!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சரோஜா - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 14, 2008

சரோஜா - திரை விமர்சனம்

நல்ல கதையை இயல்பாகச் சொல்லும் தன் பாணி நன்கு போணியாகக் கூடியது என்பதை இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் நிரூபித்துள்ளார். சென்னை 600028 வெற்றிக்குப் பிறகு பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அந்தப் படத்தின் பிரபல பாடலான 'சரோஜா சாமான் நிக்காலோ' பல்லவியிலிருந்தே தன் இரண்டாம் படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இயல்பு மீறிய காட்சிகளால் தமிழரின் வெள்ளித் திரை அவ்வப்போது வெளிறிக் கிடக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் திரை மொழி சற்றே வித்தியாசம் காட்டுகிறது. எளிமையான கதை, இயல்பான முகங்கள், வலுவான திரைக் கதை, இடை இடையே நகைச்சுவை எனத் தனித்துவம் காட்டுகிறார்.

ஜகபதி பாபு (எஸ்.பி.பி. சரண்), கணேஷ் குமார் (பிரேம்ஜி), அஜய் ராஜ் (சிவா), ராம் பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நண்பர்கள். கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கச் சென்னையிலிருந்து ஐதராபாத் நோக்கிப் போகிறார்கள். வழியில் வேதிப் பொருள் ஏற்றி வந்த நீள்நெடு வாகனம் சாய்ந்து கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைப்படுகிறது. ஒரு யூகத்தில் மாற்றுப் பாதையில் செல்கிறார்கள். ஆனால் வழி தவறுகிறார்கள். அதிக ஆளரவம் இல்லாத ஓர் இடத்தில் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அந்தக் கும்பல், சரோஜா என்ற பள்ளி மாணவியைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டுகிறது. சரோஜா (வேகா) 12ஆம் வகுப்பு மாணவி. மேற்கத்திய இசைப் பாடகி. கோடீஸ்வர தந்தையின் (பிரகாஷ்ராஜ்) ஒரே மகள். காவல் துறை அதிகாரி ரவிச்சந்திரன் (ஜெயராம்) கடத்தல்கார்களைக் கண்டுபிடிக்க முயல்கிறார். இதற்கிடையே காவல் துறையின் தலையீட்டை அடுத்து கடத்தல்காரன் பேரத் தொகையை ஒரு கோடியிலிருந்து இருபது கோடிக்கு ஏற்றி விடுகிறான். இந்நிலையில் அந்தக் கும்பலிடமிருந்து நண்பர்கள் நால்வரும் மீண்டார்களா? அந்த மாணவியை மீட்டார்களா? என்பதே கதை.

மொத்தக் கதையும் மூன்று நாள்களில் நடக்கும் நிகழ்ச்சிகளே. ஆங்காங்கே நாளையும் நேரத்தையும் காட்டுகிறார் இயக்குநர். பாத்திரப் படைப்பு சிறப்பாகவே இருக்கிறது. சரோஜா என்ற பாத்திரத்தில் வரும் வேகா, குறைவான காட்சிகளில் வந்தாலும் தன் இருப்பைப் பதிவு செய்து விடுகிறார். பிரேம்ஜியின் நகைச்சுவைத் திறன் பளிச்சிடுகிறது. வைபவின் கட்டுடல் அவரின் ஆளுமையைக் காட்டத் துணை புரிகிறது. எஸ்.பி.பி.சரணின் தெலுங்கு நெடிப் பேச்சும் அவரின் மனைவியாக வருபவரின் உணர்வுகளும் அருமை. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகராக வரும் சிவா இயல்பாகத் தோற்றம் அளிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகியோரின் அனுபவம், அவர்களின் நடிப்பில் வெளிப்பட்டுள்ளது.

அரங்க அமைப்புகளும் கதையின் போக்கிற்குத் துணை நிற்கின்றன. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு நன்று. படத் தொகுப்பு சிறப்பு. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது. ஆனால் நவீனம் என்ற பெயரில் பாடல்களில் இசை ஆதிக்கம் செலுத்துகிறது. பாடல் வரிகள் சரியாகப் புரியவில்லை. கோடான கோடி, நிமிர்ந்து நில் ஆகிய பாடல்கள் கொஞ்சம் தேவலாம்.

'தண்ணி' அடிக்கக்கூடிய 4 நண்பர்கள் ஒரு காரில் ஐதராபாத் கிளம்புவதும் சரணின் மனைவி, இதர நண்பர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கமல்ஹாசனின் பஞ்ச தந்திரத்தைச் சற்றே நினைவூட்டுகின்றன.

ஆளரவம் இல்லாத பகுதியில் பிச்சைக்காரர்களை உலவ விட்டுள்ளது செயற்கையாக உள்ளது. வில்லன்களை நண்பர்கள் நால்வரும் வீழ்த்தும் காட்சிகள் நம்ப முடியாதவை. கல்யாணி என்ற பாத்திரத்தில் வரும் நிகிதா, கண்ணைப் பறிக்கிறார். ஆனால், கடத்தல்காரன் சம்பத் உடனான அவரின் உறவு ஆழமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

உச்சக்கட்ட காட்சியின் திடீர் திருப்பம், எதிர்பாராதது. மர்மம், நகைச்சுவை, எதார்த்தம் ஆகிய மூன்றையும் கலந்து கொடுப்பதில் இயககுநர் வெற்றி அடைந்திருக்கிறார்.

முறையான கல்வி கற்று ஒரு சிற்பத்தைச் செதுக்குபவன், இன்னும் கூட நேர்த்தியாக ஒரு சிலையை வடித்து விடுவான். ஆனால், ஆர்வத்தின் பேரில் ஒரு கல்லைச் சிற்பமாக வடிப்பவனின் படைப்பில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவன் படைப்புக்கு அதிக மதிப்புண்டு. வெங்கட் பிரபு, இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான். அவரிடம் மேலும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.


நன்றி: தமிழ் சிஃபி

No comments: