!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 29, 2005

சாலை

இதுதான் சாலை கண்மணியே! - நீ
எங்கே செல்ல விரும்புகிறாய்?
இதன்மேல் எத்தனை வாகனங்கள்! - நீ
எதிலே செல்ல விரும்புகிறாய்?
முதலில் செல்வது முக்கியமா?- நீ
முழுதாய்ச் செல்வது முக்கியமா?
மதித்து நேர்வழி நடப்பாயா? - குறுக்கு
வழியைத் தேர்ந்து எடுப்பாயா?

கரடு முரடாய் இருக்கலாம்- கூர்
கல்லும் முள்ளும் குத்தலாம்.
நெரிசல் மிகவும் இருக்கலாம்-கொடு
நீசர் உடைமை பறிக்கலாம்.
இருளில் எதுவும் நடக்கலாம்!- நீ
எதற்கும் தயாரா? நடக்கலாம்.
வருக வருக கண்மணியே - உனை
வாழ்த்தித் தோரணம் கட்டுகிறேன்.

எல்லாம் உனது காலடியில்
யாவும் உனது கைக்குள்ளே
எல்லை இல்லாப் பெரும்பயணம்
ஏகம் அநேகம் அனுபவங்கள்
வல்லமை உண்டேல் வழியுண்டு
வாழ்வும் சாலையும் ஒன்றாகும்
செல்வமே சீரே கண்மணியே! - உன்
சிறிய பாதம் எடுத்து வை.

No comments: