!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 'அறை எண் 305-ல் கடவுள்' திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, May 03, 2008

'அறை எண் 305-ல் கடவுள்' திரை விமர்சனம்



பெரியவர்களுக்கான காமிக்ஸ் கதை இது. சற்றே நகைச்சுவை முலாம் பூசித் தந்திருக்கிறார்கள்.

'ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தால் கடவுளே இங்கு வா' என்று அழைத்ததும் கடவுள் நிஜமாகவே நேரில் தோன்றுகிறார். ஆரம்பத்தில் சில அற்புதங்கள் செய்து தான் கடவுள் என்று நிரூபித்ததோடு சரி; பிறகு அவர் மனிதனைப் போலவே நடந்துகொள்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று உணர்த்துவதற்காக வந்த அவர், ஒரு கட்டத்தில் மனிதனால் ஏமாற்றப்படுகிறார். மேன்ஷனில் தங்குகிறார். கழிவறை கழுவுகிறார். வேர்க்கடலை விற்கிறார். தெருவில் இறங்கிச் சண்டை கூட போடுகிறார்.....

கடவுள் என்றால் பிரமாண்டம் என ஒவ்வொருவரும் கற்பனை செய்திருக்க, சிம்புதேவன், மிகச் சாதாரணமாக அந்தக் கற்பிதத்தை உடைத்துவிட்டார். 360 பாகையில் கடவுளை எப்படியும் வளைக்கலாம் என்பதை எளிமையாக, நம்பும்படியாகக் காட்சிப்படுத்திய துணிச்சலுக்காக அவரைப் பாராட்டலாம்.

திருவல்லிக்கேணி கருப்பையா மேன்ஷனில் தங்கியிருக்கும் சந்தானமும் கஞ்சா கருப்பும் நித்திய உணவுக்கே அல்லாடுகிறார்கள். வாடகை கொடுக்க வழியில்லாத ஒரு விளிம்பு நிலையில் கடவுளை அழைக்க, அவரும் (பிரகாஷ்ராஜ்) தோன்றுகிறார். சாதாரண மனிதர் போன்று அவர் இருக்கவே, நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். பிறகு அவர், மகாவிஷ்ணுவாக, ஏசுவாக, புத்தராக அவர்கள் முன் தோன்றி நம்ப வைக்கிறார். அவரிடம் ஒரு கேலக்சி பெட்டி இருக்கிறது. அதில்தான் அவரின் மொத்த சக்தியும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் அவர், பிரபஞ்சத்தை இயக்குகிறார். சந்தானம், கஞ்சா கருப்புக்குக் கடவுள் சில உதவிகள் செய்கிறார். அவர் விடைபெறும் நாளன்று, நண்பர்கள் கடவுளின் கேலக்சி பெட்டியைத் திருடி, தலைமறைவு ஆகிறார்கள்.

கேலக்சி பெட்டியைக் கைப்பற்றியதன் மூலம் நண்பர்கள் இருவரும் கடவுள் நிலையை அடைகிறார்கள். நிலாவுக்குப் போய் ஆடிப் பாடுகிறார்கள். த ங்கள் சொந்த ஊர்களுக்குப் போய், புதிய பணக்காரர்களாய் அசத்துகிறார்கள். இதற்கிடையே, கேலக்சி பெட்டியை இழந்த கடவுள், நண்பர்கள் இருந்த அதே அறை எண் 305-ல் தங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இருந்தாலும் அவர் அதை ஏற்று, உழைக்கத் தொடங்குகிறார். அறிவுரைக ளைக் கொஞ்சம் சொல்லிலும் கொஞ்சம் செயலிலும் காட்டுகிறார்.

புது அதிகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் சந்தானம், தன் காதலி மதுமிதாவைப் பெண் கேட்கிறார். அப்போதுதான் அவர், பாலியல் தொழிலாளி என்ற விவரமே தெரிய வருகிறது. இறுதியில் கேலக்சி பெட்டி, கடவுளிடம் திரும்புகிறது. நண்பர்கள் திருந்துகிறார்கள். சுபம்.

இப்படி ஒரு கதையை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்ய முடியும்? பெரிதாக முடியாவிட்டாலும் சிறிதாகச் சிலவற்றைச் செய்திருக்கிறார் சிம்புதேவன். தேநீர்க் கடையின் அடுப்பு நெருப்பே என் ஐயப்ப ஜோதி என விஎம்சி ஹனிபா கூறுவது; புத்தர் சிலையையும் அர்னால்டையும் உதா ரணம் காட்டி accept the pain என்று உணர்த்துவது; பாடிவிட்டே காசு பெறுவேன் என்று தெருச் சிறுவன் சொல்வது, மேன்ஷன்களின் நிலையை அப்பட்டமாகக் காட்டியது... எனப் பலவும் அழுத்தமான முத்திரைகள்.

சந்தானமும் கஞ்சா கருப்பும் கதாநாயகர்களாக உலவுகிறார்கள். பெரும் பிரபலங்கள்தான் கதாநாயகர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை; திறமை இருந்தால் போதும் என்று இவர்களை நம்பிய இயக்குநரும் தயாரிப்பாளரும் பாராட்டுக்கு உரியவர்கள். பிரகாஷ்ராஜ், கடவுள் என்ற வடிவத்தை எளிமைப்படுத்தி அழகாக வழங்கியுள்ளார். பாந்தமான நடிப்பு. ஆயினும் ரவுடியுடன் சண்டை போடுவதை தவிர்த்திருக்கலாம். மேன்ஷன் மேலாளராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், மேன்ஷன்வாசிகளாக வரும் ராஜேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், மதன்பாப், வி.எஸ்.ராகவன் ஆகியோரின் பாத்திரப் படைப்பு நன்று. ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்களின் சிறுவயதுப் புகைப்படங்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தியது புதுமை. தங்கள் பாத்திரத்தில் நிற்கிறார்கள். உணவகம் நடத்தும் குயிலி, ஜோதிர்மயி சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்தின் பாடல்கள் பெரும்பாலும் நன்றாகக் கேட்கும்படியாக உள்ளன. குறையொன்றுமில்லை, காதல் செய், ஆவாரம் பூவுக்கும், தென்றலுக்கு நீ ஆகிய பாடல்கள் கவர்கின்றன. இரைச்சலாக, வார்த்தையே கேட்காத விதமாக இப்போதைய இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகையில் வித்யாசாகரின் பணியும் பாணியும் ஈர்க்கின்றன.

'நான் கடவுள் என்பதை யாரிடமாவது சொன்னால் அடுத்த நொடி நான் மறைந்துவிடுவேன்' என்று கடவுள் பிரகாஷ்ராஜ், முதலில் நிபந்தனை விதிக்கிறார். ஆனால், மேன்ஷன்வாசிகள் சுற்றுலா சென்ற இடத்தில், கடவுள் சொடக்குப் போட்டு சாப்பாடு வரவழைப்பதைப் பார்க்கும் இளவரசிடம் சந்தானம் - கருப்பு நண்பர்கள் உண்மையைச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதைக் கடவுள் கண்டுகொள்ளவே இல்லை. இது, லாஜிக் ஓட்டை.

கேலக்சி பெட்டி என்ற கற்பனை பரவாயில்லை. அதை முன்னிட்டு தோன்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. ஆனால், அது ஒரு முற்றாத கற்பனை.

இம்சை அரசன் 23-ம் புலிகேசிக்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவனும் தயாரிப்பாளர் ஷங்கரும் இணைந்து தந்திருக்கும் இரண்டாவது படைப்பு. நகைச்சுவை என்பது, கதையோடு இணைந்து வருவது என்பதை இயக்குநர் புரிந்துகொண்டுள்ளார். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் நகைச்சுவையை விட, கதையம்சமே ஓங்கி நிற்கிறது.

மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற முயற்சியிலிருந்து கொஞ்சம் விலகி நின்றால், இயல்பான வாழ்விலிருந்தே இன்னும் கூட நல்ல நகைச்சுவை வெளிப்படக் கூடும். சிம்புதேவன் சிந்திக்கட்டும்.

நன்றி: தமிழ்சிஃபி

No comments: