!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/07 - 2005/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 31, 2005

இ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்வை




(1999ஆம் ஆண்டு மறவன்புலவு க. சச்சிதானந்தன், இ.வி.சிங்கனின் காரைக்குடி பயண அனுபவங்கள் என்ற நூலை என்னிடம் அளித்தார். அதற்கு ஒரு மதிப்புரை வழங்கக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். இவ்வாறு பத்து மதிப்புரைகளை இ.வி.சிங்கன் பெற்றார். அவற்றை, 'புத்தகத்தை மதிப்புரை திறனாய்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு ஒரு நூலாகவே வெளியிட்டார். அதில், என் மதிப்புரையைத் தவிர, மா.வழித்துணைவன், முனைவர் சுப.திண்ணப்பன், செ.ப.பன்னீர்செல்வம், இரா. அன்பழகன், பாத்தேறல் இளமாறன், முனைவர் லெட்சுமி மீனாட்சி சுந்தரம், முனைவர் ந.சுப்புரெட்டியார், முனைவர் எம். முத்துராமன் ஆகியோரின் மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த நூல் குறித்தான என் மதிப்புரையை இங்கு தருகிறேன்.)

இந்நூல், இரண்டு நூல்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் வாழ்த் தமிழரான இ.வி.சிங்கன், காரைக்குடி, காட்மாண்டு ஆகிய நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி, அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார். முதற்பகுதியான காரைக்குடிப் பயணம், பக்கங்களின் இயல்பாக 1,2,3 எனத் தொடங்கி, 45இல் முடிகிறது. இரண்டாம் பகுதியான காட்மாண்டுப் பயணம், உருது, அரபு, பாரசீக மொழிகளின் இயல்பைப் போலக் கடைசிப் பக்கத்தில் இருந்து தொடங்கி, உள்ளே வந்து முடிகிறது. அதை அவர் முதல் பகுதி முடிந்தவுடன், முறையாக ஒரு தாள் விட்டு, 1,2,3 எனத் தொடங்கியிருந்தால், தமிழ் வாசகர்கள் அவர் எழுத்தை எளிதாகத் தொடர்வதற்கு வசதியாய் இருந்திருக்கும். இது நூலின் பக்க அமைப்பைப் பற்றிய கருத்து.

ஆசிரியருக்கு மிகவும் இயல்பான எழுத்து நடை கைவந்திருக்கிறது. படிப்பதற்கும் அது சுவையாக இருக்கிறது. காரைக்குடிப் பகுதிக்கு வருவதற்கு, அவருக்குக் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் இருந்தது என்பதை அழகாக விவரிக்கிறார். அவர் எழுதுகிறார்:

"எங்கள் வீட்டில் செட்டிநாட்டில் இருந்து வந்த ஒரு சமையல்காரன் இருந்தான். அவனுடன் ஆடு, மாடுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதில் தணியாத ஆர்வம், எனக்கு இருந்து வந்தது.

மாடுகள், வெள்ளை, கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் இருந்தன. "சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் மாடுகள் இருக்கின்றனவா?" என்று நான் சமையல்காரனைக் கேட்டேன்.

அவன் பரபரப்பாகச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மிகுந்த உற்சாகத்துடன், "எங்கள் ஊரில் இருக்கின்றன" என்று அடித்துச் சொன்னான். அது எனக்குத் திகைப்பூட்டியது."

காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க் கல்லூரியில் திரு. இ.வி.சிங்கன் ஆற்றிய உரை, அதற்கான எதிர்வினைகள், கடிதங்கள், கல்லூரியின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் எழுதிய கருத்துரை உட்பட அனைத்தையும் பதிப்பித்துள்ளார்.

திருக்குறள் வகுப்பை எப்படி நடத்துவது, திருக்குறள் மூலம் எப்படித் தொண்டு செய்வது, அவை குறித்தான 10 கட்டளைகள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

இரண்டாம் பகுதியான நேபாளத் தலைநகர் காட்மாண்டுப் பயணமும் சுவையாகவே உள்ளது. ஆப்ரிக்க, ஆசியப் புத்தகப் பதிப்பாளர் மாநாட்டில், சிங்கப்பூர் சார்பாக இ.வி.சிங்கன் கலந்துகொண்டதை இப்பகுதி விவரிக்கிறது.

ஆசிரியர், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் சென்று, பின்னர் காட்மாண்டு செல்லும்போது, விமானத்தில் தாய்லாந்து நாட்டுப் பத்திரிகைகளைப் படித்திருக்கிறார். அதில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி, அண்மையில் சாரநாத்தில் நடந்த உலகப் புத்தர் மாநாட்டில் 'இந்திய ஆரிய நாகரிகங்களின் பழங்கொள்கைகளையே புத்தர் ஒரு புதிய அழுத்தத்துடன் மறுபடியும் சொன்னார்' என்றும், 'பகவத் கீதையின் தத்துவத்தை அடியொற்றியே, புத்தரின் செயல்கள் இருந்தன' என்றும் கூறியிருந்த செய்தியும் அதைப் பல அறிஞர்கள் மறுத்த செய்தியும் வெளியாகி இருந்தன. அதைப் படித்த இ.வி.சிங்கன், பின்வருமாறு அதை விமர்சிக்கிறார்:

'ஒரு பெரிய மாநாட்டில், ஒரு பொறுப்புள்ள அமைச்சர், வரலாற்று ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறி இருப்பது, தேவையில்லாத கிளர்ச்சி உருவாகத்தான் உதவி செய்யும். புத்த சமயமும் சீக்கிய சமயமும் ஆரியர்களின் கொள்கைகளை எதிர்த்து உருவான சமயங்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. புத்த மதம், இந்து மதத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்லாமல், 'புத்த சமயம்தான் என்னுடைய சமயமும்' என்று அவர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். புத்தரையே வழிகாட்டியாகக் கொண்டு, பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் முன்னேறிய நாடுகளின் அந்தக் கருத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்.'

பதிப்பாளர் மாநாட்டில் இ.வி.சிங்கன் ஆற்றிய ஆங்கில உரைகளைப் பதிப்பித்துள்ளார். அவை தலைப்பை விட்டுச் சிறிதே விலகிச் செல்வதுபோல் தெரிகின்றது.

நூல் வணிக நோக்கில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நூலின் பின் அட்டையில் 'Welcome to Nepal' என்ற விளம்பரம் உள்ளது. நேபாளத்தைப் பற்றிய தகவல்கள், நேபாளம், காட்மாண்டு ஆகியவற்றின் வரைபடங்கள், நேபாளியப் பழமொழிகள், Tamil way of Food Preparation Yesterday and Today, Napalese way of Food Preparation ஆகியவையும் நூலில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உள்ள ராயல் நேபாளீஸ் கன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில், கன்சுலேட் ஜெனரலாக இருக்கும் திரு.எம்.என்.சுவாமி, திரு.இ.வி.சிங்கனின் முப்பதாண்டுக் கால நண்பர் என்றும் குறித்திருக்கிறார். அனைத்தையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்குள் ஒரு செய்தி, பாயத்தான் செய்கிறது.

பூணூலை அறுத்த பாரதியை ஆசிரியர், 'பிராமணக் கவிஞன்' என்று குறிப்பிடுவதும் தம் ஆங்கில உரைகளில் பிராமணர்களை அதிகம் பேசுவதும், சிங்கப்பூரில் மலையாளிகள், தெலுங்கர்கள், பிராமணர்கள் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக வருகிறார்கள் என்று வருந்துவதும் அவருடைய மனோ நிலையை விளக்குகின்றன.

'Status of the Author in Singapore' என்ற தலைப்பில் பேச வேண்டிய இ.வி.சிங்கன்,

'Authors are of two kinds book publishing.
1. The Tamil people
2. The Tamil Speaking people
The Tamil Speaking People are non-Tamils. Their roots are different'
-என்று பேசுகிறார். மேலும் தொடர்ந்து,

'These authors are mostly Brahmins in Tamilnadu. They write books mixing plenty of Sanskrit words. Their novels consist of plots taken from European fictions in London, Paris, Frankfurt, Rome and America and are reconstructed as Delhi, Mumbai, Calcutta and Chennai and what not?'

- என்று பேசியிருக்கிறார். இவர் கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்வதற்கில்லை. ஏனெனில் ஆசிரியர் குறிப்பிடுவது போல, எல்லாத் தமிழரல்லாத எழுத்தாளர்களும் ஐரோப்பியக் கருத்துருவில் கதை புனைவதில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஏராளமாகக் கலக்கிறார்கள் என்றும் வருந்துகிறார். அது தவறுதான். ஆனால், ஆசிரியர் குறிப்பிடும் 'தமிழ் எழுத்தாளர்கள்' எவ்வளவு தூய்மையாக எழுதுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். தமிழ்வேர் கொண்டோரே வெள்ளம் போன்ற ஆங்கில வார்த்தைகளில் தமிழை மிதக்க விடுவதை அவர் குறிப்பிடாமல் விட்டது, ஒருதலைப்பட்சமானது.

இப்படித் தமிழர், தமிழரல்லாதோர் என்று பிரிவினை வாதம் பேசுவது, காழ்ப்புணர்வைத் தூண்டுமேயல்லாது வேறெதையும் தூண்டாது. 'தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்ற ரஜனிகாந்த்தின் கருத்தைக் கலைஞர் கருணாநிதி வரவேற்றிருப்பதை நினைவுகூர வேண்டியது என் கடமை.

நூலில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் மலிந்திருக்கின்றன. நல்ல உயர்தரமான தாளில் பளிச்சென்ற படங்களுடன் அருமையாக அச்சாகியுள்ள நூலில் ஒரு குறை, இது.

நேபாளியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் சில இடங்களில் ஒற்றுமை இருக்கிறது.

1. He who spits at the sky gets it full in his face.
2. One hundred lies are required to hide one lie.

1. வானத்தில் துப்பினால் அவன் முகத்திலேயே அது விழும்.
2. ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைச் சொல்லவேண்டி வரும்.

ஒரு பயண அறிக்கை போல இந்நூல் இருந்தாலும், அனைத்து நடவடிக்கைகளையும் பதிய வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது. அதனால் இது, வரலாற்று முக்கியத்துவமும் பெறுகிறது.

இன்னும் 10 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 10 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பாருங்கள்.

Saturday, July 30, 2005

சுரதா நேர்காணல்

(படத்திற்காக நன்றி: இன்தாம்)


'கவிதை பிடிச்சிருக்கா... காசு போடுங்க சாமீ!' என்ற தலைப்பில், சரவணா ஸ்டோர்ஸ் இதயம் பேசுகிறது (இப்போது நின்றுவிட்டது) இதழில் 11-2-2001 அன்று வெளியான நேர்காணல், இது.

'அமுதும் தேனும் எதற்கு?', 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' போன்ற திரைப்படப் பாடல்களை எழுதியவரும் பாவேந்தர் விருது, இராஜராஜன் விருது, ஆதித்தனார் விருது, கலைஞர் விருது... போன்ற பல விருதுகளைப் பெற்றவரும் 'உவமைக் கவிஞர்' என்ற பட்டத்தை உடையவருமான சுரதா அவர்கள், தன் எண்பதாவது வயதினை எட்டியுள்ளார். முத்துவிழா கொண்டாடி வரும் அவரைச் சந்தித்தோம்.

நீங்கள், அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசுவது ஏன்?

எல்லாருமே இப்படிப் பேசறவங்கதான். பாரதி வந்தான். வள்ளுவன் போனான் என்று இலக்கியத்திலேயே எழுதுவாங்க. ஆளு எதிர்ல இருக்கறப்ப 'அய்யா... சாரே' என்று பேசிட்டு, அவன் அந்தாண்ட போனதும் 'மட்டிப்பய' என்று சொல்லுவானுங்க. நான் மறைஞ்சு நின்னு சொல்லலை. நேராவே சொல்றேன். இதுக்கு என்னோட வயசும் ஒரு காரணம்.

யாரைப் பார்த்தாலும் அவருடைய சாதி என்ன என்று கேட்கிறீர்களாமே?

சாதி என்பது ஒரு குழு. அந்த ஆளைப் பத்தித் தெரியணும்னா அவனோட சாதி பத்தியும் தெரியணும். நான் சாதியை வளர்க்கலை. சாதி ஒழியாது. ஒருத்தன் வழிவழியா ஒரே சாதியில இருக்கறதை என்னால ஏத்துக்க முடியாது. மிட்டாய் விக்கிறவன்கிட்ட உன் சாதி என்ன என்றால், நெசவாளர் சாதி என்கிறான். அந்தத் தொழிலைச் செய்யாட்டி அவன் அந்தச் சாதி இல்லேங்கறேன். அதனாலதான் நான் சாதியையும் கேப்பேன். தொழிலையும் கேப்பேன். இன்னிக்கு முஸ்லீமும் கிறிஸ்தவனும் புனைப்பெயர் வச்சுக்கிட்டுத் தன்னோட சாதியையும் மதத்தையும் மறைக்கப் பாக்கறான். போலித்தனம் எதுக்கு? நிஜத்தைச் சொல்லு.

சாதிக்கு அடுத்ததா ஊர்ப் பெயர் கேக்கறீங்களே ஏன்?

ஒரு ஆளுக்கு எப்படி பேர் வந்தது என்று பார்க்கிறதை விட, ஊருக்கு இந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். ரா.பி. சேதுப்பிள்ளை 'ஊரும் பேரும்' என்றே புத்தகம் எழுதி இருக்கார்.


(1996இல் நடந்த ஒரு கவியரங்கில் எனக்குப் பரிசளிக்கிறார், சுரதா.)

பிரபலமானவங்க பிறந்த இடத்துலேர்ந்து மண் எடுத்துச் சேர்க்கறீங்களே... ஏன்?

மலேசியாவுல ஒரு கார்ல போய்க்கிட்டிருந்தப்ப, இங்கதான் ராசேந்திர சோழன் முகாம் போட்டிருந்தான்னு பக்கத்துல உள்ளவர் சொன்னார். உடனே காரை நிறுத்தி அங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கிட்டேன். அது அப்படியே தொடர்ந்துச்சு. ஒட்டக்கூத்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதி, பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர் என்று இருநூத்துச் சொச்சம் பேரோட பிறந்த ஊர்லேர்ந்து மண் எடுத்தேன். நேதாஜி இங்க தங்கினார், காந்தி இங்கதான் டீ குடிச்சார்னு சொல்றதில்லையா? அது போலத்தான் இது. இந்த வேட்டியை அவர் கட்டினார், இந்தப் பேனாவால எழுதினார் என்று சொல்றாப்லதான்! ஆட்டோகிராப் வாங்குகிறோம் இல்ல. அது ஏன் வாங்குறோம்? ஒரு ஞாபகத்துக்குத்தான். இதுவும் அது மாதிரிதான். யார் யார் எங்க எங்க மண் எடுத்தாங்கன்னு ஒரு புத்தகம் வரப்போவுது.

ஒரு ஊர்ல ஒருத்தர்தான் பிறந்தார்னு இல்லியே. பாரதியைத் தவிரவும் நிறைய பேரு எட்டயபுரத்துல பொறந்திருப்பாங்களே?

மத்தவனுக்கெல்லாம் மார்க்கெட் இல்லை. அவ்வளவுதான்.

நல்ல தலைப்பு சொன்னா ஒரு ரூபா பரிசு கொடுன்னு சொன்னீங்க. கவியரங்கத்துல கவிதை பாடறதுக்கு முன்ன தரையில ஒரு துணியை விரிச்சுட்டு வந்து பாடுங்கன்னு சொன்னீங்க. கவிதையைக் கேக்கறவங்க அந்தத் துணியில பணம்... காசு போடணும்னு சொன்னீங்க... ஏன்?

சும்மா கைதட்டிட்டு நல்லா இருக்கு என்பான். நல்லா இருக்குல்ல. அப்ப காசு போடுன்னு சொன்னேன். கச்சேரிக்கு, சினிமாவுக்குப் போனா டிக்கெட் வாங்குறே இல்ல. கவியரங்கம் மட்டும் ஓசியா? துண்டுல விழற காசு, பாடுற கவிஞனுக்கும் கிடைக்கும்தானே. அது மாதிரி நல்ல தமிழ்ல பேரு வச்சிருந்தா, நல்ல கருத்துச் சொன்னா ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுன்னு சொன்னேன்.

படகுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம், அஞ்சல் வழிக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம்... என்றெல்லாம் செய்தது ஏன்? கக்கூஸ் கவியரங்கம், பாத்ரூம் கவியரங்கம் கூட வைப்பார் என்று உங்களைக் கேலி செய்கிறார்களே?

சொல்றவன் சொல்லிட்டுத்தான் இருப்பான். இதெல்லாம் கவிதையை வளர்க்கிற வழி. கவிதையை மக்கள் கிட்ட கொண்டு போற வழி. நாலு சுவத்துக்குள்ள, அந்த வாழ்த்து, இந்த வாழ்த்து என்று பாடுவதைவிட இப்படிக் கவியரங்கம் நடத்துவது ரொம்ப சிறப்பானது.

'கவிதையை ஒழிக்கவேண்டும். இலக்கியங்களால் ஆபத்துதான் உண்டு' என்று சொன்னீங்களே, ஏன்?

மிகைப்படுத்திச் சொல்றது கவிதைன்னு ஆயிடுச்சு. மிகைப்படுத்தல் வந்தால் பொய் வந்திடும். உண்மை இருக்கவேண்டிய இடத்துல தந்திரம் இருக்குது. பேச்சு வழக்கிலேயே உலகை ஆண்டு விடலாம். இலக்கிய வழக்கு வந்ததால்தான் ஜாதி, மதம் வந்தது. இலக்கியங்களைக் கொளுத்திவிட்டால் நல்லது.

சந்திப்பு: அண்ணாகண்ணன்.

இன்னும் 11 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 11 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பாருங்கள்.

Friday, July 29, 2005

இன்னும் 12 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபியும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 12 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு http://www.amudhasurabi-ithazh.blogspot.com/2005/07/blog-post.html பாருங்கள்.

Thursday, July 28, 2005

இன்னும் 13 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபியும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 13 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள். மேலும் விவரங்களுக்கு http://amudhasurabi-ithazh.blogspot.com/2005/07/blog-post.html பாருங்கள்.

Tuesday, July 05, 2005

கவிதாயினி தேன்மொழி

Image hosted by Photobucket.com
பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள். அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.

இதே இலக்கணத்தை நாம் கவிதைக்கும் பொருத்தமுடியும். ஒரு கவிதை பிறக்கிறது. அதற்கு, முழுக்க முழுக்க அந்தக் கவிஞர் மட்டுமே காரணமில்லை. அவர் வாழும் இடம், வளர்ந்த முறை, பயணித்த இடங்கள், உணவு, உறவுகள், மனநிலை, கல்வி, அறிந்த மொழிகள், வாசிப்பு, அவரின் மொழி ஆளுமை, அனுபவம், கண்ணோட்டம், எழுதும் நேரம், எழுதுபொருள்கள், சுற்றுப்புற ஒலி-ஒளிகள், நோக்கம், நெருக்கடிகள்.... எனப் பலவும் சேர்ந்துதான் ஒரு கவிதை உருவாகிறது.

அதிகம் கவிதை எழுதப்பட்டது எப்பொழுது? போர்க் காலங்களிலா? இயல்பான காலங்களிலா?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பகுதிகளில் எந்தப் பகுதியில் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன?

எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறார்கள்? காலையிலா? இரவிலா?

கேட்டு எழுதப்பெற்றது அதிகமா? தானாகவே எழுதப்பெற்றது அதிகமா?

தனிமை, கவிதைக்கு எவ்வளவு தூரம் முக்கியம்?

குறிப்பிட்ட மணம், மது, உணவு போன்றவை, படைப்பாளியிடம் கவிதை உணர்வைத் தூண்டுகின்றனவா?

தமிழ்ப் பெருமக்கள், மேலே குறிப்பிட்டுள்ள கருப்பொருள்களில் ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் புறக் காரணிகளின் தாக்கம் எவ்வளவு என்று தெரியும்.

இதனால்தான் புதியவற்றை எழுத விரும்புவோர், வெளியூருக்குச் சென்று எழுத விரும்புகிறார்கள். சிறைக் கைதியாக இருந்த பலர், சிறையிலேயே பல நூல்களை எழுதியுள்ளார்கள். காரணம், அவருக்குச் சிறை என்பது, புதிய இடம்.

எந்தப் புதிய இடமும் ஒருவருக்குக் கவிதையைத் தந்துவிடுமா? ஒரு புதிய இடம், எவ்வளவு காலத்தில் ஒருவருக்குப் பழைய இடம் ஆகும்? இந்த வாழ்விடங்கள், கவிதையை எவ்வாறு இயக்குகின்றன? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால், பிறந்த ஊர் என்பது, பலருக்குப் பெரும்ஊற்றாய்க் கவிதையை வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலும் பிறந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து, வெளியூரில் வாழ நேர்ந்தவர்களுக்கு ஊர் நினைவுகள், அற்புதமாகிவிடுகின்றன; அவை, கவிதைச் சுடரின் ஒளியை வானளாவ வளர்க்கின்றன. அவ்வகையில் தேன்மொழியின் கவிதைகளை அவரின் ஊர்ப்புலமான மலைப் பகுதி, ஆட்சி புரிகிறது. தாவரங்கள், விலங்கினங்கள், நீர்நிலைகள், மலைகள், இயற்கையின் பன்முகக் காட்சிகள் ஆகியவை, தேன்மொழியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.

குளத்தின் உச்சியில்
கழுகின் நிழல்
வட்டமடித்து நீந்திக் குளித்து
வெயில் காய்கையில்
காட்டுக் கோழிச் சிறகுகள் பதறும்
அடைக்கல ஓசையோடு

நம் காலடி அதிர்வுகள் கேட்டு
உடலிலிருந்து ஈட்டி பாய்ச்சி
புதருக்குள் பதுங்கும் முள்ளம்பன்றி
கூரானைக் குறிவைக்கும்

மரம் வெட்டுகையில் அது
வீழ்வதற்கான கடைசி முறிவில்
மிளா மான்கள் மிரளும்
மலையிலிருந்து சமதளம் நோக்கி
கிளைகள் உருட்டுகையில்
கேளையாடுகள் சிதறும்

விறகு தூக்கும் சதம்பலுக்குள்
மர அணில்கள் விளையாடும்
முயல் குட்டிகள் மிதிபடும்....
- என வரையாட்டு மொட்டை என்ற மலையின் காட்சிகளைத் தேன்மொழி விவரிக்கையில், நமக்குள் ஒரு புதிய உலகமே விரிகிறது.

மலைப் பிரதேசத்துக் காலைகள்
மூடுபனியின் ஊடே
பல்லாயிரம் தேயிலைப் பூக்களின்
வாசனையோடுதான் விடியும்...
- என வாசனைகளை விவரிக்கிறார்.

...இன்னும்
அந்த ஒற்றைப் பேருந்து
வானவூர்தி மாதிரி
என் ஊர்ப்பிள்ளைகளை
கைதட்ட வைத்துக்கொண்டுதான்
இருக்கிறது
- என்கிறபோது, அந்த ஊரின் நிலைமை நன்கு தெரிகிறது.

தோட்டத்தை இடுப்பிலே
தூக்கிக்கொள்வேன்
விடுமுறைகளில்

மண்வெட்டியால் வெட்டியிருக்கிறேன்
மண்உளிப் பாம்பை
புரட்டிப் புரட்டிப் பார்த்தும்
வரைய முடியாத ஓவியம் அது
- என்றும்

நேசமானவள்
சலிப்பைக் கொலுசென
மாட்டி நடப்பாள்
- என்றும்

வெட்டுக்கிளி
இலைவெட்டித் தின்கையில்
இலையின் உள்நரம்புகள் துடிக்குமோ
- என்றும்

உன் சுவாசக் காற்றைப்
பார்க்க ஆசையா
மூடுபனியின் ஊடே பாடு
- என்றும்

பாவாடையில் காற்றைப் பிடித்து
ஆற்றின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு மிதந்து போ
- என்றும்

மான் தின்ற மலைப் பாம்பு
மரம் சுற்றி நெரிவது மாதிரி
என் உணர்வுகளை
எனக்குள்ளேயே
சடசடக்க விடுகிறேன்
- என்றும்

உன்னைப் பற்றி
நான் சிந்திக்கையில்
குக் குக் குக்கென
ஏதோ ஒரு பறவை
குரல் கொடுக்கிறது
- என்றும்
மூச்சோரம் முத்தமிட்டாய்
அக்கணம் கண்டேன்

பியானோவின்
வெள்ளைக் கட்டையும்
கருப்புக் கட்டையுமாய்
கிறங்கி இசைத்துக்கொண்டிருந்த
உன் கண்களை
- என்றும்

மல்லாந்த நெஞ்சில்
ஏந்திய புத்தகம்
இதயத் துடிப்பில்
அதிர்வது மாதிரி

மௌனத்தின் அடர்த்தியை
கோதிக் கோதி
வெளிக் கிளம்புகிறது
உன் நினைவு
- என்றும்

என் கல்லறைக்கான வாசகம்
தேடவேண்டியதில்லை

நட்டு வையுங்கள் என் மீது
ஒரு பூமரத்து நாற்றை
- என்றும்

சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்
தண்ணீர்த் திவலை மிதித்து
படியேறும் தனிமை

மெழுகுதிரி வெளிச்சத்தினடியில்
கருமையாய் தேங்கி நிற்கிறது..
- என்றும்

எழுதுகின்ற நிழல்
விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய்
ஊர்ந்து வருவதை
உணர்ந்தபடி எழுதுகிறேன்
யாருமில்லை
- என்றும்

நான் வாழ்வதற்கான இடம்
இருக்கிறது

வாழ்ந்துகொண்டிருக்கிற இடம் அல்ல அது
- என்றும்

புருவத்து ரோமங்கள்
ஆயிரங்கால் பூச்சி போல்
நெற்றியில் படுத்துக் கிடந்தன
- என்றும்

பள்ளத்தாக்குகளை
பயமின்றிக் கடக்கும் அந்தப்
பறவை

கூடடைகையில்
நடுங்கிக் குறுகுகிறது
- என்றும்

முத்தத்தின் ஓடுடைத்துப் பறந்த
பறவைகளின் சிறகு ஒலி

- என்றும் தேன்மொழியின் கவிதை வெளிக்குள் எண்ணற்ற முத்துகளைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் புறப் பொருள்களும் அகப் பொருள்களும் தேர்ந்த முறையில் ஒன்றிணைந்துள்ளன. வளமான மண்ணில் பிறந்து, அரிய காட்சிகளைக் கண்டு, அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். பலரும் தவற விடுகிற சாதாரண காட்சிகள், இவரின் கவிதைகளுக்குள் வலிமையோடு இடம் பிடிக்கின்றன. மூடு மந்திரம், ஜால வித்தை ஏதும் இல்லை; எளிய சொற்களில் ஒரு குழந்தைகூட கவிதைக்குள் நுழைய வாய்ப்பளித்து, வாழ்வின் பிழிவாய் - பதிவாய் இவரின் கவிதைகள், விளங்குகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மணலாறு என்ற தேயிலைத் தோட்டத்தில் 4-1-1976 அன்று பிறந்த தேன்மொழி, 8 வயது வரை அங்கு வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அதே தேனி மாவட்டத்திலேயே உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆகிய இடங்களிலும் மதுரையிலும் வசித்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறார். ஆனால், அவர் எட்டு வயது வரை வாழ்ந்த பகுதிதான், அவரின் கவிதைகளில் எல்லாம் அழுத்தமாகப் பதிவாகி வருகின்றது. ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இயற்கையை ஆராதிக்கும், அதற்காக ஏங்கும் மனத்தவர்.

இவரின் முதல் தொகுதியான இசையில்லாத இலையில்லை என்ற நூல், தேவமகள் அறக்கட்டளை விருது, 'சிற்பி' பாலசுப்பிரமணியன் இலக்கியப் பரிசு, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. அதை அடுத்து, அநாதி காலம் என்ற கவிதைத் தொகுதியைப் படைத்துள்ள தேன்மொழி, திரைப்படப் பாடல்களும் எழுதி வருகிறார். இயற்பெயர் : ரோஸ்லீன் ஜெயசுதா.

முதன்முதலாக, பாரதிராஜா இயக்கத்தில் ஈர நிலம் என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். சிறுகதைகளும் எழுதி வருகிறார். தமிழ்த்திரைத் தொலைக்காட்சிக்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவரும் இவர், திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் உள்ளார்.

இவருடைய கவிதைகளில் குறிப்பிடவேண்டிய ஒன்று: பற்பல மலர்கள், மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கவிதைக்குள் பதிவு செய்துள்ளார். அவற்றுள் பலவும் நாம் அறியாதவை; ஆனால், அறிய வேண்டியவை. அவற்றை வெறும் பட்டியலாகவோ, பெயர்களாகவோ பதியாமல், கவித்துவத்துடன் இயல்பாக, கவிதை என நம்பும்படியாகப் பதிந்துள்ளமை, போற்றத் தகுந்த செயல்.

தேன்மொழியின் படைப்புகள், படிப்படியாகச் சுருக்கமும் கூர்மையும் பெற்று வருகின்றன. நம் உணர்வுகளைத் தம் வயமாக்கும் வலிமை, அவற்றுக்கு உண்டு.

நேற்று ஒரு காட்டுப்
பூவுக்குப்
பெயரிட்டேன்
'காஞ்சனி'
என்று
- என்கிறார், ஒரு கவிதையில்.

யாரேனும் பெயரில்லாத காட்டுப் பூவைக் காண நேர்ந்தால், தேன்மொழி என்ற பெயரைப் பரிசீலியுங்கள்.

Friday, July 01, 2005

திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா



திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா

நேற்று (30-6-05) மாலை சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம் வெளியானது. மத்திய செய்தி-ஒலிபரப்பு & கலாசார அமைச்சர் மாண்புமிகு ஜெய்பால் ரெட்டி வெளியிட, பாலமுரளி கிருஷ்ணா முதல் பேழையைப் பெற்றுக்கொண்டார். கிறித்தவர்களால் நடத்தப்பெறும் தமிழ் மையம் என்ற அமைப்பும் இளையராஜா மரபிசை, கலை, பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் ரஜனிகாந்த், நிகழ்ச்சிக்கு வந்திருந்து கடைசி வரை(இரவு 10.40) இருந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார். கமலகாசன், பாரதிராஜா, பீட்டர் அல்போன்ஸ், என். ராம், இளையராஜாவின் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தமிழ் மையத்தைச் சேர்ந்த அருட்திரு ஜெகத் கஸ்பார், அருட்திரு வின்சென்ட் சின்னதுரை, அருட்திரு ஆனந்தம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

6 மணிக்கு விழா தொடங்கும் எனப் போட்டிருந்தார்கள். நான் 5.50க்குச் சென்றேன். அப்போதே அரங்கு நிரம்பி, வெளியில் நூற்றுக்கணக்கானோர் நின்றிருந்தார்கள். பின்னர் ஒரு வழியாக உள்ளே சென்று, இடம் பிடித்து, உட்கார்ந்தேன். சுமார் 6.30க்குத்தான் விழா தொடங்கியது. மத்திய அமைச்சர், (29-6-05)முந்தைய நாள் மாலை இதே அரங்கில் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சரவையின் திடீர் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்று, இரண்டு பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்கும் முடிவை எடுத்து, அதைப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துவிட்டு, மும்பை வழியாக மீண்டும் சென்னை வந்தார்.

"சமூகத்தின் அடிநிலையிலிருந்து வந்து, இசையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார். இசையின் ராஜா இளையராஜா" என்றெல்லாம் பாராட்டிய பின்னர் தன் உரையை முடித்துவிட்டு இருக்கைக்குத் திரும்பும் முன், மீண்டும் ஒலிவாங்கிக்கு வந்தார். "அடுத்து, பெங்களூர் செல்கிறேன். 12 மணியில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என நான்கு மெட்ரோபாலிட்டன் மாநகரங்களைக் காண்கிறேன்" என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

சிம்பொனி ஓரட்டோரியோ(தெய்வீக அருளிசை) என்ற வடிவில், திருவாசகத்தின் ஆறு பாடல்களை இளையராஜா வழங்கியுள்ளார். அந்தக் குறுந்தட்டிலிருந்து ஒரு பாடலை அரங்கில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, சுழலவிட்டனர். "பொல்லா வினையேன்" என்று தொடங்கி, திருவாசகத்தின் வரிகளைப் புதுமையான முறையில் தந்துள்ளார். இடையிடையே ஆங்கிலத்தில் அதன் பொருளைப் பாடலாகத் தந்துள்ளமை, நல்ல கலவை. கிறித்தவத் தன்மை உள்ள பின்னணி இசையை வெளிநாட்டவர் இசைக்க, பல்வேறு நிலைகளில் இழைந்தும் குழைந்தும் இளையராஜாவின் குரல், ஒரு பெரும் அனுபவத்தை அளிக்கிறது.

திருவாசகத்தின் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு சென்னையைச் சேர்ந்த இசைக் குழுவினர், நடனமாக ஆடிக் காட்டினர். திருவாசகத்தின் வேறொரு பாடலை பள்ளிக்கூட மாணவியர் பலர், பியானோ இசைப் பின்னணியில் பாடினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்ற திருவாசகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

பாலமுரளி கிருஷ்ணா, "இது தெய்வீக இசை. இறைவன் இசை வடிவமானவன்" என்றார்.

பீட்டர் அல்போன்ஸ், "இளையராஜா இந்தப் பணியை ஏன் கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் தமிழ் மையத்திடம் கொடுத்தார்? தமிழ்நாட்டின் எவ்வளவோ அமைப்புகள், தமிழும் சைவமும் வளர்க்கும் திருமடங்கள், திரைத் துறை வித்தகர்கள் ஆகியோரிடம் கொடுக்காமல் தமிழ் மையத்திடம் கொடுத்ததற்குக் காரணம், சமய நல்லிணக்கமே" என்றார்.

"இதை யாரும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யாதீர்கள். திருட்டுத்தனமாய்க் கேட்காதீர்கள். காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்" என்று இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என். ராம் கூறினார்.

"இறைப்பற்று இல்லாதோரையும் ஈர்க்கும் இசை, இது. இதை ஆக்கும் திறமை, இளையராஜாவுக்கு 25,30 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு. இப்போது தாமதமாக வெளிப்பட்டுள்ளது" என்றார் கமலகாசன்.

"இளையராஜா, ஒரு வகையில் என் குரு. அவர்தான் எனக்கு ரமண மகரிஷியையும் திருவண்ணாமலையையும் அறிமுகப்படுத்தினார்" என்றார் ரஜனிகாந்த்.

"கும்பினியர்கள் ஆண்ட மண், இது. அந்த வெள்ளைக்காரர்களை உன் இசையை வாசிக்கச் செய்திருக்கிறாய். நீ பாடும்போது நானே பாடுவதுபோல் இருக்கிறது. நீ புகழ் பெறுவது நானே புகழ் பெறுவது. வைகை ஆற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நன்றி. இளையராஜா, பல முறைகள், இனி எனக்குப் பிறவி இல்லை. என் பிறவியின் நோக்கம் நிறைவடைந்துவிட்டது என்கிறான். அது தவறு. நீ ஆயிரமாயிரம் முறை மீண்டும் மீண்டும் பிறந்து வந்து, இசையை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். உனக்கு இறப்பே கிடையாது. பிறப்பு மட்டுமே உண்டு" என்றார் பாரதிராஜா.

இறுதியாகப் பேசவந்த வைகோ, மிகவும் சிறப்பாகப் பேசினார். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் 14 வகை யாழ்க் கருவிகள் இருந்தன. பிரமிடில் யாழ்க் கருவி காணப்படுகிறது. மெசப்படோமியா-மொகஞ்சதாரோ அகழ்வில் யாழ்ச்சின்னங்கள் கிடைத்துள்ளன... எனத் தொடங்கியவர், தமிழிசையின் வரலாற்றை அடுத்துத் திருமுறைகளுக்கு வந்தார்.

பன்னிரு திருமுறைகள் எவை? முதலாம் திருமுறை முதல் பன்னிரண்டாம் திருமுறை வரை ஒவ்வொரு திருமுறையிலும் இடம்பெறும் நாயன்மார்கள் யார் யார்? என்றெல்லாம் கடகடவெனச் சொல்லிக்கொண்டே வந்த அவர், எட்டாம் திருமுறையான திருவாசகத்திற்கு வந்தார்.

திருவாசகத்தில் எத்தனை பதிகங்கள் உள்ளன? ஒவ்வொரு பதிகத்தின் பெயர் என்ன? மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? குதிரை வாங்குவதற்காக அரசன் தந்த பணத்தில் சைவப் பணி செய்தது, பின் அரசன் கேட்டபோது, இறைவன் கட்டளைப்படி, குதிரைகள் பின்னால் வருகின்றன என ஓலை அனுப்பியது, நரிகள், பரிகளாக(குதிரைகளாக) மாறி, லாயத்தில் அடைக்கப்பெற்றது, இரவில் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி ஊளையிட்டு அறுத்துக்கொண்டு ஓடியது, இதற்காக அரசன், மாணிக்கவாசகரைச் சினந்தது, மதுரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இறைவன் பிட்டுக்கு மண் சுமக்க வந்தது, பிட்டை வாங்கிக்கொண்டு மண்ணை அடைக்காமல் நீரில் விளையாடியது, அதைக் கண்ட காவலர்கள் இறைவன் முதுகில் பிரம்பால் அடித்தது, இறைவன் மீது பட்ட அடி எல்லோர் மீதும் பட்டது, அதன் பிறகு மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்று பாடியது... எனத் திருவாசகத்தின் பின்னணி, வரலாறு, நோக்கம் என அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இங்கு எந்த இடத்திலும் பார்த்துப் படிக்கவோ, தடுமாறவோ, மறந்துவிடவோ செய்யாமல் ஆற்றொழுக்காக வைகோ, மடை திறந்தார். இளையராஜாவின் பெருமைகள், இந்தத் திருவாசகத்தில் இளையராஜா எந்த ஆறு பாடல்களை எடுத்துக்கொண்டார்? ஏன் அவற்றை எடுத்துக்கொண்டார்? அவற்றின் பொருள் என்ன? என அவர் பேசப் பேச, அரங்கமே அதிசயித்தது. இளையராஜாவும் ரஜனியும் பிரமித்தார்கள். ரஜனி பேசும்போது, "வைகோவின் கர்ஜனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் கேட்கவிருக்கிறேன்" என்றார். வைகோ பேசப் பேச, ரஜனியின் புருவம் ஏறியே இருந்தது.

பின்னர் பேச வந்த இளையராஜா, வைகோவை, "அரசியலை விட்டுவிட்டு ஆன்மீகத்திற்கு வந்துவிடுங்கள். சைவ சித்தாந்த உரையைக் கேட்டதுபோல் இருந்தது" என்றார். பாரதிராஜாவிற்குப் பதில் அளித்த அவர், "நீ வேண்டுமானால் பிறந்துகொள். நான் பிறக்க விரும்பவில்லை. வள்ளுவரே
தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்று கூறியிருக்கிறார். பிறப்பதோ, புகழ் பெறுவதோ நம் கையில் இல்லை" என்றார். அவருக்கு முன் நன்றியுரை கூறிய அருட்திரு ஆனந்தம், "சிம்பொனி ஓரட்டோரியோவை முடித்து, பிரசவ வேதனையில் இருப்பார். அதைப் பற்றி அவர் கூறக்கூடும்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த இளையராஜா, "தாயைக் கொச்சைப்படுத்தாதீர்கள். பிரசவ வலிக்கு உலகின் எந்த வலியும் ஈடானதில்லை" என்றார்.

"ஒரு பாட்டுப் பாடு தலைவா", என ரசிகர் ஒருவர் குரல் கொடுத்தார். "என்ன பாட்டு வேணும் தலைவா?" என்ற இளையராஜா, 'என் ஊரு சிவபுரம்' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அருட்திரு ஜெகத் கஸ்பார், தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான ஆளுமையுடன் பேசினார். கணீர் என்ற குரல், நல்ல சிந்தனைகள், அவையை ஆளும் திறம் எனப் பலவிதங்களில் பரிமளித்தார். அவர் நிர்வாக இயக்குநராக உள்ள தமிழ் மையம்தான் இந்தத் திருவாசகத் திட்டத்தை முன்நின்று நிறைவேற்றியுள்ளது. சமய நல்லிணக்கம் செழித்தோங்கவும் தமிழிசையும் தமிழும் வளரவும் இந்தத் திருவாசகம் தொண்டாற்றும். "இன்னும் 24 மாதங்களில் கிராமி விருது பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை இளையராஜா பெறுவார்" என ஜெகத் கஸ்பார் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இதுவரை ஒரு கோடி கடன் உள்ளது. மக்கள் நினைத்தால் இதை ஒரே வாரத்தில் தீர்த்துவிடலாம்" என்றார் ஜெகத்.

மக்கள் நினைப்பார்களா?

(தொடர்பு கொள்ள : தமிழ் மையம், 153, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : 91-044-2499 3380, 2499 3390)