக்கும் முகமாக, என் பண அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அடுத்து, என் தனி அடையாள எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அப்போது அந்த அறையில் உள்ள மூன்று பண எந்திரங்களிலும் பணம் எடுக்க ஆட்கள் நின்றிருந்தார்கள். காசோலை இடுகிறேன் என இன்னும் இருவரும் நின்றிருந்தார்கள். காவலர் ஒருவரும் வாயிலில் நின்று கவனித்துக்கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே ஓர் இருபது பேருக்கும் மேலாக வரிசையாக நின்றிருந்தார்கள். கண்ணாடிக் கதவு. வெளியே நிற்பவரும் உள்ளே நடப்பதைத் துல்லியமாகக் கவனிக்க முடியும்.

சுவரில் எல்லோரும் பார்க்கும் படியாக அமைந்திருந்த தொலைபேசியில் என் தனி அடையாள எண்ணை உள்ளிட்டுள்ளேன். அந்தக் கணத்தில் உள்நின்றவர்களும் கதவுக்கு வெளியே நின்றிருந்தவர்களும் என் தனி அடையாள எண்ணை எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதில் பார்த்திருக்க முடியும். அதன் பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

தொலைபேசி வங்கிச் சேவையில் தானியங்கிக் கேள்விகளுக்கு இந்த 16 இலக்க எண்ணும் தனி அடையாள எண்ணும் போதுமானது. அடுத்து நான், வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அதிகாரியிடம் பேச விரும்பினேன். அவர் தொடர்பில் வந்ததும் என்னைச் சோதிக்கும் முகமாக, என் பிறந்த நாள், என் விண்ணப்பத்தில் நான் அளித்த கமுக்கப் பதில்கள் சிலவற்றைக் கேட்டுப் பெற்றார். நான் கூறிய பதில்களை அந்நேரம் அங்கு இருந்த அனைவரும் கேட்டிருக்க முடியும். இதுவும் அபாயமானது.

(இந்த ஆபத்து, ஏடிஎம் மையங்களில் மட்டுமின்றி, பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ளது. வீட்டில் நம் தனியறையில் இப்படி பேசலாம். அலுவலகத்திலோ, பொது தொலைபேசி மையங்களிலோ, இன்ன பிற பொது இடங்களிலோ தொலைபேசி வழி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் உண்டு. இந்தக் கோணத்தில் வங்கிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்).

ஐசிஐசிஐ வங்கி, திடீரெனத் தன் ஏடிஎம் மையங்களில் உள்ள தொலைபேசி வசதியைத் திரும்பப் பெற்றுவிட்டது. இது குறித்து எந்தத் தகவலோ, விளக்கமோ இல்லை.

================================

இது குறித்து ICICI வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு 28.9.2008 அன்று நான் எழுதிய மடல் இது:

I want to know why u have disconnected all the telephone lines at ur ATMs?

Why u didn't informed about this to ur customers? Even ATM security person don't know why it was disconnected?

When u r going to give again?

================================

இதற்கு 30.9.2008 அன்று Jagdish P., Customer Service Manager, ICICI Bank Limited அளித்த பதில் வருமாறு:

Dear Mr. Kannan,

We understand your concern.

We are deeply concerned with the issues raised by you in your e-mail. We would like to assure you that all our customers are important to us and your feedback will aid us in introspection and improvements in our processes.

Kindly note all the telephone lines are removed from ATM's as the same is a business decision.

Looking Forward to your co-operation in helping us to serve you better.

================================

வேறு ஓர் ஆபத்தும் ஏடிஎம் மையங்களில் உள்ளது. அங்கு பணம் எடுக்க விரும்புவோர், வரிசையில் நிற்கிறார்கள். பெரும்பாலான மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண எந்திரங்கள் உள்ளன. வாயிற் காவலர், கண்ணாடி அறைக்குள் ஒரே ஒருவரை விடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நேரத்தில் ஒரு கண்ணாடி அறைக்குள் மூவர் பணம் எடுக்கிறார்கள். பண எந்திரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அமைப்பின்படி ஒருவர் தன் தனி அடையாள எண்ணை உள்ளிடுவதை அடுத்தவரால் எளிதில் பார்த்துவிட முடியும்; அவர் தன் உடலால் மறைத்துக்கொண்டாலும்கூட ஓரங்கள் மூலம் அதைக் காண முடியும். காசோலை இடுவதற்காக வருபவர், சர்வ சாதாரணமாக இதைப் பார்க்க முடியும்.

நடப்பில் கண்ணாடி அறைக்குள் பணம் எடுப்பவரும் அவர் உடன் வந்தவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். கணவன் - மனைவி, அப்பா/அம்மா - மகன்/மகள், பெரியவர்களுக்கு உதவ இளையவர்கள், நண்பர்கள், காதலர்கள்... என இருவர் தாராளமாக அந்த அறைக்குள் செல்கிறார்கள். ஒருவர் பணம் எடுக்கையில் அடுத்தவர் என்ன கண்ணை மூடிக்கொண்டோ, வேறு பக்கம் பார்த்துக்கொண்டோவா இருக்கிறார்கள். ஆக, உள்ளே சென்ற இன்னொருவருக்கும் தனி அடையாள எண் தெரிந்துவிடும்.

கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரும் சற்று கூர்மையாகக் கவனித்தால் உள்ளே இருப்பவரின் விரலசைவுகளைக் கொண்டே அவரின் கமுக்க விவரங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். எல்லோரிடமும் செல்பேசி உள்ளது. பெரும்பாலான செல்பேசிகளில் புகைப்படக் கருவி உள்ளது. கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற விதி இருப்பினும் பல இடங்களில் இது மீறப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசவே வேண்டாம். கையில் எடுத்துச் சென்றாலே போதும். உள்ளே செல்வதற்கு முன்பே செல்பேசியில் வீடியோவை ஆன் செய்துவிட்டுச் சென்று, உள்ளே சும்மா செல்பேசியைக் கையில் வைத்திருப்பது போலவோ, குழந்தையின் கையில் செல்பேசியைத் தந்தோ உள்ளே நடப்பதை, வாடிக்கையாளரின் பேச்சை, அவரின் விரலசைவுகளின் மூலமாக அவரின் கமுக்க எண்ணை எளிதில் பதிந்துவிட முடியும். கையில் செல்பேசி எடுத்துச் செல்வதைத் தடுத்தாலும் ஒருவர் தன் சட்டைப் பையில் செல்பேசியை வைத்தே இதைச் செய்ய முடியும்.

இது சாதாரண செல்பேசியை மையப்படுத்திய அபாயம் மட்டுமே. Hidden camera எனப்படும் மறைவாக எடுத்துச் செல்லும் வீடியோ கருவிகளை ஓர் எழுதுகோல் வடிவத்திலோ, மூக்குக் கண்ணாடி வடிவத்திலோ எடுத்துச் சென்றும் பதிய முடியும். இந்த அளவுக்கு நம் குற்றவாளிகள் முன்னேறவில்லை என்றாலும் இதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஏதும் பை, கைப்பை, பெட்டி... என எந்தப் பொருள் எடுத்துச் சென்றாலும் அதற்குள் மறைத்து எடுத்துச் சென்றும் இதைச் செய்ய முடியும்.

கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரால் கூட, தன் அதிக சக்தி வாய்ந்த செல்பேசி வழியே உள்ளே நடப்பதைக் காட்சிகளாகப் பதிந்துவிட முடியும். ஏன், வரிசையில் கூட நிற்க வேண்டாம். தூரத்தில் நின்றபடியே கூட இதைச் செய்வது சாத்தியம்தான்.

இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுடன் ஏடிஎம் மையங்கள் இருப்பது, எவ்வளவு பெரிய ஆபத்து!! இன்று போலி பண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், நம் தனி அடையாள எண்ணும் களவாடப்படுமானால் நாம் பாடுபட்டுச் சேர்க்கும் பணத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இழப்போம்.

ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வரும் ஒருவரை மயக்கியோ, ஏமாற்றியோ, தாக்கியோ அவரின் பண அட்டையை ஒருவர் பறிக்கலாம். அவர் அறியாமலே அவரிடமிருந்து ஜேப்படி செய்துவிடவும் முடியுமே. அப்படி நடந்தால், ஏற்கெனவே கமுக்க எண்ணும் தெரிந்த நிலையில் பணத்தை எளிதில் கொள்ளையிட முடியுமே.

இதற்கு முதல் காரணம், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பே. உள்ளே நடப்பது வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகக் கண்ணாடிச் சுவர்களை அமைக்கிறார்கள். இது ஒரு கோணத்தில் சரியே. ஆனால், இன்னொரு கோணத்தில் ஆபத்தும் இருக்கிறதே. பல்வேறு வங்கிகளிலும் நிலைமை இதுவே. எல்லா வங்கிகளின் மையங்களிலும் உள்ள வாயிற் காவலர்கள், உள்ளே நடப்பதைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பண அட்டை பயன்படுத்தும் புதியவர்கள், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாயிற் காவலர்களோ, பக்கத்தில் பணம் எடுத்துக்கொண்டிருக்கும் வேறு புதிய நபரோ தான் உதவுகிறார். அட்டையைச் செருகுவது, தனி அடையாள எண்ணை அழுத்துவது, எவ்வளவு பணம் தேவை என எண்களை அழுத்துவது... என ஒவ்வொரு கட்டத்தையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். இதுவும் ஒரு கோணத்தில் நன்மையே. ஆனால், இன்னொரு கோணத்தில் இன்னொரு நபருக்கு அந்த எண் தெரிந்து விடுகிறதே.

வங்கிகள், உங்கள் தனி அடையாள எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள் என்று வேறு எச்சரிக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? எங்காவது எழுதி வைப்பதும் சிக்கலே.

இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கச் சில வழிமுறைகள் என்னிடம் உள்ளன.

முதலாவதாக, பண எந்திரத்தின் முன் நிற்பவரின் விரலசைவுகளைப் பின்னாலும் அருகிலும் இருப்பவர் பார்க்க முடியாத வகையில் ஒரு மூடி அமைக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும்படி இல்லாவிட்டாலும் இடுப்பு முதல் கழுத்து வரையிலான பகுதியாவது அந்த மூடியினுள் மறைய வேண்டும். அது சதுரக் கதவாக, அரை வட்டக் கதவாக இருக்கலாம். மரம், பிளைவுட், அலுமினியம், கனத்த கண்ணாடி என எதனாலும் இந்த மறைப்பு அமையலாம்.

தொலைபேசி வங்கிச் சேவையை இந்த மையங்களில் வழங்குவோர், அதற்கெனத் தனிக் கூண்டு வைப்பது நல்லது. பொது தொலைபேசி மையங்களில் (PCO) இருப்பது போல் தனி அறைகள் அமையலாம். அங்கும் அவரின் விரலசைவுகள் வெளியே தெரியாத வண்ணம் மறைப்பு இருக்க வேண்டும். மேலும் அவரின் குரலும் வெளியே கேட்கக் கூடாது.

ஏடிஎம் மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராக, அந்நியோன்யம் கொண்டவராக இருந்தாலும் வாடிக்கையாளர்களும் சரி; காவலர்களும் சரி; இதில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

அவரின் பை, கைப்பை உள்ளிட்ட எந்தப் பொருளானாலும் வெளியே வைக்கச் சொல்ல வேண்டும். ஆலயங்களில் செருப்புகளைப் பாதுகாப்பது போல் ஏடிஎம் மையங்களின் வெளியேயும் பொருட் பாதுகாப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டும். அங்கு வைத்துவிட்டுச் செல்லுவோருக்குக் கட்டணம் விதிக்கலாம்.

ஏடிஎம் மையங்களில் செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை எடுத்துச் செல்லவே அனுமதிக்கக் கூடாது. விமான நிலையங்களில் மின்னணுப் பொருள்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதனையிடுவது போல் இங்கும் சோதிக்க வேண்டும்.

ஏடிஎம் மையங்களின் கண்ணாடிச் சுவர்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைய வேண்டும். வெளியே இருப்பவர் உள்ளே பார்க்க வசதியாகக் கண்ணாடிச் சுவர்கள் உதவுகின்றன. உள்ளே திருட்டுத்தனம் நடந்து, அதை வெளியே இருக்கும் காவலர் கண்டறிய வசதிதான். ஆனால், வெளியே இருக்கும் தீய நோக்கம் கொண்டவர் வேறு கோணத்தில் பார்க்கவும் உதவுகிறதே. பேசாமல் இந்தக் கண்ணாடிச் சுவர்களில் கருந்திரையை (Sun glass போல்) ஒட்டினால் என்ன? இப்படிச் செய்தால், உள்ளே இருப்பவர், வெளியே பார்க்கலாம். வெளியே இருப்பவர் உள்ளே அவ்வளவு துல்லியமாகப் பார்க்க முடியாது.

இவையெல்லாம் தற்காலிமான தீர்வுகளே. கமுக்க எண்ணை உள்ளிடுவது என்ற முறையையே மாற்றுவது அடுத்த தீர்வு. உலகின் பல பகுதிகளில் கைரேகைகளையே அவரின் கமுக்க அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டை விரலையோ, முழு உள்ளங்கையையோ இப்படிப் பயன்படுத்தும் விதத்தில் நம் ஏடிஎம் மையங்களை மாற்றியமைத்தால் என்ன? இந்த முறையில் கமுக்க எண்ணைப் பாதுகாப்பதில் உள்ள அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்துவிடுகின்றனவே. ஒவ்வொருவருக்கும் கைரேகை உறுதியாக வேறுபடும். எனவே பாதுகாப்பானது.

தொலைபேசி வழி வங்கிச் சேவை குறித்தும் வங்கிகள் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். செல்பேசி, தரை வழி தொலைபேசி வழியே பல்வகைக் கட்டணங்களைக் கட்டவும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் வங்கிகள் வசதி அளித்து வருகின்றன. செல்பேசியை ரீசார்ஜ் செய்யவும் வசதி உண்டு. இந்நிலையில் அந்தத் தொலைபேசி உரியவரால்தான் இயக்கப்படுகிறது என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

பண அட்டை பயன்படுத்தும் புதியவர்களுக்காக, எல்லா ஏடிஎம்களிலும் ஒரு மாதிரிக்குப் பொம்மை எந்திரம் வைக்கலாம். பள்ளி மாணவர்களுக்கும் இதில் நேரடிப் பயிற்சி அளிக்கலாம். சரியாக விவரங்களை உள்ளிட்டால் 'பாராட்டுகள்! நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள்' எனத் திரையில் வருமாறு செய்யலாம். தவறாக விவரங்களை உள்ளிட்டால் 'மன்னியுங்கள். தவறான பயன்பாடு. மீண்டும் முயலுங்கள்' எனத் திரையில் வரச் செய்யலாம். அந்த எந்திரத்தில் புதியவர் நேரடியாகச் செய்து பழகலாம். கல்வியறிவு இல்லாத கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் அவர்களையும் சேர்த்து நம் வங்கியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இதை நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள், வங்கிகள் அனைத்தும் உடனடி கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இதற்கென வல்லுநர் குழு அமைத்து மேலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் கடின உழைப்பில் விளைந்த பணத்தில் அணுவின் கூறளவும் சேதமாகிவிடக் கூடாது.

==============================

நன்றி: சென்னை டைஜஸ்ட், ஜனவரி 30, 2009

Tuesday, April 28, 2009

தமிழில் புதிய இ-நேர்காணல் முறை

பொதுவாக, இ-நேர்காணல் என்பது, கேள்விகளை மின்னஞ்சல் வழியாக மொத்தமாக அனுப்பி, பதில்களை அதே வழியில் மொத்தமாகப் பெறும் வகையில் இருக்கும். பெரும்பாலும் Offline-இல் இது நடக்கும். இதில் ஒரு புதுமையாக, மின் அரட்டை (Chat) வழியே, நேரடியாக, Online-இல் நேர்காணலை அமைக்க முயன்றேன். ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்று, இயல்பான உரையாடலாகவே இதை அமைக்க விரும்பினேன்.

அந்த வகையில் தமிழில் புதிய இ-நேர்காணல் முறையினைச் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இந்த வகையில் முதலில் 'பாட்யூனிவர்சல்' என்ற ஒலி இதழின் ஆசிரியர் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் அவர்களை நேர்கண்டேன்.

http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=b5bc2375-741e-4676-a598-a9fba52e5b58&CATEGORYNAME=TTN

அடுத்து, 'தமிழ் மரபு அறக்கட்டளை'யின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல் அவர்களை நேர்கண்டேன்.

http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=4ea614d5-c39a-41da-933a-fb7b65f91942&CATEGORYNAME=TCHN

அடுத்து, 'காந்தளகம்' பதிப்பகத்தின் உரிமையாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களை நேர்கண்டேன்.

http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=86cc2f4f-53be-448b-b3a8-a3eba521663c&CATEGORYNAME=TCHN

என்னைப் போன்று, நீங்களும் இவ்விதமாக முக்கிய நபர்களுடன் / நண்பர்களுடன் / நிபுணர்களுடன் உரையாடலாம். இரு தரப்பினரின் ஒப்புதலுடன், தமிழில் அமைந்துள்ள சுவையான, பயனுள்ள உரையாடல்களைத் தொகுத்து எமக்கு அனுப்பினால் அவற்றைச் சென்னை ஆன்லைன் தளத்தில் வெளியிடலாம்.

Tuesday, April 14, 2009

தினமணி, ஒருங்குறிக்கு மாறிவிட்டது

நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியது. தினமணி நாளிதழின் இணைய தளம், ஒருங்குறிக்கு மாறிவிட்டது.

அத்துடன் அதன் இணைய தள வடிவமைப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அழகான, நவீன முகப்புடன் திகழ்கிறது. உள் பக்கங்களும் கச்சிதமாக உள்ளன.

தமிழில் தினமலர் நாளிதழ், இந்த வரிசையில் முதலில் ஒருங்குறிக்கு மாறியது. மாலை மலர், விடுதலை நாளிதழ்களும் ஒருங்குறியில் உள்ளன. இப்போது தினமணியும் மாறிவிட்டது.

தினத்தந்தி, தினகரன், தினபூமி, முரசொலி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.... உள்ளிட்டவை விரைவில் ஒருங்குறிக்கு மாறும் என நம்பலாம்.

எதிர்ப்பைக் காட்ட, காலணியை வீசலாமா?

07.04.2009 அன்று தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கியச் செய்தியாளர் ஜர்னைல் சிங், தன் காலணியை வீசியது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது, 2008ஆம் ஆண்டு பாக்தாதில் அந்நாளைய அமெரிக்க அதிபர் புஷ் மீது இராக்கியத் தொலைக்காட்சிச் செய்தியாளர் முன்தாதர் அல்-ஜைதி தன் ஷூவை வீசியதோடு ஒப்பிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து 10.04.2009 அன்று ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் ஜின்டால் மீது காலணி வீச்சு நடந்தது. காங்கிரஸ் கொள்கைகளில் வெறுப்புற்ற ராம்குமார் என்கிற ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், இந்தச் செயலில் ஈடுபட்டார்.

ஆந்திராவில் கடந்த வாரத்தில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மீது சிலர் செருப்பும் முட்டையும் வீசியுள்ளனர். சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவியின் மீதும் முட்டை வீசப்பட்டது.

1984இல் இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து 2700 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் ஜெகதீஷ் டைட்லர் மீதும் குற்றம் சாற்றப்பட்டது. ஆனால், மத்திய புலனாய்வுக் கழகம், அவரைக் குற்றமற்றவர் எனக் கூறியது. இதற்குத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவே ஜர்னைல் சிங், தன் காலணியை வீசியதாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்த போது ப.சிதம்பரம் நடந்துகொண்ட முறை, மெச்சத்தக்கதாய் இருந்தது. அந்த நிருபாரின் செயலைத் தாம் மன்னித்துவிட்டதாகவும் அவரை விட்டுவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பை நாம் தொடர்வோம். உணர்ச்சிவசப்பட்ட ஒருவரின் செயல், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சந்திப்பையும் கடத்திச் சென்றுவிடக் கூடாது என்று அவர் நிதானத்துடன் கூறினார்.

ஜர்னைல் சிங், 'தைனிக் ஜாக்ரன்' என்ற இந்தி நாளிதழில் பணியாற்றுகிறார். அந்த நாளிதழ், இந்த அவமானகரமான செயலுக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஜர்னைல் சிங்குக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அகாலி தளம் அறிவித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக நீதி மறுக்கப்படுவதால் சீக்கிய சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையே அவர் வெளிப்படுத்தினார். ஆதலால், அவருக்கு ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அகாலி தளத் தலைவரும், தில்லி கவுன்சிலருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார். இந்தப் பணத்தை அளிக்க பல்வேறு சீக்கிய அமைப்புகள் முன்வந்துள்ளன என்றும் அவர் கூறினார். முன்பு புஷ் மீது வீசப்பட்ட ஷூவுக்கும் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது. இப்படியான ஊக்குவிப்புகள், மிகவும் கவலை தருகின்றன. நாளை இதே போக்கில் பலர் கிளம்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால் உண்மையில் தன் செயலுக்காக ஜர்னைல் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தை அடுத்த முறை சந்தித்தால் மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். வீடியோவை நன்றாகப் பாருங்கள், என் இலக்கு சிதம்பரம் கிடையாது. திறந்த வெளியை நோக்கித்தான் நான் வீசினேன். என் எதிர்ப்பைக் காட்டவே அவ்வாறு செய்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சமயத்தில் வேறொன்றும் நினைவுக்கு வருகிறது. முன்பு ஒரு சமயம் தந்தை பெரியார் மீது ஒருவர் ஒரு செருப்பை வீசினார். அதற்கு அவர் கோபப்படாமல், 'ஒரு செருப்பை வைத்து நான் என்ன செய்வது? இன்னொரு செருப்பையும் வீசுங்கள். பயன்படுத்திக் கொள்கிறேன்' என்றார்.

செருப்பு வீசுவது போல், முட்டை வீச்சும் போராட்ட முறைகளில் ஒன்றாக விளங்குகிறது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால், பல வாரங்கள் நீதிமன்றப் பணிகள் முடங்கின.

சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ, நிதி மோசடியில் ஈடுபட்டுக் கைதான சமயம். 'ராஜூ மீது முட்டை வீசுங்கள்; ஐபாட் பரிசு பெறுங்கள்' என ஓர் இணைய தளம், புதிய இணையவழி விளையாட்டை அறிமுகப்படுத்தியது. அதன்படி கணினித் திரையில் ராஜூவின் படம் அசைந்தபடி தெரியும். அங்கு, ராஜூ மீது குறிபார்த்து முட்டை வீச வேண்டும். அதிக முறைகள் சரியாக வீசி, அதிகப் புள்ளிகள் எடுத்தால், ஐபாட் பரிசு கிடைக்கும். இது, குறி பார்த்து வீசும் திறனைக் கூர்மைப்படுத்தும் விளையாட்டுதான் என்றாலும், ஒருவர் தன் கோபத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகிறது. இதிலும் எதிர்ப்பு காட்டப்படுகிறது. அநாகரிகமாகத்தான். ஆனால், முதல் ஆதாயம், முட்டை மிச்சமாகிறது.

எதிர்ப்பைக் காட்ட எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, காலணியையும் முட்டையையும் வீசலாமா? நாம் கற்ற கல்வி இதுதானா? நம் பண்பாடு, ஒழுக்கம், நாகரிகம் ஆகிய அனைத்தும் எங்கே போயின?

துணிவிருந்தால் எதிர்ப்பு வாசகத்துடன் கையில் ஓர் அட்டையை ஏந்தி நிற்கலாமே! சிலர் போல், 'டி' சட்டையில் வாசகத்துடன் வலம் வரலாமே! கருப்புச் சட்டை அணிவது முதல் வாயைத் துணியால் கட்டிக்கொள்வது வரை எவ்வளவோ முறைகள் இருக்கத்தானே செய்கின்றன. பிறகு ஏன் இப்படி கோழைத்தனமான, வன்முறையான, அநாகரிக எதிர்ப்பு முறைகள்?

இந்தச் சூழ்நிலையில் காந்திய போராட்ட முறைகளின் ஆழமும் அர்த்தமும் நினைவுகூரத்தக்கவை. அறப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், மறியல், உண்ணா நோன்பு, கையொப்ப இயக்கம், அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு.... என ஒவ்வொன்றிலும் பண்பு இருந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சிறையிலிருந்து வெளியே வந்த போது தன்னைச் சிறையில் அடைத்த அதிகாரி ஜெனரல் ஸ்மட்சுக்குத் தான் தைத்த செருப்பைப் பரிசாக அளித்தார்.

இன்னும் எவ்வளவு காலம் நாம் பின்னோக்கியே செல்வது?

======================================

நன்றி: சென்னை டைஜஸ்ட், ஏப்ரல் 10-26 2009