!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 27, 2009

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்

சென்னை வானொலியின் வழக்கமான நிகழ்ச்சிகளுள் ஒன்று, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள். காணாமல் போனவரின் பெயர், நிறம், உயரம், அடையாளங்கள், தெரிந்த மொழிகள், காணாமல் போன அன்று உடுத்தியிருந்த ஆடை, மனநிலை சரியில்லாதவர் போன்ற குறிப்புகள், தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஆகிய விவரங்களே இவற்றில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும்.

இந்த அறிவிப்புகளைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு ஓர் ஐயம் தோன்றும். வானொலியில் காணாமல் போனவரின் விவரங்களைக் கேட்டு ஒருவரை எப்படி கண்டுபிடிக்க முடியும்? அவர்கள் தெரிவிக்கும் விவரங்களுக்குப் பொருந்துவது போல் லட்சக் கணக்கானவர்கள் இருக்க முடியுமே!

மாநிறம் என்று சொல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். மாநிறத்திலேயே எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்குமே. இடது தோளில், வலது தொடையில், முதுகில் ஒரு மச்சம் இருக்கும் எனக் கூறினால், முதலில் அந்த மாதிரி எவ்வளவோ பேருக்கு இருக்க முடியும். இரண்டாவது அவர் ஒழுங்காக ஆடை உடுத்தியிருந்தால் இந்த அடையாளங்கள் வெளியிலும் தெரிய வாய்ப்பில்லை. அடுத்து, காணாமல் போன அன்று உடுத்தியிருந்த உடையைப் பற்றிய குறிப்பு. காணாமல் போன பிறகு சுமார் ஒரு வாரம் கழித்தே இந்த அறிவிப்பு வருகிறது எனில் இவ்வளவு நாளாக ஒரே ஆடையையா உடுத்தியிருப்பார்?

இந்த நிகழ்ச்சியினால், எங்கேனும் ஒருவராவது கண்டுபிடிக்கப்பட்டாரா? கண்டுபிடிக்க முடியுமா? இந்த அறிவிப்பே ஒரு சடங்காகிவிட்டதோ என்பது என் ஐயம்.

இந்தச் சூழ்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன், வெரித்தாஸ் வானொலியில் ஜெகத் கஸ்பார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுகூர்வது பொருந்தும். ஈழக் கலவரங்களுக்குப் பிறகு வெவ்வேறு நாடுகளுக்கு ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகச் சிதறிய காலத்தில் வானொலியில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. நாடுகள் தாண்டி ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சியின் மூலம் தம் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என அறிந்து உறவுகள் பல இணைந்தன எனப் படித்துள்ளேன்.

இந்த உத்தியின்படி காணாமல் போனவரின் குடும்பத்தினரையே பேச வைத்து, 'உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.. வந்துவிடுங்கள்' என்பது போல் பேசலாம். மன நிலை சரியில்லாதவர் என்றால், அவரைப் பற்றிய விவரங்களை நுணுக்கமாகச் சொல்லிவிட்டு, 'இவரை எங்காவது கண்டால் சொல்லுங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கலாம். காணாமல் போனவரின் நெருங்கிய உறவினரே அவரின் வாய்மொழியாகப் பேசினால் அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இன்னும் ஒரு படி மேலாக, காணாமல் போனவரின் குரல் பதிவு ஏதும் இருந்தால் அதையும் ஒலிக்கச் செய்து, இந்தக் குரலுடையவரை எங்காவது கண்டால் சொல்லுங்கள் என்றும் கூறலாம். இப்படியெல்லாம் செய்தால் வானொலி வழியாகவும் ஒருவரைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் கூடும்.

தொலைக்காட்சியிலும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள் ஒளிபரப்பாகின்றன. இவையும் ஒரு சடங்காகத்தான் பெரும்பாலும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில நொடிகள் அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். இதைக் காட்டிலும் இந்த விவரங்களை ஒரே நாளில் பல முறைகள் காட்டி, அந்த உருவத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க முயலலாம். மேலும் தொலைக்காட்சிகளில் புகைப்படத்தை மட்டும்தான் காட்ட வேண்டும் என்றில்லை; அவரின் சலன(வீடியோ)ப் படத்தையும் காட்டலாம். இப்படிச் செய்தால் இந்த முயற்சிக்கு நல்ல பயன் கிட்டும்.

அடுத்து, நாளிதழ்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் புகைப்படத்துடன் வெளியாகின்றன. இவை, ஓரளவுக்கு பார்ப்பவர்கள் மனத்தில் பதியவைக்க உதவுகின்றன. இதே போன்று பேருந்து, தொடர் வண்டிகளிலும் சுரங்கப் பாதைகளிலும் சிலர் துண்டறிக்கைகளாக ஒட்டி வைக்கிறார்கள். இவற்றுக்கு நிச்சயம் பயன் உண்டு.

சுவரொட்டிகளாலும் பயன் உண்டு. ஆனால், இந்த உத்தியைப் பெரும்பாலும் காவல் துறையினரே பயன்படுத்துகிறார்கள். இந்தக் குற்றவாளியைக் காணவில்லை எனச் சுவரொட்டிகள் ஒட்டுகிறார்கள். பொதுமக்களுள் பலரும் இதைப் பெரிதாகப் பயன்படுத்தவில்லை.

தகவல் தொடர்பு வசதி பெருகாத காலத்தில் வானொலி, தொலைக்காட்சிகள் இயங்கிய விதம் வேறு. ஆனால், தகவல் தொடர்பு அபரிமிதமாகப் பெருகிவரும் இந்தக் காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள் பல மடங்குகள் மேம்படுத்தப்பட வேண்டும். தொலைக்காட்சி, வானொலியைப் பொறுத்த மட்டிலும் அரசு சார்ந்த ஊடகங்கள் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே, இப்போது இவற்றை மேம்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பிரசார் பாரதி வசமே உள்ளது.

தனியார் ஊடகங்களும் இது தங்களுக்குத் தொடர்பு இல்லாத விடயம் என்பது போல் இயங்கத் தேவையில்லை. பிரமுகர்கள் யாரேனும் காணாமல் போனால், அந்தச் செய்திகளைப் படங்களோடும் சலனப் படங்களோடும் பரபரப்பான செய்தியாக வெளியிடுவோர், பொதுமக்களுள் யாரும் காணாமல் போனாலும் அவர்களைக் கண்டுபிடிக்கச் சிறிதளவாவது உதவலாம். இதற்குக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். ஒருவர் காணாமல் போனார் என்பதை வழக்காகப் பதிந்த பிறகே அது பற்றிய அறிவிப்புகளை அவர்கள் வெளியிடுகிறார்கள். இந்த அறிவிப்புகளை அரசு சார் ஊடகங்களுக்கு மட்டும் அளிக்காமல் அனைத்து ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் அளித்தால், பெருமளவு மக்களை இந்தச் செய்திகள் எட்டுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இன்னொன்று, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டவர்கள் விவரங்கள் பெரும்பாலும் வருவதில்லை. ஏன் இந்த ஒரு வழிப் பாதை?!

=========================================
நன்றி: சென்னை ஆன்லைன்

No comments: