!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, March 30, 2006


வைகோ போட்டியிடாதது ஏன்?

மதிமுக பொதுச் செயலாளர், 8.5.06 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அக்கட்சியின் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இது, அரசியல் அரங்கில் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகோ, சிவகாசி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று செய்திகள் வெளிவந்தன. மு.க.ஸ்டாலினுக்கு மாற்றாக இன்றும் வைகோ பார்க்கப்படுகிறார். ஒருவேளை நாளை கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் என்ற நிலை உருவாகும்போது அதை ஏற்காத அதிருப்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கிருந்து வெளியேறி வைகோ தலைமையின் கீழ் வந்து சேருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் - அந்தக் காட்சி நிறைவேறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

அப்போது வைகோ தலைமையில் ஆட்சி அமையுமாயின் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதே நல்லது. உறுப்பினராக இல்லாவிடில் அடுத்த ஆறு மாதங்களில் அவர் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக முடியும் என்றாலும் எதற்காக அந்த இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக வெற்றி பெற்று, மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்தாலும் அது, பதவி சுகத்தை அனுபவிக்கவில்லை. அதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியிலும் மதிமுக உறுப்பினர்கள் அமைச்சர் பதவி ஏற்றபோதும் வைகோ, அமைச்சர் பதவி எதையும் ஏற்கவில்லை. தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் அவர், வெற்றி பெற்றபோதும்கூட பதவியைப் பெற முயலவில்லை; வலிய வந்த பதவியைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ, போட்டியிடவில்லை. அதுவே பலரின் புருவத்தையும் உயர்த்தியது. அப்போது பலரும், வைகோ, மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார்; அதனால்தான் அவர் பாராளுமன்ற உறுப்பினராக முயலவில்லை என்று கருதினார்கள். ஆனால், இப்போது மாநில அரசியலில் நேரடியாகப் பங்கேற்றுச் சட்டமன்றத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்புக் கிட்டியுள்ள போது அவர் ஏன் போட்டியிட முன்வரவில்லை?

1. வைகோ போட்டியிடவில்லை என்பது அவருக்கு ஒரு திருவாளர் தூய்மை என்ற தோற்றத்தை உருவாக்க உதவும். தன்னலம் பாராதவர், பதவிக்கு அலையாதவர், கைக்கு அருகில் உள்ள பதவியைக்கூட தியாகம் செய்தவர் என்ற தோற்றம் கிட்ட வாய்ப்பு இருக்கிறது. அண்மையில் சோனியா காந்திக்கு இத்தகைய தோற்றம் கிடைத்தது. இது, வாக்காளர்களைக் கவரும் தன்மை உடையது. 35 சீட்டுகளுக்காக இடம் மாறிவிட்டார் வைகோ என்ற பழிச்சொல்லை, வைகோவின் இந்தச் செயல் துடைத்தெறியக் கூடும்.

2. தன்னை நம்பி வந்து, மதிமுகவில் 13 ஆண்டுக் காலமாக உழைத்து வரும் தொண்டர்களுக்குத் தான் ஏதாவது நல்லது செய்தே தீருவேன் என்று வைகோ, பல கூட்டங்களில் கூறியிருக்கிறார். தன் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்காக அவர் தன் வாய்ப்பையும் விட்டுக் கொடுத்திருக்கலாம். வைகோவின் நகல் என்று சொல்லப்படுகிற நாஞ்சில் சம்பத்தும் போட்டியிடவில்லை.

3. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ நாளை சட்டமன்றத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியில் உட்காரட்டும். அவர்கள் முன் ஒரு சாதாரண உறுப்பினராக வைகோ அமர்வதற்கு அவருடைய உள்மனம் தடுக்கலாம். உட்கார்ந்தால் முதல்வர் நாற்காலியில்தான் உட்காருவேன் என்று வைகோ அறிவிக்கப்படாத சபதம் எதையும் எடுத்துவிட்டிருக்கலாம்.

4. ஜெயலலிதா முதல்வரானால் அவருக்குக் கூழைக் கும்பிடு போட வைகோவால் முடியுமா? பத்திரிகையாளர் முன்பு ஒரு மணிநேரம் அப்படி இருக்கலாம். ஆனால், சட்டமன்றத்திற்குள் நாள் முழுவதும் அரசின் வீண் அரட்டைகளைக் கேட்டு, மேசையைத் தட்டும் கலாச்சாரத்திற்கு வைகோ பழகாதது ஒரு காரணமா? கருணாநிதி முதல்வரானாலும் அவர் முன்னால் வைகோ, எப்படி எதிர்வினை ஆற்றுவார்? பழைய பாசத்துடனா? அல்லது, புதிய பகையுடனா? இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க ஒரேயடியாகச் சட்டமன்றத்திற்கே போகாமல் இருக்கலாம் என்றுகூட அவர் நினைத்திருக்கலாம்.

5. அரசியல் கட்சியின் தலைமை நிர்வாகிகள், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் கட்சியினரை வழிநடத்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் மரபு தமிழ்நாட்டில் உள்ளது. ராமதாஸ்கூட அத்தகைய மரபில்தான் வருகிறார். எனவே, அத்தகைய மரபின் மேல் வைகோவின் கவனம் சென்றிருக்கலாம்.

வைகோ, போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு வைகோவே விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

=======================================
மதிமுக: வேட்பாளர் பட்டியல்
வைகோ நிற்காதது ஏன்?

No comments: