!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> விபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 11, 2009

விபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி


ஒரு பொருளை வாங்கும்போது அல்லது சேவையைப் பெறும்போது நாம் செலுத்திய தொகையில் ஒரு பகுதியை நமக்கே திரும்பத் தருகிறார்கள். விபேகேஷ் (http://www.vpaycash.com) இணையதளத்தில்தான் இந்தப் புதுமை. இந்த மொத்த திட்டமும் இணையம் வழி பணம் செலுத்திப் பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு கமிஷன் தொகையைத் திருப்பி அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது.

2007இல் இணையம் வழி வர்த்தகம், ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிகழ்ந்துள்ளது. இதில் போக்குவரத்துக்கு மட்டும் ரூ. 7,040 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள தொகை, இதர வகைகளில் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையைப் பொறுத்த அளவில் 6% மதிப்பிலான பணத்தை கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் விபேகேஷ் (Vpaycash) மூலம் இந்த வர்த்தகம் நடைபெற்றால் ரூ.422.4 கோடி ரூபாய்களை வாடிக்கையாளரால் திரும்பப் பெற முடியும். இதர துறைகளில் சராசரியாக 10% மதிப்பிலான பணத்தைக் கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் ரூ.300 கோடியைத் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.700 கோடிக்கும் மேலான தொகையைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது.

விபேகேஷ் (Vpaycash) இணையதளம், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள நிறுவனங்களை முதலில் தம் தளத்தில் சேர்த்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 300 இணைய வழி வர்த்தக நிறுவனங்கள், விபேகேஷின் பட்டியலில் உள்ளன. ரீடிஃப் ஷாப்பிங், ஜெட் ஏர்வேஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், யாத்ரா, மேக் மை டிரிப், சூரத் டையமண்ட்ஸ், இந்தியா டைம்ஸ், 10பைசா.காம், A1Books India, Travelocity, Travelguru, Bharti Airtel Ltd, Cleartrip, ICICI Lombard Motor Insurance, Indiavarta.com, Kotak Mahindra Bank Ltd, Monginis Foods Private Limited, Monster India, Tata Sky, yourbillbuddy.com, Big Flix, TopperLearning உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை விபேகேஷ் மூலம் பெறலாம். மேலும் பலரையும் இணைக்க முயன்று வரும் விபேகேஷ் (Vpaycash), 2009, ஜூன் 27 அன்று தன் சேவையைத் தொடங்கியது.

விபேகேஷ், வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணத்தைத் திரும்பத் தருகிறது?

இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு விபேகேஷ் (Vpaycash) மூலம், வாடிக்கையாளரின் வரத்து அதிகரிக்கும். இந்த வாடிக்கையாளர் வரத்துக்காக வர்த்தக நிறுவனங்கள் கமிஷன் தொகை அளிக்கும். அந்த கமிஷன் தொகை முழுவதையும் (100%) விபேகேஷ் (Vpaycash), வாடிக்கையாளருக்கே திருப்பி அளித்துவிடும்.

இந்தக் கமிஷன் தொகையை ஈட்ட, வாடிக்கையாளர் விபேகேஷ் (http://www.vpaycash.com) இணையதளத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். அதன் பிறகு இணையதளத்தில் அவர் பெயரில் உள்நுழைந்து அங்கு பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயரைச் சொடுக்கி, பொருளை / சேவையைப் பெற வேண்டும். விபேகேஷ் (Vpaycash) இணையதளத்தில் உறுப்பினராகச் சேருவதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.

ஆண்டிற்கு ஒரு முறை விபேகேஷ் (Vpaycash) ரூ.499/- மட்டும் சேவைக் கட்டணமாக, வாடிக்கையாளர் சம்பாதித்த தொகையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. மீதித் தொகையை அவரது வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில், ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கும் NEFT Transfer மூலம் அல்லது காசோலை அல்லது Paypal, இதில் வாடிக்கையாளர் எந்த வகையை விரும்புகிறாரோ அந்த வகையில் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர் ஆண்டு முழுவதும் எந்தத் தொகையையுமே இணையதள வழியாகச் சம்பாதிக்கவில்லை என்றால் அவர் விபேகேஷூக்கு (Vpaycash) எந்த வகையிலுமே பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த வசதியின் காரணமாக, வருவாய் ஈட்டினால் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். விபேகேஷ் (Vpaycash), தனக்கு வரும் 100% கமிஷன் தொகையையும் வாடிக்கையாளருக்கே திருப்பி அளிக்கிறது. இதில் பணம் ஈட்டக்கூடிய மறைமுக வருவாய் வாய்ப்பு ஏதும் இல்லை என்பதால் தான் இந்தச் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார் இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந. சங்கர்.

இணைய வாசி ந. சங்கர், இலண்டனில் வசிக்கும் இந்தியர். இவர், விபேகேஷ் இணையதளத்தை நடத்தி வரும் ஈவே இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இவர், இங்கிலாந்தில் இணையம்வழி பொருள்களையும் சேவைகளையும் பெற்று வந்தார். அவர், தாம் பெற்ற அனுபவத்தை இந்திய மக்களும் பெற வேண்டும் என விரும்பி, இந்தத் திட்டத்தைச் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட்டுகள் போன்ற பெருநிறுவனங்களும் வருவாய் ஈட்ட முடியும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் இணையவழிச் செலவினத்தில் 10% தொகையைச் சேமிக்க முடியும். அத்துடன் ஏராளமான காகிதப் பணிகள், ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல், நுகர்வோரின் வேலைப் பளு ஆகியவற்றையும் சேமித்துக் கூடுதல் ஆதாயம் அடையலாம்.

விபேகேஷ் தொடக்க விழாவில் பேசிய சென்னை காவல் துறை இணை ஆணையர் மு.ரவி ஐ.பி.எஸ்., "விபேகேஷ் இணையதளத் திட்டத்தின்படி மாதம் 2 ஆயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்குவோர் கூட மாதம் ரூ. 100 சேமிக்கலாம். வருடத்திற்கு ரூ.1200 சேமிக்கலாம். மிக அற்புதமான சேவை" என்று பாராட்டினார்.

இந்த இணையதளத்தைத் தொடங்கிவைத்த காவல் துறை டி.ஜி.பி., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., பேசுகையில், "விபேகேஷ் மூலம் பணம், நேரம், சக்தி, எரிபொருள் ஆகியவை மிச்சமாகின்றன. ஷாப்பிங் செல்வதே ஒரு பொழுதுபோக்கு போல் ஆகி வருவதால், சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாநகரத்தை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் அரசுக்கு உள்ள சிரமங்களைக் குறைக்கவும் இத்தகைய இணையதளங்கள் உதவும்" என்றார்.

இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந.சங்கரை அண்மையில் சென்னையில் சந்தித்து உரையாடினேன். இந்தத் தளத்தின் தொடக்க விழாவிலும் பங்கேற்றேன். சாதாரணமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குவதைவிட அதே பொருளை இணையத்தின்வழி பெற்றால், அதனால் 10% தொகை குறையுமானால், இது, இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்குமே! இணையவாசிகளே, இந்தத் தளத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

No comments: