!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தொல்காப்பியம் புதுமையும் மரபும் - 10 நாள் பயிலரங்கு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, February 21, 2010

தொல்காப்பியம் புதுமையும் மரபும் - 10 நாள் பயிலரங்கு

'தொல்காப்பியம் புதுமையும் மரபும்' என்ற தலைப்பிலான 10 நாள் பயிலரங்கு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இதை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்வுகள் நிகழ்கின்றன.

2010 பிப்ரவரி 15 அன்று தொடங்கிய இந்தப் பயிலரங்கு, 24 வரை நடைபெறுகிறது. இதில் முனைவர்கள் இலட்சுமி நாராயணன், சூ.இன்னாசி, சுதந்திரமுத்து, மைக்கேல் பாரடே, இரகுராமன், சோ.ந.கந்தசாமி, க.முருகையன், முருகரத்தினம், செ.வை.சண்முகம், மருதநாயகம், சந்திரா, ஆறு.அழகப்பன், வீ.அரசு, க.அழகேசன், இரா.இராஜேந்திரன், கி.அரங்கன், ஜே.ஆர்.லட்சுமி, இரா.குமரவேலன், வ.ஜெயதேவன், பொ.நா.கமலா, இரா.மாயாண்டி, பரமசிவம், சா.வளவன், இராஜாராம், இராம குருநாதன், ந.தெய்வசுந்தரம், இரா.கோதண்டராமன், ச.குருசாமி, ய.மணிகண்டன், ஆரோக்கியநாதன் ஆகியோர் தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விரிவுரை ஆற்றுகிறார்கள்.

இந்தப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகப் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் பணியாற்றுகிறார். தமிழக அமைச்சர்களும் அறிஞர்களும் பயிலரங்கின் தொடக்க விழாவிலும் பங்கேற்றனர்; நிறைவு விழாவிலும் பங்கேற்க உள்ளனர்.

20.2.2010 அன்று மாலை நான் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றேன். ஜே.ஆர்.இலட்சுமியின் 'பவர் பாய்ன்ட்' வடிவிலான உரையினைக் கேட்டேன். தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டி, இக்கால வழக்கில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டினார். இறுதியி்ல் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில், 'நடத்தினான் என்பதே சரி; நடாத்தினான் என்பது தவறு' என்ற அவரின் கூற்று குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். இது தம் கருத்து மட்டுமில்லை; அறிஞர்கள் பலரின் கருத்தினை ஒட்டியே தாம் இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்தார். 'நடாத்தி' என்ற சொல்லைக் கூகுளில் தேடினேன். 78 ஆயிரம் முடிவுகள் கிட்டின. இவ்வாறு கூறிட, தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறதா என்பது ஆய்வுக்கு உரியது.

பல்வேறு கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலிருந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பலரும் அரங்கு முழுதும் நிறைந்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் குமுதம் அலுவலகத்திலிருந்து வந்திருந்த ஒருவர், தீராநதி இதழின் சில பிரதிகளை, மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.

No comments: