!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வெயில் - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 31, 2006

வெயில் - திரை விமர்சனம்



தன் உதவியாளரை இயக்குநராக உயர்த்தி, இந்தக் கதையைப் படமாக்கப் பண முதலீடு செய்ய முன்வந்த தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கருக்கு முதல் பாராட்டு. சதையை நம்பாமல் கதையை நம்பி, தன் இரண்டாவது (முதல்)
படமே முத்திரைப் படமாகும் அளவுக்கு உழைத்துள்ள இயக்குநர் வசந்தபாலனுக்கு அடுத்த பாராட்டு. முருகேசன் என்ற பாத்திரத்தை நம் கண்முன் எழச்செய்து, மனத்திற்குள் இடம் பிடிக்க வைத்த நடிகர் பசுபதிக்கு அழுத்தமான பாராட்டு. தரமான படம் என்று ஆணித் தரமாகச் சொல்ல வைத்திருக்கிறார்கள். படக் குழுவினர் அனைவரையும் பாராட்ட வேண்டும்.

வெக்கை மிகுந்த விருதுநகரின் புழுதி பறக்கும் நிலப் பரப்பு; வறுமையும் துன்பங்களும் நிறைந்த மக்கள்; கிராமிய மணம் கமழும் ஊர். அங்கு கசாப்புக் கடைக்காரர் ஜி.எம். குமாருக்கு மகன்கள் இருவர்; மகள்கள் இருவர். மூத்தவன், முருகேசனாகப் பசுபதி. இளையவன் கதிராகப் பரத். பள்ளிக்கூட நேரத்தில் திரையரங்கிற்குள் அமர்ந்து புகை பிடித்தபடி படம் பார்க்கும் மூத்த மகனை இழுத்து வருகிறார் அப்பா. அவனை அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி, கால்களைக் கட்டிப் போட்டு, நாள் முழுதும் வெயிலில் கிடக்க வேண்டும் என்று தண்டிக்கிறார் அப்பா. அவமானம் பிடுங்கித் தின்ன, அன்று இரவே முருகேசன், வீட்டிலிருந்து பணம், நகைகளைத் திருடிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிடுகிறான்.

பல துன்பங்களை அனுபவித்த அவன், ஒரு திரையரங்கில் தஞ்சம் அடைகிறான். படிப்படியாக அங்கேயே வளர்ந்து, படம் ஓட்டும் வேலையைச் செய்கிறான். அந்தத் திரையரங்கிற்கு எதிரே இருக்கும் சிற்றுண்டிச் சாலையில் தங்கம் என்ற அழகிய பெண் இருக்கிறாள். அவளுக்கும் பசுபதிக்கும் காதல். ஆனால், துரதிருஷ்டம் துரத்துகிறது. அவன் காதலி, அவன் கண் எதிரேயே கழுத்தை அறுத்துக்கொண்டு மரிக்கிறாள்.

பிறகு ஊர் திரும்பும் அவனை அவன் அப்பா, திருடன் என்று கூறி விரட்டுகிறார். பிறகு தம்பியின் வற்புறுத்தலுக்காக வீடு திரும்புகிறான். வீட்டில் யாரும் அவனுடன் ஒட்டவில்லை. அவன் இளவயது சிநேகிதி பாண்டி (ஷ்ரேயா ரெட்டி) மட்டும் அவனைப் புரிந்துகொண்டு ஆதரிக்கிறாள். இதற்குள் வீட்டிலிருந்த நகைகளைத் திருடியதாக அடுத்த திருட்டுப் பட்டம், அவனுக்குக் கிடைக்கிறது.



இன்னொரு புறம், விளம்பர நிறுவனம் தொடங்கிய தம்பி பரத், சக்கைப் போடு போடுகிறான். வெற்றி மேல் வெற்றி. அவனுக்கும் மீனாட்சி (பாவனா) என்ற பெண்ணுக்கும் காதல் அரும்புகிறது. தொழில் போட்டி காரணமாகப் பகையும் வளர்கிறது. இறுதியில் தம்பியைக் கொல்ல வந்த படையைத் தனி ஆளாக அழித்து, ஒரு தியாகியாக நிமிர்ந்து நிற்கிறான் அண்ணன் பசுபதி.

தொடர்ந்து அடுக்கடுக்காகத் துன்பங்களையே அனுபவித்து வரும் பசுபதியின் முடிவு, மனத்தைப் பாரமாக்கக் கூடியது. அவனைத் தன் மகனே இல்லை என்று கூறிய அவன் அப்பா, இறுதியில் 'என் குடும்பத்தைக் காத்த குல தெய்வம்' என்று அவன் பாதத்தைப் பிடித்து அழுகிறார். இருக்கும் போது ஏறெடுத்தும் பார்க்காத உலகம், செத்த பிறகு சீராட்டுகிறது.

இந்தப் படத்தில் பசுபதி ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்திருக்கிறார். மென்மையான காதல் உணர்வானாலும் துயரத்தில் நீந்தி மூழ்குவதானாலும் அவமானத்தில் கூனிக் குறுகுவதானாலும் கோபத்தில் பொங்குவதானாலும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். 20 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பும் அவர், கசங்கிய அழுக்குச் சட்டையுடன், தேய்ந்த ரப்பர் செருப்புடன் நகரப் பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே இறங்கும் அந்த ஒரு காட்சியே அவரின் வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது. குணச்சித்திர நடிப்புக்குப் பசுபதி எனப் பெயர் எடுத்துவிட்டார். இந்தப் படத்தின் கதாநாயகன் அவர்தான்.

பரத்தின் வாழ்க்கை, கதையில் இணைகோடாக வருகிறது. விளம்பரத் தொழில் என்ற புதிய களத்தில் அவர் அடையும் வளர்ச்சி, சுவையாகக் காட்டப்பட்டுள்ளது. சிறிதளவே எனினும் பாவனாவின் முகமும் நடிப்பும் பளீரென உள்ளது. தங்கம் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள மலையாள இறக்குமதி பிரியங்கா, தன் பெரிய கண்களின் மூலம் மனத்தைக் கொள்ளை கொள்கிறார்.



ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் குமார் என்ற இளம் இசையமைப்பாளர், வெயில் மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறார். 'உருகுதே மருகுதே' என்ற பாடல், உண்மையிலேயே உருக வைக்கிறது. 'வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி' என்ற பாடல், சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நா.முத்துக்குமாரின் பாடல்களில் மண் மணம் கமழ்கிறது.

மதியின் ஒளிப்பதிவு, வீரசமரின் கலை, சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஆகியவை படத்திற்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

பசுபதியின் கோணத்தில் படத்தின் கதை சொல்லப்படுகிறது. சிறு வயதில் ஓடிப் போன பசுபதி, வளர்ந்து 20 ஆண்டுகள் கழிந்த பிறகே ஊருக்குத் திரும்புகிறான். அது வரை ஊரில் நடந்த எதுவும் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், தன் கதை மட்டுமல்லாமல் தன் தம்பி வளர்ந்த கதையையும் பசுபதி சொல்வது எப்படி? இந்த இடத்தில் லாஜிக் இடித்தாலும் பெரும்பாலும் படம், இயல்பான கதையோட்டத்துடனேயே உள்ளது.

இந்தப் படம், ஓர் உண்மைக் கதையின் திரை வடிவம். "என் வாழ்க்கையைத்தான் 'வெயில்' கதையாக்கினேன். நான் கண்ணீரில் கரைந்ததை, காட்சிகளாக்கியிருக்கிறேன். நான் பிறந்து வெயிலில் விளையாடி, புரண்டு வளர்ந்த விருதுநகரில் படமாக்கியிருக்கிறேன். பசுபதியின் மீசை என் பிரமு சித்தப்பாவின் மீசை. தீப்பெட்டி ஒட்டும் ஷ்ரேயா, என் தேவிகா அத்தை. பரத்தின் விளம்பரக் கம்பெனி என் நண்பன் வரதராஜனுடையது. 'செத்தவடம் செத்துப் போனேன்' நான்தான்... இப்படி நிஜங்கள் வெயிலில் உலவுகின்றன" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் இயக்குநர் ஜி. வசந்தபாலன்.

ஓர் உண்மைக் கதையை இவ்வளவு நேர்த்தியாகப் படமாக்க முடிந்திருப்பது, வசந்தபாலனின் திரை ஆளுமையைக் காட்டுகிறது. இந்த உண்மையை நேரடியாக அனுபவித்துத் தாங்கியது, அவரின் மன ஆளுமையைக் காட்டுகிறது. விருதுகள் நிச்சயம்.

இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்; குறிப்பாகக் குழந்தைகளை அடிப்பவர்கள்.

நன்றி: தமிழ்சிஃபி

4 comments:

Anonymous said...

Very Good Review

அமர்நாத் said...

Hi,

Very good review.


/* தன் முதல் படமே முத்திரைப் படமாகும் அளவுக்கு உழைத்துள்ள இயக்குநர் வசந்தபாலனுக்கு அடுத்த பாராட்டு */

His first movie is "ALBUM"

முனைவர் அண்ணாகண்ணன் said...

பிழையைத் திருத்தியுள்ளேன். சுட்டியமைக்கு நன்றி.

Anonymous said...

I am aasath

I need such answers from your review:
What is the ethic told by you ....

Which social impact declined by this movie ....

If anybody describe his real story, why we appreciate ... is it the required scale ....

Do you see the another face of VNR (Feudal-depression on Dalits ...)