!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 05, 2005

ஏபிசிடி - திரை விமர்சனம்

ஆனந்த்(ஏ), பாரதி(பி), சந்திரா(சி), திவ்யா டெய்சி(டி) இந்த நால்வரின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துகளை வைத்தே படத்திற்குத் தலைப்பு இட்டுள்ளார்கள். இந்த நாலு பேரையும் தனித்தனியே அறிமுகப்படுத்தி, இவர்கள் நால்வரும் சந்திக்கப் போகிறார்கள் என வித்தியாசமாகப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ஷரவண சுப்பையா.

கதாநாயகன் ஆனந்த்தாக ஷாம் நடித்துள்ளார். இவரை பிற மூன்று பெண்களும் காதலிக்கிறார்கள். இவர்களுள் யாருடைய காதலை ஷாம் ஏற்றுக்கொள்கிறார் என்பதே கதை. இதை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வேலை தேடும் இளைஞன், ஷாம். இவர், பேருந்தில் ஏறும்போது தன் சான்றிதழ்களை பாரதியிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொல்கிறார். இடையில் அந்தச் சான்றிதழ்களோடு பாரதி(நந்தனா குமார்) இறங்கிச் சென்றுவிட, அவரைத் தேடி இவர் அலைந்து, ஒரு வழியாகக் கண்டுபிடித்து... அவர்களுக்குள் தொடர்பு ஏற்படுகிறது.

ஷாம் தெருவில் நடந்து செல்லும்போது அவர் எதிரில் திவ்யா டெய்சி(அபர்ணா), ஒரு விபத்தில் அடிபட்டு விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து, அவர் அறுவை சிகிச்சைக்காக உறவினரின் கையொப்பத்தை ஷாம் இடுகிறார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு தொடங்குகிறது.

அடுத்தவர் சந்திரா(சினேகா). ஷாம் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள். கொடுமைப்படுத்தும் கணவனை எதிர்த்து, வெள்ளைச் சேலையோடு தனியாக இருக்கிறார். கணவன் இறந்ததும் வண்ணச் சேலையோடு தன் பெற்றோரிடம் வந்து சேர்கிறார். அங்கு மாடியில் இருக்கும் ஷாமுடன் பழக்கம் ஏற்படுகிறது.

நாளடைவில் மூவரும் ஆனந்த்தை விரும்பத் தொடங்கிவிடுகிறார்கள். இதில் ஒவ்வொரு பாத்திரமும் நன்றாக படைக்கப்பட்டுள்ளது. பத்தாம்பசலியான பெண்களாக இல்லாமல் மூவரும் வெவ்வேறு கோணங்களில் புதுமைப் பெண்களாக இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பேசும் வசனங்களே சான்று.

வரதட்சிணையை எதிர்த்து வீரம் பொங்கப் பேசுகிறார், பாரதி. தேவாலயத்தில் தன் இடுப்பைக் கிள்ளியவனின் கன்னத்தில் அறைகிறார், திவ்யா டெய்சி. சந்திராவோ, கொடிய கணவன் இருக்கும்போது வெள்ளைச் சேலையும் இறந்த பிறகு வண்ணச் சேலையும் கட்டுகிறார்.

ஷாமுடன் இவர்களின் உறவு, காதலாக மலருவதை இயக்குநர் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஷாம், இவர்களைத் தோழமையுடன், கண்ணியத்துடன் அணுகிப் பழகுவதையும் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார். படத்தின் தேவைக்காகக் கனவுக் காட்சியில் அவர்களை டூயட் பாடவைக்கவும் இயக்குநர் தவறவில்லை. நீச்சல் அடித்தபடி காதல் செய்யும் அந்த 'மிக்சிங்' காட்சிகள் புதுமையாக உள்ளன.

ஷாமின் நடிப்பு, மிகவும் சிறப்பாக உள்ளது. அமைதியாக, பெரிதாக உணர்ச்சிவசப்படாமல், வார்த்தைகளைப் பக்குவத்தோடு உச்சரித்து கவர்ந்திருக்கிறார். அவருடைய உடல்மொழியும் அவருக்குத் துணை சேர்த்திருக்கிறது.

வடிவேலுவின் நகைச்சுவை டிராக், படத்திலிருந்து பெரும்பாலும் தனியே பிரிந்துள்ளது. என்றாலும் ஓரிரு காட்சிகளில் பாரதியுடன் அவர் பேசுவது போல் காட்டி, அவரையும் படத்தில் ஒரு பகுதியாக்கியுள்ளனர்.

படத்தின் மிகப் பெரிய குறைபாடு, அதன் இசைதான். டி. இமான், மிகவும் முயற்சி செய்தால் நல்ல பாடகராக வரலாம். ஆனால், பாடல் காட்சிகளிலும் பின்னணி இசையிலும் அவர் டமால் டமால் என பெருத்த ஓசையுடன் எழுப்புவதற்கு இசை என்றா பெயர்? இடையிடையே கதைக்கேற்ற பாடல்களை செருகியுள்ளதும் சிறப்பாக இல்லை. எல்லாப் பாடல்களையும் இமானே பாடவேண்டுமா? அவற்றையும் இப்படி உச்சகட்டையிலா பாடவேண்டும்? மஞ்சள் முகமே, மங்கள விளக்கே பாடல், கொஞ்சம் மென்மையாக உள்ளது.

ஆயினும் கதைக்காகவும் நடிகர்களின் இயல்பான நடிப்புக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆங்கிலத் தலைப்புகளில் பெயர் வைக்கக்கூடாது என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வரும் வேளையில் ஏபிசிடி என்று பெயர் வைத்துள்ளார்கள். தமிழ்ப் பெயர்களின் முதல் எழுத்துகளை எடுத்து அ, ஆ, இ, ஈ(அமுதா, ஆனந்தி, இனியா, ஈசன் என்ற ஈஸ்வரன்) எனக் கூட பெயர் வைக்கலாமே. அ(ன்பே)ஆ(ருயிரே) என ஏற்கனவே ஒரு படம் அதற்குள் வந்துவிட்டது.

ஆயினும் இயல்பாகக் காதல் மலருவதைச் சிறப்பாகக் காட்டியுள்ளார்கள். வசனங்களும் யதார்த்தமாக உள்ளன. ஷாமின் நடிப்பில் நல்ல மெருகு ஏறியிருக்கிறது.

இது, வெற்றிப் படமாகும் வாய்ப்பு உண்டு.


நன்றி: தமிழ்சிஃபி

No comments: