!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/08 - 2005/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 18, 2005

திருப்பூர் கிருஷ்ணனின் அரவிந்த அமுதம்



கல்கி யில் தொடராக வெளிவந்த அரவிந்த அமுதம், நூல் வடிவம் பெற்றுள்ளது. அருள்மிகு அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு அழகுற எழுதியுள்ளார், திருப்பூர் கிருஷ்ணன்.

அரவிந்தர், 1872ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று பிறந்தது; ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தது; ஐரோப்பிய தாக்கம் கொண்ட அரவிந்தரின் தந்தை டாக்டர் கிருஷ்ண தனகோஷ், அரவிந்தர் உள்பட மூன்று பிள்ளைகளையும் இங்கிலாந்தில் படிக்க வைக்க அனுப்பியது; தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானது; அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தது; அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனது;

இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் பிரெஞ்சு, ஆங்கிலப் பேராசிரியர் ஆனது; துணை முதல்வர் ஆனது; சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டது; அலிப்பூர் வழக்கு; அரவிந்தர் தம் மனைவி மிருணாளினிதேவிக்கு எழுதிய இரு கடிதங்கள்; மிருணாளினி தம் 30ஆவது வயதில் மரித்தது; சிறையிலிருந்து வெளிவந்து அரவிந்தர் ஆற்றிய உத்தர்பாராச் சொற்பொழிவு; ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது; கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றது;

1910இல் கல்கத்தாவிலிருந்து மாறுவேடத்தில் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தது; ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டது; பாரதியாரோடு நட்புக் கொண்டது; 1914 ஆம் ஆண்டு மிர்ரா என்ற ஸ்ரீ அன்னை, புதுச்சேரி வந்தது; 1920இல் அவர் நிரந்தரமாகப் புதுச்சேரியிலேயே தங்கியது; அரவிந்தர் 'ஆர்யா' என்ற பத்திரிகையை நடத்தியது; சாவித்திரி காவியத்தைப் படைத்தது; 1926 இறுதியிலிருந்து 1930 வரை அரவிந்தர் யாருடனும் பேசாதது;

1938இல் புலித்தோலில் தடுக்கி விழுந்து அவரின் வலது கால் தொடை எலும்பு முறிந்தது; 1950 டிசம்பர் 5 அன்று அரவிந்தர் சமாதி அடைந்தது; காலமான பிறகும் நூற்றுப் பதினொரு மணிநேரம் புற உடலில் காலமானதற்கான அறிகுறிகளே தென்படாதது கண்டு பிரஞ்சு அரசின் தலைமை மருத்துவர், 'இது ஒரு அறிவியல் விந்தை' என்று சான்று உரைத்தது.... என படிப்படியாக வளர்ந்து செல்கிறது நூல்.



அரவிந்தரின் ஆன்மிக சாதனைகள், அவர் கண்ட கனவுகள், கண்ணன் அவருக்குக் காட்சி அளித்தது, அதிமனம் என்ற இலக்கை நோக்கி அவர் பயணித்தது... என அரவிந்தரின் ஆன்மிக முகத்தை விரிவாகக் காட்டியுள்ளார் திருப்பூர் கிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும்போதும் அரவிந்தர் பற்றி அறிஞர்களும் அவருடன் பழகியவர்களும் கூறிய / எழுதியவற்றிலிருந்து சில வரிகள் இடம் பெறுகின்றன. அவை, நூலின் கனத்தை மேலும் கூட்டுகின்றன.

இந்த நூல் பெயரளவில் அரவிந்தரின் வரலாற்றைக் கூறினாலும் ஆன்மிகப் பெரியோர்கள் பலரின் அனுபவங்களும் சிந்தனைகளும் நூலை அலங்கரிக்கின்றன. இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர், திருமூலர், ஆதிசங்கரர், அணீமாண்டவ்யர், புத்தர், வள்ளுவர், ஏசுநாதர், சதாசிவப் பிரம்மேந்திரர், இராகவேந்திரர், சாரதா தேவி, விரஜானந்தர், பரமகம்ச யோகானந்தர்.... என நூற்றுக்கணக்கான பெரியவர்கள், நூலின் உள்ளே நடமாடுகிறார்கள்; நம் உள்ளத்திலும்கூட.

மிகவும் கடினமான பணியைச் செய்கிறோம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் திருப்பூர் கிருஷ்ணன், இந்த வரலாற்றைக் கையாண்டுள்ளார். கற்பனையை அதிகம் கலக்காமல், கணிப்புகளில் இறங்காமல், பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே சென்றுள்ளார். வரலாற்று ஆசிரியராக இருந்த திருப்பூர் கிருஷ்ணன், அங்கங்கே பக்தராக மாறி, அரவிந்தரைப் புகழ் பாடுகிறார். நாயகரைத் துதிப்பது, தமிழ் மரபுதான் என்றாலும் அதன் விழுக்காடு கூடும்போது நூல், வரலாற்றுத் தன்மையைக் காட்டிலும் பக்தித் தன்மை உடையதாய் ஆகிவிடுகிறது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள விஜயா சங்கரநாராயணன், "இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. 'எனது வரலாற்றை உள்ளபடியே எழுத இயலாது' என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு... இது வெறும் பொழுதுபோக்குப் புத்தகமல்ல. 'இப்படியும் ஒரு மகான் இருந்தார், இன்னமும் இருக்கிறார்' என்பதைத் தமிழுலகிற்குச் சொல்லும் புனிதச் செய்தி இது" என்கிறார்.

வேதாவின் அழகிய ஓவியம், அட்டைப் படத்தை அலங்கரிக்கிறது. நூலைத் தம் தாய் திருமதி கே.ஜானகிக்கும் தந்தை அமரர் பி.எஸ்.சுப்பிரமணித்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார், திருப்பூர் கிருஷ்ணன்.
-----------------------------------------------
அரவிந்த அமுதம் : திருப்பூர் கிருஷ்ணன், பக்: 128, விலை: ரூ. 85, திருப்பூர் குமரன் பதிப்பகம், 57-பி, பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை - 600 092
thiruppurkrishnan@hotmail.com

Wednesday, August 17, 2005

உயர்வு நவிற்சி இலக்கியம்

தமிழ்க்கவிதை, சொல்விளையாட்டுகளைக் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் எதுகை-மோனை-இயைபை வைத்து ஏராளமான கவிதைகள் வெளிவரத்தான் செய்கின்றன. 


கவிஞர் நிர்மலா சுரேஷ், 'இயேசுமாகாவியம்' என்ற 700 பக்க நூலை முன்பு எழுதினார். அதன் தொடர்ச்சியாக இப்போது "தைலச் சிமிழும் தச்சன் மகனும்" வெளிவந்துள்ளது. 

அஃறிணைகள் பேசுவதுபோல் படைப்பது அதிகம் கையாளப்படும் உத்தி. இந்த நூலில் இயேசு பயன்படுத்திய அல்லது இயேசுவோடு தொடர்புடைய 50 அஃறிணைகள், இயேசுவைப் புகழ்கின்றன. 

பொதுவாக பக்தி இலக்கியங்களில் அவதாரங்களை மிகமிக உயர்த்திப் பாடுவது மரபுதான். அந்த மரபுக்கு ஏற்ப, புதுக்கவிதைகளில் இயேசுவைப் புகழ்கிறார், நிர்மலா சுரேஷ். 

'எங்களுக்கு அடியில் 
அவர் அமர்ந்தபோதெல்லாம் 
நாங்கள் நிழல்பெற்றோம்' 
 -என்கின்றன, மரங்கள். 

இயேசுவின் தலையில் இருந்த முள்முடி, 
  
'எழுத்தின் தலையை 
அழுத்திப் பார்த்தேன் 
 வழிந்தது கவிதை' -என்கிறது. 

'பொதி சுமந்த நான் 
 பூபதியைச் சுமந்து 
 கோ-ஏறு-கழுதை எனும் பெயருக்குப் பொருத்தமானேன்' 
-எனப் பெருமைப்படுகிறது கோவேறு கழுதை. 

இப்படியாக மீன், மண், செம்மறி, ஒட்டகம், படகு, மலை, கடல், தைலச் சிமிழ், கத்தி, சாட்டை, முப்பது வெள்ளிக்காசுகள், ஆணி, சிலுவை, ஈட்டி, கல்லறை, பாறை... என 50 அஃறிணைகள் இயேசுவைப் போற்றுகின்றன. 

சர்க்கரையே உணவாவதைப் போல், உணர்வு நவிற்சியாலேயே ஆன இலக்கியம் என இதைச் சொல்லலாம். 

'பொற்சாடிகளைப் புறக்கணித்து 
ற்சாடிகளைக் கவனிப்பவர் 
இந்த சொற்சாடி!' (பக்.40) 

'நான் வெறும் 
முச்சந்தி நாற்சந்திதான்! 
 அவரோ யுக சந்தி!' (பக்.65) 

இப்படிப் பல இடங்களில் சொல் விளையாட்டுகளைக் கையாண்டுள்ளார், கவிஞர். மேலோட்டமான வாசகர்களுக்கு இவை பிரமிப்பைத் தரலாம். ஆனால், கவிஞர்கள் இன்னும் ஆழமான கவிதை அனுபவத்தைத் தர முயலவேண்டும். 

 'அந்த மூன்றுநாட்களும் 
கால வாக்கியம் 
 கமாபோட்டு நின்றது!' 
-எனுமிடத்தில் கமாவிற்குப் பதில் 'காற்புள்ளி' என எழுதலாம். 

பக்-38இல் 'ஆற்றுப்படை' என்ற சொல்லை 'ஆறு ஆகிய படை' எனும் நேரடிப் பொருளில் கையாண்டுள்ளார். தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் அதற்கு 'ஆற்றுப்படுத்துதல்' என்றே பொருள். 

 சில குறைகள் இருந்தாலும் எளிய கவிதைகளை வழங்கியதற்காக நூலாசிரியரைப் பாராட்டலாம். அச்சு நேர்த்தியோடும் அழகிய படங்களோடும் இருப்பது நூலுக்குச் சிறப்பு. 

------------------------------------------- 

தைலச் சிமிழும் தச்சன் மகனும் : நிர்மலா சுரேஷ் பக்:162 விலை ரூ.125/- வெளியீடு: இதயம் பதிப்பகம், பழைய எண்: 22-இ, புதிய எண்:18-இ, தெற்கு அவின்யூ, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041. 

 ( அமுதசுரபி, செப்டம்பர் 2003)

Sunday, August 14, 2005

இலக்கிய அமைப்புகள் என்ன செய்கின்றன?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கட்சியிலும் 'இலக்கிய அணி' உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் 'இலக்கிய மன்றம்' உண்டு. ஊருக்கு நான்கு இலக்கிய அமைப்புகள் உண்டு. பதிவு பெற்றவை-பெறாதவை, செயல்படுபவை-படாதவை என ஏராளமான அமைப்புகள் இலக்கியத்தின் பேரால் இருக்கின்றன.

இன்னும் தமிழகத்தில் எழுத்தினை முழுநேரத் தொழிலாக ஏற்க முடியாது. அவ்வாறு மேற்கொள்வோர் பிழைக்கத் தெரியாதவர் என்ற கருத்து நிலவுகிறது. பொதுச் சந்தையில் 1000 புத்தகங்கள் விற்பதற்கு நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன. இலக்கிய இதழ்களின் விற்பனை தேய்முகத்தில் இருக்கிறது. பெரும்பாலான இலக்கியவாதிகளுக்குச் சமுதாய மதிப்பு இல்லை. இலக்கியவாதிகளிடையே குழு மனப்பான்மையும் காழ்ப்புணர்வும் அதிகரித்திருக்கின்றன. உலக இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தமிழ் எழுத்தாளர்க்குக் குறைவு. எது தரமான படைப்பு? ரசிப்பு? வாசிப்பு? என்ற தெளிவு குறைவு. எழுதுவோர் சொல் வேறு செயல் வேறாய் இருக்கின்றனர். தமிழ் எழுத்தாளரிடையே ஒற்றுமை இல்லை. கடுமையான உழைப்பு இல்லை.

இலக்கியத் துறைக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 'இலக்கிய அமைப்புகள் என்ன செய்கின்றன?' என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐந்து அமைப்புகள் குறித்து இங்கே:

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்: 1950-ம் ஆண்டு கல்கி இதனைத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். கல்கி இறந்தபிறகு ம.பொ.சி., தேவன், A.G.வெங்கடாச்சாரி, வெ.சாமிநாத சர்மா, மீ.ப.சோமு, கி.வா.ஜ. ஆகியோர் தலைவர்களாய் இருந்தனர். ஆண்டுதோறும் மாநாடு நடைபெற்றது. இது 1970 வரை நீடித்தது. அதன்பிறகு 1977 வரை சங்கம் செயல்படவில்லை. 1978-லிருந்து இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இதன் கிளைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

பத்திரிகைகளில் 5 படைப்புகள் வெளிவந்தவரோ, நூல் வெளியிட்டவரோ, அல்லது நூலொன்றைக் கையெழுத்துப் படியில் கொண்டவரோ இதில் உறுப்பினராகச் சேரலாம். தற்போது ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 'E.V.K. சம்பத் மாளிகை' என்ற அரசுக் கட்டடத்தில் இதற்கு அலுவலகம் உள்ளது.

ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமை மாலையிலும் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்கிறது. நூல் அறிமுகம், சிறந்த சிறுகதையைப் பற்றிப் பேசுவது, கவிதை வாசிப்பது போன்ற உருப்படிகளை இக்கூட்டம் கொண்டுள்ளது. ஆறு ஆண்டுகளாகப் பாரதியார் பிறந்த நாளில் எட்டயபுரத்திற்கு எழுத்தாளர்களை அழைத்துச் சென்று ஊர்வலம் நடத்தி, கவிதை வாசித்து விழா கொண்டாடி 'பாரதி பணிச் செல்வர்' என்ற விருதினை வழங்கி வருகிறது.

கோவையில் சென்ற ஆண்டு 'சிறுகதைப் போட்டி' கல்லூரி மாணவரிடையே நடந்துள்ளது. தொடர்ந்து இதனை எல்லா மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நூலகம், 850 நூல்களை வாங்கவும் பாரத்திற்கு 1 ரூபாய் 60 பைசாவிலிருந்து 2 ரூபாய் 10 பைசாவாகத் தொகை வழங்கவும் வழி வகுத்தலில் இச்சங்கத்திற்கும் பங்குண்டு. இவ்வாண்டு சிறுகதைத் தொகுதிகளையும் கவிதைத் தொகுதிகளையும் வெளியிட எண்ணியுள்ளது. எழுத்தாளர்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகளோடு பேச்சு நடத்தி வருகிறது.

தலைவர்: கலைமாமணி விக்கிரமன்.
--------------------------------------------------------------------------------

உரத்த சிந்தனை: 1983-ம் ஆண்டு தொடங்கி, மாதம்தோறும் கூடி கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகளை நடத்தி வருகிறது. வாசகர்களைப் படைப்பாளர்களாக்குவதையும், திறமைசாலிகளைக் கண்டுபிடிப்பதையும் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கி.வி.விருது, பெருமைக்குரிய பெண்மணி விருது, சுடர் விருது, செயல்வீரர் விருது, சாதனையாளர் விருது, டாக்டர் விக்கிரமன் விருது, அறிவியல் மாமணி விருது, ஒளி விருது போன்ற பெயர்களில் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கிறது.

நல்லோர் வங்கி, வானொலி இளைஞர் மன்றம், உறுப்பினர் குடும்பக் குழாம் என்ற துணை அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. 'உரத்த சிந்தனை' என்ற பெயரிலான காலாண்டிதழை மூன்றாண்டுகள் நடத்தியது. கடற்கரையில் 'புத்தகச் சந்தை' என்ற திட்டத்தை உருவாக்கிக் 'கவிதை உறவு'டன் இணைந்து பிரபலங்களை அழைத்து நூல் வெளியிடச் செய்து அவர்களின் கைகளாலேயே நூல் விற்பனையை மேற்கொண்டது. தன் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் நூல்களைப் பரிசாக வழங்குகிறது. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கும் 'நேருக்கு நேர்', கவிதைப் போட்டியில் தேர்வு பெறும் 50 கவிதைகளைக் கண்காட்சிபோல் ஓர் அரங்கில் வைத்து வாசகர்களுக்கு வாக்குச் சீட்டு அளித்துச் சிறந்த கவிதையைத் தேர்வு செய்யும் 'கவிதைத் தேர்தல்' போன்றவற்றைச் செய்து வருகிறது. கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 'இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்தல்' என்ற முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தலைவர்: எஸ்.வி.ராஜசேகர்-செயலாளர்: உதயம்ராம்.
--------------------------------------------------------------------------------

கவிதை உறவு: 28 ஆண்டுகளாய் இயங்கி வருகிறது. பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்ற பிளவை நீக்கி ஒன்றுபடுத்த உருவாக்கப்பட்டது. 15 ஆண்டுகளாய்க் 'கவிதை உறவு' என்ற இதழை நடத்தி வருகிறது. 'விக்கிரமன் விருது' நர்மதா பதிப்பகத்துடன் இணைந்து 'கண்ணதாசன் விருது' ஆகியவற்றை வழங்குகிறது. 'இல்லந்தோறும் இலக்கிய நிகழ்ச்சி' என்பதன் மூலம் கவிஞர்களின் வீடுகளில் கூடி அவர்களின் குடும்ப முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுகிறது. 'கவிதை உறவுச் சுற்றுலா' என்பதன் மூலம் கன்னியாகுமரி, மதுரை, கூரம் போன்ற இடங்களுக்குச் சென்று வந்துள்ளது. 'கிராமம்தோறும் கவியரங்கம்' என்ற முறை மூலம் கிராமங்களில் கவியரங்கங்கள் நடத்தி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக 'கவிதை இரவு' எனும் பெயரில் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் கவியரங்கு நடத்துகிறது. உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க மருத்துவர் குழு ஒன்றினைக் கொண்டுள்ளது.

நாகர்கோவிலில் கிளையொன்றைக் கொண்டதோடு மேலும் சில மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளது. 'புத்தகக் கூப்பன்' திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளது. வாழ்த்து அட்டையோடு கூடிய கூப்பனைத் தேவையான தொகைக்குப் பெற்று விரும்புவோர்க்குப் பரிசளிக்கலாம். பெறுவோர் அந்த விலைக்கு நூல் பெறலாம். கூப்பனைப் பதிப்பகம் கவிதை உறவுக்கு அனுப்பித் தொகை பெறலாம் என்று திட்டமிட்டுள்ளது.

நிறுவனர்: கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்.
--------------------------------------------------------------------------------

தமிழ்க் கவிஞர் மன்றம்: 1962 ஜனவரி 26-ல் பாவேந்தரால் தொடங்கப்பட்டது. முதல் தலைவராகப் பாவேந்தர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவர்க்குப் பிறகு கு.மா.பா., கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன், சுரதா, கே.சி.எஸ்.அருணாசலம் ஆகியோர் தலைவர்களாய் இருந்துள்ளனர்.

முப்பது ஆண்டுகளாய் மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று கடற்கரை-திருவள்ளுவர் சிலை பின்புறம் 'கடற்கரைக் கவியரங்கம்' நடத்தி வருகிறது. சாதி, சமய, அரசியல் காழ்ப்புணர்வற்ற போக்கில் கவிதைகள் வாசிக்கப் பெறுகின்றன.

இருபத்தெட்டு ஆண்டுகளாய்த் 'திறனாய்வரங்கம்' என்ற பெயரில் மாதந்தோறும் முதல் ஞாயிறில் படிக்கப் பெற்ற கவிதைகளைத் திறனாய்வு செய்வதும் சிறுகதை, கவிதை வாசிப்பும் நிகழ்ந்து வருகின்றன. யாப்பிலக்கணமும் கற்றுத்தரப் பெறுகிறது.

'முல்லைச்சரம்' என்ற ஏடு 35 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 'அலைகள் ஆயிரம்' என்ற தலைப்பில் கடற்கரையில் படிக்கப்பெற்ற கவிதைகள் நூலாக வந்துள்ளன.

பூங்காக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், ஓடை, மலைக்கோட்டை, ஆற்றங்கரை, குளத்தங்கரைக் கவியரங்கங்கள் இதன் கிளைகள் சார்பாக நடந்து வருகின்றன.

பொதுச் செயலாளர்: கவிஞர் பொன்னடியான்.
--------------------------------------------------------------------------------

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்: 1977-ல் தொடங்கியது. உலகளாவிய தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிறமொழிக் கவிஞர்களின் மாநாடுகளில் கலந்துகொண்டு அவர்களைப் பற்றி அறிந்து தமிழ்க் கவிஞர்களைப் பற்றித் தெரிவித்தும் வருகிறது. உலகு தழுவி 4 மாநாடுகளை நடத்தி இருக்கிறது. அவற்றுள் இரண்டு, ஜெர்மனியிலும் தாய்லாந்திலும் நடந்துள்ளன.

முப்பத்திமூன்று ஆண்டுகளாகத் 'தமிழ்ப்பணி' என்ற மாத இதழை நடத்தி வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நடைப் பயணம் மேற்கொண்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலும் இதற்குக் கிளைகள் உண்டு. அமெரிக்காவின் பல நகரங்களிலும் கிளைகள் உண்டு. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன.

ஒரு போராட்ட இயக்கமாகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழ்வழிக் கல்வி அரசாணை செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நகல் எரிப்புப் போராட்டத்தில் தமிழகப் புலவர் குழுவுடன் இணைந்து இயங்குகிறது.

தமிழ்க் கவிதையின் தரம் தாழ்ந்திருக்கிறது என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒரு லட்சம் கவிதைகளை எழுதிப் பதிப்பித்ததாகவும் இயலாது என்ற குரல்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் நோபல் பரிசு பெறுவதே தனது நோக்கம் என்றும் இதன் நிறுவனர் தெரிவிக்கிறார்.

நிறுவனர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 11-6-2000)

Thursday, August 04, 2005

கத்தி வணிகர்களும் கணியனும்


ஊர்ப்புறத்தில் உழவன் ஒருவன் இருந்தான். அவனிடம் தங்க வாத்து ஒன்று இருந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டது. அந்த உழவன் அதை விற்று, வளமாக வாழ முடிந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் அவனுக்கு ஓர் அரிப்பு. 'இப்படித் தினம் தினம் ஒவ்வொரு முட்டையாக எடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி? இந்த வாத்தின் வயிற்றிலிருந்துதானே தங்க முட்டைகள் கிடைக்கின்றன. அதை வெட்டினால், ஒரே நாளில் எல்லா முட்டைகளையும் எடுத்துவிடலாம் இல்லையா?' என்று நினைத்தான்.

உடனே கத்தியைத் தேடினான். அச்சமயம் அவனிடம் சரியான கத்தி இல்லை. கடைத் தெருவுக்குச் சென்றான். அங்கு உள்ளூர் வியாபாரிகள், கத்திக்கு அதிக விலை சொன்னார்கள். வேறு எங்கே மலிவாகக் கிடைக்கும் என விசாரித்தான். வெளியூரிலிருந்து வந்த சிலர், போட்டிக் கடை வைத்தார்கள். உள்ளூருக்கும் வெளியூருக்கும் கடும் போட்டி. இப்போது, கொள்ளை மலிவுக்குக் கத்திகள் கிடைத்தன. நல்ல கூரிய கத்தி; விலை இறங்கிக்கொண்டே வந்தது. சிலர், 'நீங்க எடுத்துட்டுப் போங்க; அப்புறம் காசு வாங்கிக்கிறோம்' என்றனர். அவன் பளபளவென மின்னும், நல்ல கைப்பிடி உள்ள, அழகான கத்தியை வாங்கி வந்தான்.

அதைக் கொண்டு, "பெரிய பணக்காரன் ஆகப் போகிறேன்" என்று கூறிக்கொண்டே வந்தான். அவன் முழக்கத்தைக் கேட்ட இதர உழவர்களும் கத்தி வாங்கச் சென்றனர். இதிலென்ன வேடிக்கை என்றால், அவர்களுள் பலரிடம் தங்க வாத்து எதுவும் இல்லை. சாதாரண வாத்துதான் இருந்தது. அவர்களுள்ளும் சிலரிடம் வாத்தே இல்லை. அவர்களும் கத்தி வாங்கச் சென்றனர். அடுத்த சில மணிநேரங்களில் அனைவர் கையிலும் கத்தி இருந்தது.

தங்க வாத்து உழவன், தன் கூரிய கத்தியை எடுத்தான். ஒரே வெட்டு. தங்க வாத்து செத்து விழுந்தது. அதன் வயிற்றிலிருந்து ஒரு முட்டைகூட கிடைக்கவில்லை. 'அய்யோ! உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா!' எனக் கூக்குரல் இட்டான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. உடனே, தட்டைத் திருப்பினான். "இது, கத்தி விற்றவர்களின் சதி; அவர்கள் மட்டும் கத்தியை விற்காமல் இருந்திருந்தால் நான் என் தங்க வாத்தை இழந்திருக்க மாட்டேன்" எனக் குற்றம் சாட்டினான்.

கத்தியை வாங்கிய இதர உழவர்களும் அவர்கள் வீட்டில் இருந்ததை வெட்டினார்கள். சிலர் சாதாரண வாத்தை; சிலர், ஆடு-கோழிகளை; சிலர், தங்கள் நிழல் தரும் மரங்களை; சிலர், எதை வெட்டுவது என்று தெரியாமல் வெட்டினார்கள்; சிலர், நகம் வெட்டப் பயன்படுத்திக் கைகளைக் காயப்படுத்திக்கொண்டார்கள். இப்படி எவருமே கத்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை. அதை உருப்படியான வேலைக்குப் பயன்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்க வாத்து உழவனைப் போல், கத்தி விற்றவர்களையே குற்றம் சொன்னார்கள்.

"நீங்கள், விற்றிருக்காவிட்டால், இப்படி நடந்திருக்காது. நீங்கள்தான் எங்களை இந்தச் செயலுக்குத் தூண்டினீர்கள். இந்தச் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாளி; எங்களுக்கு எதுவும் தெரியாது.

"அந்தக் காலத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தோம்! இப்போது இந்த ரத்தக் களரியில் வாடுகிறோம். காயத்தினால் வந்த புண், சீழ்பிடித்துவிட்டதே! இவையெல்லாம் கத்தி விற்பவர்கள், ஊருக்குள் வந்ததால்தானே! அவர்களை இந்த அரசியல்வாதிகள், இலஞ்சம் வாங்கிக்கொண்டு நுழைய அனுமதித்து விட்டார்கள். வெளிநாட்டுக் கத்தி வணிகர்களை விரட்டுவோம்" எனக் கூக்குரல் எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து, உள்ளூர்க் கத்தி வியாபாரிகள் சாப்பாட்டில் மண் விழுந்தது. மேல்நோக்கி இருந்த கத்தி விலை, இப்போது மிகவும் சல்லிசாகக் கிடைத்தது. கூர்மையும் அதிகமாய் இருந்தது. தங்கள் கத்திகளின் தரம் குறைவு; விலை அதிகம் என்ற நிலையை உள்ளூர்க்காரர்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. 'வெளியூர்க்காரன் வந்ததால்தான் நம் பிழைப்பு போயிற்று. அவர்கள் வெளியேற வேண்டும்' என்று முழங்கினார்கள்.

இந்தக் கதை, நம் நாட்டுக் கதைதான். உலகமயமாக்கலின் விளைவாக, நம் வளங்கள் அழிகின்றன என்று குமுறும் விவசாயிகளுக்கு மட்டுமில்லை; அனைத்துத் தொழிலாளிகளுக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் இந்தக் கதை பொருந்தும்.

நம் மக்களின் பேராசைக்கு அளவில்லை. குறைந்த உழைப்பில், குறைந்த நாள்களில் முன்னேறிவிட வேண்டும் என்ற உந்துதலால்தான் அவர்கள், குறுக்கு வழிகளில் செல்லத் தொடங்கினார்கள். அவர்கள் மட்டும்தான் அவ்வாறு குறுக்கு வழிகளில் செல்லவேண்டுமா, என்ன? வியாபாரிகளும் குறுக்கு வழியில் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மனச்சான்றின்படி அவர்கள் பதில் சொல்வார்களா? எங்கேனும் அதிசயமாக அப்படி ஓரிருவர் இருக்கலாம். நியாயம், நீதி ஆகியவற்றோடு வணிகத்தில் உள்ளவர்கள், அரிய பிறவிகள்; விதிவிலக்குகள்.

இந்த விதையைப் பயன்படுத்தினால், அதிக மகசூல் கிடைக்கும்; இந்த உரத்தைப் போட்டால், பயிர் மூன்று பங்கு விளையும் என்ற பிரச்சாரத்தில் மயங்கினார்கள். இயற்கையான கோமியமும் சாணமும் போட்டால், முக்கால் பங்கு விளைந்தாலே அதிகம் என்ற உண்மை நிலையை உணர்ந்தார்கள். எல்லாரும் 'உஜாலாவுக்கு' மாறினார்கள். வருகிற எதுவும் தன் நிழலையும் சுமந்தே வரும் என்ற உண்மையை மறந்தார்கள். விளைநிலங்கள் பல மலடானமைக்குக் காரணம், விதையையும் உரத்தையும் விற்ற வணிகர்களா? அவற்றை வாங்கிப் பயன்படுத்திய உழவர்களா?

அதிகத் தண்ணீரை உறிஞ்ச மோட்டார்; விரைந்து விதைக்க, அறுக்க டிராக்டர்; நெல் பிரிக்க எந்திரம் என எல்லாவற்றிலும் மாறினார்கள். வசதிதான். வேலை, விரைவில் முடிந்துவிடுகிறது. ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது என்ற கூக்குரலுக்கு என்ன பதில்? இந்த வசதிகளைப் பயன்படுத்துவோரை, யாரும் அவர்கள் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்து வந்து, இந்த எந்திரங்களை அவர்கள் தலையில் கட்டவில்லை. அவர்களாகத்தான் போனார்கள். பேராசையினால் எந்திரங்களுக்கும் செயற்கை வழிகளுக்கும் மாறினார்கள். இன்று அவற்றின் பின்விளைவுகளைத் தாங்க முடியாமல் குமுறுகிறார்கள்.

இவர்கள் என்ன பச்சைப் பிள்ளைகளா? ஒன்றுமே தெரியாதவர்களா? இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் மைந்தர்களாய் இருந்தவர்கள், இன்று வேற்று மண்ணின் கைதிகளாய் நிற்கிறார்கள். நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து உணரும் பகுத்தறிவை எங்கே தொலைத்தார்கள்?

யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விட்டார்களா, என்ன? காந்தி எவ்வளவோ நல்ல வழிகளைத்தானே காட்டினார். அதை நம் மக்கள், இக்காலத்திற்குப் பொருந்தாது என்று கைகழுவி ஆயிற்று. எவர் சொன்னதையும் ஏற்பவராய் இருந்தால் காந்தி சொன்னதை ஏற்றிருக்க வேண்டுமே! இல்லையே! அப்படி என்றால் நேற்று வந்த எந்திர வியாபாரிகளின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்கும் மக்கள், காந்தியின் - நம் சித்தர்களின் - மூதாதையர்களின் (இயற்கைசார் வாழ்வை வலியுறுத்தும்) சொற்களைக் கேட்கத் தயாரில்லை.

ஆனால், வியாபாரிகளின் பேச்சைக் கேட்கத் தயாராய் இருக்கிறார்கள். உலகின் எந்த நாட்டு வியாபாரிகளும் அப்படித்தான் தேனொழுகப் பேசுவார்கள். தங்கள் பொருளை வாங்கினால், அடுத்த நாள் அதிகாலை அற்புதம் நடந்துவிடும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லத்தான் செய்வார்கள். அவர்கள், தங்கள் பொருளை விற்க, எதுவும் செய்யத் தயாராய் இருப்பார்கள்தாம். யாரும் பொதுச்சேவை செய்ய, வியாபார உலகுக்கு வரவில்லை. இலாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். அவர்கள், ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும்தான் பால் கறப்பார்கள். உள்ளூர் வியாபாரிகள் ஒன்றும் நூறு விழுக்காடு, உத்தமர்கள் இல்லை. இவர்களும் எல்லாத் தந்திரங்களும் உள்ளவர்களே. வியாபாரிகள் எங்கும் ஒரே தரத்தவர்களே. அவர்களைப் புரிந்துகொண்டு, நாம்தாம் விழிப்போடு இருக்கவேண்டும்.

விழிப்போடு இல்லையென்றால் அனுபவிக்க வேண்டியதுதான். இந்த எந்திரமயமான உலகின் பின்விளைவுகளுக்கு மேற்கத்திய நாடுகளைக் கைகாட்டிவிட்டுத் தப்பிக்க முடியாது, நண்பர்களே! இந்த நிலைக்கு நாமே காரணம்.

உள்ளூர் வியாபாரிகள், எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன இலாப விழுக்காடு வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதிகத் தேவை உள்ள பொருளுக்கே அதிக இலாப விழுக்காடு வைத்திருப்பார்கள். அண்மையில் மாம்பழப் பருவம் முடிவடையும் நிலையில் மாம்பழங்களின் விலை, கிடுகிடுவென ஏறியது. முதலில் ஐந்து ரூபாய்க்கு 2 பழங்கள்கூட கிடைத்தன. மாம்பழ வரத்து குறைந்ததும் அண்மையில் விலை விசாரித்தேன். 4 பழங்கள், 50 ரூபாய் என்று விலை சொன்னார்கள். மும்பையில் வெள்ளத்தால் அடிப்படைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்கின்றன. விற்போர், வெளிநாட்டு வியாபாரிகள் அல்லர்.

மாறாக, குறைவான தேவை உள்ளவற்றுக்குக் குறைவான இலாபமே கிடைக்கும். எனவே அதிகத் தேவையை ஏற்படுத்த வியாபாரிகள் முயலத்தான் செய்வார்கள். அதற்கு எலும்புத் துண்டாக, கேரட்டாக, இலவசப் பொருள்களை வழங்கத்தான் செய்வார்கள். கழிவும் அதிரடித் தள்ளுபடியும் கொடுக்கத்தான் செய்வார்கள். கலப்படமும் எடைக்குறைப்பும் செய்யத்தான் செய்வார்கள். வெளிநாட்டு வியாபாரிகள் சிலரைப் போல் அவர்கள் கொள்ளை இலாபம் அடிக்கவில்லை என்பது போல் தெரியும். அதற்குக் காரணம், அவர்களின் நல்ல இயல்பு இல்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

அறிஞர் அண்ணா சொன்னார்: வெளிநாட்டுத் தேன் குடித்தால் அது இனிக்காமல் போகாது; உள்நாட்டுத் தேள் கடித்தால் அது கடுக்காமல் போகாது.

கிடைத்த வாய்ப்பில் கொள்ளை இலாபம் அடித்துச் சொத்து சேர்க்கும் ஆட்கள் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறார்கள். காடுகளை அழித்தது; வறண்ட நீர்நிலைகளை வீட்டு மனைகளாக்கியது; சுற்றுச் சூழலை மாசுபடுத்தியது... என எண்ணற்ற குற்றச்சாட்டுகளை நம் மீது நாமே கூறவேண்டிய நிலையில் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மேற்கத்திய நாடுகளைக் குற்றம் சொல்லி விடலாமா?

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றன் கூறியதை வெறும் சொற்களாகத்தான் நாம் கூறுகிறோம். அப்படி என்றால், உலகமயமாக்கலின் தத்துவமும் 'யாதும் ஊரே' என்பதும் ஒன்றுதானே! அதை ஏன் நாம் எதிர்க்கிறோம்?

வெளிநாட்டிலிருந்துதான் இங்கு பலவும் வந்துள்ளன. இரயில் பாதை முதற்கொண்டு, மின்சாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மகிழுந்து, விமானம்..... என மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள பெரும்பாலானவற்றின் தொழில்நுட்பங்கள், வெளிநாட்டிலிருந்து வந்துள்ளன.

நல்லவற்றை வெளிநாட்டிலிருந்து ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் உள்ள நாம், அல்லவற்றை எதிர்க்கவேண்டியது, கட்டாயம்தான். அந்த அல்லவை, உள்ளூரிலும் இருக்கலாம்; வெளிநாட்டிலும் இருக்கலாம். தொலைநோக்கோடு இரண்டையும் தரம்பார்த்துப் பிரித்தறிந்து, நல்லதைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை அலகுகள் நம்மிடம் உள்ளனவா?

நமக்கு உண்மையை எதிர்கொள்ளும் துணிவு இல்லை; அதை ஒப்புக்கொள்ளும் நேர்மை கூட இல்லை. எல்லாப் பழியையும் இன்னொருவன் தலையில் போட்டுவிடப் பார்க்கிறோம். இதை எதிர்பார்த்துத்தான் கணியன் அன்றே சொன்னான்: 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'.

இந்தக் குறுகிய காலப் பின்விளைவுக்கே இப்படி அலறினால் எப்படி? இன்னும் ஓரிரண்டு நூற்றாண்டுகளில் என்னென்ன நடக்கும்? அதற்கு நம் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் தயாராக இருக்கிறார்களா? பேராசைக்கும் குறுக்கு வழிகளுக்கும் நாம் விலை கொடுக்கவேண்டாமா?

தவறான வழிகளில் சென்று, பிள்ளைகளுக்குப் பலர் சொத்து சேர்க்கிறார்கள்! அந்தோ பரிதாபம்! நம் இன்றைய தவறுகளுக்கு நாம் தண்ணீர்ப் பஞ்சம் போல ஓரளவுதான் சிரமப்படுகிறோம். நம் தவறுகளுக்காக, நம் சந்ததியினருக்குப் பல மடங்குகள் அதிகத் தண்டனை காத்திருக்கிறது. நேரடியாக எந்தத் தவறும் செய்யாமல் நம்மிடம் வந்து பிறந்ததற்காகவே நம் சந்ததி, தண்டனைக்கு உள்ளாகப் போகிறது. செய்த குற்றத்திற்கு 'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்று சொன்ன தமிழே, நீ பின்தங்குகிறாய். குற்றம் செய்யவே வேண்டாம்; ஆனால், தண்டனைகள் காத்திருக்கின்றன என்ற காலம் நெருங்குகிறது.

இருநூறு ஆண்டு கடுங்காவல் என்று தண்டனைகள் விதிக்கும் போது எல்லாம் சிரித்துக்கொள்வேன். மனிதன் அவ்வளவு காலம் உயிரோடு இருந்தால்தானே என்று. ஆனால், இன்றைய மனிதன், பல்லாயிரம் ஆண்டுக் கடுங்காவல் தண்டனைக்கு உரிய குற்றங்களைச் செய்கிறான். அவன் நூறு ஆண்டுகளுக்குள் மரித்தாலும் எஞ்சிய தண்டனைகளை அவன் சந்ததி சுமக்கவேண்டும். இதுதான் நம் சாதனை.

Monday, August 01, 2005

கவிதாயினி மதுமிதா




விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம்.

ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மெளனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். அது, ஒரு வகை அதீத உலகம். அங்கே எதுவும் இயல்பாய் இருக்காது. பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே காண்பது போல் களிகூத்து நிகழ்த்துவார்கள்.

காதல் கவிதைகளுக்குள் சில பொதுவான இயல்புகள் உண்டு. 'கடைக்கண்ணால் பார்; மரணத்தை வெல்கிறேன்', 'கிளுகிளுவெனச் சிரி; கிழக்குடன் போட்டியிடுகிறேன்', 'பார்வையால் என்னைக் கொல்கிறாய்', 'பசி இல்லை', 'துயில் இல்லை', 'உன்னைக் காணாமல் (வளையல்/ கைக்கடிகாரம் கழலும் அளவுக்கு) இளைக்கிறேன்', 'உடனே உன்னைப் பார்க்காவிட்டால் உயிர் உடலை விட்டுப் போய்விடும்',

'என் மனம் என்னிடம் இல்லை, உன்னிடம் வந்துவிட்டது', 'விலகாதே! எப்போதும் என் பக்கத்திலேயே இரு', 'விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது', 'என் துணையே, உனக்குத் துயரா? தொல்லைசெய்யும் ஆளைக் காட்டு, கீசிடுறேன்', 'உனக்காக எதுவும் செய்வேன், உயிரும் கொடுப்பேன்'....... எனக் காதலர்களின் ஒவ்வோர் அசைவையும் கவனியுங்கள். அவை, ஒரு தனித்த தளத்தில் இருந்தே எழுகின்றன. காதலர்கள் பெரும்பாலும் தரையில் நிற்பதில்லை; மிதக்கிறார்கள். அந்த மனோ நிலையைத் தக்க வைப்பதே, காதல் கவிதைகளின் பணியாய் இருக்கிறது.

இவை அல்லாமல், வருணனைகளும் காதல் கவிதைகளின் பெரும்பகுதியைப் பிடித்து வைத்துள்ளன. உறுப்பு வருணனைகள், குரல்- நிழல்- பண்பு, நிமிர்ந்தது, குனிந்தது, நடந்தது ... என எதையும் விடாமல் வருணிக்கிறார்கள். புற வாழ்வில் அழுக்கு என்றும் குப்பை என்றும் கருதப்பெறும் பலவும் காதலர் உலகில் விலைமதிக்க முடியாதவை ஆகின்றன. காதலியின் ஒற்றை முடி, நகத் துண்டு ஆகியவற்றைக் காதலன் போற்றிப் பாதுகாக்கிறான். காதலன் சூட்டிய பூ காய்ந்து சருகானாலும் காதலி அதைத் தூக்கி எறிவதில்லை. இந்தப் பொருள்களையே இப்படிப் பாதுகாத்தால் பரிசுப் பொருள்களை எப்படிப் பாதுகாப்பார்கள்!

இவையெல்லாம் உயிரோடு இருக்கும் காதலுக்குப் பொருந்தும். இணையில் ஒருவர் மறைந்தாலோ, பிரிந்தாலோ, தொலைந்தாலோ, அந்த இன்னொருவர், கொடுந்துன்பத்திற்கு உள்ளாவார். மகிழ்வின் உச்சத்தில் இருந்த நிலை மாறி, இப்போது அதற்கு நேர் எதிராய்த் துன்ப சாகரத்தின் ஆழத்தைத் தொட்டுவிடுவார். துணையின் ஒருவர் பிரிந்தால், இன்னொருவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. ஒருதலைக் காதலும் இந்த வரிசையில் வைக்கத் தக்கதே. துன்பியல் காதல் கவிதைகளில் மரணம் என்ற சொல் உறுதியாக இருக்கும். சொல் மட்டுமா?

இப்படிக் காதலின் இயல்புகளையும் அறிகுறிகளையும் சொல்லக் காரணம் என்ன? தமிழில் வெளிவந்திருக்கும் இலட்சக்கணக்கான காதல் கவிதைகளின் சாரமே, இவை. இத்தகைய கூறுகள் இல்லாமல் எந்தக் கவிதையும் இல்லை. இந்த உணர்வுகளைத்தான் காதல் கவிஞர்கள், வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு ஆட்களின் முன் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சங்க காலத்திலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளில் தொடரும் இந்த மரபு, இன்று வரை இடைவெளி இல்லாமல் நீடித்து வருகிறது. அந்த மரபில் வருகிறார், மதுமிதா (41).

சற்றே தலை சாய்ப்பாய்
முடிக்கற்றை நெற்றியில் வந்து
அழகாய் அழகு சேர்க்கும்

லேசாக ஒதுக்குவாய்
கையை எடுக்கும் முன்பே
அதே இடத்தில் அரைநொடியில்
அசைந்தாடி வந்து நிற்கும் அழகு முடி

என்னை நலம் விசாரிக்க

- என அழகியலோடு கவிதை பாடத் தெரிந்திருக்கிறது, இவருக்கு.

மனமெனும் சாதனத்தை
என் செய்வேன்
முடியைக் கட்டி
மலையை இழுப்பதாய்
உன்னில் பிணைத்துள்ளேன்

- என அற்புதமாக வடித்துள்ளார்.

விழியால்
முழுதாய்
விழுங்கி விட்டேன்.

செரிக்க இயலவில்லை
உன் நினைவை

- என்கிற போதும்

சற்றே தலைசாய்த்து
சிறு பார்வை பார்த்தாய்
மனம்
பெரு வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு விட்டது

- என்கிற போதும்

"பேச வேண்டாம்"
என சொல்லிவிட்டு
ஒருநாள் முடிவதற்குள்
பரிதவித்து
"ஒரு வருடம் ஆனது போலிருக்கிறது"
என நான் சொல்ல
அருகில் ஒன்று சேர்த்து
"இல்லை 11 வருடம் போலிருக்கிறது"
என நீ சொல்ல
அனலில் விழுந்த புழுபோல் துடித்ததாக
இருவரும் உணர்ந்தோமே
ஞாபகம் இருக்கிறதா???

- என்கிற போதும் காதலின் அதீத மனோநிலையை அடையாளம் காணலாம்.

காதல், உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? இது, நெடுங்காலமாக நிலவும் ஒரு கேள்வி. உடல் சார்ந்ததைக் காமம் என இக்காலத்தில் அழைக்கிறோம். உடல் சார்ந்ததாய் இருப்பது தரக் குறைவு என்றும் பலர் கருதுகின்றனர். இது, அவர்களின் சொந்தக் கருத்து அன்று. இந்தச் சமுதாயமும் ஊடகங்களும் அந்தக் கருத்தை ஆழமாக விதைத்துள்ளன. காதல், மனம் சார்ந்தது என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் மனம் மட்டுமே சார்ந்ததா? அவ்விதம் இல்லை. மனத்திற்கும் உடலுக்கும் காதலில் சரிசமமான இடம் உண்டு.

பார்வையாலோ, உடலாலோ தீண்டுதல், காதலுக்குத் தூண்டுதல் ஆகிவிடுகிறது. தொலைதூரத்தில் இருக்கிற, பார்க்காத இருவரிடையே காதல் சாத்தியமே. அவர்கள் தொலைபேசியில் குரல்வழியே, காதலைப் பகிரலாம். அந்த வசதியும் இல்லாதோர், கடிதம் மூலம் பகிர்கிறார்கள். இங்கும் கடிதத்தின் சொற்கள், குரலாக மாறி மனத்தில் ஒலிக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது குரல் ஒலிக்கிறதோ, அப்போதே அது உடலோடு தொடர்பு உடையதாகி விடுகிறது. புகைப்படமோ, ஓவியமோ கூட உருவத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்களே.

பார்வையற்றவர்களிடையே கூட குரலும் தீண்டுதலும் முக்கிய இடம் பெறுகின்றன. செவிப்புலனும் பார்வையும் ஒரே நேரத்தில் இழந்தவர்களும் தீண்டுதலால் காதலைப் பரிமாறுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து கடிதம் கூட எழுதிக்கொள்ளாமல், எந்தத் தூதுவரும் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா? ஒரே நேரத்தில் ஒரே மாதிரி இருவர் சிந்தித்து உள்ளனர்; உரையாடியும் உள்ளனர். இதை டெலிபதி என்கின்றனர். அப்படிப்பட்ட காதலர் யாரேனும் உண்டா என்கிற தகவல் இல்லை. அப்படி இருந்தால் அது, மனம் மட்டுமே தொடர்புடைய காதல் என ஏற்கலாம்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது, உடலின் பங்கு சிறிதளவேனும் இல்லாமல் காதல் சாத்தியமில்லை என்பதே. ஆயினும் நம் மக்களின் புற மனத்தில் முத்தமிடுதல், தீண்டுதல், அணைத்தல் உள்ளிட்ட காதற் செயல்பாடுகள், தவறு என்று பதிந்துள்ளன. அவை இல்லாமல் காதல் சுவைக்காது.

என்
இடது கன்னம் உணர்வது
குளிர் தென்றலா
பனித்துளியா
உன் இதழா என்பதை
அறியும் முன்னே

விடைபெறும் கணம்
முடிந்து விட்டது

- என்ற வரிகளிலும்

செவ்விதழ்கள் பரிசளித்த ஒற்றைவரி
இப்போது விழிகளில் பார்
எத்தனை செவ்வரிகள்

- என்ற வரிகளிலும் தீண்டுதலின் பங்கு வெளிப்பட்டுள்ளது.

எத்தனை ஓசைகள்
இருந்தாலும்

உனது
சுவாசத்தின் சப்த
அலைவரிசை மாற்றம்
அறிந்து

உன் உணர்வின்
லயத்தைத்
தெரிந்து கொள்வேன்

- என்ற கவிதையும் தனியே குறிப்பிடத்தக்கது. மதுமிதாவின் பல கவிதைகளிலும் தனிமை, முக்கிய இடம் வகிக்கிறது.

தவிக்கத் தவிக்க
தனியே விட்டுச் சென்றாய்
கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் தனிமை

- என்ற வரிகளும்

சிறிதும் இரக்கமின்றி
எதிர்வரும் தனிமை,
கழுத்தை நெரிக்கும்
ஆவேசத்துடன்

- என்ற வரிகளும் எதை உணர்த்துகின்றன என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நினைவுகளின் ஊசலாட்டம், சுமை, தீவிரம் ஆகியவற்றைப் பல கவிதைகள் படம் பிடித்துள்ளன.

முரண்டு செய்து
அடம் பிடித்து
விடாமல் உன்னினைவைப்
பிடிவாதமாய் பற்றிக் கொண்டு

நேரம் காலம் புரியாது
தலை கீழாய்த்
தொங்குகிறது
வௌவால் மனசு

- என்றும்

மனம் ஒரு உடும்புதான்
விடாமல் உன்னையே
இறுகப் பற்றிக் கொண்டுள்ளதே...!

- என்றும் அது வெளிப்பட்டுள்ளது.

காதல் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதித் தள்ளியிருக்கிறார், மதுமிதா. இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இதற்கென இரவும் பகலுமாய் உழைத்துக்கொண்டிருக்க, இங்கு இவர் தனியே ஆலாபனை செய்து வருகிறார்.

பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. நல்ல கவிதைகள் பல இருந்தாலும் கூட, வெறும் சம்பவங்களும் விவரிப்புகளும் மிகுந்துள்ளன. நடையில் உரைநடை இழையோடுகிறது. அதீத உணர்வுகளைப் பேசும் போது கவிதை, தனித்த நடையைக் கையாளுவது நல்லது.

நட்பினும் பெரிது
காமம் கடந்தது
காதலும் அன்று

அன்பே
என்ன பெயர் வைக்கலாம்
நமதன்பிற்கு

- என்கிற கவிதையில், 'நமதன்பிற்கு' என்ற சொற்களைவிட 'இதற்கு' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.

அறுபத்தி ஐந்து ஆண்கள்
இருபத்தி இரண்டு பெண்கள்
பதிமூன்று சிறுவர்கள்
ஐந்து நாய்
ஏழு காகம்
இரண்டு நண்டு
மூன்று குதிரை
கடந்து சென்ற
இவற்றைக் கேள்
காத்திருந்த
நேரம் முழுவதும்
உன்னை வாழ்த்தியதை
அவையேனும்
உனக்குச் சொல்லட்டும்

- என்று ஒன்றை எழுதியுள்ளார். இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. காதலன் (என்று வைத்துக்கொள்வோம்); சொன்னபடி வரவில்லை, காத்திருக்க வைத்துவிட்டான்; அதற்காக அவனைக் காதலி திட்டவில்லை, வாழ்த்துகிறாள்; சரி அவள் திட்டவே முடியாத அளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்றே இருக்கட்டும். படைப்பில் உள்ள 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள் உண்மையானவை இல்லை. ஏனெனில், தெருவில் கடந்துசென்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கெடுக்கிற காதலி, கணக்கெடுக்கும் நேரத்தில் காதலனை வாழ்த்தவில்லை. வாழ்த்திக்கொண்டே கணக்கு எடுத்திருந்தால் கணக்கு துல்லியமானது இல்லை. இரண்டு வேலைகளை அவள் ஒரே நேரத்தில் செய்ய வல்லவள் எனக் கொண்டாலும், முழு மனத்தையும் காதலனிடம் அவள் செலுத்தவில்லை எனப் புலனாகிறது. எனவே, 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள், அவளுக்கு எதிராக இயங்குகின்றன. அதிலும் காதலனுக்குக் காதலி மேல் நம்பிக்கை இல்லையா, என்ன? கடந்து சென்றவற்றிடம் எதற்காகக் கேட்கவேண்டும்?

கவிதை, உணர்வுத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்குச் செல்லும்போது இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்பு. இவற்றை மதுமிதா, கவனிக்கவேண்டும்.

காதல் கவிதைகளைத் தவிர, மதுமிதா, பொதுக் கவிதைகளும் பல இயற்றியுள்ளார்.

கேட்ட கடைகளில் எல்லாமே
சில்லரை இல்லை என
ஒரே பதில்தான் கிடைக்கிறது

குறைந்த பட்சம்
ஒரு ரூபாய்க்கான சாக்லேட்டாவது
வாங்காதவரை

- என்றும்

எந்த வெளிச்சத்தில்
எந்தக் கோணத்தில்
எடுத்தாலும்

கண்ணாடியில்
தோன்றும் அழகை
எப்போதும்
பிரதிபலிப்பதில்லை

கேமெரா பிடித்துத் தள்ளும்
எந்தப் புகைப்படமும்

- என்றும்

கோடி புண்ணியம்
கோபுர தரிசனம்

காலம் காலமாய்
சந்ததிகளுக்கான இடங்களைப்
பாதுகாத்தவண்ணம்
வரிசைகளில்
ஒரு தலைமுறையினர்
தட்டுக்களை ஏந்தியபடி
கோபுர வாசலில்

கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்

- என்றும்

வேப்பம் பூவின் வாசம் சேர்த்து
தடதடத்தவண்ணம்
ஓடும் லாரியின் ஓசையைச் சுமந்து
செல்லும் காற்றின்
அதிர்வுடன் ஒத்திசைந்து ஆடும்
திரைச் சீலை

எதனைக் காட்டலாம்
எதனை மறைக்கலாம்
என்னும் பரிதவிப்புடன்...

- என்றும்

காற்று வருடிவிடுகிறது
பெயர் பொறிக்கப்பட்ட
மரத்தின் வடுவை

- என்றும் அழகிய, பொருள் உள்ள கவிதைகளை இயற்றியுள்ளார்.

மதுமிதா, சுதந்தரப் போராட்டத் தியாகி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். மெளனமாய் உன்முன்னே... என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார். பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர்.

பொறுமை பழகிட
கோவிலில்
அடிப் பிரதட்சணம்
செய்திட வேண்டாம்

நகரச் சாலையில்
சிக்னலில்
காத்திருந்தால் போதும்

-என்கிறார் மதுமிதா.

பச்சை விளக்கு எரிகிறது. பயணத்தைத் தொடருங்கள்.