!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காதல்னா சும்மா இல்ல - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, February 01, 2009

காதல்னா சும்மா இல்ல - திரை விமர்சனம்

சன் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக, ராஜ் தொலைக்காட்சியும் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. ராஜ் டிவி தயாரிப்பில் வந்துள்ள முதல் படம், 'காதல்னா சும்மா இல்ல'. அப்ப, காதல்னா என்னங்க? அதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் இளங்கண்ணன்.

'கம்யம்' தெலுங்குப் படத்தின் மறு உருவாக்கம், இது. ஆயினும் சிறு சிறு மாற்றங்களுடன் நேரடி தமிழ்ப் படம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மையக் கரு, வால்டர் சால்லஸின் 'மோட்டார்சைக்கிள் டைரீஸ்' என்ற படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாபெரும் புரட்சிப் போராளியான சே குவேரா ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அவரது வாழ்வின் தோற்றமே மாறியது எப்படி என்பதை அந்தப் படம் அழகாகக் காட்டியது.

'காதல்னா சும்மா இல்ல' படத்திற்கு வருவோம். பெரும் பணக்காரனான நம் கதாநாயகன், தன் காதலியைத் தேடி மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறான். அவன் வழியில் என்னவெல்லாம் காண்கிறான்; அவை அவன் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதே கதை.

அபிராம் (ஷர்வானந்த்), 500 கோடிக்குச் சொந்தக்காரரின் (நாசர்) ஒரே மகன்; பார்ட்டிகளுக்குப் போய், குடித்து, கூத்தடிப்பதே வாழ்க்கை என்று இருக்கும் இளைஞன். தற்செயலாக ஒரு நாள் அவன், மருத்துவர் ஜானகியை (கமலினி முகர்ஜி) சந்திக்கிறான். அவளோ, அநாதை இல்லத்தில் வளர்ந்தவள்; ஏழை எளிய மக்களின் மீது அன்பு செலுத்துகிறாள்; அவர்களுக்குத் தொண்டு செய்கிறாள். அபிராம், ஜானகியைக் காதலிக்கிறான்; ஆனால், அவளது சமூக சேவைப் பணிகளை ஏற்க மறுக்கிறான். இதனால் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது. ஜானகி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விடுகிறாள். அவளை எண்ணி ஏங்கும் அபிராம், அவளைத் தேடிக் கிளம்புகிறான்.

20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜப்பானிய மோட்டார் சைக்கிளில் அவளைப் பற்றி விசாரித்துக்கொண்டே செல்கிறான். வழியில் மோட்டார் சைக்கிள் திருடும் வெட்டி வேலு (ரவிகிருஷ்ணா), இவன் வண்டியைத் திருடப் பார்க்கிறான். பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி, நண்பர்கள் ஆகின்றனர். இருவரும் சேர்ந்தே ஜானகியைத் தேடிச் செல்கிறார்கள். இவர்கள் வழிநெடுக எங்கெல்லாம் சென்றார்கள்? யாரையெல்லாம் சந்தித்தார்கள்? அது அவர்களிடம் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பதை மீதிப் படம் சொல்கிறது.

மோட்டார் சைக்கிள் திருடனாக வரும் ரவிகிருஷ்ணா, துணிந்து நடித்துள்ளார். ஏற்கெனவே கதாநாயகனாக நடித்துள்ள அவர், இத்தகைய பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இமேஜ் வட்டம் எதுவும் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்; மேலும் கதாநாயகன் வேடத்தில் மட்டும்தான் நடிப்பேன் என அவர் நினைக்கவில்லை; இப்படி நகைச்சுவையான குணச்சித்திர வேடத்தையும் ஏற்பேன் எனக் காட்டியுள்ளார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி, படு அநாயாசமாக நடித்துள்ளார். அவரது இயல்பான பேச்சும் சிரிப்பைத் தூண்டும் செய்கைகளும் நன்று. அவரது குரல், அவருக்கு நன்றாகத் துணை புரிகிறது.

ரவிகிருஷ்ணாவுக்கு நேர் எதிரான பாத்திரம், ஷர்வானந்த் உடையது. மிகப் பணக்காரராக, பந்தாவாக, ஒயிலாக (ஸ்டைலாக) நடித்துள்ளார். அவரே காதலிக்காக ஊர் ஊராக அலையும் போதும் உண்மையான மனிதநேயத்தை வெளிப்படுத்தும் போதும் உருக்கத்தையும் காட்டியுள்ளார்.

கமலினி முகர்ஜி, அழகான சிரிப்பும் பளிச்சென்ற முகமுமாக வந்து மனத்தில் பதிகிறார். சேவையுள்ளம் கொண்ட மருத்துவராக அந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். கோபப்படும் போதும் அழகாகத் தோன்றுவது, சிலரால்தான் முடிகிறது. மகிழுந்தில் குழந்தைப் பிரசவம் பார்க்கும் அந்தக் காட்சி, மிக அருமை.

படத்தின் வசனம் நன்றாக இருக்கிறது. 'நீ பார்த்தது இடங்களை; உலகத்தை இல்லை' என்பது போன்ற நல்ல கருத்துள்ள வரிகள் கவனத்தைக் கவர்கின்றன.

எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை செயற்கை. படத்தில் வரும் நக்சலைட்டு காட்சிகளும் செயற்கையே. பிறகு மேடையில் துணியவிழ்க்கச் சொல்லும் அந்தக் காட்சியும். இப்படியாகப் படத்தில் செயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

வித்யாசாகர், மணிசர்மா, ஈ.எஸ்.மூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்தும் பாடல்கள் சுமார்தான். நிறைய தெலுங்கு வாசனை அடிக்கிறது. தமிழுக்கான தனிக் கவனிப்பு இல்லை. 'என்னமோ செய்தாய் நீ' என்ற பாடல், கொஞ்சம் கேட்கும்படியாக உள்ளது.

ஆயினும் கதையின் மீதும் நடிகர்களின் திறமை மீதும் நம்பிக்கை வைத்துப் படத்தை இயக்குநர் நகர்த்தியுள்ளார். தன் திரைக் கலையை மேலும் கூர்தீட்டினால், எதிர்காலத்தில் அவர் மின்னுவார்.

நன்றி: தமிழ் சிஃபி

No comments: