!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2006/11 - 2006/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, November 17, 2006

சிஃபி தமிழை மதிப்பிடுங்கள்

கி.பி.2000ஆம் ஆண்டில் தொடங்கிய சிஃபி தமிழ் இணைய இதழ், வெற்றிகரமாக 7ஆவது ஆண்டில் நடைபோடுகிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை வாசகர்களாகிய நீங்களே தீர்மானிக்கலாம். சிஃபி தமிழின் உள்ளடக்கம், நீங்கள் விரும்பும் பகுதி, இன்னும் சேர்க்க வேண்டிய பகுதிகள் உள்பட சில கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறோம். இதற்கான கருத்தறியும் பக்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Sunday, November 05, 2006

வட்டாரம் - திரை விமர்சனம்



சிறிய பேட்டையில் விதவிதமாகத் துப்பாக்கி விற்கும் ஆர்யா, எப்படி ஒரு சர்வதேச ஆயுத வியாபாரியாகிறார் என்பதே கதை.

சிறு வயதில் ஆர்யாவின் அப்பா நாசர், தாதா நெப்போலியனிடம் வேலை செய்கிறார். சிறுவன் ஆர்யாவுக்கு நெப்போலியனைப் போல் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. அவன் ஒரு நாள், நெப்போலியனின் இருக்கையில் உட்கார்ந்து தூங்கிவிடுகிறான். அங்கு வரும் நாசர், இந்த நாற்காலியில் உட்காரக் கூடாது; உட்கார்ந்தாலும் தூங்கக் கூடாது என்று கூறி இப்படி கம்பீரமாக உட்கார வேண்டும் என்று உட்கார்ந்து காட்டுகிறார். அப்படியே இருவரும் உறங்கிவிட, நெப்போலியனும் அவரின் அடியாட்களும் பார்த்து விடுகிறார்கள். அப்பாவும் மகனும் அங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள்.

தன் மகன் முன்னாலேயே தான் அடிவாங்கிவிட்டோமே என்ற அவமானத்தில் நாசர் தூக்கில் தொங்கிவிடுகிறார். அதன் பிறகு பெரியவனாகும் ஆர்யா, தொழில்முறை ரவுடியாகிவிடுகிறார். பர்மா என்றும் வட்டாரம் என்றும் அழைக்கப்படும் அவர், துப்பாக்கி விற்பனையிலும் ஈடுபடுகிறார். பழைய துப்பாக்கியிலிருந்து நவீன துப்பாக்கி வரை அவரிடமிருந்துதான் தாதா கும்பல்களுக்குக் கிடைக்கின்றன. தன்னையும் தன் அப்பாவையும் தெருவில் தள்ளிய நெப்போலியனை பழிவாங்கக் காத்திருக்கிறார் ஆர்யா.

கிடைத்த ஒரு வாய்ப்பில் நெப்போலியனிடம் அடியாளாகச் சேருகிறார். ஆர்யா, மெல்ல நெப்போலியனின் மனத்தில் இடம் பிடிக்கிறார். ஆனால், நெப்போலியன் தன் மகனுக்கு உதவியாளராய் ஆர்யாவை உருவாக்க நினைக்கிறார். நெப்போலியன் மகள் கீரத், ஆர்யாவைக் காதலிக்கிறார். ஆனால் ஆர்யா, தன் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. யாருக்கும் சந்தேகம் வராமல் நெப்போலியனின் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவராய்ப் போட்டுத் தள்ளுகிறார். இறுதியில் நடக்கிற டிஷ்யூம் டிஷ்யூமில் நெப்போலியன் உயிரை விடுகிறார். நெப்போலியனின் மகளை மணக்கும் ஆர்யா, நெப்போýயனின் இருக்கையில் அமர்ந்து தன் இளவயதுச் சவாலை நிறைவேற்றுகிறார்.

இந்த அடிதடிக் கதையை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரண்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இதிலும் ஆர்யாவுக்கு முரட்டுத்தனமான ரவுடி பாத்திரம்தான். ஆனால், அலட்சியமான பார்வை, அதற்கேற்ற உடல்மொழி, நல்ல உடற்கட்டு, சண்டைக் காட்சிகளில் உள்ள சுறுசுறுப்பு ஆகியவை ஆர்யாவைத் தனியாகக் காட்டுகின்றன. தேவையான உச்சரிப்புடன் நடனமும் ஆட வருகிறது. காட்சியில் தன்னை நிலைநிறுத்தத் தெரிந்திருக்கிறார். துப்பாக்கிகளின் வகைகளையும் அவற்றின் அகலம், நீளம், எடை ஆகிய புள்ளி விவரங்களையும் அவர் வேகமாகக் கூறுவது வித்தியாசமாக உள்ளது. ஆயினும் ஒரே வகையான கதாபாத்திரங்களில் நடிக்காமல் விதவிதமான கதைக் களங்களில் புகுந்து வந்தால் ஆர்யாவின் திறமை மேலும் வளரும்.

மும்பையிலிருந்து வந்திருக்கும் புதுமுகம் கீரத், படம் முழுதும் ஒல்லி ஒல்லி இடுப்புடன் அழகாக வலம் வருகிறார். ஆர்யாவை எண்ணி உருகி, எடுத்ததற்கெல்லாம் 'ஆக்சுவலி' எனப் பேசத் தொடங்கி, மெல்லிய உரையாடல்களுடன் மனத்தைக் கவருகிறார்.

நெப்போலியனுக்கு இந்தப் படத்தின் மூலம் தனி முத்திரை கிடைத்துள்ளது. பெரும்பாலும் கிராமத்து வேடங்களில் நடித்த அவர், இதில் நவீன தோற்றத்தில், சர்வதேச ஆயுத வியாபாரி என்ற பாத்திரத்தை ஏற்றுக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆர்யாவின் மீது பாசம் கொள்வதும் இன்னொருவன் காலைப் பிடித்து வளரக் கூடாது என்ற கொள்கையுடன் சாவதும் சிறப்பு. 'நாங்கள் தனி மனிதர்களுக்கு ஆயுதம் விற்பதில்லை; அரசாங்கங்களுக்கு ஆயுதம் விற்கிறோம்' என்று கூறும்போதே கதைக் களம் மாறுபட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நெப்போலியனின் உதவியாளராக வரும் காதல் தண்டபாணி, மகனாக வரும் ராம்ஜி, புதுமுகம் அதிசயா, போட்டி தாதா அவினாஷ், ஆர்யாவின் உதவியாளராக வரும் ரமேஷ்கண்ணா.... உள்பட பலரும் தங்கள் பணியைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பரத்வாஜின் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் பரவாயில்லை ரகம். 'நானா இது நானா', 'யார் தருவார் இந்த அரியாசனம்?' ஆகிய பாடல்கள் கவருகின்றன. பின்னணி இசை படத்திற்குப் பெரிதும் துணை நிற்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சரண். பொழுதுபோக்கு அம்சங்களுடன், விறுவிறுப்பான சண்டைக் கதையை எடுத்திருக்கிறார். அநாவசியமான குத்துப் பாட்டு, கவர்ச்சி, நகைச்சுவை டிராக், அதீத வன்முறை ஆகியவை இல்லாமல் படம் எடுத்திருப்பதற்காகச் சரணைப் பாராட்டலாம்.

வட்டாரம்... வட்டத்திற்குள் டுமீல்!

நன்றி: தமிழ்சிஃபி