!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நட.சங்கரின் 'உள்ளத்தில் உறுதி இருந்தால்...' ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, May 02, 2009

நட.சங்கரின் 'உள்ளத்தில் உறுதி இருந்தால்...'

நட.சங்கரின் 'உள்ளத்தில் உறுதி இருந்தால்...' என்ற கவிதைத் தொகுப்புக்கு நான் வழங்கிய அணிந்துரை இது:

கார்த்திகைத் திருநாள் அன்று ஊரெங்கும் ஒளிக் கோலம் பூண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் நூறு விளக்குகள் கண் சிமிட்டும். அவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளி பெற்றவை அல்ல. நம் குடும்ப விளக்குகள், முதலில் ஒரு விளக்கினை ஏற்றுவார்கள். அந்த விளக்கின் சுடரைக் கொண்டு, இதர விளக்குகள் அனைத்திற்கும் தீபத் திலகம் இடுவார்கள். கவிதை, எப்பொழுதுமே அந்த முதல் விளக்கினைப் போன்றது. அது, வாசிக்கும் மனங்களில் எல்லாம் நூறு தீபங்களை ஏற்றி வைக்கும்.

இதோ இங்கே சங்கர், தன்னம்பிக்கை என்னும் சுடரினைத் தன் இரு கைகளுக்குள் பொத்தி எடுத்து வருகிறார்.

அன்று
செய்தித்தாள் வினியோகித்தவர்
இன்று
முதல் பக்கத்தை அலங்கரிக்கும்
முக்கிய செய்தி

என்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைக் கொண்டாடுவதும்

முதல் உலகப் போரில்
சிப்பாயாக இருந்த
ஹிட்லர்தான்
இரண்டாம் உலகப் போரில்
ஜெர்மனியின் சர்வாதிகாரி

என வரலாற்று ஆதாரம் காட்டுவதும்

ஒரு நடத்துநர்
தன்னம்பிக்கையோடு
தடைகளைத் தாண்டி
சூப்பர் ஸ்டாராக

உயர்ந்ததை நமக்கு நினைவூட்டுவதும் நூறு தீபங்களை ஒளிர வைக்கும் முயற்சியே!

அனுபவத்தை விடச் சிறந்த ஆசான், அகிலத்தில் இல்லை என்பார்கள். சங்கரின் பல வரிகளில் பழுத்த அனுபவத்தின் சுவடுகளைக் காண முடிகிறது.

பத்தாயிரம் சேலைகளைப் பார்த்தும் வாங்க மறுக்கும் பெண்கள், சந்திரமுகி சேலை பாருங்க, எப்படியிருக்கு? எனக் கேட்டதும் கொத்திக்கொண்டு பறக்கும் எதார்த்தத்தை உடைத்துச் சொல்கிறார்.

இன்று அடிமை வேடம் போட்டால் என்ன? நாளை சிபிச் சக்கரவர்த்தி வேடம் காத்திருக்கிறது என நம்பிக்கை ஊட்டுகிறார். மேலும் பில்கேட்ஸ், கல்பனா சாவ்லா, அப்துல்கலாம் என நிகழ்காலச் சாதனையாளர்களை எடுத்துக் காட்டுகிறார்.

வெறுங்கை என்பது
மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும்
மூலதனம்

எனக் கவிஞர் தாராபாரதியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றார் வள்ளுவர். 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்றார் திருமூலர். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்' என்றார் பாரதி. உள்ளத்தில் ஆழ்ந்து கரை கண்டோர், நம் முன்னோர். அத்தகைய உள்ளத்தின் அருமையை உணர்த்தவே, தன் முதல் நூலுக்கு 'உள்ளத்தில் உறுதியிருந்தால்...' எனச் சங்கர் தலைப்பு இட்டுள்ளார்.

சங்கரின் படைப்புகள், நிகழ்காலத்துடன் மிகவும் நெருங்கி இருக்கின்றன. தந்தையே மகளுடன் வன்கலவி கொண்டது; கார்கில் போர்; குப்பைத் தொட்டியில் குழந்தை; வெள்ள நிவாரண நிதி வாங்கச் சென்று நெரிசலில் மாண்டவர்கள், நவீன மருத்துவத்தின் போலி முகங்கள்; இராஜஸ்தானில் அடிமைப்படுத்தப்படும் தமிழ்நாட்டுக் குழந்தைத் தொழிலாளர்கள்... என நடப்புச் சம்பவங்கள் பலவற்றையும் அவர், வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவற்றின் மூலம், செய்திக் கவிதைகள் என்ற தனி வகைக்குச் சிறந்த பங்காற்றியுள்ளார்.

No comments: