!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 31, 2005

இ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்வை




(1999ஆம் ஆண்டு மறவன்புலவு க. சச்சிதானந்தன், இ.வி.சிங்கனின் காரைக்குடி பயண அனுபவங்கள் என்ற நூலை என்னிடம் அளித்தார். அதற்கு ஒரு மதிப்புரை வழங்கக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். இவ்வாறு பத்து மதிப்புரைகளை இ.வி.சிங்கன் பெற்றார். அவற்றை, 'புத்தகத்தை மதிப்புரை திறனாய்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு ஒரு நூலாகவே வெளியிட்டார். அதில், என் மதிப்புரையைத் தவிர, மா.வழித்துணைவன், முனைவர் சுப.திண்ணப்பன், செ.ப.பன்னீர்செல்வம், இரா. அன்பழகன், பாத்தேறல் இளமாறன், முனைவர் லெட்சுமி மீனாட்சி சுந்தரம், முனைவர் ந.சுப்புரெட்டியார், முனைவர் எம். முத்துராமன் ஆகியோரின் மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த நூல் குறித்தான என் மதிப்புரையை இங்கு தருகிறேன்.)

இந்நூல், இரண்டு நூல்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் வாழ்த் தமிழரான இ.வி.சிங்கன், காரைக்குடி, காட்மாண்டு ஆகிய நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி, அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார். முதற்பகுதியான காரைக்குடிப் பயணம், பக்கங்களின் இயல்பாக 1,2,3 எனத் தொடங்கி, 45இல் முடிகிறது. இரண்டாம் பகுதியான காட்மாண்டுப் பயணம், உருது, அரபு, பாரசீக மொழிகளின் இயல்பைப் போலக் கடைசிப் பக்கத்தில் இருந்து தொடங்கி, உள்ளே வந்து முடிகிறது. அதை அவர் முதல் பகுதி முடிந்தவுடன், முறையாக ஒரு தாள் விட்டு, 1,2,3 எனத் தொடங்கியிருந்தால், தமிழ் வாசகர்கள் அவர் எழுத்தை எளிதாகத் தொடர்வதற்கு வசதியாய் இருந்திருக்கும். இது நூலின் பக்க அமைப்பைப் பற்றிய கருத்து.

ஆசிரியருக்கு மிகவும் இயல்பான எழுத்து நடை கைவந்திருக்கிறது. படிப்பதற்கும் அது சுவையாக இருக்கிறது. காரைக்குடிப் பகுதிக்கு வருவதற்கு, அவருக்குக் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் இருந்தது என்பதை அழகாக விவரிக்கிறார். அவர் எழுதுகிறார்:

"எங்கள் வீட்டில் செட்டிநாட்டில் இருந்து வந்த ஒரு சமையல்காரன் இருந்தான். அவனுடன் ஆடு, மாடுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதில் தணியாத ஆர்வம், எனக்கு இருந்து வந்தது.

மாடுகள், வெள்ளை, கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் இருந்தன. "சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் மாடுகள் இருக்கின்றனவா?" என்று நான் சமையல்காரனைக் கேட்டேன்.

அவன் பரபரப்பாகச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மிகுந்த உற்சாகத்துடன், "எங்கள் ஊரில் இருக்கின்றன" என்று அடித்துச் சொன்னான். அது எனக்குத் திகைப்பூட்டியது."

காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க் கல்லூரியில் திரு. இ.வி.சிங்கன் ஆற்றிய உரை, அதற்கான எதிர்வினைகள், கடிதங்கள், கல்லூரியின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் எழுதிய கருத்துரை உட்பட அனைத்தையும் பதிப்பித்துள்ளார்.

திருக்குறள் வகுப்பை எப்படி நடத்துவது, திருக்குறள் மூலம் எப்படித் தொண்டு செய்வது, அவை குறித்தான 10 கட்டளைகள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

இரண்டாம் பகுதியான நேபாளத் தலைநகர் காட்மாண்டுப் பயணமும் சுவையாகவே உள்ளது. ஆப்ரிக்க, ஆசியப் புத்தகப் பதிப்பாளர் மாநாட்டில், சிங்கப்பூர் சார்பாக இ.வி.சிங்கன் கலந்துகொண்டதை இப்பகுதி விவரிக்கிறது.

ஆசிரியர், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் சென்று, பின்னர் காட்மாண்டு செல்லும்போது, விமானத்தில் தாய்லாந்து நாட்டுப் பத்திரிகைகளைப் படித்திருக்கிறார். அதில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி, அண்மையில் சாரநாத்தில் நடந்த உலகப் புத்தர் மாநாட்டில் 'இந்திய ஆரிய நாகரிகங்களின் பழங்கொள்கைகளையே புத்தர் ஒரு புதிய அழுத்தத்துடன் மறுபடியும் சொன்னார்' என்றும், 'பகவத் கீதையின் தத்துவத்தை அடியொற்றியே, புத்தரின் செயல்கள் இருந்தன' என்றும் கூறியிருந்த செய்தியும் அதைப் பல அறிஞர்கள் மறுத்த செய்தியும் வெளியாகி இருந்தன. அதைப் படித்த இ.வி.சிங்கன், பின்வருமாறு அதை விமர்சிக்கிறார்:

'ஒரு பெரிய மாநாட்டில், ஒரு பொறுப்புள்ள அமைச்சர், வரலாற்று ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறி இருப்பது, தேவையில்லாத கிளர்ச்சி உருவாகத்தான் உதவி செய்யும். புத்த சமயமும் சீக்கிய சமயமும் ஆரியர்களின் கொள்கைகளை எதிர்த்து உருவான சமயங்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. புத்த மதம், இந்து மதத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்லாமல், 'புத்த சமயம்தான் என்னுடைய சமயமும்' என்று அவர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். புத்தரையே வழிகாட்டியாகக் கொண்டு, பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் முன்னேறிய நாடுகளின் அந்தக் கருத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்.'

பதிப்பாளர் மாநாட்டில் இ.வி.சிங்கன் ஆற்றிய ஆங்கில உரைகளைப் பதிப்பித்துள்ளார். அவை தலைப்பை விட்டுச் சிறிதே விலகிச் செல்வதுபோல் தெரிகின்றது.

நூல் வணிக நோக்கில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நூலின் பின் அட்டையில் 'Welcome to Nepal' என்ற விளம்பரம் உள்ளது. நேபாளத்தைப் பற்றிய தகவல்கள், நேபாளம், காட்மாண்டு ஆகியவற்றின் வரைபடங்கள், நேபாளியப் பழமொழிகள், Tamil way of Food Preparation Yesterday and Today, Napalese way of Food Preparation ஆகியவையும் நூலில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உள்ள ராயல் நேபாளீஸ் கன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில், கன்சுலேட் ஜெனரலாக இருக்கும் திரு.எம்.என்.சுவாமி, திரு.இ.வி.சிங்கனின் முப்பதாண்டுக் கால நண்பர் என்றும் குறித்திருக்கிறார். அனைத்தையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்குள் ஒரு செய்தி, பாயத்தான் செய்கிறது.

பூணூலை அறுத்த பாரதியை ஆசிரியர், 'பிராமணக் கவிஞன்' என்று குறிப்பிடுவதும் தம் ஆங்கில உரைகளில் பிராமணர்களை அதிகம் பேசுவதும், சிங்கப்பூரில் மலையாளிகள், தெலுங்கர்கள், பிராமணர்கள் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக வருகிறார்கள் என்று வருந்துவதும் அவருடைய மனோ நிலையை விளக்குகின்றன.

'Status of the Author in Singapore' என்ற தலைப்பில் பேச வேண்டிய இ.வி.சிங்கன்,

'Authors are of two kinds book publishing.
1. The Tamil people
2. The Tamil Speaking people
The Tamil Speaking People are non-Tamils. Their roots are different'
-என்று பேசுகிறார். மேலும் தொடர்ந்து,

'These authors are mostly Brahmins in Tamilnadu. They write books mixing plenty of Sanskrit words. Their novels consist of plots taken from European fictions in London, Paris, Frankfurt, Rome and America and are reconstructed as Delhi, Mumbai, Calcutta and Chennai and what not?'

- என்று பேசியிருக்கிறார். இவர் கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்வதற்கில்லை. ஏனெனில் ஆசிரியர் குறிப்பிடுவது போல, எல்லாத் தமிழரல்லாத எழுத்தாளர்களும் ஐரோப்பியக் கருத்துருவில் கதை புனைவதில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஏராளமாகக் கலக்கிறார்கள் என்றும் வருந்துகிறார். அது தவறுதான். ஆனால், ஆசிரியர் குறிப்பிடும் 'தமிழ் எழுத்தாளர்கள்' எவ்வளவு தூய்மையாக எழுதுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். தமிழ்வேர் கொண்டோரே வெள்ளம் போன்ற ஆங்கில வார்த்தைகளில் தமிழை மிதக்க விடுவதை அவர் குறிப்பிடாமல் விட்டது, ஒருதலைப்பட்சமானது.

இப்படித் தமிழர், தமிழரல்லாதோர் என்று பிரிவினை வாதம் பேசுவது, காழ்ப்புணர்வைத் தூண்டுமேயல்லாது வேறெதையும் தூண்டாது. 'தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்ற ரஜனிகாந்த்தின் கருத்தைக் கலைஞர் கருணாநிதி வரவேற்றிருப்பதை நினைவுகூர வேண்டியது என் கடமை.

நூலில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் மலிந்திருக்கின்றன. நல்ல உயர்தரமான தாளில் பளிச்சென்ற படங்களுடன் அருமையாக அச்சாகியுள்ள நூலில் ஒரு குறை, இது.

நேபாளியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் சில இடங்களில் ஒற்றுமை இருக்கிறது.

1. He who spits at the sky gets it full in his face.
2. One hundred lies are required to hide one lie.

1. வானத்தில் துப்பினால் அவன் முகத்திலேயே அது விழும்.
2. ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைச் சொல்லவேண்டி வரும்.

ஒரு பயண அறிக்கை போல இந்நூல் இருந்தாலும், அனைத்து நடவடிக்கைகளையும் பதிய வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது. அதனால் இது, வரலாற்று முக்கியத்துவமும் பெறுகிறது.

No comments: