!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/05 - 2005/06 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, May 24, 2005

தமிழ் தமிழர் தமிழ்நாடு!!???

அண்ணாகண்ணன்

உண்மையில் நாம் மிகவும் இக்கட்டான நிலையில்தான் இருக்கிறோம். கடந்த ஞாயிறு அன்று தமிழன் தொலைக்காட்சியில் இயக்குநர் சீமான், மக்கள் எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். பேச்சின் இடையே அவர் சொன்னது: அண்மையில் ஒருநாள் அவரும் அறிவுமதியும் திரையரங்கு ஒன்றிற்குச் சென்றார்களாம். அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அவ்வளவு பேரும் மேற்கத்திய கலாசாரம் உடையில் தெரிய, கலப்புத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அறிவுமதி சொன்னது: 'நாம் போராட்டத்தை மிகவும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறோம். நாம் இப்போது மிகவும் பின்தங்கி இருக்கிறோம். எல்லாம் நம் கையை மீறிச் சென்றுவிட்டன'.

இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்பது நல்லது.

மிகவும் அச்சம் தரும் உண்மை என்னவெனில், பெரும்பான்மைத் தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்று குறைந்துவிட்டது. அது மட்டுமின்றி, அவர்களிடம் தமிழை வலியுறுத்துவதை அவர்கள் தவறு என்றும் கருதத் தொடங்கிவிட்டார்கள். தவறு என்ற மனப்பான்மை வளருவதால் நல்ல தமிழைப் பேசும் தவற்றைப் பலரும் செய்வதில்லை. இயல்பான பேச்சு என்ற பெயரில் எவ்வளவுக்கு எவ்வளவு வேற்றுமொழிச் சொற்களைக் கலக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கலக்கிறார்கள். மிகவும் கவனிக்க வேண்டியது, இப்படிக் கலப்பது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. இதுவே சரி என்றும் கருதுகிறார்கள்.

இந்த மனப்பான்மையின் அடிப்படையிலேயே அவர்களின் பல செயல்களும் அமைகின்றன.

1. குழந்தைகளுக்கு வடசொற்கலப்புடன் பெயர் வைப்பது, 'மம்மி', 'டாடி' என்று அழைக்கவைப்பது, தம் குழந்தைகளை ஆங்கிலப் பாட வழியில் சேர்ப்பது, ஆங்கிலத்தில் பேசுபவரைப் பெரிய அறிவாளியாகக் கருதுவது...... போன்றவை இன்று எங்கும் காணத் தகுந்த காட்சிகள்.

2. தம் முதலெழுத்துகளை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்வோர் பெருகி வருகின்றனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு அவர்கள், தமிழை வலியுறுத்திப் பேசும் தகுதியையும் இழந்துவிடுகிறார்கள்.

3. கடைகள், வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள்.. என வணிகம் சார்ந்த அனைத்திலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இன்னும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவரின் முகவரி அட்டை முதற்கொண்டு, கடிதக் கட்டு, தம்மைப் பற்றிய அறிமுகம், விலைச் சீட்டு, வணிக ஒப்பந்தம்... என அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

4. துறைதோறும் துறைதோறும் புழங்குகிற வேற்றுச் சொற்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினால் தமிழ் அகராதி தோற்றுவிடும் ஆபத்து உள்ளது.

5. எழுத்தாளர்களும் வெட்கம் இல்லாமல் இந்தப் போக்குக்குத் துணை போகின்றனர். தமிழ்ப் படைப்புகள் பலவும் வேற்று மொழிச் சொற்களைத் தம் உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளன. புகழ் பெற்ற, மூத்த எழுத்தாளர்களே இது குறித்து அக்கறை ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எங்கே அதை ஆதரித்தால் தாம் நாளை கலப்புத் தமிழில் படைக்கத் தடை உண்டாகிவிடுமோ என்ற அச்சத்தில் 'படைப்பிலக்கியத்தில் தூய தமிழைப் பேண முடியாது' என்று மறுக்கின்றனர். அவர்களுக்கு அதற்குத் தகுதியும் திறமையும் இல்லை என்று ஒப்புக்கொள்ள அவர்கள் எவரும் முன்வருவதில்லை. மாறாக, தம் குறையைத் தமிழின் குறையாக ஏற்றிக் கூறுவதில் எழுத்தாளர்கள் முனைப்புடன் உள்ளனர்.

6. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும்கூட தம் எல்லையான வகுப்பறை அளவிலும் கூட நல்ல தமிழில் பேசுவதில்லை; மாணவர்களையும் பேசத் தூண்டுவது இல்லை. 'கூலிக்கு மாரடிப்பது' என்பதுபோல் வகுப்பறைக்குள் நுழைந்து, நேர நிரப்பிகளாக நிற்கிறார்கள். தமிழை வைத்து வயிறு வளர்க்கும் இவர்கள், தன் பக்க இலக்கிலேயே கால்பந்தை அடிக்கிறார்கள்(same side goal). மாறும் உலகில் தமிழால் எதுவும் முடியாது என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

7. தமிழ்நாட்டு ஊடகங்கள், தமிழுக்குப் பெரும் கேட்டினைச் செய்து வருகின்றன. தலைப்புகளைத் தமிழில் வைக்காமல், தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் நிலைமையை மோசமாக்கி வருகிறார்கள். இவர்களும் நல்ல தமிழுக்கு எதிர்நிலையையே எடுக்கிறார்கள். தம்மைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் தவறான வழிகாட்டி வருகிறார்கள்.

8. அரசு நிர்வாகம், நீதிமன்றம், ஆலயம், கல்வி, தொழில்நுட்பங்கள்.. எனப் பல துறைகளிலும் தமிழ், இரண்டாம் தர நிலையிலேயே உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமிழை எல்லாத் துறைகளிலும் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழைப் பேசுவோர், அதுகுறித்துத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் பெருமிதம் கொள்ளச் செய்வது, பெரிய சவாலாக உள்ளது.

நல்லவேளையாக, தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. முதல் நோக்கில் இது, பாராட்டப்பட வேண்டியது. இவர்கள் வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்கிப் போராட முன்வந்துள்ளனர். இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், தமிழர்கள் தமிழை விட்டு விலகி நிற்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழர்களிடம் தமிழைச் சொல்லி வாக்குக் கேட்க முடியும் என்பதை நான் நம்பவில்லை.

இப்படி வெகு சிலர், போராட்டக் களத்தில் நிற்கும்போது களத்தில் இறங்கிப் போராட முடியாதவர்கள் சும்மாவாவது இருக்கலாம். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல், எதிர்க்கருத்தைக் கூறி, மட்டையடி அடிக்காமல் இருக்கலாம். இந்தப் போராட்டத்தால் தமிழ் மக்கள், தமிழுணர்வு பெற்றுவிடுவார்கள் என்ற நப்பாசையில் இருக்கும் சிலர், அதனால் தொடக்கத்திலேயே சோர்ந்துபோய்விடலாம்.

இந்தப் போராட்டம், முனை மழுங்கிப் போவது, நம்மிடம் இருக்கும் மொக்கைக் கத்தியையும் நாம் இழந்துவிடுவதற்குச் சமானம். தமிழ்ப் பாதுகாப்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும்.

ஏறத்தாழ, பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். 'செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்' என்ற அமைப்பின் சார்பில், பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கக் கோரி, சென்னையில் சில சாலைகளின் வழியே பேரணி நடத்தினோம்; காவல் துறையின் அனுமதியுடன்தான். வழியில் உள்ள கடைகளில் எல்லாம் துண்டறிக்கையை விநியோகித்து வந்தோம். இறுதியில் ஒரு கூட்டம் போட்டு, சில தீர்மானங்களை நிறைவேற்றினோம். அன்று எங்களால் செய்ய முடிந்தது அவ்வளவே.

இன்றைய நிலையில் இந்தக் கோரிக்கைக்காகப் போராடுவதற்கு ஆட்கள் கிடைப்பதே அரிது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தம் வேலையை விட்டுவிட்டு, அக்கினி நட்சத்திர வெய்யிலில் தொண்டை கிழியக் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, வாகனங்களை மறித்து, வேற்று மொழி விளம்பர/ பெயர்ப் பலகைகளைக் கரிநெய் பூசி அழித்து, கைதாகி, சிறை செல்லுவது எதற்காக?

அரசின், வணிக நிறுவனங்களின், பொதுமக்களின் கவனத்தைத் தமிழின்பால் ஈர்ப்பதற்கே. அவர்கள் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கா விட்டாலும் எதிர்க்காமலாவது இருக்கலாம். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா? ஐயப்பாடு இருக்கிறதா? வேறு ஆலோசனை இருக்கிறதா? போராடும் தோழர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள், அணுக முடியாத தொலைவில் இல்லை.

போராட்டம் எப்படி அமையலாம் என்பதை ஆலோசனையாகக் கூறலாமே அன்றி, போராட்டமே தவறு என்று அவர்களைத் தூற்றக் கூடாது. நம் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் சொல்வதைக் கேட்கவும் ஆமோதிக்கவும் ஒவ்வொருவருக்கும் நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள். ஆகவே வலைப்பதிவாளர்கள், தமிழைக் குறித்து விவாதிக்கும் போது மிகுந்த விழிப்போடு இருக்குமாறு வேண்டுகிறேன். சமூகத்திற்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நன்மை செய்யும் ஒரு முயற்சிக்கு நாம் நம் வேற்றுமைகளை மறந்து ஆதரவு தெரிவிக்கவேண்டும்.

Sunday, May 15, 2005

பெண் எம்.எல்.ஏ. சூரியகலா (குடியாத்தம்)



Image hosted by Photobucket.com

சந்திப்பு: அண்ணாகண்ணன்

தேநீர்க் கடையை அரசியல் பாடசாலை என்று சொல்வார்கள். ஒரு நாளிதழைப் பத்து நூறு பேர் படிப்பதும் காரசாரமாக விவாதிப்பதும் அது சிலநேரங்களில் அடிதடியில் முடிவதும் அங்கு வாடிக்கை. இதற்கு அஞ்சி, 'இங்கு அரசியல் பேசாதீர்' என்று எழுதி வைப்போரும் உண்டு.

சில கிராமத்துத் தேநீர்க் கடைகளில் இட்லி, வடை போன்றவையும் விற்பார்கள். இக்கடையை 'ஓட்டல் கடை' என்பார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது விரிஞ்சிபுரம் கிராமம். அங்கு 43 ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி என்பவர், ஒரு ஓட்டல் கடை தொடங்கினார். 'சூரியகலா ஓட்டல்' என்று, அப்போது பிறந்த தன் மகளின் பெயரையே கடைக்கு வைத்தார். அந்தத் தேநீர்க்கடைக்காரரின் மகள் சூரியகலா(43), இன்று குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.

சூரியகலாவைச் சந்திக்க விரிஞ்சிபுரத்துக்குச் சென்றோம். 'சி.எம்.சூரியகலா' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தோம்.

"பெயருக்கு முன்னால் இருக்கும் சி.எம்., எதிர்காலத்தில் பெயருக்குப் பின்னாலும் வரக்கூடுமா?" என்று சிரித்தபடி கேட்டோம்.

"நானாவது... சி.எம். ஆவதாவது? அந்தத் தகுதி 'அம்மா' ஒருவருக்கு மட்டும்தான் உண்டு!" என்று சூரியகலாவும் சிரித்தார்.

"என் கணவர் சி.எம்.மகாலிங்கத்தின் முன்னோர் சின்னசாமி, முனுசாமி என்ற இருவர். அவர்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து 'சி.எம்.' ஆக்கினார்கள். 50 ஆண்டுகளாக அவர் குடும்பத்தில் எல்லோருக்குமே இதுதான் முதலெழுத்து. அவரை மணந்தபிறகு எனக்கும் அதுவே முதலெழுத்தானது" என்று விளக்கினார்.

இளமைப் பருவம் பற்றிக் கேட்டோம். சூரியகலா விவரிக்கத் தொடங்கினார்-
"என் அப்பா நாராயணசாமி. அம்மா, ராஜாமணி. இவர்களுக்கு 3 பெண்களும் 4 ஆண்களும் பிறந்தார்கள். நான் இரண்டாவது குழந்தை.

சின்ன வயதில் அப்பாவின் கடைக்குப் போய் விரும்பியதைச் சாப்பிடுவேன். வேடிக்கை பார்ப்பேன்.

11ஆம் வகுப்பு வரை விரிஞ்சிபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு அஞ்சல் வழியில் வரலாறு பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றேன்.

சிறுவயதிலிருந்தே நான் 'அம்மா'வின் ரசிகை. 'அம்மா' நடித்த படம் என்றால் முதல்நாளே போய்ப் பார்ப்பேன். 1978 முதல் நான் அ.தி.மு.க.வில் இருந்தாலும் 1980 முதல்தான் வேகமாகப் பணியாற்றத் தொடங்கினேன்.

1996 சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டேன். 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதில் சொத்துகளை இழந்து கடனாளி ஆனேன். எனினும் மனம் தளரவில்லை. இறுதிமூச்சு உள்ளவரை 'அம்மா'தான் எனத் தொடர்ந்து பணியாற்றினேன்.

இந்த 2001 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். அங்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 36 பேர் விண்ணப்பித்தார்கள். 'அம்மா' எனக்கு 'சீட்டு' கொடுத்தார்கள். அது சொந்தத் தொகுதியாக இல்லாதபோதும் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். எல்லாமே 'அம்மா'வுக்காக விழுந்த வாக்கு. அம்மா என் தெய்வம்.

நானும் என் கணவரும் 1991இல் சென்னைக்கு வந்தோம். அப்போது 'அம்மா' முதலமைச்சராய் இருந்தார். அமைச்சர் ஒருவரிடம் போய் 'அம்மாவைப் பார்க்கணும்' என்றோம். எதிரில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, 'இதோ, போட்டோவுல இருக்காங்க. பார்த்துக்குங்க' என்றார். மனவேதனையுடன் திரும்பினோம்.

அந்த வலியைத் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து உழைத்தேன். 'அம்மா' என்னை சட்டப் பேரவை உறுப்பினராக்கி அழகு பார்க்கிறார். இப்போது 'அம்மா'வை அடிக்கடி பார்க்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு.

1990இல் என் மகள் மாலதியையும் மகன் சதீசையும் கடத்தினார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று 'அப்பாவுக்கு விபத்து' என்று சொல்லிக் கூட்டிச் சென்றான், ஒருவன். எனக்கு விசயம் தெரிந்ததும் நாலாபுறமும் ஆட்களை அனுப்பித் தேடினேன். வேலூரில் பிள்ளைகளுடன் அவன் நடந்து சென்றபோது பிடிபட்டான். பிறகு விசாரணையில், 'என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவே இந்த முயற்சி' என்று தெரிந்தது. அன்று எங்களின் திருமண நாளும்கூட.

1994ஆம் ஆண்டு 'அம்மா'வைத் தாக்கிப் பேசியதற்காக வாழப்பாடி ராமமூர்த்தியின் கொடும்பாவியை எரித்தேன். அடுத்த ஆண்டில் சென்னாரெட்டி, சுப்பிரமணியசாமி ஆகியோரின் கொடும்பாவிகளையும் எரித்தேன். மூன்று முறைகளும் கைதாகி விடுதலையானேன். பொம்மை மேல் அவர்களின் பெயர் எழுதி உள்ளே 500 சரவெடியை வைத்துக் கொளுத்தினேன். அவை தூள் தூளாக வெடித்துச் சிதறின.

1995இல் ஆளுநர் சென்னாரெட்டியைத் திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மனு அனுப்பினோம். அதில் நான் முதலில் இரத்தக் கையெழுத்து வைத்தேன். என் தலைமையில் ஆயிரம் பேர் இரத்தக் கையெழுத்து இட்டார்கள்.

தேர்தலில் வென்ற பிறகு நன்றி தெரிவிக்கச் சென்றபோது மக்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தந்துள்ளார்கள். வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆழ்குழாய்க் கிணறு, சாலை வசதி, மருத்துவமனைச் சுகாதார வசதி, பேருந்து வசதி, மின்விளக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொகுப்பு வீடு, கள்ளச் சாராய ஒழிப்பு, காவல்துறை மீது புகார்.... எனப் பல கோரிக்கைகளுடன் மனுக்கள்.

இதுவரை 2,650 மனுக்களுக்குப் பதில் எழுதியுள்ளேன். அந்தந்தத் துறைக்கு அவற்றை அனுப்பிப் பரிசீலிக்கச் சொல்லியுள்ளேன். விரைவில் எல்லாக் குறைகளையும் தீர்ப்பேன்" என்றார், சூரியகலா.

சூரியகலாவின் கணவர் மகாலிங்கம், ஒரு சித்த மருத்துவர். ஓமியோபதி, யுனானி மருத்துவமும் அறிந்தவர். வீட்டிலேயே நோயாளிகளைப் பார்த்து மருந்து தருகிறார். "கட்சிக்காரர் வந்தால் காசு வாங்கமாட்டேன். ஏழைகள் என்ன கொடுக்கிறார்களோ, வாங்கிக்கொள்வேன்" என்றார். ஆங்கில மருந்துக் கடை ஒன்றும் வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனமும் வைத்துள்ளார்.

மனைவியைக் குறித்துக் கேட்டோம். "1979இல் திருமணம் செய்துகொண்டோம். நான் என் மனைவியைச் 'சீதா' என்றுதான் அழைப்பேன். விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருகிறோம். சீதா, நேர்மையும் உண்மையும் பொருந்தியவர்" என்றார் மகாலிங்கம்.

