!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, April 14, 2008

நேபாளி திரை விமர்சனம்



விக்ரமுக்கு அந்நியன் கிடைத்தது போல், பரத்துக்கு நேபாளி கிடைத்திருக்கிறது. மூன்று விதமான தோற்றங்களில் பரத். பாலியல் துன்புறுத்தலில்
ஈடுபடும் தீயவர்களைத் தேடிச் சென்று, வித்தியாசமாக, புத்திசாலித்தனமாகக் கொல்லும் ஒருவனின் கதையே நேபாளி. அவரது நடிப்புக்கு நல்ல தீனி
கொடுத்திருக்கிறது கதை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் கார்த்திக் என்ற பாத்திரத்தில் பரத். ஒயிலாக முகத்தில் வந்து விழும் வண்ண முடியும் ரோசா நிற
இதழ்களும் நேர்த்தியான உடைகளும் அழகான சிரிப்புமாக பரத், வசீகரிக்கிறார். இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருவார். அவருக்கு
ஏற்ற அழகிய இணையாக மீரா ஜாஸ்மின். இருவருடைய ஜோடிப் பொருத்தம் மிக அருமை. இருவரும் முதலில் சந்திக்கும் காட்சியிலிருந்து,
காதலிக்கத் தொடங்கி, வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து, நவ நாகரீக மாளிகையில் உல்லாசமாகக் களியாட்டம் போடுவது... எனப் பார்க்கப் பார்க்கச் சலிக்காத காட்சிகள்.

பரத் - மீரா இணையிடம் ஒரு விசாரணைக்காக வரும் அப்பகுதி காவல் துறை உதவி ஆய்வாளர் (ராஜா ரவீந்தர்), மீரா மீது கண் வைக்கிறார். பரத்
இல்லாத நேரத்தில் தனித்திருக்கும் மீராவிடம் அத்துமீறுகிறார். 'பரத்தை அடித்துப் போட்டு வந்திருக்கிறேன். அவன் வேண்டுமானால் என்னோடு படு'
என்று காவல் அதிகாரி, மீராவை மிரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பிக்க மீரா, தன்னை மாய்த்துக்கொள்கிறாள். மீராவைக் கொன்ற பழி, பரத் மீது
விழுகிறது.

கார் டிக்கியில் அடைக்கப்பட்டிருந்த பரத், இரண்டு நாள் கழித்து வந்து, காவல் அதிகாரியைக் கொடூரமாகக் கொல்கிறார். அதற்காக 6 ஆண்டு
சிறை வாசம். அங்கு பல முறைகள் பரத் தற்கொலைக்கு முயல்கிறார். பரத்துக்கு அடுத்த அறையில் ஒரு நேபாளி (கோவிந்த் நாம்தேவ்)
அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு சமயம் பரத்தும் அந்த நேபாளியும் ஒரே அறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில் பரத்தின் முதுகில்
எழுதியே தான் சேகரித்த எல்லாச் செய்திகளையும் சொல்லிவிடுகிறார் நேபாளி. பிறகு அந்த நேபாளி கொல்லப்படுகிறார்.

சிறையிலிருந்து வெளிவந்த பரத், நேபாளியாக அவதாரம் எடுக்கிறார். சங்கரபாண்டி ஸ்டோ ர்ஸில் மூன்று சக்கர மிதிவண்டியில் பொருள்களை
வீட்டுக்கு வீடு கொண்டு சென்று போடும் நேபாளி ஆகிறார். மென்பொருள் பொறியாளர், பேராசிரியர், தொழிலதிபர், மருத்துவர் என அடுத்தடுத்து
ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளுகிறார். அதுவும் காவல் துறைக்கு முன்னதாகவே புகைப்படத்துடன் தகவல் கொடுத்துவிட்டு வந்து, சொன்ன
நேரத்தில் கன கச்சிதமாகச் சாகடிக்கிறார். அவருடைய கோணலான புருவமும் உடைந்த தமிழும் காலை அகட்டிய நடையும் அவரது பாத்திரத்தை வித்தியாசமாகக் காட்டுகின்றன.

ஒவ்வொருவரைக் கொன்றதும் அவருக்கு மரணம் எப்படி நேர்கிறது என்று நேபாளியின் குரல், கிராஃபிக்சுடன் ஒலிக்கிறது. கொலையாளியைக்
கண்டுபிடிக்கும் காவல் துறை உதவி ஆணையர் வேடத்தில் பிரேம். ஒவ்வொரு தடயமாகக் கண்டுபிடித்து, நேபாளியை நெருங்குகிறது பிரேமின் குழு.
இறுதியில் நேபாளி பிடிபட்டாரா? என்பதை வெள்ளித் திரையில் காணலாம்.

சிறையில் அசல் நேபாளியைச் சிறை அதிகாரி (சேரன் ராஜ்), மிரட்டும் போது அடிக்கடி கன்னையா என்பவருடன் தொலைபேசியில் பேசுகிறார்.
ஆனால், அந்தக் கன்னையா யார் என்பதைக் கடைசி வரை காட்டவே இல்லை. பரத்தின் பின்னணி, அப்பா- அம்மா பற்றிக் கதையில் எந்த
விவரமும் இல்லை.

பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. மதியின் ஒளிப்பதிவு மிக அருமை. அரங்க அமைப்பும் சிறப்பு. கலை இயக்குநர்
செல்வகுமாரைப் பாராட்டலாம். பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், அழகாகப் பொருந்தி இருக்கிறது. ஒவ்வொரு கொலையாக நடந்துகொண்டே இருக்க, என்ன காரணத்திற்காக நேபாளி அவர்களைக் கொல்கிறார் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மர்ம முடிச்சை நீட்டிச் சென்றதில் இயக்குநர் வி.இசெட். துரை வெற்றி பெற்றுள்ளார். படத்தின் இறுதிக் காட்சி, ஒரு கவிதையைப் போல் அமைந்துள்ளது.

இப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்று காட்டுவது போல் ஒவ்வொரு படமாக வந்துகொண்டே இருக்கிறதே என்ற கவலை ஒரு புறம்
தோன்றுகிறது. ஆயினும் தீமை செய்பவர் தண்டிக்கப்படுவார் என்ற நீதியை ஒவ்வொரு படமும் காட்டுவதால் ஓரளவு சமாதானம் அடையலாம்.

தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் கதை, நமக்குப் பழசுதான்; ஆனால், புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தி இருப்பதால் பாராட்டலாம்.

நன்றி: தமிழ்சிஃபி