மகாலிங்கம் மொட்டைத் தலையுடன் இருந்தார். காரணம் கேட்டோம். "அம்மா முதல்வரானால் திருப்பதிக்கு வந்து அன்னதானம் செய்து மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருந்தேன். அதைத்தான் நிறைவேற்றினேன்" என்றார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள். இளையவர் ராஜேஷ்காந்தி +2 படிக்கிறார். நடுவர் சதீஷ்காந்தி +2 முடித்துள்ளார். மூத்தவர் மாலதி பிரியதர்சினி, மருத்துவப் படிப்பு 4ஆம் ஆண்டு படிக்கிறார். நடனம், நடிப்பு, பாட்டு, ஓவியத் திறமைகள் உடையவர். "நரம்பியல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 'அம்மா'வின் மருத்துவக் குழுவில் இடம்பெற விரும்புகிறேன்" என்றார் மாலதி.

(நன்றி: ராணி 26-8-2001)

Friday, May 13, 2005

பெண் எம்.எல்.ஏ. சாண்டிரா டான் கிரேவல்



Image hosted by Photobucket.com

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மக்கள் நேரடியாகத் தேர்வுசெய்யும் உறுப்பினர்கள் 234 பேர். இவர்கள் தவிர, ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.ஏ. ஆக ஆளுநர் நியமிப்பது வழக்கம். தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏ.களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இவருக்கும் உண்டு (தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை தவிர).

இப்போதைய சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏ. ஆக, சாண்டிரா டான் கிரேவல் என் 47 வயதுப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த தாமஸ்மலையில் வசிக்கும் சாண்டிராவைச் சந்தித்தோம்.

"நீங்கள் நடிகை லைலாவைப் போல் இருக்கிறீர்கள்!" என்றோம். குபீரெனச் சிரித்தார். "லைலா, தமிழ் நடிகையா?" எனக் கேட்டார். "தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். ஆனால், மும்பை நடிகை" என்றோம்.

பேட்டி தொடர்ந்தது. சரளமான ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோடு பேசினார், சாண்டிரா.

ராணி: நீங்கள் பிறந்ததில் இருந்து இன்றுவரை உங்கள் வாழ்வைப் படிப்படியாகச் சொல்லுங்கள்?
சாண்டிரா: நான் இதே தாமஸ் மலையில் 1953இல் பிறந்தேன். சென்னை, அண்ணா சாலையில் உள்ள கிறித்து ஆலய ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தேன்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் பி.யூ.சி. முடித்தேன். தாம்பரத்தில் உள்ள கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.

படித்து முடித்துவிட்டு, 'இந்தியாவின் உலகப் பார்வை' என்ற தொண்டு நிறுவனத்தில் எழுத்தராக மூன்றாண்டுகள் பணியாற்றினேன். பிறகு பெட்ரோலிய வேதிப் பொருள் நிறுவனம் ஒன்றில் எழுத்தராகச் சேர்ந்தேன். அங்கு 21 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு ஆட்குறைப்பு நடந்தபோது கட்டாய ஓய்வு கொடுத்து என்னை அனுப்பினார்கள். அதன்பிறகு நான் எங்கும் வேலைக்குப் போகாமல் சமூகசேவை செய்துவருகிறேன்.

ராணி: நீங்கள் செய்துவரும் சமூக சேவை என்ன?
சாண்டிரா: நான் பணியாற்றியபோது இரண்டு மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றிருந்தேன். இப்போது எங்கள் பகுதியில் நடமாட முடியாமல் இருக்கும் முதியோருக்கு உதவி வருகிறேன். மின்சாரக் கட்டணம் செலுத்துவது, கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவது, தொலைபேசிக் கட்டணம் செலுத்துவது... போன்ற சின்னச் சின்ன உதவிகள் செய்கிறேன். ஏழைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் குடும்பச் சிக்கல் தீர ஆலோசனை வழங்குகிறேன்.

எழும்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று ஏசுவின் மீது பாடல் இசைத்துப் பிரார்த்தனை செய்கிறேன். 'மதுரையில் கால் ஊனமுற்ற ஒருவர் தெருவில் வசிக்கிறார்' என்ற செய்தியை நாளிதழில் கண்டேன். உடனே 'உதவும் கரங்கள்' வித்யாகருக்குத் தொலைபேசி செய்தேன். 'நானும் அந்தச் செய்தியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார், அவர். என்னால் முடிந்த தொகையைக் காசோலையாக அனுப்பி வைத்தேன்.

ராணி: உங்களுக்கு எப்படி இந்தப் பெருமை மிகுந்த நியமனம் கிடைத்தது?
சாண்டிரா: ஒரு நாள், தொலைபேசியில் ஒருவர் என்னை அழைத்தார். என் வாழ்க்கைக் குறிப்பை அனுப்புமாறு கேட்டார். "எதற்கு?" என்றேன். "வேலைக்காக" என்றார். "எனக்கு வேலை வேண்டாம். நான் சமுதாய சேவை செய்கிறேன்" என்றேன். "இந்த வேலையே அப்படிப்பட்டதுதான்" என்றார். அனுப்பிவைத்தேன்.

பிறகொருநாள் முதல்வர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் செய்தி வந்தது. போய்ப் பார்த்தேன். "உங்களால் உங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியுமா?" என்று முதல்வர் கேட்டார். "உங்கள் உதவியோடு முடியும்" என்றேன். ஜூன் 29ஆம் தேதி என்னை எம்.எல்.ஏ. ஆகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ராணி: 'ஆங்கிலோ இந்தியன்' என்பவர் யார்?
சாண்டிரா: (இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக் காட்டி) ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவரே ஆங்கிலோ இந்தியன். 'ஐரோப்பிய' என்று குறிப்பிட்டு இருந்தாலும் அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருக்கவேண்டும்.

ராணி: உங்கள் பெற்றோரைப் பற்றிச் சொல்லுங்கள்?
சாண்டிரா: என் அம்மா பெயர், ஈவான். இப்போது 74 வயது ஆகிறது. தாமஸ் மலை தபால் தந்தி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். என் அப்பா காலின்ஸ். நாற்பது வயதுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு என் அம்மா, தன் சக ஊழியராய் ரொசாரியோவை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே என் தங்கை மிஷல். இப்போது அவள் மும்பையில் கல்லூரிப் பேராசிரியையாக இருக்கிறாள். அவள் கணவர் ஒரு மலையாளி. என் கணவர் பஞ்சாபி.

ராணி: உங்களுடையது காதல் திருமணமா?
சாண்டிராவின் தாய்: ஆங்கிலோ இந்திய சமுதாயத்தில் முழுக்கக் காதல் திருமணம்தான்.

சாண்டிரா : ஆமாம். ஒருநாள் பலத்த மழை பெய்தது. என் வீட்டருகே வரும்போது அரீந்தர்சிங் கிரேவலின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டுச் சென்றார். பிறகு நட்பு முறையில் நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். நட்பு வளர்ந்து காதலானது. மூன்றாண்டுகள் கழித்து எங்கள் திருமணம் நடந்தது.

ராணி: உங்கள் கணவர் சீக்கியராகவும் நீங்கள் கிறித்தவராகவும் இருப்பதால் ஏதும் மோதல் ஏற்பட்டதுண்டா?
சாண்டிரா: இல்லை. அவரும் அவர் வீட்டாரும் மிகவும் நல்லவர்கள். அவர் சீக்கியராய் இருந்தாலும் கிறித்தவரான என் அம்மாவை அவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் உட்காரவைத்து ஞாயிறுதோறும் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்வார். நானும் பஞ்சாபி உடையான சல்வார் கமீசை அணிவேன். என் கணவர் இப்போது பஞ்சாபில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருந்ததால்தான் எங்களுக்குள் எளிதில் காதல் வளர்ந்தது.

ராணி: சாண்டிரா டான் என்றால் என்ன பொருள்?
சாண்டிரா: சாண்டிரா என்றால் உதவிசெய்பவர் என்றும் டான் என்றால் அதிகாலை என்றும் பொருள்.

ராணி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ஆக இருக்கிறீர்கள். தமிழ் கற்க விருப்பம் உண்டா?
சாண்டிரா: நிறைய விருப்பம் உண்டு. ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்கள் தெரியும் (கண்ணாடி, பாரு, மெல்லப் போங்க என்ற சொற்களை மழலையில் சொல்லிக் காண்பித்தார்). இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழ் கற்றுவிடுவேன்.

ராணி: இப்போது உங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகள் யாவை?
சாண்டிரா: கிறித்தவர் எல்லோரும் பணக்காரர் இல்லை. எங்கள் சமுதாயத்தில் பலரும் ஏழ்மையில் இருக்கிறார்கள். சிலருக்கு அறிவுக் கூர்மை இருந்தும் தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. கல்வியும் தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்பும்தான் எங்கள் முதன்மையான கோரிக்கைகள்.

ராணி: அந்தக் காலத்துப் புதுவை மக்களுக்கு பிரெஞ்சு அரசு, பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதைப் போல் இங்கிலாந்து அரசு உங்களுக்கு ஏதும் சலுகை வழங்குகிறதா?
சாண்டிரா: அந்தக் காலத்தில் இங்கிலாந்துப் படையில் இருந்த சிலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். வேறு எந்தச் சலுகையும் இல்லை.

ராணி: இந்திய தேசிய கீதம், இங்கிலாந்து தேசிய கீதம்- இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
சாண்டிரா: நான் ஒரு இந்தியப் பெண். என் மூதாதையரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் தாத்தாவின் தாத்தா, இங்கிலாந்தில் ஒரு மருத்துவராய் இருந்தார். அவர் இந்தியாவுக்கு வந்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அது நான்கு தலைமுறைக்கு முந்தைய சமாசாரம். நான் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, இந்தியரைத் திருமணம் செய்துள்ளேன். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

ராணி: ஆங்கில சமுதாயத்தின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு இருக்கிறது?
சாண்டிரா:குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை. நான் ஆங்கிலம் பேசுகிறேன். கர்த்தரைப் பின்பற்றுகிறேன். கவுன் அணிகிறேன். ஆனால், சல்வார் கமீஸ், சேலை போன்றவற்றையும் உடுப்பேன். பியானோ, கிடார் வாசிப்பேன். மதப் பாடல்கள் பாடுவேன். ஓவியம் வரைவேன். நான் நகை அணிவதில்லை. மேக்கப் போடுவதில்லை. மது அருந்துவது, புகை பிடிப்பது, சூதாடுவது எதுவும் கிடையாது. பாட்டோடு சரி. நடனம்கூட ஆடமாட்டேன். பைபிளின்படி வாழ்கிறேன். தமிழ்ப் பண்பாட்டோடு ஏறக்குறைய கலந்து விட்டேன்.
"தமிழ்ப் படித்துவிட்டால், முழு தமிழ்ப் பெண்ணாகவே ஆகிவிடுவீர்கள்" என்று வாழ்த்திவிட்டு வந்தோம்!

இந்தக் காதல் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. "ஏழை மக்கள் எல்லோருமே என் குழந்தைகள்தான்" என்கிறார், சாண்டிரா.

சாண்டிராவின் வீடு, பழங்காலத்து மண்டபம் போல இருக்கிறது. அதன் வாசல் கதவு குறுக்குக் கம்பியுடன் கூடிய மெல்லிய மரத்தால் ஆனது. அந்தப் பெரிய வீட்டில் வயதான தாயாருடன் சாண்டிரா தனியே வசிக்கிறார். "இது பாதுகாப்பான வீடுதானா?" என்று கேட்டோம்.

"1994இல் எங்கள் வீட்டில் ஒரு திருடன் புகுந்தான். பணம், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைத் திருடிச் சென்றான். வெளியே போய்ப் பார்த்துவிட்டு, 'தேவையில்லை' என வீட்டுப் பத்திரத்தை வீசி எறிந்தான். அது, மதிலுக்கு அப்பால் கிடந்தது. கடவுளின் கருணையால் அது தப்பியது.

இதுபோல் எங்கள் வீட்டில் பல முறைகள் திருட்டு நடந்துள்ளது. என்மேல் அக்கறை கொண்ட சிலர், நாய், பெரிய கதவு, காவல்காரர் போன்ற பாதுகாப்பு வழிகளைச் சொல்வார்கள். எனக்கு அவை மேல் நம்பிக்கை இல்லை. ஏனெனில் கடவுள் காப்பாற்றுவார்" என்றார், சாண்டிரா.

(நன்றி: ராணி 12-8-2001)

Thursday, May 12, 2005

பெண் எம்.எல்.ஏ. பவானி கருணாகரன்



Image hosted by Photobucket.com

சந்திப்பு: அண்ணாகண்ணன்

'மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா?' என்று பாடினார், எம்.ஜி.ஆர். தென்றல் மட்டுமல்ல; எம்.எல்.ஏ. பதவியும் வர மறுக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற பெண் உறுப்பினர், பவானி கருணாகரன்.

ஏரிக்கரைப் புறம்போக்கு நிலத்தில் அந்தக் குடிசை இருந்தது. அதன் வாசலை நாம் அடைந்தபோது அதிகாலை மணி 6. ஒரு சிறுமி சாணம் தெளித்துக்கொண்டிருந்தாள். ஈக்கூட்டம் பறந்தது. வாசலில் கட்டியிருந்த மூன்று ஆடுகளும் 'ம்மே' எனக் கத்தின. இரண்டு கோழிகள், குப்பையைக் கிளற, ஒரு கோழி சிறகடித்துப் பறந்து கூரையில் போய் அமர்ந்தது.

ஓலைக் கூரை. அதன்மேல் வைக்கோல் பிரியால் போர்வை. சாணம் மெழுகிய சின்னத் திண்ணை. குறுகிய வாசல். தலை இடித்துவிடாமல் இருக்கக் குனிந்து வெளியே வந்தார், பவானி (42)!

20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற பவானியிடம், "உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று கேட்டோம். அமைதியாகப் பேசத் தொடங்கினார்.

"நான் அரக்கோணத்தில்தான் பிறந்தேன். பெற்றோருக்கு ஒரே பெண். சென்னையை அடுத்த பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் 'சிக்னல்' போடுபவராக என் அப்பா, வேலை பார்த்தார். அதனால் நான் அங்கே பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு அரக்கோணத்துக்குத் திரும்பினோம்.

எனக்கும் என் வீட்டாருக்கும் எம்.ஜி.ஆர். என்றால் உயிர். அவர் அ.தி.மு.க.வைத் தொடங்கியதும் அதில் சேர்ந்தேன். வட்ட மகளிர் அணிச் செயலாளராய் இருந்தேன்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சி சில இடங்களில் பிளவுற்றது. ஆனால், அரக்கோணத்தில் அவ்விதம் நடக்கவில்லை. எங்கள் செயற்குழுவில் 'அம்மா'வை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றினோம். அம்மாவின் தலைமையில் தொடர்ந்து பணியாற்றினேன். போராட்டம், மாநாடு, பொதுக்கூட்டம், சமுதாயப் பணி... என முழுநேர அரசியலில் இறங்கினேன்.

1987இல் கழக நகர மகளிர் அணிச் செயலாளர் ஆனேன். 1996இல் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டேன். மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றேன். 1998இல் உள்கட்சித் தேர்தலில் கழக நகரத் துணைச் செயலாளராகத் தேர்வுபெற்றேன்.

2001இல் சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வில் இருந்து 11 பேர் விண்ணப்பித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். சிலநாள் கழித்து, வேட்பாளராய்த் தேர்வான செய்தி, தொலைக்காட்சியில் வெளியானது. மிகவும் மகிழ்ந்தேன்.

எனினும் கட்சிக்குள்ளேயே எனக்குச் சிக்கல் எழுந்தது. தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று வருந்திய சிலர், எனக்குத் தேர்தல் பணிசெய்ய மறுத்தார்கள். சிலர், எனக்கு எதிராகப் பிரசாரமும் செய்தார்கள். என்னைத் தோற்கடிக்க முயன்றார்கள்.

என்னிடம் காசு பணம் இல்லை. வண்டி வாகன வசதியும் இல்லை. வெயில் வேறு கொளுத்தியது. எனினும் வீடு வீடாக நடந்தே போய் வாக்குக் கேட்டேன். நகர பேரவைச் செயலாளர் பாபு உள்பட சிலர் உதவினார்கள். 'ஏழைப் பெண்மணி! குடிசைவாசி! அன்றும் இன்றும் என்றும் உங்களில் ஒருத்தி' என்று சொன்னேன். மக்கள் என்னை நம்பினார்கள். மிகப் பெரிய வெற்றியை அளித்தார்கள். எந்த வாக்கும் எனக்காக விழவில்லை. எல்லாம் 'அம்மா'வுக்காக விழுந்த வாக்குத்தான்!

தேர்தல் பிரசாரத்தின்போது வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்டேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் காலில் விழுந்து வணங்கி எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டேன்" என்றார் பவானி.

"காலில் விழலாமா?" என்று கேட்டோம்.

"விழுந்தால் என்ன? ஒவ்வொரு பண்டிகையிலும் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவது நம் மரபு. 'என் காலில் யாரும் விழக்கூடாது' என்று 'அம்மா' கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். 'அம்மா' காலில் விழுவது தப்பில்லை. எதிர்க்கட்சிக்காரர்களுக்குத்தான் அது தப்பாகத் தெரிகிறது" என்றார் பவானி.

அரக்கோணம் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் லால், அப்துல் கபூர் ஆகியோரிடம் பவானி குறித்துக் கேட்டோம்.
"பவானி கருணாகரனின் 'டெபாசிட்' தொகையைத் தொண்டர்கள்தான் கட்டினார்கள். பிரசாரத்தின்போது ஜீப், வேன் எதுவும் இல்லாமல் பவானி ஊர் எங்கும் நடந்தே போனார். அரக்கோணம் தொகுதியில் உள்ள 166 கிராமங்களுக்கும் நடந்தே சென்றார். பிரசாரத்தின் கடைசி நாளில் பவானியின் கால் வீங்கிவிட்டது. நடக்க முடியாமல் போகவே மருத்துவமனைக்குப் போனார்.

வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது கோயில், தேவாலயம், மசூதி என மூன்று இடங்களுக்கும் போய்க் கடவுளை வேண்டினார்" என்றார்கள்.

"அரக்கோணம் தொகுதியில் ஏழைகளும் தொழிலாளிகளும் அதிகம். குடிதண்ணீர், சாலை வசதி, பட்டா வழங்குதல், ரேசன் அட்டை... எனப் பல குறைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகத் தீர்ப்பேன்.

என் கணவர் எனக்கு உறவுக்காரர். ரெயில்வேயில் 'கலாசி'யாக வேலை செய்கிறார். இருவரும் காதலித்தோம். இரண்டு பேர் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பொருட்படுத்தாமல் திருத்தணிக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டோம். நண்பர்களும் உறவினர் சிலரும் வந்திருந்தார்கள். ஆறு மாதம் கழித்து இரு வீட்டாரும் சமாதானமாகி எங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

எங்களுக்கு பாத்திமா(13), வசுமதி (9) ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். என் அப்பா இறந்துவிட்டார். அம்மா இப்போது எங்களோடுதான் இருக்கிறார். என் அம்மா வீட்டைக் கவனித்துக்கொள்வதால்தான் என்னால் வெளியில் போய் வேலை செய்ய முடிகிறது" என்றார் பவானி.

பவானியின் கணவர் கருணாகரன், ரெயிலில் மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை செய்கிறார். அரக்கோணம் பகுதி அ.தி.மு.க.வின் 7ஆவது வட்டப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பவானிக்கு ஆலோசனை வழங்குவதோடு வெளியூர்க் கூட்டத்துக்கும் உடன் செல்கிறார்.

"மனைவி எம்.எல்.ஏ. ஆனதால் பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டோம். "அவங்க ஸ்டேட் என்றால் நான் சென்ட்ரல்" என்றார் கருணாகரன்.

நாம் சென்ற நேரம், பேருந்துப் பயணச் சலுகைக்காகப் பவானியின் கடிதம் வேண்டிப் பலபேர் வந்திருந்தார்கள். கடிதம் பெற்ற இளைஞர் ஒருவர் விடைபெற்றபோது 'போயிட்டு வா செல்லம்' என்றார், பவானி. குரலில் தாய்மையின் கனிவு இருந்தது.

முதியவர் ஒருவர் வந்து கை கூப்பியபோது, "என்னை எதுக்குக் கும்புடுறீங்க? உங்களுக்குப் பணிசெய்ய வேண்டியது என் கடமை" என்றார். உடல் தளர்ந்து நடுங்கியபடி வந்து பேருந்துச் சலுகை கேட்ட பெரியவரை உட்கார வைத்தார். தேநீர் அளித்தார். கடிதம் கொடுத்துவிட்டு "இந்த வயசுல எங்கே போகப் போறீங்க?" என்று அன்போடு கேட்டார்.

"எங்கள் பகுதியில் மின்சாரக் கம்பம் சாய்ந்துவிட்டது. நீங்க வந்து பார்க்கணும். வண்டி கொண்டு வரட்டுமா?" என்று ஒருவர் கேட்டார். "வண்டி எதுக்கு? நீங்கள் சைக்கிள் ஓட்டுவீங்கதானே! நான் பின்சீட்டுல உட்கார்ந்து வந்திடுறேன்" என்றார்.

"இங்கிருப்பவர்கள் கல்லூரிப் படிப்புக்காகக் காஞ்சிபுரம், திருத்தணி, சென்னை என வெளியூருக்குப் போகிறார்கள். எனவே ஆண், பெண் இருவரும் படிக்கும் ஒரு கல்லூரியை இங்கே ஏற்படுத்த வேண்டும். 'அம்மா'விடம் சொல்லி நிச்சயம் செய்வேன்" என்றார் பவானி.

'எளிமைக்கும் தூய்மைக்கும் பெயர் பெற்ற அரசியல்வாதி யார்?' என்று கேட்டால், காமராசர், கக்கன் எனச் சில பெயர்களைச் சொல்வார்கள். அந்தப் பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டிய ஒரு பெயர், பவானி கருணாகரன்.

(நன்றி : ராணி 22-7-2001)

Wednesday, May 11, 2005

பெண் எம்.எல்.ஏ. யசோதா



Image hosted by Photobucket.com
சந்திப்பு: அண்ணாகண்ணன்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உயிர்நீத்த இடம், திருப்பெரும்புதூர். அந்தத் தொகுதியில் இருந்து மூன்றாம் முறையாகக் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. ஆகி இருப்பவர், யசோதா(57).

சட்டப் பேரவைக் காங்கிரஸ் தலைவியாக யசோதாவைக் கட்சித் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவியாகவும் பதவி வகிக்கும் யசோதாவை 'ராணி'யின் சார்பில் சந்தித்தோம். எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்.

"நான் மாட மாளிகையிலோ, செல்வச் சீமான் வீட்டிலோ பிறக்கவில்லை. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். அப்பா, தேசமுத்து. அம்மா, கோவிந்தம்மாள். 2 ஆணும் 8 பெண்ணும் பிறந்தோம். நான் 9ஆவது குழந்தை.

சென்னை, எழும்பூரில் பிறந்த நான், அங்குள்ள மாநிலப் பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதோடு என் படிப்பு நின்றது. படிக்கும்போது பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசு பெற்றேன். அப்போது தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் கையால் முதல் பரிசு பெற்றேன்.

என் அப்பா, தந்தை பெரியாரின் பக்தர். பெரியாரின் கூட்டத்துக்கு என்னையும் அழைத்துச் செல்வார். சிறப்புப் பேச்சாளர் வரும்வரை என்னைப் பேசச் சொல்வார்கள். சிலநேரம் பாட்டும் பாடுவேன்.

1964 முதல் தீவிரமாக அரசியல் கூட்டத்துக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னை, மாநகராட்சியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன்.

காங்கிரஸ் கூட்டத்திற்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்ததால் வேலையில் சிக்கல் வந்தது. 1967ஆம் ஆண்டு, வேலையா? அரசியலா? என்ற நெருக்கடி ஏற்பட்டது. நான் வேலையை விட்டு விலகி, காங்கிரஸில் சேர்ந்தேன்.

தமிழ்நாடு முழுவதும் சென்று பேசினேன். மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனேன்.

காங்கிரஸ் சார்பில் முதல்முறையாக 1980 தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் துணைக் கொறடாவாகவும் இருந்தேன்.

1984 தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றேன். சட்டப் பேரவையின் காங்கிரஸ் துணைத் தலைவி ஆனேன். அப்போது தலைவராக இருந்த சுப்பிரமணியம், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், நான் இடைக்காலத் தலைவியாகவும் பொறுப்பு வகித்தேன்.

இப்போது 2001 தேர்தலிலும் அதே தொகுதியில் வென்று சட்டப்பேரவை, காங்கிரஸ் கட்சித் தலைவியாக இருக்கிறேன்.

1980இல் தொடங்கி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவியாகவும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளேன்.

பெருந்தலைவர் காமராசர் தன் பிறந்த நாளில் 'கேக்' வெட்டுவார். அதில் பெரிய துண்டை வாங்கி, குடிசைப் பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

காமராசருக்கு மேடையில் நிறைய கதர் துண்டு போடுவார்கள். ஒரு சமயம் நான் அவற்றைக் கேட்டேன். 'ஆம்பளைக்குத்தான் துண்டு வேணும். பொம்பளைக்கு எதுக்கு?' என்று தலைவர் கேட்டார். 'முகம் வியர்த்தால் முந்தானையிலா துடைச்சுக்கறது?' என்றேன். உடனே கொடுத்துவிட்டார்.

மழைக்காலத்திலும் அறுவடைக் காலத்திலும் அதிகமாய் அரசியல் கூட்டங்கள் இருக்காது. அப்போதெல்லாம் 'முழக்கம் இல்லையா?' எனக் காமராசர் கேட்பார். பிறகு தலைவரே 'சரி சரி! சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் ராமண்ணாவைப் பார்' என்பார். அங்கு போனால் ரூ.200, ரூ.300 எனக் கவரில் போட்டு வைத்திருப்பார்கள்.

1975இல் சென்னை, பம்மலில் பொதுக்கூட்டம் நடந்தது. காமராசர் வரும்வரை நான் பேசினேன்.
தலைவர் வந்ததும் எல்லோரும் 'பேச்சை நிறுத்து' என்றார்கள். காமராசரோ 'இல்லை; யசோதா பேசட்டும்' என்றார். நான் பேசியதை ரசித்துக் கேட்டார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 2 முறை அரசு விழாவுக்கு என்னை அழைத்தார்.

மதுராந்தகத்தில் பேசும்போது 'இந்த ஏரியின் கரை முற்காலத்தில் உடைந்தபோது ராமபிரான் 'எனக்குக் கோவில் கட்டுங்கள். உங்களுக்குக் கரையைக் கட்டித் தருகிறேன்' என்றார். இந்த ராமச்சந்திரனோ, எதையும் கேட்காமல் ஏழைகளுக்கு எல்லாம் செய்கிறார்' என்றேன்.

மதுராந்தகத்தில் ஞானசவுந்தரி என்ற பெண் இறந்தது பற்றி நான் சட்டப் பேரவையில் கடுமையாகப் பேசினேன். அது குறித்துக் கலைஞர் என்னைப் பாராட்டினார்.

நான் இதுவரை 10 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் இருக்கும் போதும் சக அரசியல் கைதிகளுக்குப் பேசவும் பாடவும் பயிற்சி கொடுப்பேன். தேசியக் கொடியை எப்படி மடிப்பது? அதனுள் மலர்களை எப்படி வைப்பது? என்று பயிற்சி முகாமே நடத்துவேன்.

மறைந்த பிரதமர் இந்திரா சாந்தி என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். 1981இல் மரகதம் சந்திரசேகர் உடன் டெல்லிக்குச் சென்றேன். அப்போது இந்திரா காந்தியைச் சந்தித்தோம். சட்டசபையில் நான் காரசாரமாகப் பேசியதை அறிந்த அவர் 'எங்கே அந்தச் சண்டைக் கோழி?' என்று என்னைக் குறிப்பிட்டுக் கேட்டார்.

ராஜிவ் காந்தி நல்ல உயரம். நானோ, குள்ளம். அவருக்குப் பொன்னாடை அணிவிக்கும்போது 'யசோதாஜி! நீங்கள் வேண்டுமானால் நாற்காலி மீது ஏறிக்கொள்ளுங்கள்' என்று அன்பாகவும் கிண்டலாகவும் சொன்னார்.

1991 தேர்தலில் எனக்கு முதலில் 'சீட்' கிடைக்கவில்லை. இதை அறிந்த ராஜிவ் காந்தி, எழும்பூர் தொகுதியில் நிற்க இருந்தவரை மாற்றிவிட்டு என்னை வேட்பாளராக அறிவித்தார்.

அந்த மே 21ஆம் தேதிக்கு முதல் நாள் 'உங்கள் தொகுதியில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'நாளை மதியம் 12 மணிக்கு விமான நிலைய விருந்தினர் அறைக்கு வந்து என்னைப் பாருங்கள்' என்றார். ஆனால், அதற்கு முன்பே அவர் மனித வெடிகுண்டுக்குப் பலியாகிவிட்டார்.

1989இல் ஜானகி அம்மையார் இடைக்கால முதலமைச்சராய் ஆனார். அப்போது ஒரு தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தேன். பெரும் மோதல் உருவானது. சட்டப் பேரவைக்குள்ளேயே என் கை உடைக்கப்பட்டது.

என் தொகுதிக்கு உட்பட்ட பெண்ணலூரில் மின்சார நிலையம் கொண்டுவந்தேன். ரூ.22 இலட்ச மதிப்பில் விவசாயக் கிடங்கைத் திருப்பெரும்புதூருக்குக் கொண்டுவந்தேன். இந்த நன்மைகள் தொடரும். என்றும் தொகுதி மக்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும் விசுவாசமாய் இருப்பேன்" என்றார் யசோதா.

"எத்தனையோ மேடைகளைச் சந்தித்து இருக்கிறீர்கள். அவற்றில் மறக்கமுடியாத மேடைகள் எவை?" என்று யசோதாவிடம் கேட்டோம்.

"பெண்ணாடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினேன். அதில் பெரிய கலாட்டா. கட்சிக்காரர்கள் போலீஸ் வேனில் ஏற்றி என்னைத் தப்பிக்க வைத்தார்கள்.
கடைசியில் கட்சி சார்பில்லாத ஒருவரின் வீட்டில், குவித்து வைத்திருந்த நெல் மூட்டைக்குள் ஒளித்து வைத்தார்கள். இரவு முழுக்க அங்கேயே இருந்தேன். அதன் பிறகு தப்பித்து விருத்தாசலம் வந்தேன்.

கிருஷ்ணகிரியில் பேசும்போது ஒருவர், கத்தியால் என்னைக் குத்த வந்தார். நான் மேடையில் இருந்த சோடா பாட்டிலைக் கையில் எடுத்தேன். அருகில் வந்தால் தலையில் அடித்துவிடலாம் என்று இருந்தேன். அதற்குள் பின்னால் இருந்த ஒருவர் அவரைப் பிடித்துவிட்டார்.

இராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கடுமையாகப் பேசினேன். மேடையை நோக்கிக் கற்கள் பறந்து வந்தன. 'எவன்டா கல்லு விடறது? ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாங்கடா' என்று ஆவேசமாய்ச் சொல்லிவிட்டேன்.

நிறையபேர் ஈட்டி, வேல்கம்பு எடுத்துக்கொண்டு நான் இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். அதற்குள் நான் ரெயில் நிலையத்துக்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டம், ரெயில் நிலையத்துக்கும் வந்து ரெயிலில் பெட்டி பெட்டியாகத் தேடியது. 'கார்டு' அறையில் தேடவில்லை. அங்குதான் நான் இருந்தேன். அதனால் உயிர் தப்பித்தேன்" என்றார் யசோதா எம்.எல்.ஏ.


(நன்றி: ராணி - 15-7-2001)

Tuesday, May 10, 2005

ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான்



'நீங்கள் எப்போது ஓய்வாக இருப்பீர்கள்? நான் அப்போது வந்து உங்களைச் சந்திக்கிறேன்' என ஒருவர் வலம்புரி ஜானிடம் கேட்டார். அதற்கு அவர், 'ஓய்வு என்பது மரணத்திற்குப் பின் வருவது' என்று பதில் அளித்தார். அதன்படி கடந்த ஞாயிறு 8-5-05 அன்று ஜான் நிரந்தர ஓய்வு கொண்டுவிட்டார். இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஞாயிறு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. காலை 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 59 வயது, என்பது சராசரி ஆயுட்காலத்தை விடக் குறைவானதே. ஆனால், இந்தக் குறுகிய ஆண்டுகளுக்குள் அவர் சாதித்தவை ஏராளம்.

மாங்காட்டுக்கு அருகில் குமணன்சாவடியில் உள்ள அவரின் இல்லத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதே ஞாயிறு அன்று மாலை இறுதி மரியாதை செலுத்தச் சென்றேன். குமணன்சாவடியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கவே பாடுபடவேண்டியிருந்தது. அங்கிருந்த பலர், வலம்புரி ஜானையும் அவர் உயிர் நீத்ததையும் அறியவில்லை. வழி விசாரித்தபோது, தெரியாது என்று சொல்லக் கூசிய சிலர், தவறான வழிகளைக் காட்டினர். பிறகு, கடைசியாக அவர் வீட்டைக் கண்டுபிடித்தேன்.

மெளனத்தின் ஆட்சியில் இருந்த அந்த இடத்தில் நுழைந்தேன். கண்ணாடிப் பெட்டிக்குள் அவரின் உடல். வாயிலும் மூக்கிலும் பஞ்சு அடைக்கப்பட்டிருந்தது. எங்கள் கடமை தீர்ந்தது என்பது போல், ஏற்கெனவே கிடத்தப்பெற்ற மாலைகள், கதவின் மேல் தொங்கிக்கொண்டிருந்தன. நான் கொண்டு சென்ற மாலையை அணிவித்தேன். கை கூப்பி வணங்கினேன்.

அவர் தலைமாட்டில் சிலுவையில் அறையப்பெற்ற கர்த்தரின் உருவச் சிலை. அதன் அருகில் மெழுகுவத்திகள் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த அறையில் அவரின் பெரிய அளவிலான புகைப்படங்கள் சில இருந்தன. ஒரு புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார். அதன் கீழ் 'தமிழ் புயலே வருக' என்று எழுதியிருந்தது.
அவர், ஒரு புயலாகத்தான் பவனி வந்தார்.

இலக்கியம், இதழியல், அரசியல்... என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் அவரின் வீச்சு, கவனிக்கத்தக்கது. அடிப்படையில் தமிழ் அறிவும் புலமையும் கவித்துவமும் இருந்ததால் அவர் எந்தத் துறையைத் தொட்டாலும் முத்திரை பதித்தார். 'நான் கழுதையான போது..' என்ற அவரின் தன்வரலாற்று நூல் அவரைப் பற்றி ஓரளவு எடுத்துக் காட்டும்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய 'தாய்' வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி, பலரை அடையாளம் காட்டியவர். வளரத் துடிக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். ஆயிரக்கணக்கான நூல்களுக்கு அணிந்துரை வழங்கியவர்.

பல்வேறு இதழ்களிலும் தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று எழுதிக் குவித்தவர். தமிழ்நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர். தலைவர்கள் பலரோடும் நெருங்கிய நட்புக் கொண்டவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர்.

மேடைவாசி என்று கூறத்தக்க அளவுக்குப் பெரும் பேச்சாளராக விளங்கினார். அவரின் சொற்பொழிவைக் கேட்டுப் பூரித்தவர்கள் பலர். 'வார்த்தைச் சித்தர்', 'ஞானபாரதி', 'கவிஞானி' என்றெல்லாம் நிறைய பட்டங்கள், அவரை அலங்கரித்தன. ஆங்கிலத்திலும் பேச வல்லவர்.

சர்வ சமய ஒருமைப்பாட்டிற்கு உழைத்தவர். இந்து, இஸ்லாம், கிறித்தவம்.. என எந்த மதமானாலும் அதைப் பாராட்டி, அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார். காழ்ப்புணர்வு கொள்ளாதவர். 'எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன; எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன' எனச் சென்ற இடமெங்கும் முழங்கியவர்.

'நீ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போதே அது உன்னைப் புரட்டிப் போடுகிறதா? அதுதான் சிறந்த புத்தகம்'
என்பது போன்று பல பொன்மொழிகள், அவரிடமிருந்து வெளிவந்துள்ளன.

'அவருடைய படைப்புகள் பல, இன்னும் நூல் வடிவம் பெறவில்லை' என்று கடந்த மாதம் சந்தித்தபோது கூறினார். அதைக் குறித்து அவரின் மருமகனிடம் கூறினேன். "பாதுகாத்து வையுங்கள்; நூல்களாக வெளியிட முயலுங்கள்" என்றேன். "சரி" என்றார். வெளியே வந்தபோது, அவரின் வாசகர் ஒருவர், அவரைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

'மக்கள் குரல்' மாலை நாளிதழில் அவரின் மரணச் செய்தி வந்திருந்தது, 59 வயதில் இறந்தவரை 70 வயதில் இறந்தார் என்று. அடுத்த நாள்தான் அடக்கம் நடைபெற இருந்தது. ஆனால், அன்றே அடக்கம் ஆகிவிட்டதாகவும் எழுதியிருந்தது. அது குறித்து உறவினர்கள் சிலர், வருந்தினார்கள்.

நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதே உலகின் பெருமை எனத் திருக்குறள் கூறுகிறது.
'நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு'
அப்படிக் கூறிய திருக்குறள், நேற்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. உயிர் என்றாவது ஒருநாள் போகத்தான் செய்யும். அது, நமக்கும் தெரியும். என்றாலும் ஒரு நப்பாசை. மரணத்தை வெல்லவேண்டும் என்று. ஆனாலும் மரணத்தின் கத்தி, ஒவ்வொரு நாளும் நம் கழுத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டேதான் இருக்கிறது. இதையும் திருக்குறள்தான் சொல்கிறது.
'நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்'

ஆயினும் 'நல்லவன் வாழ்வான்' என நம் மரபு சொல்கிறது. அதன்படி வலம்புரி ஜான் வாழ்வார்.

Sunday, May 08, 2005

"நான் நாஸ்டர்டாம்ஸ் இல்லை'' - கார்ட்டூனிஸ்ட் மதி

சந்திப்பு : அண்ணாகண்ணன்

தினமும் மணியான கேலிச் சித்திரங்களை வரைந்து, மக்களின் மதிநிறைந்தவர், கார்ட்டூனிஸ்ட் மதி. தமிழின் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ட்டூனிஸ்டுகளில் மிக இளையவர் (35 வயது), பத்தாயிரம் கார்ட்டூன்களுக்கு மேல் வரைந்துள்ள இவர், "தினமணி'யில் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் மூவாயிரம் கேலிச் சித்திரங்களைத் தீட்டியுள்ளார். இயற்பெயர், சு.மாரியப்பன். நெல்லைக்காரர். இவரின் தாயார் மரகதகோமதி. தாயார் பெயரின் முதல்-கடைசி எழுத்துகளை இணைத்து "மதி' எனப் பெயர் சூட்டிக்கொண்டார். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசாதாரண பணியை ஆற்றிவரும் மதி பாராட்டுக்குரியவர்.
அவருடன் ஒரு சந்திப்பு

Image hosted by Photobucket.com

அ.க.: ஜோக்குக்கும் கார்ட்டூனுக்கும் என்ன வேறுபாடு?
மதி : ஜோக்கில் செய்தி இருக்காது. நகைச்சுவை மட்டுமே இருக்கும். அதில் பிரச்சினைகளுக்கு இடமில்லை. ஆனால், கார்ட்டூன், பிரச்சினைகளைப் பேசும். கார்ட்டூன், கசப்பு மருந்தைத் தேன் கலந்து கொடுக்கிற மாதிரி.

அ.க. : பிரச்சினைகளைப் பேசும் ஜோக், கார்ட்டூன் அந்தஸ்தை அடையுமா?
மதி : தானாகவே அந்நிலையை அடைந்துவிடும்.

அ.க.: பிரச்சினைகளைப் பேசாத கார்ட்டூன், ஜோக் ஆகிவிடுமா?
மதி : ஜோக் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தீபாவளிக்குத் துணியெடுப்பது, மருமகன், மாமியார் வீட்டில் தங்கிவிடுவது... இதுமாதிரி பொதுவான விஷயம்தான் ஜோக்கில் இருக்கும். கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையில் பிரச்சினை பேசப்படுகிறதா?

அ.க. : விவேக் பேசுகிறாரே?
மதி : கலைவாணருக்குப் பிறகு விவேக் புது முயற்சி செய்கிறார். அது, நன்றாக 'கிளிக்' ஆகிவிட்டது. கார்ட்டூன் என்பது ஏற்கெனவே காயப்பட்டவருக்கு மன ஆறுதல் தரும் முயற்சி.

அ.க. : உங்கள் கார்ட்டூன்களில் இருக்கும் செய்தி, உங்களுடையதா? உங்கள் நிறுவனத்துடையதா?
மதி : நூறு சதம் என்னுடையது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் எனக்கு முழுச் சுதந்திரம் உள்ளது.

அ.க. : அப்படியானால் தினமணி - எக்ஸ்பிரஸ் தலையங்கத்துக்கு எதிர்க்கருத்தை உங்கள் கார்ட்டூன் சொல்லியிருக்கிறதா?
மதி : தலையங்கத்துக்கும் கார்ட்டூனுக்கும் சின்னச் சின்ன வேறுபாடு இருக்கலாம். பெரிய வேறுபாடு இல்லை. தலையங்கம் எழுதுபவரின் கோணம் வேறு. என் கோணம் வேறு. பத்திரிகை அச்சாகி வெளிவந்த பிறகுதான் நான், தலையங்கத்தைப் பார்க்கிறேன். நான் இன்ன விஷயத்தைப் பற்றிக் கார்ட்டூன் போடவேண்டும் என்று இதுவரை எந்த நாளும் யாரிடமிருந்தும் குறிப்பு வந்ததில்லை.
கார்ட்டூனுக்கான தலைப்பு, சிந்தனை, படம் அனைத்தும் என்னுடையதே. சில சினிமாக்களின் கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் அனைத்துக்கும் ஒருவர் பெயரே இருப்பது போன்றது. இது.

அ.க. : ஊழல் என்ற சொல்லில் பாம்புப் படம் வரைந்து அது, இந்தியாவை விழுங்குவதாகப் போட்டுள்ளீர்கள். "ரைசிங் சன்'' என்று ஸ்டாலினையும் உதயசூரியனையும் இணைத்துப் போட்டிருக்கிறீர்கள். கார்ட்டூனில் மொழியின் பங்கு என்ன?
மதி : சில கார்ட்டூன்களுக்கு அது ரொம்ப நல்லா அமையும். பாக்கெட் கார்ட்டூன்களில் மொழியின் வீச்சு அதிகமிருக்கும். பிரதான கார்ட்டூனில் படத்தில்தான் செய்தி இருக்கும்.

அ.க. : எக்ஸ்பிரசில் வரும் கார்ட்டூன்களுக்கு ஆங்கில வசனம் எழுதுபவர் யார்?
மதி : நான் தான்

அ.க. : "கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது' போன்ற கார்ட்டூன்களை ஆங்கிலத்தில் எப்படிக் கொடுப்பீர்கள்?
மதி : அதுமாதிரி கார்ட்டூன்கள், தமிழுக்கு மட்டும்தான். ஆங்கிலத்துக்கு வேறு கொடுத்துவிடுவேன்.
Image hosted by Photobucket.com

அ.க. : அப்படியானால் 'ரைசிங் சன்' கார்ட்டூனை அப்படியே ஏன் தமிழில் கொடுத்தீர்கள்? தமிழர்களுக்கு அது புரியும் என்று நினைக்கிறீர்களா?
மதி : பஸ், கார் என்றுதானே பேசுகிறோம். புரியும். புரியாவிட்டால் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். அதுவுமின்றி 'ரைசிங் சன்' படத்தில் ஸ்டாலினையும் வரைந்துள்ளேன். படத்தைப் பார்த்தாலே நான் சொல்வது புரிந்துவிடும். கூடுமானவரை புரியறா மாதிரிதான் போட முயற்சி செய்யிறேன்.

அ.க. : உங்கள் கார்ட்டூன்களில் நடுத்தர வயது மனிதர்களையே அதிகம் காட்டுவதேன்?
மதி : பாக்கெட் கார்ட்டூன்களில் மட்டும்தான் அப்படி இருக்கும். ஏனெனில், அவர்களுக்குத்தான் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமிருக்கு.

அ.க. : பிரச்சினைகளை நீங்கள், நடுத்தர வயதினரின் கோணத்தில் மட்டும்தான் பார்க்கிறீர்கள். ஒரு குழந்தையின் பார்வையிலோ, முதியோரின் பார்வையிலோ பார்ப்பதில்லை?
மதி : குழந்தைகளுக்குப் பிரச்சினை முழுமையாய்ப் புரியாது. பெரியவர்கள், அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள். நடுத்தர வயதினர்தான் பிரச்சினையை முழுமையாகச் சந்திக்கிறார்கள்.

அ.க. : குழந்தை வேண்டுமானால் பிரச்சினையைப் புரிந்துகொள்ளத் தவறலாம். 21 வயது இளைஞருக்குப் பிரச்சினை புரியுமே.
மதி : இளைஞரில் - மாணவரில் நூற்றுக்குப் பத்துப் பேருக்கு அந்தப் புரியும் தன்மை இருக்கலாம். ஆனால் நடுத்தர வயதினர் அனைவரும் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்குத்தான் எல்லாப் பிரச்சினையும் இருக்கு.
Image hosted by Photobucket.com

அ.க. : "புஷ் பின் லேடன்' கார்ட்டூனில் லேடன் முகத்தில் புஷ் புகைப்படத்தை வைத்தது ஏன்?
மதி : புஷ் முகத்தை வரைவதைவிட போட்டோவாக வைத்தால் எளிதில் புரியும் என்று அப்படிச் செய்தேன்.

அ.க. : புஷ் முகம், கார்ட்டூன் வரைய ஏற்றதாய் இல்லையா?
மதி : அப்படி இல்லை. இங்கு உள்ள வாசகர்களுக்கு அவர் முகம் பிரபலமானதில்லை. எனவே நினைவில் இருக்காது. இதுவரை நான் போட்டோவைப் பயன்படுத்தியது, அந்த ஒரே கார்ட்டூனில்தான். அப்படியும் பலர், 'பின்லேடனை நல்லாப் போட்டிருக்கீங்க' என்று சொன்னார்கள்.

அ.க. : காங்கிரஸ் என்ற விமானம், தரையில் மோதி மூக்குடைப்பட்ட பிறகு சோனியா காந்தி அதன் பைலட் பொறுப்பேற்றதாகப் போட்டுள்ளீர்கள். அதன்பிறகு காங்கிரஸ் 14 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளதே?
மதி : கார்ட்டூன், அன்றாட நிலைமையை மட்டுமே காட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் நாஸ்டர்டாம்ஸ் இல்லை.
Image hosted by Photobucket.com

அ.க. : 'பொது இடங்களில காதலிக்கறதுக்கும் தடை கொண்டுவரப் போறாங்களாம்' என்று நீங்கள் கார்ட்டூன் போட்ட மாதிரி, இப்ப அண்ணாநகர் கோபுரப் பூங்கா ரெய்டு மூலமா ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கு.
மதி : "பொது இடங்களில் காதலிக்கத் தடை' கார்ட்டூன், இரண்டு ஆண்டுக்கு முன் போட்டது. இப்படியும் நடக்கலாமோ என்று கிண்டலாகச் சொன்னது, பலது நடந்தது.

அ.க. : வேறு என்ன நடந்தது?
மதி : தி.மு.க.வில் பெரியார், அண்ணா, கலைஞர் மூவர் படமும் அடுத்தடுத்து வைப்பது, ரொம்ப பிரபலம். நான் அடுத்து, ஸ்டாலின் படத்தையும் வச்சு கார்ட்டூன் போட்டேன். ஆச்சரியம் என்னன்னா, விழுப்புரம் மாநாட்டில் அதே மாதிரி நால்வர் படத்தையும் போட்டு ஒரு பேனர் வைத்தார்கள். அது தினமணியில் போட்டோச் செய்தியாக வந்தது. கார்ட்டூனும் செய்தியும் ஒரே நாளில் வெளிவந்தன. எனக்கே மறுநாள்தான் தெரியவந்தது. இப்படி நடந்துவிட்டால், அதுகுறித்து மகிழ்ச்சியோ வருத்தமோ அடைவதில்லை. நான் ஜோதிடன் இல்லை.

அ.க. : கார்ட்டூனைப் பார்த்துட்டு உங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதா?
மதி : எதுவா இருந்தாலும் ஆசிரியருக்கு போன் பண்ணுவாங்க. அதனால் நான் தப்பித்துவிடுவேன். யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதே என் கொள்கை. ஒரு தலைவரின் கொள்கையையோ செயலையோதான் நான் விமர்சிக்கிறேனே தவிர தனி மனிதரை இல்லை.

அ.க. : கார்ட்டூனிஸ்டாக உங்கள் எல்லை எது?
மதி : நீதிபதி, ஜனாதிபதி, மதத் தலைவர்களைக் கார்ட்டூனினில் கொண்டுவருவதில்லை. மற்றவர்களின் தனிமனித வாழ்க்கையில் நான் தலையிடுவதில்லை.

அ.க. : ஓவிய உலகில் கார்ட்டூனிஸ்டுகள் மதிக்கப்படுகிறார்களா?
மதி : எனக்கு அது பற்றித் தெரியாது. நான் என் வேலையைச் செய்கிறேன்.
கார்ட்டூனிஸ்டாக நகைச்சுவை உணர்வு, ஓவியம் வரையும் திறமை, உலகத்தைப் பற்றிய அடிப்படை அறிவு என்ற மூன்று விஷயங்கள் தேவை.
இது ஓர் அரிய கலை. கடவுள் கொடுத்திருக்கிறார். இதைக் கொண்டு எவ்வளவு குஷிப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்கிறோம். அதற்கு மரியாதை கிடைக்கிறதா என்பதை எண்ணிச் செய்வதில்லை. 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதை வாசகத்தைப் பின்பற்றுகிறோம்.


(அமுதசுரபி தீபாவளி மலர் - 2003)

Wednesday, May 04, 2005

மாவட்டம்
(சிறுவர் பாடல்)


மாவட்டமாம் மாவட்டம்
வளரும் தமிழ் மாவட்டம்

சென்னை மதுரை விழுப்புரம்
தேனி இராம நாதபுரம்
கன்யா குமரி பெரம்பலூர்
காஞ்சி நாகை திருவள்ளூர்
(மாவட்டமாம்

நீல கிரி கிருஷ்ணகிரி
நெல்லை கரூர் தருமபுரி
சேலம் தஞ்சை திண்டுக்கல்
திருவண்ணாமலை நாமக்கல்
(மாவட்டமாம்

திருச்சி கோவை திருவாரூர்
தூத்துக் குடி ஈரோடு
விருது நகர் சிவகங்கை
வேலூர் கடலூர் புதுக்கோட்டை
(மாவட்டமாம்

ஊரும் பேரும் அறிகுவோம்
உலவும் பாதை தெரிகுவோம்
யாரும் போற்றும் தென்னகம்
இனிக்கும் இன்பத் தமிழகம்!
(மாவட்டமாம்

பழைய பெருமை இருக்குது
புதிய பெருமை சேருது
விழிப்பு மிக்க சக்தியே
வெற்றி மீது வெற்றியே!
(மாவட்டமாம்